என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஜினியின் பேச்சு அவர் நிறைய காயப்பட்டுள்ளதை காட்டுகிறது: எச்.ராஜா
    X

    ரஜினியின் பேச்சு அவர் நிறைய காயப்பட்டுள்ளதை காட்டுகிறது: எச்.ராஜா

    தமிழர்கள் தூக்கி எறிந்தால் வேறு எந்த மாநிலத்திலும் விழமாட்டேன் என்ற ரஜினியின் பேச்சு அவர் நிறைய காயப்பட்டுள்ளதை காட்டுகிறது என ஈரோட்டில் பா. ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.
    ஈரோடு:

    பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா ஈரோட்டில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜி.எஸ்.டி. வரியை செயல்படுத்தும் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளது. ஜூலை 1-ந் தேதி முதல் நாடு முழுவதும் அமுலுக்கு வருகிறது. ஒரு நாடு, ஒரு வரி விதிப்பு, ஒரு சந்தை என்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

    2003-ம் ஆண்டு பிரதமராக வாஜ்பாய் இருந்த போதே இந்த திட்டம் வர வேண்டியது. ஆனால் 14 ஆண்டுகள் கழித்து தற்போது நிறைவேறி உள்ளது. இதன் மூலம் ஏழை மக்களுக்கு உணவு பொருட்கள், மருத்துவ சேவை, கல்வி வசதிகள் விலை குறைவாக கிடைக்கிறது.

    ஜி.எஸ்.டி. வரி மூலம் 2-ம் நபர் வியாபாரம் இனி நடக்காது. 1.2 சதவீத பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என எதிர் பார்க்கிறோம்.

    மோடி அரசு ஏழை மக்களுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பிரதம மந்திரி மருந்தகங்கள் தற்போது நாடு முழுவதும் தொடங்கப்பட்டு வருகிறது. விரைவில் 1000 ரெயில் நிலையங்களில் இந்த மருந்தகம் தொடங்கப்பட உள்ளது.

    தமிழகம் என்றால் ஊழல் அரசியல்வாதிகள் இருப்பிடம் என கேட்கும்போது வருத்தமாக இருக்கிறது. ப.சிதம்பரம் குடும்பத்தினர் பல ஆயிரம் கோடி அளவில் ஊழல் செய்து உள்ளனர். சி.பி.ஐ. சோதனை நடந்தது மூலம் அது நிரூபணமாகி உள்ளது.

    நண்பர் ரஜினிகாந்த் கடந்த 5 நாட்களாக ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்தார். அப்போது அவர் பேசும் போது, ‘‘நான் பச்சை தமிழன். என்னை தமிழர்கள் தூக்கி எறிந்தாலும் இமயமலையில் தான் விழுவேனே தவிர வேறு எந்த மாநிலத்திலும் விழமாட்டேன்‘‘ என்றார். இதன் மூலம் அவர் நிறைய காயப்பட்டு உள்ளார் என்பது தெரிய வருகிறது.

    ரஜினிகாந்த் 100 சதவீதம் பொது வாழ்க்கைக்கு வர அவருக்கு உரிமை உள்ளது. ரஜினிகாந்த் தமிழகத்தில் அரசியல் சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.


    அந்த அளவுக்கு சிஸ்டம் இருக்கிறது என்றால் அதற்கு காரணம் யார்? என்று ரஜினிகாந்த் ஆராய வேண்டும். தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகள் ஆட்சி செய்த திராவிட இயக்கங்கள் தான் இதற்கு காரணம்.

    இந்தியை மத்திய அரசு தமிழகத்தில் திணிக்கிறது என கூறுவதில் உண்மை இல்லை. மு.க.ஸ்டாலினுக்கும், கனிமொழிக்கும் நான் ஒரு சவால் விடுகிறேன். ‘‘நீங்கள் இந்தி திணிப்புக்கு எதிராக களம் இறங்க தயாரா? அவ்வாறு நீங்கள் இறங்கினால் உங்கள் குடும்ப குழந்தைகள் எந்த பள்ளியில் படிக்கிறார்கள் என்பதை நான் சொல்ல வேண்டியது வரும்’’.

    இந்தி திணிப்பை பற்றி பேச திராவிட இயக்கங்களுக்கு தகுதி இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மாவட்ட தலைவர் சிவ சுப்பி ரமணி, செய்தி தொடர்பாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
    Next Story
    ×