search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    குழந்தைகளுக்கு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவது எப்படி?
    X
    குழந்தைகளுக்கு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவது எப்படி?

    குழந்தைகளுக்கு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவது எப்படி?

    புத்தகம் வாசிப்பு என்பது இன்றைய தலைமுறை குழந்தைகளுக்கு ஆர்வம் இல்லாத ஒரு பொழுது போக்கவே மாறிவிட்டது. குழந்தைகளின் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்த என்ன செய்யலாம் என்று அறிந்து கொள்ளலாம்.
    குழந்தைகள் தொடர்ந்து புத்தகம் படிப்பதன் மூலம் அவர்களின் எண்ண ஒட்டம் சீராக இருக்கும் என்பதைத் தாண்டி புத்திக் கூர்மை, நினைவாற்றல் மேம்படுதல் போன்ற பண்புகளும் தானே வளரும் என்கிறார்கள் அறிஞர்கள்.

    ”குழந்தைகளின் அறிவு வளர்ச்சி பெரும்பாலும் மூன்று வயதிலே தொடங்கி விடுகிறது. அந்தப் பருவத்தில்  வாசிப்பை  அவர்களுக்குப் பழக்கப்படுத்துவது அவசியம். பெற்றோர்களின் சில செயல்பாட்டின் மூலம் வாசிப்பு பழக்கத்தை குழந்தைகளிடம் நிச்சயம் கொண்டு வர முடியும்.

    * குழந்தைகளுக்குப் புத்தக வாசிப்பைக் கொண்டுவர நினைக்கும் பெற்றோர்கள் முதலில் தாங்கள் தினமும் வாசிக்கும் புத்தகத்தை கொண்டு இருக்க வேண்டும். இது குழந்தைக்கு இயல்பாகவே வாசிப்பு மீது ஆர்வத்தை ஏற்படுத்தும்.

    * இரண்டு வயதுக்குப் பிறகு, குழந்தைகளுக்குப் பொம்மைகள் அல்லது மொபைலை காட்டி உணவுட்டுவதைத் தவிர்த்து, படங்கள் நிறைந்த புத்தகங்களை வைத்துக் கொண்டு, அதில் உள்ள படங்களை அவர்களுக்குப் புரியும் விதத்தில் கதைகளாக எடுத்துச் சொல்லி உணவூட்டலாம்.

    * ஆரம்பத்தில் குழந்தைகளுக்கு அனிமேஷன் புத்தகங்கள், வண்ணத் துணியினால் ஆன புத்தகங்கள் என வித்தியாசமான புத்தகங்களை வாங்கிக் கொடுத்தாலே அவர்களின் வாசிப்பு ஆர்வம் தானாக அதிகரிக்கும் விடும். முதலில் குழந்தைகளுக்கு வாசிப்பை அறிமுகப்படுத்தும் போது அவர்கள் கையாள எளிதான வகையில் நீளவடிவிலான எடை குறைந்த புத்தகங்களைக் குழந்தைகளிடம் கொடுத்துப் பழக்கப்படுத்துங்கள்.

    * புத்தகத்தை முதன்முதலாகக் குழந்தைகள் வாசிக்கும்போது, ஒவ்வொரு வார்த்தையையும் சத்தமாக வாசிக்கச் சொல்லுங்கள்.அவர்கள் வாசிக்கத் திணறினாலோ அல்லது தவறாக சொற்களை உச்சரித்தலோ ,நீ வாசித்தது  தவறு, வாசிக்கக்கூடத் தெரியாதா… என்பது போன்ற வார்த்தைகளைத் தவிர்த்து, இந்த வார்த்தையை இப்படிச் சொல்ல வேண்டும். ஒரு முறை முயன்று பார் என்று அன்புடன் சொல்லி வாசிக்கச் சொல்லுங்கள்.

    * பொதுவாக பரிசுப் பொருட்கள் குழந்தைகளை ஈர்க்கக் கூடிய ஒரு விஷயம். எனவே குழந்தைகளுக்கு நீங்கள் ஏதேனும் பரிசளிக்க விரும்பினால் அவர்களுக்கு ஆர்வம் நிறைந்த, துறை சார்ந்த புத்தகங்களை வாங்கிக் கொடுக்கலாம் அல்லது அவர்கள் யாருக்கேனும் ஏதேனும் பரிசளிக்க விரும்பினாலும் புத்தகத்தின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லி புத்தகத்தையே பரிந்துரை செய்யுங்கள்.

    * குழந்தையின் கையில் ஒரு புத்தகத்தை அளித்து, முதலில் அவர்களை வாசிக்கச் சொல்லி பின் அதில் வரும் ஒரு சிறிய கதாப்பாத்திரம் பற்றி அவர்களுடன் உரையாடுவது, அல்லது அவர்களை நடித்துக் காட்டச் சொல்வது போன்றவற்றை செய்யச் சொல்லலாம். அதன் பிறகு அவர்கள் சிறப்பாக செயல்பட்டதற்காகச் சிறு பரிசுகள் வழங்கலாம்.

    * இன்றைய குழந்தைகள் ட்ஜிட்டல் மீது அதிக ஆர்வம் நிறைந்தவர்களாக இருக்கிறார்கள். எனவே, உங்கள் குழந்தை ஓரளவு வாசிப்புத் திறனை அடைந்த பிறகு, படிப்பதற்கான ஆப்கள் மூலமாகத் தினமும் கால் மணி நேரம் ஏதேனும் ஒரு தகவலை வாசிக்கச் சொல்லுங்கள். அது உங்களுக்கு ஒரு புதிய தகவல் என்பது போன்ற ரியாக்‌ஷனை அவர்களிடம் காட்டுங்கள்.

    * புத்தகக் கண்காட்சி நடைபெறும் இடங்களுக்குக் குழந்தைகளை அழைத்துச் சென்று அவர்கள் விரும்பும் புத்தகத்தை அவர்களையே தேர்வு செய்யச் சொல்வதுடன், மற்ற துறை சார்ந்த புத்தகங்களைப் பற்றியும் விரிவாக விளக்குங்கள். இது அவர்களுக்குப் புத்தகம் மீதான  ஆர்வம் அதிகரிக்கக் காரணமாக இருக்கும்.

    * விடுமுறை நாள்களில்  உங்கள் குழந்தையை நூலகங்களுக்கு அழைத்துச் சென்று அவர்களுடன் குறைந்தது ஒரு மணி நேரம் அங்கே செலவிடுங்கள், அதன் பின் வீட்டுக்கு அழைத்து வந்து அவர்கள் படித்ததை வீட்டில் உள்ள அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளச் செய்யுங்கள்.

    * குழந்தைகளுக்கு பெட் டைம் ஸ்டோரிஸ் சொல்லும் போது புத்தகத்தில் உள்ள படங்களை குழந்தைகள் பார்க்கும் விதத்தில் வைத்துச் சொல்லுங்கள். இடை இடையே அவர்களின் கருத்துக்களையும் கேட்டுப் பாராட்டுங்கள்.இனி உங்கள் குழந்தையும் வாசிப்பை தங்கள் பழக்கமாக மாற்றிக்கொள்வார்கள்.
    Next Story
    ×