search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் 19-ந்தேதி தேரோட்டம்
    X

    ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் 19-ந்தேதி தேரோட்டம்

    • மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
    • 22-ந்தேதி சண்டிகேசுவரர் வீதி உலாவுடன் திருவிழா நிறைவடைகி்றது.

    ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் மாசி மகா சிவராத்திரி திருவிழா மற்றும் ஆடி திருக்கல்யாண திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான மகா சிவராத்திரி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 22-ந்தேதி வரை 11 நாட்கள் இந்த விழா நடைபெறுகிறது.

    விழாவின் முதல் நாளான நேற்று பகல் 11 மணி அளவில் சுவாமி சன்னதி எதிரே நந்தி மண்டபத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது. இதையொட்டி கொடிமரத்திற்கு புனித நீரால் அபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது, கொடிமண்டபம் எதிரே பிரியாவிடையுடன் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் எழுந்தருளினர். சுவாமி-அம்பாளுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன.

    திருவிழாவின் முதல் நாளான நேற்று இரவு சுவாமி தங்க நந்திகேசுவரர் வாகனத்திலும், அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    2-ம் நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு சுவாமி-அம்பாள் தங்க கேடயத்தில் எழுந்தருளி ரதவீதிகளை வலம் வருகிறார்கள். இரவில் சுவாமி வெள்ளி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் தங்க காமதேனு வாகனத்திலும் எழுந்தருள்கிறார்கள்.

    முக்கிய நிகழ்ச்சியாக 8-ம் நாள் விழாவான மாசி மகா சிவராத்திரி அன்று (18-ந் தேதி) நடராஜர் கேடயத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். இரவு சுவாமி-அம்பாள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி ரதத்தில் எழுந்தருளி காட்சி தருகின்றனர். அன்று பகல் மற்றும் இரவு முழுவதும் கோவில் நடையானது திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெறும்..

    9-ம் நாளான 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று சுவாமி-அம்பாள் தேரோட்டம் நடைபெறுகிறது. 10-ம் விழா நாளான மாசி அமாவாசை அன்று சுவாமி-அம்பாள் தங்க ரிஷப வாகனங்களில் அக்னி தீர்த்த கடற்கரைக்கு தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருள்கிறார்கள்.

    வருகிற 22-ந்தேதி சண்டிகேசுவரர் வீதி உலாவுடன் திருவிழா நிறைவடைகி்றது.

    Next Story
    ×