search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    காபி, டீ குடிப்பது ஏன்?
    X

    காபி, டீ குடிப்பது ஏன்?

    காபி அல்லது டீ குடித்ததுமே நாம் உற்சாகமாக உணர்கிறோம். காபியில் உள்ள காபீன் என்கிற வேதிப்பொருள் ஒருவித மயக்கத்தை ஏற்படுத்துவதால்தான் அடிக்கடி காபி குடிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
    சோர்வாக உணரும் போது காபி அல்லது டீ குடிக்க நினைக்கிறோம். காரணம் அவற்றில் மனிதனின் நரம்பு மண்டலத்தை தூண்டி உற்சாகப்படுத்தும் வேதிப்பொருட்கள் இருக்கின்றன. அதன் காரணமாக காபி அல்லது டீ குடித்ததுமே நாம் உற்சாகமாக உணர்கிறோம். தவிர, காபியில் காபீன் என்கிற வேதிப்பொருள் இருக்கிறது. இது ஒருவித மயக்கத்தை ஏற்படுத்துவதால்தான் அடிக்கடி காபி குடிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

    ஒரு நாளுக்கு இரண்டு முறை டீயோ, காபியோ குடிப்பது உடல்நலத்துக்கு கேடு விளைவிக்காது. அப்படி குடிப்பதால் சில நன்மைகளும் ஏற்படலாம். காபி குடிப்பதால் அல்சைமர், பார்கின்சன்ஸ், இதய நோய், ஈரல் நோய், கீல்வாதம், நீரிழிவு போன்றவை ஏற்படுவதை ஓரளவுக்கு கட்டுக்குள் வைக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்களும், மருத்துவர்களும் கூறுகின்றனர். மூளை நரம்புகளில் அடினோசினின் ஆதிக்கத்தை காபீன் குறைப்பதால் மனஅழுத்தம் குறையும் என்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். காபியில் எவ்வளவு நன்மை இருக்கிறதோ, அந்த அளவுக்கு டீ குடிப்பதிலும் நன்மைகள் இருப்பதாக மருத்துவ அறிக்கைகள் சொல்கின்றன. டீ குடிப்பதால் பார்கின்சன்ஸ், ருமட்டாய்டு ஆர்த்ரட்டிஸ் போன்றவை ஏற்படும் ஆபத்து ஓரளவுக்கு குறைகிறதாம்.

    ஒருவர் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு சரியான அளவில் டீ குடித்து வந்தால், அவருடைய எலும்புகள் மற்றவர்களைவிட உறுதியாக இருக்குமாம். ரத்தஅழுத்தம் கட்டுக்குள் இருக்கும் என்கிறார்கள். இவ்வளவு நன்மைகள் இருக்கும் பானங்களை குடிப்பதில் என்ன தவறு என்று யோசிக்கலாம். அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சாகும்.

    காபியும், டீயும் மட்டும்தான் நலம் தருமா என்ன? அளவுக்கு அதிகமான பயன்பாடு பல உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தலாம். காபியில் இருக்கும் காபீன் குறிப்பிட்ட எல்லையை தாண்டும் போது, அதுவே உடல்நல பாதிப்புக்கு காரணமாக அமைந்துவிடும்.

    அளவுக்கு அதிகமாக காபி குடிப்பதால் ரத்தத்தில் இருக்கும் இரும்புச்சத்தின் அளவு குறைந்து பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ரத்தசோகை ஏற்படலாம். காபியில் இருக்கும் சில வேதிப்பொருட்கள் இதயத்துக்கு எதிரானவை. அவை இதய வால்வுகளை விரைப்படையச் செய்து, பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். தலைவலிக்காக குடிக்கப்படும் காபியின் அளவு, அதிகமானால் மைக்ரேன் எனப்படும் ஒற்றை தலைவலி ஏற்படலாம். சிலருக்கு தூக்கத்தில் சிக்கல்கள் உண்டாகலாம்.

    இன்னும் சிலருக்கு சரியான நேரத்தில் காபி குடிக்கவில்லை என்றால் பதற்றம் உண்டாகும். இதுவும் ஒரு வகை நோய்தான். எலும்பின் உறுதிக்கு துணைபுரிகிற அதே டீதான், எல்லை மீறும் போது எலும்பின் உறுதியை பாதிக்கிறது. பற்சிதைவுக்கும் அளவுக்கு அதிகமான டீ காரணமாக இருக்கலாம் என்றும் டாக்டர்களால் நம்பப்படுகிறது.
    Next Story
    ×