search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரணய கலகோற்சவம்
    X

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரணய கலகோற்சவம்

    • மார்கழி மாதத்தில் 21 நாட்கள் ஆத்யாயன உற்சவம் நடக்கும்.
    • இந்த ஆண்டும் ஆத்யாயன உற்சவம் நடந்து வருகிறது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரணய கலகோற்சவம் நடந்தது. அதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று உற்சவத்தை கண்டுகளித்தனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதத்தில் 21 நாட்கள் ஆத்யாயன உற்சவம் நடக்கும். அதன்படி இந்த ஆண்டும் ஆத்யாயன உற்சவம் நடந்து வருகிறது. அதன் 17-வது நாளிலும் மற்றும் வைகுண்ட ஏகாதசியில் இருந்து 6-வது நாளிலும் பிரணய கலகோற்சவம் (ஊடல் உற்சவம்) நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான பிரணய கலகோற்சவம் நேற்று நடந்தது. அதற்காக நேற்று மாலை உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் தனித் தங்கத்திருச்சி வாகனத்தில் எழுந்தருளினார்.

    அதேபோல் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் மற்றொரு தனித் தங்கத்திருச்சி வாகனத்தில் எழுந்தருளினர். சாமியும், தாயார்களும் எதிர் எதிர் திசைகளில் கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து ஸ்ரீவாரி புஷ்கரணியை அடுத்த வராகசாமி கோவில் அருகில் வந்து எதிர் எதிரே நின்றனர்.

    பக்தர்களின் குறைகள், கோரிக்கைகள், நோய்களை போக்குவதில் முன்நிற்கும் ஏழுமலையான், தனது துணைவியார்களான ஸ்ரீதேவி, பூதேவியர்களை கண்டு கொள்வதில்லை, எனக் குற்றம் சாட்டி அவர்கள் சார்பாக அர்ச்சகர் ஒருவர் மலையப்பசாமி மீது முதலில் 3 முறை பூப்பந்துகளை எறிந்து தங்களின் கோபத்தை வெளிப்படுத்தினர்.

    அப்போது நம்மாழ்வார் அருளிய பாசுரங்களை வேதப் பண்டிதர்கள், அர்ச்சகர்கள் 'கேலி' செய்யும் விதத்தில் பாராயணம் செய்ய, உற்சவர் மலையப்பசாமி உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களை மிரட்டும் தோரணையில் தான் எந்தத் தவறும் செய்யவில்லை, என்று கூறி பயப்படுவதுபோல் நடித்து மன்னிப்பு கேட்டார்.

    அதன்பிறகு கோபம் தணிந்து அமைதியாகி ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் இருவரும் மலையப்பசாமியின் இருபுறமும் சேர்ந்தனர்.

    இந்த நிகழ்ச்சியை அடுத்து அவர்களுக்கு கற்பூர ஆரத்தி காண்பித்து ஆஸ்தானம் நடத்தினர். பின்னர் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி மங்கல வாத்தியங்கள் இசைக்க ஊர்வலமாக கோவிலுக்குள் கொண்டு செல்லப்பட்டனர்.

    இந்த உற்சவத்தில் திருமலை ஜீயர்சுவாமிகள், தேவஸ்தான அதிகாரிகள், வேதப் பண்டிதர்கள், அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர். ஏராளமான பக்தர்கள் சுற்றி நின்றவாறு உற்சவத்தை கண்டு களித்தனர்.

    Next Story
    ×