search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    அருள்மிகு கொளஞ்சியப்பர் கோவில்
    X

    அருள்மிகு கொளஞ்சியப்பர் கோவில்

    • இந்த கோவிலில் சிவபெருமானுக்கு உருவமும் இல்லை. கண்ணுக்குப் புலப்படாத அருவமாகவும் இல்லை.
    • உருவமும் அருவமும் சேர்ந்து ஒரு பலிபீட வடிவமாக பக்தர்களுக்கு காட்சி தருகின்றார்.

    கடலூர் மாவட்டம் விருதாச்சலம் மணவாள நகரில் அமைந்துள்ளது கொளஞ்சியப்பர் திருக்கோயில். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். இங்கு மூலவராக வீற்றிருக்கும் சிவபெருமான் சுயம்பு மூர்த்தி என்ற பெருமையை கொண்டவர். இந்த கோவிலில் சிவபெருமானுக்கு உருவமும் இல்லை. கண்ணுக்குப் புலப்படாத அருவமாகவும் இல்லை. உருவமும் அருவமும் சேர்ந்து ஒரு பலிபீட வடிவமாக பக்தர்களுக்கு காட்சி தருகின்றார் மூலவர்.

    இங்கு மூன்று அடி உயரத்தில் உள்ள சுயம்புவாக தோன்றிய பலிபீடமே மூலஸ்தனமாக இருக்கின்றது. இந்த பலிபீடத்திற்கு கீழ்ப்பகுதியில் முருகனது உருவம் பொறிக்கப்பட்ட ஸ்ரீசக்கரம் ஒன்று உள்ளது. இங்கு நடத்தப்படும் அபிஷேகங்கள் எல்லாம் முருகப்பெருமானுக்கு நடக்கின்றது.

    குடும்ப பிரச்னை, தீராத நோய், வழக்கு பிரச்னை என எப்பிரச்னைகள் ஏற்பட்டாலும் இக்கோயிலில் உள்ள முருகனை வேண்டினால் தீரும் என பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இக்கோயிலின் முகப்பில் வீரனார் ஆலயம், கொளஞ்சியப்பருக்கு கிழக்கு கோபுரம், வடக்கு கோபுரம் என இரண்டு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    கொளஞ்சியப்பரை அடையாளம் காட்டிய பசுவின் சிற்பம் பீட வடிவில் தோன்றி பெருமானுக்கு பால் சொரிவது போல தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. சித்தி விநாயகரின் கருவறையின் மேலே வட்ட வடிவிலான விமானம் அமைக்கப்பட்டுள்ளது.

    விமானத்தின் நாற்புரமும் விநாயகர், தக்ஷிணாமூர்த்தி, திருமால் , பிரம்மாவின் சிற்பங்களை காணலாம். பீட வடிவில் உள்ள கொளஞ்சியப்பருக்கு கிரீடம் சூட்டி வெள்ளியால் கண்ணமைத்து பீடத்தின் கீழே முருகனின் ஆறு எழுத்து மந்திரமான சரவணபவ சடாச்சரம் சாத்தி வேல் ஏந்திய நிலையில் அழகுற காட்சி அளிக்கின்றார் முருகப்பெருமான்.

    திருக்கோயிலின் தென்மேற்கு பகுதியில் ஒரே கருவறையில் இடுபடும் கடம்பனும் நின்ற காலத்தில் காட்சி தருகின்றனர். இக்கோயிலில் பதினெட்டு சித்தர்களில் ஒருவரான பாம்பாட்டி சித்தரின் குரு அகப்பை சித்தர் இந்த திருத்தலத்தில் ஜீவசக்தி பெற்றுள்ளார். இக்கோயிலில் கிருத்திகை, சஷ்டி, அமாவாசை, பௌர்ணமி ஆகிய தினங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது மட்டுமல்லாமல் நான்கு கால பூஜைகளும் சிறப்புடன் நடந்து வருகின்றது.

    இந்த கோவிலின் மற்றொரு சிறப்பு வேப்பெண்ணை மருந்து. இங்கு வரும் பக்தர்கள் வேப்பெண்ணையை வாங்கிக் கொண்டுவந்து அர்ச்சகரிடம் கொடுத்து அந்த இறைவனின் காலடியில் வைத்து பூஜை செய்து சிவபெருமானின் பிரசாதமான திருநீற்றை சிறிதளவு அந்த எண்ணெயில் போட்டு வாங்கிச் செல்வார்கள். இந்த எண்ணெயானது பல விதமான நோய்களை குணப்படுத்தும் சக்தி கொண்டதாக, பக்தர்கள் நம்பிக்கையோடு வாங்கி செல்கிறார்கள்.

    ஆறாமல் இருக்கும் புண்கள், கட்டிகள் இவற்றுக்கு மருந்தாக இந்த எண்ணெய் நல்ல ஒரு தீர்வினை கொடுக்கிறது. மனிதர்களுக்கு மட்டுமல்ல மாடுகளுக்கு ஏற்படும் காமாலைகட்டிக்கும் இந்த எண்ணெயானது மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இந்த ஊர் மக்கள் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் கூட இந்த எண்ணெயானது கொண்டு செல்லப்படுகிறது.

    ஆனால், இந்த எண்ணையை மருந்தாக பயன்படுத்துபவர்கள் சுத்தமாகவும் எந்தவிதமான தீட்டும் இல்லாதவர்களாகவும் இருக்கவேண்டும்.

    Next Story
    ×