search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருவண்ணாமலையில் சந்திரசேகரர் தெப்பல் உற்சவம்: திரளானவர்கள் பங்கேற்பு
    X

    சந்திரசேகரர் தெப்பல் உற்சவம் நடைபெற்ற போது எடுத்த படம்.


    திருவண்ணாமலையில் சந்திரசேகரர் தெப்பல் உற்சவம்: திரளானவர்கள் பங்கேற்பு

    • திருவண்ணாமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
    • அய்யங்குளத்தில் 3 நாட்கள் தெப்பல் திருவிழா நடக்கிறது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 27-ந் தேதி தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரணி தீபம், மகா தீபம் ஏற்றும் நிகழ்வுகள் நேற்று முன்தினம் நடைபெற்றது. பரணி தீபம் கோவிலில் நேற்று முன்தினம் அதிகாலையிலும், மகா தீபம் கோவிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலையில் உச்சியில் ஏற்றப்பட்டது.

    மகாதீபத்தை காணவும், கிரிவலம் செல்லவும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்திருந்தனர். அவர்கள் மகா தீபம் ஏற்றப்பட்ட மலையை சுற்றி கிரிவலம் சென்றனர். நேற்று முன்தினம் மாலையில் மகாதீபம் நிகழ்ச்சி முடிந்த பிறகு கோவிலில் கொடியிறக்கம் நடைபெற்றது. இதையடுத்து இரவு 12 மணியளவில் பஞ்சமூர்த்திகளான விநாயகர் மர மூஷிக வாகனத்திலும், வள்ளி தெய்வானையுடன் முருகர் மயில் வாகனத்திலும், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் தங்க ரிஷப வாகனத்திலும், பராசக்தி அம்மன் காமதேனு வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் மர நந்தி வாகனத்திலும் மக்கள் வெள்ளத்தில் மிதந்த படி வீதிஉலா வந்தனர். தொடர்ந்து விடிய, விடிய பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர்.

    வழக்கமாக பவுர்ணமி நாட்களில் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று காலை 8.35 மணியளவில் தொடங்கியது. இதனால் பவுர்ணமியையொட்டியும் நேற்று 2-ம் நாளாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலையில் இருந்தே தொடர்ந்து கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர். மேலும் கோவிலில் காலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். நேற்றும் கோவிலை சுற்றியும், கிரிவலப்பாதையிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மலை உச்சியில் தொடர்ந்து 11 நாட்கள் மகாதீபம் ஏற்றப்படும். அதன்படி 2-ம் நாளான நேற்று மாலை மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அப்போது கிரிவலப்பாதையில் கிரிவலம் சென்ற பக்தர்கள் மற்றும் கோவிலில் இருந்த பக்தர்கள் மகா தீபத்தை பக்தி கோஷம் எழுப்பி வழிபட்டனர்.

    கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பல் உற்சவம் நேற்று தொடங்கியது. அதன்படி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அருகில் அய்யங்குளத் தெருவில் உள்ள அய்யங்குளத்தில் 3 நாட்கள் தெப்பல் திருவிழா நடக்கிறது. முதல் நாள் விழாவான நேற்று சந்திரசேகரர் தெப்பல் நிகழ்ச்சி இரவு நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சந்திரசேகரரை வைத்து 3 முறை வலம் வந்தனர். இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    Next Story
    ×