என் மலர்
உடற்பயிற்சி
நெக் ஸ்ட்ரெச் (Neck Stretch)
தரையில் நேராக நின்றுகொண்டு, இடது கையை இடுப்புக்கும் முதுகுக்கும் இடையில் வைக்க வேண்டும். வலது கையைத் தலைக்கு மேல்வைத்து, தலையை முடிந்தவரை கீழ் நோக்கி அழுத்த வேண்டும். பழைய நிலைக்குத் திரும்பி, வலது கையால் தலையை இடது புறம் சாய்க்க வேண்டும். பின் இரு கைவிரல்களையும் கோத்து, கட்டை விரல்களைத் தாடையில் வைத்து, தலையை மேல் நோக்கித் தூக்க வேண்டும். பிறகு, இடது கையால் தலையை இடது புறம் சாய்க்க வேண்டும். பின் பழையநிலைக்குத் திரும்ப வேண்டும்.
பலன்கள்: கழுத்தில் உள்ள தசைகளுக்கு நல்ல பயிற்சி. கழுத்துத் தசைகள் தளர்வடைவதால், வலி இல்லாமல் இருக்கும். நெகிழ்ச்சித்தன்மை நன்றாக இருக்கும்.
ட்ராபிஸியஸ் மசில் ஸ்ட்ரெச் (Trapezius Muscle Stretch)
கால்களைச் சற்று அகட்டி நேராக நிற்க வேண்டும். கை விரல்களைக் கோத்து, பின்புறமாகத் திருப்பி, தலைக்கு மேல் தூக்க வேண்டும். அதே நேரத்தில், முன் பாதங்களிலும் கால் விரல்களிலும் நிற்க வேண்டும்.
பலன்கள்: உடலில் உள்ள அனைத்துத் தசைகளும் தளர்வடையும். கால்களுக்கு நல்ல பலம் கிடைக்கும். உடலுக்கு பேலன்ஸ் கிடைக்கும். தோள்பட்டை மற்றும் மேல் முதுகில் உள்ள தசைகள் விரிவடையும்.

ஷோல்டர் ஸ்ட்ரெச் (Shoulder Stretch)
கால்களைச் சற்று அகட்டி நேராக நிற்க வேண்டும். இடது கையை வலது கை பக்கம் நேராக நீட்ட வேண்டும். பிறகு, வலது கையால் இடது கையின் மூட்டைப் பற்றிக்கொள்ள வேண்டும். இதே போன்று வலது புறமும் செய்ய வேண்டும். இது ஒரு செட். இப்படி ஐந்து முறை செய்யலாம்.
பலன்கள்: தோள்பட்டைத் தசைகள் வலுவாகும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும். தோள்களுக்கு நல்ல வடிவம் கிடைக்கும். தோள்பட்டை வலிகள் குறையும்.
பைசெப் ஸ்ட்ரெச் (Bicep Stretch)
தரையில் நேராக நின்றுகொண்டு இயன்ற வரை இரு கைகளையும் பின்புறம் நீட்ட வேண்டும். கழுத்து மற்றும் தண்டுவடம் நேராக இருக்க வேண்டும்.
பலன்கள்: கை, தோள்பட்டைத் தசைகளுக்கு நெகிழ்வுத்தன்மை கிடைக்கும். தசை சோர்வு நீங்கும்.
நீ டு செஸ்ட் ஸ்ட்ரெச் (Knee to Chest Stretch)
தரையில் மல்லாந்து படுக்க வேண்டும். வலது காலை மடக்கி, மார்புக்கு நேராகக் கொண்டுவர வேண்டும். இரு கைகளாலும் வலது கால் மூட்டைப் பற்றிக்கொள்ள வேண்டும். இடது கால் மடங்காமல் நேராக நீட்டி இருக்கட்டும். பிறகு, மடக்கிய காலை நீட்டவும். இதே போன்று மற்றொரு காலுக்கும் செய்ய வேண்டும். இது ஒரு செட். இப்படி ஐந்து முறை செய்ய வேண்டும்.
பலன்கள்: இதனால், ஹேம்ஸ்ட்ரிங், குளூட்ஸ், பின் முதுகுத் தசைகள் தளர்வடையும். மூட்டுகளை மடக்கி, நீட்ட எளிதாக இருக்கும்.
கைகளை பக்கவாட்டில் தளர்ந்த நிலையில் வைத்து நேராக நிற்க வேண்டும். கால்களை ஒன்றாக சேர்த்துவைக்கவும். இப்போது இரண்டு கால்களையும் அகட்டிக் குதித்து, அதே நேரத்தில் கைகளை தலைக்கு மேல் உயர்த்தித் தட்ட வேண்டும். பிறகு, பழையபடி குதித்து கால்களை ஒன்றுசேர்த்தபடியே, கைகளை இயல்புநிலைக்குக் கொண்டுவர வேண்டும். இதுபோன்று 20 முறை செய்ய வேண்டும். பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ளலாம்.
பலன்கள்: குதிப்பதால் இதயத்துடிப்பு அதிகரிக்கும். உடலில் உள்ள கலோரிகள் அதிக அளவில் செலவிடப்படும். உடல் எடை குறையும். குதிக்கும்போது ஆழமாக மூச்சுவிடுவதன் மூலம் உடல் முழுவதும் ஆக்சிஜன் சென்றடைவதால், நல்ல ரத்தம் பாயும். கொழுப்பைக் கரைக்கும். தொடைச் சதை வலுப்படும்.
சுறுசுறுப்பாக நடத்தல். நீச்சல், சைக்கிளோட்டுதல், நடனப் பயிற்சிகள் நுரையீரல் மற்றும் இதயத்தசைகளை வலுவடையச் செய்கிறது. இதயத்துடிப்பை சிறிது நேரத்திற்கு அதிகரித்து அதிக பிராண வாயு இரத்தத்தில் கலக்கச் செய்கிறது.
இதுவரை நீங்கள் உடற்பயிற்சி ஏதும் செய்யாதவராயிருந்தால் முதல் நாள் ஐந்து நிமிடங்கள் செய்தால் போதும். அதன்பிறகு நீங்களே வலிமையடைவீர்கள். அடுத்துவரும் நாட்கள் சிறிது சிறிதாக பயிற்சி நேரத்தை அரை மணி முதல் ஒருமணி நேரம் வரை அதிகரிக்கவும் இப்படி வாரம் ஐந்து நாட்கள் செய்தால் போதும். ஆனால் உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.
அதிகாலையில், வெறும் வயிற்றில் இந்த எளிய பயிற்சிகளை செய்யலாம். ஏனெனில் காலையில் தான் அதிக கலோரிகள் தொடர்ந்து எரிக்க முடியும். இதனால் கொழுப்பு விரைவில் கரையும்.
நீங்கள் செய்யும் உடற்பயிற்சிகள் விளைவாக உங்கள் இதயத்துடிப்பானது உங்கள் அதிக பட்ச துடிப்பின் அளவில் 60 முதல் 80 சதவீதம் சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் எட்டி இருக்க வேண்டும்.
வயதாவதால் தசைகள் மற்றும் எலும்புகள் பலவீனமடைவதை தடுக்க தசைகளுக்கும் எலும்புகளுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும். பழு தூக்குதல், பயிற்சி கருவிகள் பயன்படுத்துதல் இதற்கு உதவும். வாரம் 3 முதல் 4 முறை அரை மணி நேரம் இத்தகைய பயிற்சிகளுக்கு ஒதுக்கலாம்.
உடலில் கொழுப்பு வடிவில் சேமித்து வைக்கப்பட்ட கலோரிகள் எரிந்து தேவையற்ற உடல் கொழுப்பை கரைக்க உடற்பயிற்சி உதவுகிறது. உடலின் வளர்சிதை மாற்றங்களை அதிகரிக்கிறது. ஜீரண நேரத்தை அதிகப்படுத்தி பசியை மட்டுப்படுத்தவும் இரத்ததில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கவும் உடற்பயிற்சி உதவுகிறது.
எப்படியானாலும் உடற்பயிற்சி செய்ய உங்களுக்கேற்ற ஒரு திட்டத்தை தயாரித்துக்கொள்ளுங்கள். ஒரே நாளில் மாற்றத்தை எதிர்பார்க்காதீர்கள். தொடர்ந்து கடைபிடியுங்கள். மாற்றங்கள் காண்பீர்கள்.
உடற்பயிற்சி செய்ய நேரமே இல்லை என்றால் நீங்கள் அன்றாடம் செய்யும் வேலையையே ஒரு உடற்பயிற்சி போல் செய்யுங்கள்.
வீட்டு வேலைகளை, தோட்டம் பராமரித்தலை உடலுக்கு நன்மை தருவது எனக் கருதி ஒரு பயிற்சி போல் செய்யலாம்.
வெறும் டயட்டை மேற்கொண்டால் உடல் சோம்பேறித்தனத்துடன் தான் இருக்கும். அதுவே உடற்பயிற்சி செய்தால், சுறுசுறுப்புடன இருப்பது போல் உணர முடியும். இதுப்போன்று நிறைய காரணங்கள் உள்ளன. சரி, இப்போது ஏன் டயட்டை விட உடற்பயிற்சி சிறந்தது என்று பார்ப்போம்.
கடுமையான டயட் அல்லது பட்டினி கிடப்பது மிகவும் ஆபத்தானது என்று உடல்நல நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால் வயிறு நிறைய சரியான உணவுகளை உட்கொண்டு உடற்பயிற்சியை செய்து வருவது எடையைக் குறைப்பதற்கான யதார்த்தமான அணுகுமுறையாகும்.

டயட்டில் இருந்து, உடலில் உள்ள கலோரிகளின் அளவைக் குறைப்பதை விட, உடற்பயிற்சி மூலம் ஏராளமான கலோரிகளை எரிக்கலாம். மற்றொரு முக்கியமான நன்மை, உங்களுக்கு விருப்பமான உணவை உட்கொண்டு, அதற்கேற்ப உடற்பயிற்சியில் ஈடுபட்டால், உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கலாம்.
டயட்டில் இருந்தால், ஒருகுறிப்பிட்ட உணவுகளைத் தான் உட்கொள்ள வேண்டியிருக்கும். இதனால் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல் சத்து குறைபாடு ஏற்படும். ஆனால் உடற்பயிற்சி செய்து வந்தால், டயட் மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கு பிடித்த எந்த உணவையும் உட்கொள்ளலாம்.
டயட் மூலம் கொழுப்புக்களை மட்டுமே குறைக்க முடியும். ஆனால் உடற்பயிற்சியின் மூலம் அழகான உடலமைப்பைப் பெற முடியும். உடற்பயிற்சி உடலின் வலிமை மற்றும் ஆற்றலை அதிகரிக்கும். ஆனால் டயட் இருந்தால், விரைவில் உடலில் உள்ள ஆற்றல் குறைந்து, சோர்ந்துவிடக்கூடும்.
இன்று சர்வதேச புற்று நோய் தினம் கடை பிடிக்கப்படுகிறது. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் மக்களிடம் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு போதுமானதாக இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
இது சம்பந்தமாக ‘எசோ இந்தியா’ என்ற அமைப்பின் சார்பில் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. புற்று நோய் தொடர்பாக 20 கேள்விகள் அடங்கிய கேள்விகளை பொது மக்கள் ஆயிரம் பேரிடம் கொடுத்து விடைகளை பெற்றனர்.
அதில், பொதுமக்களுக்கு புற்று நோய் தொடர்பான போதுமான தகவல்கள் தெரியவில்லை என்ற தகவல் தெரிய வந்தது.
5-ல் 2 பேர் புற்று நோய் ஒரு வகையான தொற்று நோய் என்றும், நோய் கிருமிகளால் இந்நோய் உருவாகிறது என்றும் தவறான தகவலை கூறினார்கள்.
மேலும் புற்று நோய் தொடர்பாக அதிக பய உணர்வும், தவறான தகவலும் மக்களிடம் இருப்பது தெரிய வந்தது. 3-ல் 2 பேர் உப்பு அதிகமாக சாப்பிடுவதாலும், எண்ணையை மறுபடியும் சுட வைத்து சமைப்பதாலும், வயிற்று புற்று நோய் ஏற்படுவதாக தெரிவித்தனர்.
10-ல் ஒருவருக்குதான் புற்று நோய் பற்றிய முழுமையான தகவல்கள் தெரிகிறது. அவர்கள் மரபு கோளாறினாலும் புற்று நோய் வருகிறது. ஆனாலும், புற்று நோய்க்கு மருத்துவம் இருக்கிறது என்பதை தெரிந்து வைத்திருந்தனர்.
சிலர் தினமும் 10 சிகரெட்டை 10 ஆண்டுகள் தொடர்ந்து புகைத்தாலும் அதனால் வயிற்று புற்று நோய் ஏற்படாது என்று தெரிவித்தனர்.
சென்னையை பொருத்த வரையில் வயிற்று புற்று நோய் அதிகமாக இருப்பது தெரிய வந்தது. 1 லட்சம் பேரில் 6.7 பேருக்கு வயிற்று புற்று நோய் உள்ளது.
அதே போல் நுரையீரல் புற்று நோய் 5.8 பேருக்கும், வாய் புற்று நோய் 5.5 பேருக்கும், பெருங்குடல் புற்று நோய் 4 பேருக்கும், நாக்கு புற்று நோய் 3.9 பேருக்கும் இருக்கிறது.
பெண்களை பொருத்த வரை 1 லட்சம் பேரில் 3.2 பேருக்கு வயிற்று புற்று நோய் இருக்கிறது.
அதே நேரத்தில் மார்பக புற்று நோய் 24 பேருக்கும், கருப்பை வாய் புற்று நோய் 20 பேருக்கும், கருப்பை புற்று நோய் 4.5 பேருக்கும், வாய் புற்று நோய் 3.6 பேருக்கும் இருக்கிறது.
மொத்தத்தில் தமிழ் நாட்டில் 1 லட்சம் பேரில் 12 பேருக்கு புற்று நோய் இருக்கிறது. ஆண்களோடு ஒப்பிடும் போது, பெண்கள்தான் அதிக அளவில் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பயம் காரணமாக கடுமையான மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள்.
மேலும் அவர்களுக்கு கதிர்வீச்சு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. இதனால் தாங்க முடியாத வலியும், மன உளைச்சலும் ஏற்படுகிறது. இவற்றை தடுக்க வலி நிவாரணி மருந்துகள் வழங்கப்படுகின்றன. இவை பல பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது.
ஆனால், இவர்களுக்கு யோகாசன பயிற்சி அளித்தால் அவர்களுக்கு வலி மற்றும் மன உளைச்சல் பாதிப்புகள் மிகவும் குறைவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
பெங்களூரில் உள்ள எச்.சி.ஜி. ஆஸ்பத்திரி டாக்டர் பிருந்தா சீத்தா ராமன் கூறும் போது, புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் உணர்ச்சி வயப்பட்ட நிலையில் இருப்பார்கள். இதனால் அவர்களின் மனநிலையும் பாதிக்கப்படும். கதிர்வீச்சு சிகிச்சையால் உடல் பலவீனப்பட்டு பல்வேறு கஷ்டங்கள் ஏற்படும். இவற்றை தடுப்பதற்காக யோகாசனத்தை செய்ய வைக்கிறோம். இது, நல்ல பலனை தருகிறது. அவர்களுக்கு வலி நிவாரணி மருந்துகள் கொடுப்பதும் குறைகிறது.
தூக்கமின்மை, நம்பிக்கையின்மை போன்றவற்றையும் இவை தடுக்கிறது என்று கூறினார்.
டாக்டர் சேஷாச்சர் கூறும் போது, புற்று நோயாளிகளுக்கு மருந்து மட்டும் அல்லாமல், அவர்களுக்கு வேறு வகையான ஆறுதல் தேவைப்படுகிறது. யோகாசனம் செய்வதால் எல்லாவற்றையும் தருகிறது. மேலும் ஹார்மோன் சுரப்பிகள் சிறப்பாக செயல்பட்டு அவர்களுக்கு பல்வேறு வகையிலும் உதவுகிறது என்று கூறினார்.
சுவாமி விவேகானந்தா யோகாசன மையத்தின் மருத்துவ அதிகாரி அமீத்சிங் கூறும் போது, யோகாசனம் மனோதத்துவ ரீதியாக பல்வேறு ஆறுதல்களை வழங்குகிறது. கதிர்வீச்சு சிகிச்சை பெற்றவர்கள் யோகாசனம் செய்வது அவர்களுக்கு பல வகையிலும் உதவியாக இருக்கும். கதிர்வீச்சின் பாதிப்பையும் அது குறைக்கும். பிரணாயாமா செய்வதும் அவர்களுக்கு நல்ல பலனை தரும் என்று கூறினார்.

படுத்துக்கொண்டு பயிற்சி செய்தல்
கால் மூட்டுகள் லேசாக மடங்கியும், ஒன்றிலிருந்து ஒன்று சற்று தூரமாகவும் இருக்கும் விதத்தில் மல்லாந்து படுத்துக்கொள்ளவும். உங்கள் இடுப்புத் தளத் தசைகளை 10 வினாடிகளுக்கு இறுக்கமாக்கவும், பிறகு மெதுவாக 10 வினாடிகளுக்கு தளர்வாக வைக்கவும்.
உட்கார்ந்துகொண்டு பயிற்சி செய்தல்
கால் மூட்டுகள் ஒன்றிலிருந்து ஒன்று சற்று தூரமாக இருக்கும்படி ஒரு நாற்காலியில் அமர்ந்து கொள்ளவும். பிறகு உங்கள் பிட்டங்களை நாற்காலியில் இருந்து உயர்த்தாமல், உங்கள் இடுப்புத்தளத் தசைகளை இருக்கமாக்கித் தூக்கவும். 10 வினாடிகள் அப்படியே இறுக்கமாக வைத்துக்கொள்ளவும், பிறகு 10 வினாடிகள் தளர்வாக வைக்கவும்.

நின்றுகொண்டு பயிற்சி செய்தல்
பாதங்களை சற்று அகட்டி வைத்தபடி நின்றுகொள்ளவும். பிறகு சிறுநீர் கழித்துக்கொண்டு இருக்கும்போது அதை நிறுத்தவோ அல்லது வாயு வெளியேறாமல் கட்டுப்படுத்தவோ எப்படி தசைகளை இறுக்குவீர்களோ அதே போல், உங்கள் இடுப்புத் தளத் தசைகளைச் சுருக்கவும். கண்ணாடியில் பார்த்துக்கொண்டே இதைச் செய்தால், உங்கள் ஆண்குறியின் அடித்தளமாக இருக்கும் தசைப்பகுதி உங்கள் அடிவயிற்றுக்கு அருகே செல்வதையும் உங்கள் விந்தகங்கள் மேலெழும்புவதையும் பார்க்கலாம். 10 வினாடிகள் அப்படியே இறுக்கமாக வைத்துக்கொள்ளவும், பிறகு 10 வினாடிகள் தளர்வாக வைக்கவும்.
நீங்கள் ஒவ்வொரு முறை தசையைச் சுருக்குவதும் ஒரு கெகல் பயிற்சி என்று கணக்காகும். அதைத் தொடர்ந்து இன்னொரு முறை செய்வது மீண்டும் செய்தல் என்று கணக்காகும். ஒவ்வொரு நாளும் மூன்று நான்கு முறை பயிற்சி செய்ய வேண்டும். ஒவ்வொரு முறையும் 10 முதல் 20 முறை மீண்டும் மீண்டும் செய்யத் திட்டமிட வேண்டும். போதுமான பயிற்சிக்குப் பிறகு, நீங்கள் எப்போது வேண்டுமானாலும் சௌகரியமான எந்த இடங்களிலும் இருந்துகொண்டு கெகல் பயிற்சிகளைச் செய்யலாம்.
நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு அல்லது படுத்துக்கொண்டு இந்தப் பயிற்சிகளைச் செய்வதே பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கிறது. அறிகுறிகளில் ஏதேனும் முன்னேற்றம் தெரிய 4 முதல் 6 வாரங்கள் வரை ஆகலாம். குறிப்பிடத்தக்க மாற்றங்கள் கிடைக்க சுமார் மூன்று மாதங்களாகலாம்.
ஆனால் உடற்பயிற்சி விஷயத்திலும் நாம் சில விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். எந்த வயதினர் எப்படிப்பட்ட உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்று அறிவீர்களா? அதைப் பற்றிப் பார்ப்போம்…
குழந்தைகளுக்கு ஓடியாடி விளையாடுவது, நீச்சலடிப்பது, யோகாசனம், நடைப்பயிற்சி போன்ற பயிற்சிகளை கற்றுக்கொடுக்கலாம். மேலும் அவர்களை கைப்பந்து, கால்பந்து, கூடைப்பந்து, கிரிக்கெட், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளை விளையாடுவதற்கு ஊக்கப்படுத்தலாம்.
பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட வளரிளம் பருவத்தினர் உடற்பயிற்சிக்கூடத்துக்குச் செல்லலாம். தினமும் அரை மணி நேரம் மெல்லோட்டப் பயிற்சியில் (ஜாகிங்) ஈடுபடலாம். ஆனால் உடலை வருத்தும் ‘சிக்ஸ் பேக்’ முயற்சியைத் தவிர்க்கலாம்.
நடுத்தர வயதினர் ஸ்ட்ரெச்சிங், வாக்கிங், ஜாகிங், குறைவான எடையில் பளு தூக்குதல், நீச்சல் போன்ற உடற்பயிற்சிகளைச் செய்யலாம். ஆனால் கடினமான பயிற்சிகளைச் செய்யக் கூடாது. ஏனெனில் இதனால் கடுமையான தசைவலி, தசைப்பிடிப்பு ஏற்படும்.
சர்க்கரை நோயாளிகள், கட்டாயம் உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும். தினமும் 40 நிமிடங்கள் நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம். இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்து, இன்சுலின் தரம் மேம்படும். ஆனால் உடற்பயிற்சி செய்யும் போது சரியான ஷூக்களை அணிய வேண்டும்.

ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள், தினமும் சீரான வேகத்தில் நடைப்பயிற்சி செய்யலாம். இதனால் இதயத்துடிப்பு சீராகும். இதயத் தசைகள் வலிமை பெறும்.
ஆனால் பளு தூக்கும், தலையை அசைக்கும் பயிற்சி, ‘டிக்லைன் பெஞ்ச் பிரஸ்’, ‘டிக்லைன் டிரைசெப்ஸ்’ போன்ற பயிற்சிகளை செய்யக் கூடாது.
இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடற்பயிற்சி செய்வதற்கு முன் டாக்டரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.
ஏனெனில், நோயின் தன்மையைப் பொறுத்துத்தான் அவர்கள் எந்த மாதிரியான உடற்பயிற்சியை மேற்கொள்வது என்று பரிந்துரைக்கப்படும்.
மாரடைப்புக்கு உள்ளானவர்கள் கடினமான உடற்பயிற்சிகளை செய்யக் கூடாது. துரிதமான ரத்த ஓட்டம் அபாயத்தை ஏற்படுத்தலாம். அவர்கள், கை, கால்களை வேகமாக வீசி நடக்காமல், மிதமான நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம்.
பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், சாதாரண நடைப் பயிற்சியைச் செய்யலாம். ஆனால் வேகமான நடைப்பயிற்சியையோ, பளு தூக்கும் பயிற்சியையோ செய்யக் கூடாது.
முதியவர்கள் மிகக் குறைந்த எடையில் பளு தூக்கும் பயிற்சியைச் செய்யலாம். எவ்வித உடல்நலக் குறைவும் இல்லையென்றால், வேகமான நடைப்பயிற்சி, மெல்லோட்டத்தில் கூட ஈடுபடலாம். ஆனால் மூச்சு வாங்கும் அளவுக்கு எந்த உடற்பயிற்சியையும் செய்யக் கூடாது.
உடற்பயிற்சி நல்லது, அவசியமானது. ஆனால் அது அவரவர் வயதுக்கு ஏற்ற மாதிரி அமைய வேண்டும்.







