search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சபரிமலையில் இன்று சரணகோஷம் முழங்க மண்டல பூஜை வழிபாடு
    X

    தங்க அங்கி அடங்கிய பெட்டி சன்னிதானத்துக்கு கொண்டு வரப்பட்ட போது எடுத்த படம்.

    சபரிமலையில் இன்று சரணகோஷம் முழங்க மண்டல பூஜை வழிபாடு

    • ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தன.
    • பக்தர்கள் சரண கோஷம் முழங்கியபடி தரிசனம் செய்தனர்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை களுக்காக கடந்த மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. அன்று முதல் பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு போன்றவற்றின் மூலம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு தரிசனம் பெற்று வருகின்றனர். தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு வரும் நிலையில் அவர்களுக்கு தேவையான வசதிகளை திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வாகம் சிறப்பாக செய்திருந்தது.

    கடந்த 39 நாட்களில் சபரிமலையில் 29 லட்சத்து 8 ஆயிரத்து 500 பேர் தரிசனம் பெற்றுள்ளனர். இவர்களில் 6 லட்சம் பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஆண்டு இதுவரை ரூ.222 கோடியே 98 லட்சம் கோவிலுக்கு வருவாய் கிடைத்துள்ளது. இதில் ரூ.70 கோடி பிரசாதமாக பெறப்பட்டுள்ளது.

    நடை திறக்கப்பட்டு 41 நாட்கள் ஆன நிலையில், இன்று மண்டல பூஜை விமரிசையாக நடைபெற்றது. இதற்காக அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தன.

    தொடர்ந்து வழக்கமான பூஜைகள் நடந்தன. களபாபிஷேகத்திற்கு பிறகு பகல் 12.30 மணிக்கு பிரசித்தி பெற்ற மண்டல பூஜைகள் நடைபெற்றன. தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் இந்த பூஜைகள் நடந்தன.

    அப்போது பக்தர்கள் சரண கோஷம் முழங்கியபடி தரிசனம் செய்தனர். மண்டல பூஜை வழிபாட்டையொட்டி பம்பை முதல் சன்னிதானம் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    முன்னதாக நேற்று மாலை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இன்று இரவு ஹரிவராசனம் பாடலுக்கு பிறகு கோவில் சன்னதி மூடப்படுகிறது.

    தொடர்ந்து மகர விளக்கு வழிபாட்டுக்காக வருகிற 30-ந் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. ஜனவரி 14-ந் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறுகிறது.

    Next Story
    ×