search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது
    X

    ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது

    • கோவில் நடை மீண்டும் ஆகஸ்டு 9-ந்தேதி திறக்கப்படும்.
    • 10-ந் தேதி நிறைபுத்தரிசி சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறும்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடை திறக்கப்பட்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை நடைபெறும். இதுதவிர ஒவ்வொரு மலையாள மாதத்தின் (நிகரான தமிழ் மாதம்) முதல் 5 நாட்களிலும் விஷு, ஓணம் பண்டிகை, பங்குனி உத்திரம் திருவிழா நாட்களிலும் கோவில் நடை திறக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெறும். இந்த நாட்களில் சபரிமலைக்கு திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    இந்தநிலையில் ஆடி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை நேற்று மாலையில் திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி தீபாராதனை நடத்தினார். தொடர்ந்து கற்பூர ஆழியில் தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு 18-ம் படி வழியாக அனுமதிக்கப்பட்டனர். நேற்று மற்ற சிறப்பு பூஜைகள் நடைபெறவில்லை. மாத பிறப்பையொட்டி கோவில் கருவறை மற்றும் சன்னிதான சுற்றுப்புற பகுதிகள் சுத்தம் செய்யும் பணிகள் நடந்தது.

    இன்று (திங்கட்கிழமை) முதல் 21-ந் தேதி வரை 5 நாட்கள் கோவிலில் வழக்கமான நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், களபாபிஷேகம், சகஸ்ரகலசாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை போன்றவை நடைபெறும்.

    21-ந் தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.

    ஆடிமாத பூஜையில் பக்தர்கள் வழக்கம் போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். பக்தர்களின் வசதிக்காக நிலக்கல்லில் உடனடி தரிசனத்திற்கான முன்பதிவு நடைபெறும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.

    மேலும் கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திருவனந்தபுரம், கோட்டயம், செங்கன்னூர், பத்தனம்திட்டை, கொட்டாரக்கரை, எர்ணாகுளம் உள்பட மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    நிறைபுத்தரிசி பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மீண்டும் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 9-ந் தேதி மாலையில் திறக்கப்படும். 10-ந் தேதி நிறைபுத்தரிசி சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறும்.

    Next Story
    ×