search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    தாளவாடி மாரியம்மன் கோவில் குண்டம் விழா
    X

    தாளவாடி மாரியம்மன் கோவில் குண்டம் விழா

    • இரு மாநில பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வார்கள்.
    • இங்கு சிறப்பு அம்சம் என்னவென்றால் பூசாரி மட்டுமே தீமிதிப்பார்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. தமிழக-கர்நாடகா எல்லை அருகே இந்த கோவில் அமைந்துள்ளதால் இரு மாநில பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வார்கள்.

    இந்த கோவிலின் குண்டம் திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த குண்டத்தில் சிறப்பு அம்சம் கோவில் பூசாரி மட்டுமே தீமிதிப்பார்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 26-ந் தேதி தொடங்கியது. நேற்று காலை முதல் மாலை வரை சிறப்பு பூஜைகள் நடந்தன மாலை 6 மணிக்கு மாரியம்மனுக்கு சிறப்பு மலர் மற்றும் ஆபரணங்கள் அலங்கரிக்கப்பட்டன.

    தாளவாடி மாரியம்மனுடன் கும்டாபுரம் மாரியம்மனும் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இரவு 9 மணிக்கு அம்மனுக்கு அலங்கார வீதி உலா தொடங்கியது. உற்சவ சிலைகள் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைக்கப்பட்டு தாளவாடியில் உள்ள அனைத்து வீதிகளிலும் உலா வந்தது. இரவு கோவிலின் முன்பு குண்டம் பற்ற வைக்கப்பட்டது. குண்டத்தில் போடப்பட்ட விறகுகள் முழுமையாக எரிந்து காலையில் குண்டம் தயார் செய்யப்பட்டது.

    தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் இருந்து மேல தாளங்கள் முழங்க உற்சவர் சிலைகள் தாளவாடி ஆற்றுக்கு புறப்பட்ட கோவிலின் தலைமை பூசாரி சிவண்ணா தலைமையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஆற்றுக்கு சென்றனர்.

    அங்கு மாரியம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் உற்சவர் சிலை பூசாரி சிவண்ணா தலையில் சுமந்து அம்மனை அழைத்து வந்தார். அப்போது பக்தர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து ஊர்வலமாக வந்தனர்.

    இளைஞர்கள் காவல் தெய்வங்கள் வேடத்தில் அலங்காரம் செய்து ஆடி வந்தனர். இதேபோல குறவர் ஆட்டம் ஆடிக்கொண்டு சில பக்தர்கள் வந்து சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.

    ஆற்றை கடந்து ஊர்வலம் வந்தபோது அங்குள்ள விநாயகர் கோவில் முன்பு காத்திருந்த பெண்கள் மலர் மற்றும் பழங்கள் வைத்து மாரியம்மனை வரவேற்றனர். பின்னார் தாளவாடி பஸ் நிலையம் பகுதியில் மாரியம்மனுக்கு பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    தலமலை ரோடு, ஓசூர் ரோடு பகுதியிலும் அம்மன் ஊர்வலம் சென்றது. அங்கிருந்து அம்மன் ஊர்வலம் போயர் வீதி, மற்றும் அம்பேத்கார் வீதிக்கு சென்றது. அங்கு பக்தர்கள் மலர்களால் மாலை அணிவித்து அம்மனை வரவேற்றனர்.

    அதை ஏற்றுக்கொண்ட மாரியம்மன் உற்சவ சிலை ஊர்வலமாக கோவில் வளாகத்துக்கு வந்தது. அதைத்தொடர்ந்து மேள தாளங்கள், தப்பட்டைகள் முழங்க தலைமை பூசாரி சிவண்ணா மாரியம்மன் உற்சவ சிலையை கொண்டு குண்டத்தை நோக்கி விரைந்து வந்தார்.

    அப்பொழுது கூடி இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பத்தி கோஷங்கள் எழுப்ப 30 அடி நீளம், 4 அடி உயரம் உள்ள குண்டத்தில் இறங்கி கோவில் கருவறைக்கு சென்றார். அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

    விழாவையொட்டி தாளவாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களில் இருந்தும் பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். பெரும்பாலான கர்நாடக முறையில் பூஜைகள் நடைமுறைப்பட்டது. இந்த பிரம்மாண்ட குண்டம் விழாவில் கோவிலின் பூசாரி சிவண்ணா மட்டுமே தீ மிதித்தார். வேற யாரும் குண்டம் இறங்க அனுமதி இல்லை. எனினும் பூசாரி தீ இறங்குவதை பார்க்க காலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் முன்பு குவிந்தனர்.

    கோவில் பூசாரி சிவண்ணா குண்டம் இறங்கும் போது கோவிலின் கோபுரத்தின் மேல் கருடர் வலம் வந்தார். அவர் குண்டம் இறங்கும்போது பக்தர்கள் எழுப்பிய கோஷம் விண்ணை தொட்டது. குண்டத்தில் இருந்து அவர் வெளியே றியதும் கூடியிருந்த பக்தர்கள் கையில் இருந்த பூமாலை, வேப்பிலை, உப்பு, சாம்பிராண்டி ஆகியவற்றை குண்டத்தில் வீசினார்கள். சாமி தரிசனம் செய்தனர்.

    குண்டம் விழாவையொட்டி தாளவாடி இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    Next Story
    ×