என் மலர்
குஜராத்
- ஆம் ஆத்மி 12 தொகுதிகளில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது.
- காங்கிரசின் வாக்கு வங்கியை ஆம் ஆத்மி சிதைத்து இருக்கிறது.
அகமதாபாத் :
குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. இதுவரை இல்லாத அளவில் பிரமிக்கத்தக்க வெற்றியை பெற்றிருக்கிறது. அந்த மாநிலத்தில் வெற்றி, தோல்விகள் குறித்த புள்ளி விவரங்கள் வியக்க வைக்கின்றன. அது பற்றிய ஒரு பார்வை வருமாறு:-
சவுராஷ்டிரா பகுதியில் பா.ஜ.க.வுக்கு அமோக வெற்றி கிடைத்திருக்கிறது. அங்கு மொத்தம் 48 இடங்கள் இருக்கின்றன. இவற்றில் 40 இடங்களை பா.ஜ.க. தன்வசப்படுத்தி உள்ளது. கடந்த முறை இந்த பிராந்தியத்தில் காங்கிரஸ் கட்சி 28 இடங்களை பெற்றிருந்தது. இந்த முறை காங்கிரஸ் கட்சி அங்கு வெறும் 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்துள்ளது.
ஆம் ஆத்மிக்கு இந்தப் பகுதியில் 4 இடங்கள் கிடைத்துள்ளன. காங்கிரசை விட ஒரு இடம் ஆம்ஆத்மிக்கு கூடுதலாக கிடைத்திருப்பது கவனிக்கத்தக்கது.
சமாஜ்வாடி வேட்பாளர் காந்தல் ஜடேஜா குட்டியானா தொகுதியில் வெற்றிக்கொடி கட்டி இருக்கிறார்.
பா.ஜ.க.வுக்கு சவுராஷ்டிரா பகுதியில் 48.23 சதவீத வாக்குகள் கிடைத்தன. ஆனால் காங்கிரசுக்கு 26 சதவீத ஓட்டுகள் கிடைத்துள்ளன. ஆம் ஆத்மிக்கு 20 சதவீத ஓட்டுகள் விழுந்துள்ளன. காங்கிரசின் வீழ்ச்சிக்கு ஆம் ஆத்மி இங்கு வழிவகுத்துள்ளது.
2017 தேர்தலில் காங்கிரசுக்கு 45.37 சதவீத வாக்குகளும், பா.ஜ.க.வுக்கு 44.90 சதவீத வாக்குகளும் கிடைத்தன.
கடந்த தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றாலும் அதன் பலத்தை 99 இடங்களுடன் காங்கிரஸ் கட்டுப்படுத்தியது என்றால், அதற்கு பட்டிதார் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் வாக்குகள் கை கொடுத்ததுதான் காரணம் ஆகும்.
இந்த தேர்தலில் பா.ஜ.க., காங்கிரசில் இருந்து கட்சி தாவியவர்களுக்கும், புதுமுகங்களுக்கும் டிக்கெட் கொடுத்ததாக தெரிய வந்துள்ளது.
மத்திய குஜராத் பகுதியில் பா.ஜ.க. 61-ல் 56 இடங்களைப் பிடித்துள்ளது. 4 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆறுதல் வெற்றி பெற்றிருக்கிறது.
ஆம் ஆத்மி 8 தொகுதிகளில் இரண்டாவது இடத்தில் வந்துள்ளது.
5 முறை பா.ஜ.க. எம்.எல்.ஏ.வாக இருந்த மது ஸ்ரீவஸ்தவ் சுயேச்சையாக வகோடியா தொகுதியில் களம் இறங்கினார். இங்கு பா.ஜ.க. வேட்பாளர் அஷ்வின் படேல் தோற்றார். மற்றொரு சுயேச்சை வேட்பாளரான தர்மேந்திர வகேலா வெற்றி பெற்றிருக்கிறார்.
ஆமதாபாத், வதோதரா, நாடியத், உம்ரெத், மட்டார் நகர்ப்புறங்களிலும், பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றிருக்கிறது. காங்கிரஸ் கட்சி 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
வடக்கு குஜராத்தில் 32 இடங்களில் 22 இடங்கள் பா.ஜ.க.வுக்கு கிடைத்துள்ளது. காங்கிரஸ் 8 தொகுதிகளிலும், சுயேச்சைகள் 2 இடங்களிலும் வென்றுள்ளனர்.
கடந்த 2017 தேர்தலில் இந்தப் பகுதியில் காங்கிரசுக்கு 17 'சீட்டு'களும், பா.ஜ.க.வுக்கு 14 'சீட்டு'களும் கிடைத்தன.
தெற்கு குஜராத்தில் 35 இடங்களில் 33 இடங்களில் பா.ஜ.க. வென்றிருக்கிறது. காங்கிரசுக்கும், ஆம் ஆத்மிக்கும் தலா ஒரு இடம் கிடைத்துள்ளது. ஆம் ஆத்மி 12 தொகுதிகளில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. காங்கிரசின் வாக்கு வங்கியை ஆம் ஆத்மி சிதைத்து இருக்கிறது.
சூரத்தில் மொத்தம் உள்ள 16 இடங்களையும் அப்படியே பா.ஜ.க. வாரிச்சுருட்டி விட்டது. கட்ச் பகுதியிலும் இதே கதைதான். 6 இடங்களையும் பா.ஜ.க. அள்ளியது. காங்கிரஸ் கட்சி இருந்த 2 இடங்களையும் இழந்துள்ளது. ஆம் ஆத்மி ஒரு இடத்திலும் வெற்றி பெறாத போதும் காங்கிரஸ் வீழ்ச்சிக்கு பக்க பலமாக இருந்திருக்கிறது.
ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற கனவுடன் களமிறங்கிய ஆம் ஆத்மிக்கு 5 இடங்களே கிடைத்தாலும், அதில் அந்தக் கட்சி திருப்தி அடைந்துள்ளது.
இதுபற்றி அதன் மாநில தலைவர் கோபால் இடாலியா கருத்து தெரிவிக்கையில், "எங்கள் கட்சி குஜராத்தில் பா.ஜ.க.வின் கோட்டையில் குறிப்பிடத்தக்க அளவில் நுழைந்து இருப்பதே வெற்றிதான். இது கெஜ்ரிவாலின் நேர்மைக்கு கிடைத்த வெற்றி" என குறிப்பிட்டார். ஆனால் இவரும் சூரத்தில் உள்ள கட்டார்காம் தொகுதியில் தோல்வியைத் தழுவி இருப்பது குறிப்பிடத்தக்கது.
- 182 தொகுதிகளை கொண்ட குஜராத்தில் பாஜகவுக்கு 156 இடங்கள் கிடைத்தன.
- மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக சிறந்த நிர்வாகத்துக்கும் வளர்ச்சிப் பணிகளுக்கும் கிடைத்த வெற்றியாகவே இது உள்ளது.
குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. அங்கு 7வது முறையாக பாஜக ஆட்சியை கைப்பற்றி உள்ளது.
182 தொகுதிகளை கொண்ட குஜராத்தில் பாஜகவுக்கு 156 இடங்கள் கிடைத்தன. காங்கிரஸ் கட்சி 17 இடங்களிலும், ஆம்ஆத்மி 5 இடங்களிலும், சமாஜ்வாடி கட்சி ஒரு இடத்திலும், சுயேட்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் சொந்த மாநிலமான குஜராத் கடந்த 1995ம் ஆண்டு முதலே பாஜக கட்சியின் அசைக்க முடியாத கோட்டையாக இருந்து வருகிறது.
குஜராத்தில் தற்போது முதல் அமைச்சராக பூபேந்திர படேல் உள்ளார். சட்டசபை தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றுள்ளதால் குஜராத்தில் பாஜக சார்பில் முதலமைச்சராக பூபேந்திர படேல் மீண்டும் வருகிற 12ம் தேதி பதவி ஏற்க உள்ளார்.
இது தொடர்பாக குஜராத் மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீல் நிருபர்களிடம் கூறியதாவது:-
குஜராத் மாநில முதலமைச்சராக பூபேந்திர படேல் தொடருவார். அவரது பதவி ஏற்பு விழா வருகிற 12ம் தேதி நடைபெற உள்ளது. பதவி ஏற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரி அமித்ஷா மற்றும் முக்கிய தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
தேர்தலில் போட்டியிட்ட ஆத் ஆத்மி கட்சி இலவசங்களை வாரி வழங்கி குஜராத் மக்களை இழிவுபடுத்த முயன்றது. குஜராத் மக்களை அந்த கட்சியால் ஒரு போதும் புரிந்து கொள்ள முடியாது. மற்ற கட்சிகளும் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்கி குஜராத் மக்களை ஏமாற்ற முயன்றன.
அந்த கட்சிகள் அனைத்துக்கும் மக்கள் தகுந்த பாடம் புகட்டியுள்ளனர். மாநிலத்துக்கு எதிரான சக்திகள் அனைத்தும் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டுள்ளன.
மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக சிறந்த நிர்வாகத்துக்கும் வளர்ச்சிப் பணிகளுக்கும் கிடைத்த வெற்றியாகவே இது உள்ளது. மக்களின் ஆதரவை தொடர்ந்து இழந்து வருவது தொடர்பாக காங்கிரஸ் கட்சி சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
குஜராத் முதலமைச்சராக பூபேந்திர படேல் ஏற்கனவே கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13ம் தேதி முதல் முறையாக பதவி ஏற்றார். தற்போது 2-வது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.
- குஜராத்தில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது.
- தேர்தல் முடிவுகள் நாங்கள் எதிர்பார்த்தபடி இல்லை.
அகமதாபாத் :
குஜராத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பா.ஜனதா வரலாற்று வெற்றியை பதிவு செய்து ஆட்சியை தக்க வைத்துள்ளது. அங்கு காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது.
இந்த தேர்தல் முடிவு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இது குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் ஜக்திஷ் தகோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'தேர்தல் முடிவுகள் நாங்கள் எதிர்பார்த்தபடி இல்லை. மக்கள் பிரச்சினைகளை எழுப்புவதற்கான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது உள்பட எல்லாவற்றையும் காங்கிரஸ் சரியாகச் செய்திருந்தாலும், மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இல்லை என தெரிகிறது' என தெரிவித்தார்.
குஜராத்தில் புதிய அரசை அமைப்பதற்காக பிரதமர் மோடி மற்றும் மாநில பா.ஜனதா தலைவர் சி.ஆர்.பாட்டீலுக்கு வாழ்த்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு புதிய அரசு தீர்வு காணும் என நம்புவதாகவும் கூறினார்.
இதற்கிடையே குஜராத் தேர்தல் தோல்வியை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மாநில பொறுப்பாளர் ரகு சர்மா ராஜினாமா செய்து உள்ளார்.
- 1985-ல் 149 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி ஏற்படுத்திய சாதனையை பாஜக முறியடித்தது.
- கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் பாஜகவுக்கு வாக்கு வங்கி அதிகரித்துள்ளது.
அகமதாபாத்:
182 தொகுதிகள் கொண்ட குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. ஆளும் பாஜக வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்றது. வெற்றி பெற 92 இடங்கள் தேவை என்ற நிலையில், 150க்கும் அதிகமான இடங்களில் பாஜக முன்னிலை பெற்றது. வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ள நிலையில், தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆளும் பாஜக 156 தொகுதிகளை கைப்பற்றி, 7வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. இதற்கு முன்னர் 2002-ல் 127 இடங்களை கைப்பற்றி பாஜக சாதனை படைத்திருந்தது. அந்த சாதனையை இந்த தேர்தலில் முறியடித்தது மட்டுமல்லாமல், 1985-ல் மறைந்த மாதவ்சிங் சோலங்கியின் தலைமையில் 149 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி ஏற்படுத்திய சாதனையையும் முறியடித்தது.
காங்கிரஸ் கட்சி 17 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. முதல் முறையாக குஜராத்தில் கால் பதித்துள்ள ஆம் ஆத்மி கட்சி 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் பாஜகவுக்கு வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. கடந்த தேர்தலில் 49 சதவீத வாக்குகளை பெற்ற பாஜக, இந்த முறை 53 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கான வாக்குகள் 42 சதவீதத்தில் இருந்து 27 சதவீதமாக குறைந்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி 13 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.
மொத்த தொகுதிகள்- 182
பாஜக- 156
காங்கிரஸ்- 17
ஆம் ஆத்மி கட்சி - 5
சுயேட்சைகள் - 3
மற்றவை - 1
- மோர்பி பால விபத்தின்போது ஆற்றில் குதித்து மக்களைக் காப்பாற்றியபோது அம்ருதியா அனைவராலும் பாராட்டப்பட்டார்.
- எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் படேல் ஜெயந்திலால் 52 ஆயிரம் வாக்குகளை பெற்றார்.
அகமதாபாத்:
குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. முதல்வராக பூபேந்திர படேல் பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில், தொங்கு பாலம் விபத்துக்குள்ளான மோர்பி தொகுதியில் வெற்றி பெறும் வேட்பாளர் யார் என்பது குறித்து பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. இந்தத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக படேல் ஜெயந்திலால், பாஜக வேட்பாளராக கான்டிலால் அம்ருதியா உள்ளிடோர் போட்டியிட்டனர். இதில், 62 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அம்ருதியா வெற்றி பெற்றார். அம்ருதியா ஒரு லட்சத்து 14 ஆயிரம் வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் 52 ஆயிரம் வாக்குகளும் பெற்றனர்.
1995, 1998, 2002, 2007, 2012 ஆகிய 5 முறை மோர்பி தொகுதியில் அம்ருதியா வெற்றி பெற்றவர். எனினும் கடந்த 2017 தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றார். அரசியலில் இருந்து மறக்கப்பட்டிருந்த அம்ருதியா, மோர்பி பால விபத்தின்போது ஆற்றில் குதித்து மக்களைக் காப்பாற்றியபோது அனைவராலும் பாராட்டப்பட்டார். இந்த வீடியோ மோர்பி பால விபத்து காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டது. இதுவே இவரது வெற்றிக்கான காரணம் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தொங்கு பாலம் கட்ந்த அக்டோபர் மாதம் 30ஆம் தேதி அறுந்துவிழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 135 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். 7 மாத சீரமைப்புப் பணிகள் முடிந்து அக்டோபர் 26ஆம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்காக பாலம் திறக்கப்பட்டிருந்தது.
- டெல்லி மாடல் ஆட்சியை முன்னிட்டு பஞ்சாப்பில் ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி கட்சி குஜராத்திலும் வெற்றி பெறுவோம் என்று சவால் விட்டு இருந்தது.
- குஜராத் வாக்காளர்கள் மத்தியில் ஆம் ஆத்மி கட்சி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது இன்று ஓட்டு எண்ணிக்கையில் தெரிய வந்துள்ளது.
காந்திநகர்:
குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த 1 மற்றும் 5-ந் தேதிகளில் தேர்தல் நடைபெற்றது.
இதில் 66.31 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. கடந்த 2017-ம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடுகையில் இது 4 சதவீதம் குறைவாகும்.
வாக்கு பதிவு சதவீதம் எண்ணிக்கை குறைந்ததால் தேர்தல் முடிவுகள் எப்படி அமையும் என்ற எதிர்பார்ப்பு நாடுமுழுவதும் ஏற்பட்டது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரின் சொந்த மாநிலம் என்பதால் குஜராத் தேர்தல் முடிவுகள் மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.
இந்தநிலையில் இன்று காலை 8 மணிக்கு குஜராத்தில் 37 மையங்களில் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன் பிறகு மின்னணு எந்திரங்களில் பதிவான வாக்குகள் கணக்கிடப்பட்டு முன்னிலை நிலவரங்கள் வெளியிடப்பட்டன.
தொடக்கத்தில் இருந்தே பா.ஜனதா கட்சி முன்னிலை பெற்றது. நேரம்செல்ல செல்ல பா.ஜ.க. வெற்றி முகத்துடன் இருந்த தொகுதிகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருந்தது. 9 மணி அளவில் 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜனதா முன்னிலை வகித்தது.
குஜராத்தில் பா.ஜனதா கட்சி 7-வது முறையாக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் அனைத்திலும் தெரிவிக்கப்பட்டு இருந்தன. அதை உறுதிப்படுத்துவது போல இன்று தேர்தல் முடிவுகள் அமைந்தன. பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் என்பது உறுதியான நிலையில் அந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வதில்தான் அரசியல் நிபுணர்களின் ஆர்வம் காணப்பட்டது.
பா.ஜனதா கட்சி இந்த தடவை 151 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து இருந்தது. 9.30 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு கொண்டிருந்த நிலையில் 155 இடங்களுக்கு மேல் பா.ஜனதா எட்டிப்பிடித்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2017-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜனதா கட்சி 99 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று இருந்தது. காங்கிரஸ் கட்சி 77 இடங்களை கைப்பற்றி நெருக்கத்தில் வந்து சவாலை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் பா.ஜனதா பக்கம் சாய்ந்ததால் குஜராத் சட்டசபையில் காங்கிரஸ் பலம் குறைந்தது.
கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற 77 இடங்களை விட கூடுதல் இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வந்தனர். ஆனால் கருத்து கணிப்புகளில் காங்கிரஸ் கட்சிக்கு சுமார் 50 இடங்களே கிடைக்கும் என்று கூறப்பட்டு இருந்தது.
ஓட்டு எண்ணிக்கை தொடங்கிய போது அந்த அளவுக்கு தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை பெற்று இருந்தது. ஆனால் நேரம் செல்ல செல்ல பல தொகுதிகளில் காங்கிரஸ் பின் தங்கியது.
காலை 9.30 மணி அளவில் வெறும் 19 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்று இருந்தது. கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் 55 தொகுதிகளை இழந்து காங்கிரஸ் கட்சி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது.
டெல்லி மாடல் ஆட்சியை முன்னிட்டு பஞ்சாப்பில் ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி கட்சி குஜராத்திலும் வெற்றி பெறுவோம் என்று சவால் விட்டு இருந்தது. ஆனால் குஜராத் வாக்காளர்கள் மத்தியில் ஆம் ஆத்மி கட்சி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது இன்று ஓட்டு எண்ணிக்கையில் தெரிய வந்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சிக்கு 9 தொகுதிகள் மட்டுமே முன்னிலை கிடைத்தது. காங்கிரஸ், ஆம் ஆத்மி இரு கட்சிகளும் பெரிய அளவில் வாக்குகளை பெறாததால் பா.ஜனதா கட்சி கடந்த தேர்தலை விட இந்த தடவை அதிக வெற்றியை ருசித்து இருக்கிறது.
பா.ஜனதா கட்சிக்கு 155-க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைக்கும் என்று முன்னிலை நிலவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் குஜராத் அரசியலில் பா.ஜனதா கட்சி 7-வது முறையாக ஆட்சியை கைப்பற்றி அதிரடியை நிகழ்த்தி உள்ளதோடு குஜராத் அரசியல் களத்தில் புதிய சாதனையையும் ஏற்படுத்தி இருக்கிறது.
2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு குஜராத் தேர்தல் முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. அதில் பா.ஜனதா வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
- குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
- குஜராத்தில் ஆட்சி அமைக்க 92 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்.
அகமதாபாத்:
சட்டசபை தேர்தல் நடைபெற்ற குஜராத், இமாச்சல பிரதேசத்தில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. குஜராத்தில் ஆட்சி அமைக்க 92 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்.
இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
காலை முதலே பா.ஜ.க. பெரும்பான்மையான தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
காலை 10 மணி நிலவரப்படி பா.ஜ.க. 146 இடங்களில் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் 26 இடங்களிலும், ஆம் ஆத்மி - 8 இடங்களிலும், மற்றவை- 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
எனவே குஜராத்தில் 7-வதுமுறையாக பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கிறது.
- குஜராத், இமாச்சல பிரதேச மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
- வாக்கு எண்ணிக்கை மையங்களில் மாநில போலீசாருடன், துணை ராணுவத்தினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
அகதாபாத்:
குஜராத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அந்தவகையில் 89 தொகுதிகளுக்கு கடந்த 1-ந்தேதியும், மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு 5-ந்தேதியும் வாக்குப்பதிவு நடந்தது. இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குஜராத் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தற்போது தொடங்கியுள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டு உள்ள 37 வாக்கு எண்ணும் மையங்களில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்கள் திறக்கப்பட்டு வாக்குகள் எண்ணி முடிவுகள் வெளியிடப்படுகின்றன.
68 இடங்களைக்கொண்ட இமாச்சல பிரதேச சட்டசபைக்கு கடந்த மாதம் 12-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த வாக்குகளும் இன்று எண்ணப்படுகின்றன.
இதற்காக மாநிலத்தின் 59 இடங்களில் 68 வாக்கு எண்ணிக்கை அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்தல் முடிந்து சுமார் 1 மாதமாக பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கும் வாக்குகள் அனைத்தும் இந்த மையங்களில் இன்று எண்ணப்படுகின்றன.
இமாச்சல பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைப்பதற்காக பிரதமர் மோடி தலைமையில் பா.ஜனதாவினர் இங்கும் தீவிர பிரசாரங்களை மேற்கொண்டனர். அதேநேரம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் தீவிரமாக களத்தில் வரிந்து கட்டியிருந்தன.
மாநிலத்தில் ஆட்சியமைக்க 35 உறுப்பினர் ஆதரவு தேவைப்படும் நிலையில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைப்பது கடினம் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
எனினும் மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்க முடியும் என பா.ஜனதா நம்பிக்கை தெரிவித்து உள்ளது. அதேநேரம் இழந்த ஆட்சியை கைப்பற்றுவோம் என காங்கிரசும் நம்பிக்கையுடன் இருக்கிறது.
இதில் யாருடைய கனவு பலிக்கும்? என்பது இன்று தெரிந்து விடும்.
இரு மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. வாக்கு எண்ணிக்கை மையங்களில் மாநில போலீசாருடன், துணை ராணுவத்தினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
- குஜராத் மாநிலத்தில் 93 தொகுதிகளில் தேர்தல் நடத்தப்பட்டது.
- குஜராத் மாநிலத்தில் 93 தொகுதிகளில் தேர்தல் நடத்தப்பட்டது.
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் முதல் கட்டமாக 89 தொகுதிகளில் கடந்த 1-ம் தேதி தேர்தல் நடந்தது. இரண்டாம் கட்டமாக மீதமுள்ள 93 தொகுதிகளில் நேற்று தேர்தல் நடத்தப்பட்டது.
காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. காலையில் மந்தமாக தொடங்கிய வாக்குப்பதிவு, நேரம் செல்லச்செல்ல விறுவிறுப்படைந்தது.
காலை 11 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு 19.17 சதவீதமாகவும், மதியம் 1 மணி நிலவரப்படி 34.74 சதவீதமாகவும் பதிவாகியிருந்தன. மாலை 3 மணி நிலவரப்படி 50.51 சதவீதமாகவும், 5 மணி நிலவரப்படி 58 சதவீதமாகவும் வாக்குகள் பதிவாகியிருந்ததாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
மாலை 5 மணிக்கு முன்பாக வாக்குச்சாவடிகளுக்கு வந்து வரிசையில் காத்திருந்தவர்களுக்கு வாக்களிக்க கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில், குஜராத்தில் இரண்டாம் கட்டமாக நடைபெற்ற தேர்தலில் 61 சதவீதம் வாக்குகள் பதிவாகின என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இரு கட்டமாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி வரும் 8-ம் தேதி நடைபெறும். அன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
- பாஜக சின்னத்துடன் உள்ள பிரசார வாகனங்களில் மது வினியோகம் செய்யப்பட்டது.
- காங்கிரஸின் புகார்கள் மீது தேர்தல் ஆணையம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
குஜராத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்ற நிலையில் இதில் கலந்து கொள்ள வந்த பிரதமர் மோடி வாகன ஊர்வலம் நடத்தியது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது இது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் பவன் கேரா தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது:
நமது ஜனநாயகத்தின் கண்காணிப்பு அமைப்பான தேர்தல் ஆணையத்தின் செயலற்ற தன்மை நடந்து முடிந்துள்ள தேர்தல்கள் மூலம் தெளிவாகத் தெரிகிறது. தேர்தலில் பிரதமரின் வாக்கு மதிப்பும், சாமானியரின் வாக்கு மதிப்பும் ஒன்றுதான். ஆனால், பிரதமர் வாக்களிக்கச் செல்லும்போது இரண்டரைமணி நேரம் ரோட்ஷோ நடத்துவது எப்படி?
பிரதமரின் எந்த அத்து மீறலையும் கண்டு கொள்ளாத தேர்தல் ஆணையத்திற்கு என்ன நிர்பந்தங்கள் உள்ளன?. பிரதமர் மோடி அகமதாபாத்தில் வாக்களிக்கும் போதும், இரண்டரை மணி நேர ரோட்ஷோ நடத்தும் போதும் அனைத்து சேனல்களிலும் இலவசமாக ஒளிபரப்ப முடிவு செய்தார். இது விளம்பரம் இல்லையா? இதற்காக பா.ஜ.க.விடம் கட்டணம் ஏன் வசூலிக்கக் கூடாது. கட்சியின் தேர்தல் செலவினத்தின் கீழ் இதை கொண்டுவர நாங்கள் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்.
மது விற்பனை தடை உள்ள மாநிலத்தில் பாஜகவினர் வெளிப்படையாக, வெட்கமின்றி, பாஜக சின்னத்துடன் தங்கள் வாகனங்களில் மது வினியோகம் செய்யும் காட்சிகளையும் நாங்கள் மீண்டும் மீண்டும் பகிர்ந்து வருகிறோம். அத்தகைய விதி மீறல்கள் குறித்து தேர்தல் ஆணையம் மௌனம் சாதிப்பது ஏன்.
பாஜக தொடர்ந்து நடத்தி விதிகளை மீறுகிறது, ஆனால் தேர்தல் ஆணையம் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை. அமைதியாக உள்ளது. நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் பயப்படுவதாக தெரிகிறது. காங்கிரஸின் புகார்கள் மீது தேர்தல் ஆணையம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுப்பது குறித்து காங்கிரஸ் கட்சி ஆலோசித்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- இமாச்சல பிரதேசத்தில் கடந்த மாதம் 12ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
- குஜராத் மாநிலத்தில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.
இமாச்சலப் பிரதேசத்தில் 68 தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் 12ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இதேபோல் குஜராத்தில் மொத்தம் உள்ள 182 சட்டசபைத் தொகுதிகளுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இரண்டு மாநிலங்களிலும் தேர்தல் முடிவுகள் வரும் 8ந் தேதி வெளியாகின்றன.
இந்நிலையில் இமாச்சல் பிரதேசம் மற்றும் குஜராத்தில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று டிவி9 குஜராத்தி மற்றும் ரிபப்ளிக் டிவி, நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. இதேபோல் டைம்ஸ் நவ், நியூஸ் எக்ஸ் நடத்திய கருத்து கணிப்பில் இமாச்சல பிரதேசத்தில் பாஜக பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை பிடிக்கும் என்பது தெரிய வந்துள்ளது.
- குஜராத் மாநிலத்தில் இன்று 93 தொகுதிகளில் தேர்தல் நடத்தப்பட்டது.
- 5 மணிக்கு முன்பாக வாக்குச்சாவடிகளுக்கு வந்தவர்களுக்கு வாக்களிக்க கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது
அகமதாபாத்:
பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் முதல் கட்டமாக 89 தொகுதிகளில் கடந்த 1-ம் தேதி தேர்தல் நடந்தது. இரண்டாம் கட்டமாக மீதமுள்ள 93 தொகுதிகளில் இன்று தேர்தல் நடத்தப்பட்டது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.
காலையில் வாக்குப்பதிவு மந்தமாகவே இருந்தது. நேரம் செல்லச்செல்ல விறுவிறுப்படைந்தது. காலை 11 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு 19.17 ஆக இருந்தது. மதியம் 1 மணி நிலவரப்படி 34.74 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. மாலை 3 மணி நிலவரப்படி 50.51 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்ததாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அதிகட்சமாக சபர்கந்தா மாவட்டத்தில் 57.24% வாக்குகள் பதிவாகியிருந்தன.
5 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு 58.38 சதவீதமாக உயர்ந்தது. 5 மணிக்கு முன்பாக வாக்குச்சாவடிகளுக்கு வந்து வரிசையில் காத்திருந்தவர்களுக்கு வாக்களிக்க கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. எனவே, இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த முழு விவரத்தை தேர்தல் ஆணையம் பின்னர் அறிவிக்கும். வரும் 8-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.






