search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம்-25)
    X

    மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம்-25)

    • பக்தர்களுக்கு அருள்புரியும் நெடுமாலே!
    • திருப்பெருந்துறையில் உறையும் சிவபெருமானே!

    திருப்பாவை

    பாடல்

    ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர்இரவில்

    ஒருத்தி மகனாய் ஒளித்து வளர,

    தரிக்கிலா னாகித் தான் தீங்கு நினைந்த

    கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்

    நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை

    அருத்தித்து வந்தோம்; பறைதருதியாகில்

    திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி

    வருத்தமுந் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.

    விளக்கம்

    வாசுதேவனின் மனைவியான தேவகிக்கு நீ மகனாக பிறந்தாய். அதே இரவில் ஆயர்பாடியில் நந்தகோபனுக்கும் யசோதைக்கும் மகனாகி மறைந்து வளர்ந்தாய். இவைகளை தாங்கிக்கொள்ள முடியாத கம்சன், உனக்கு தீங்கு செய்ய நினைத்தான். அவனுடைய தீய எண்ணத்தை அழித்து நெருப்பாக நின்று அச்சத்தை ஏற்படுத்தினாய். பக்தர்களுக்கு அருள்புரியும் நெடுமாலே! நீயே சரண் என்று உன்னை வணங்கி உன் அருள் தேடி வந்துள்ளோம். நாங்கள் நினைத்த வரத்தை அருளினால் அதனைப் பெற்று உயர்ந்த அருட்செல்வத்தால் உன் பெருமைகளை பாடித்துதிப்போம். எங்கள் எல்லா துயரங்களும் மறைந்து விடும்!

    திருவெம்பாவை

    பாடல்

    பூதங்கள் தோறும்நின் றாயெனின் அல்லால்

    போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்

    கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்

    கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச்

    சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா

    சிந்தனைக் கும்அரி யாய்எங்கள் முன்வந்

    தேதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்

    எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.

    விளக்கம்

    குளிர்ச்சி பொருந்திய வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் உறையும் சிவபெருமானே! நீ பஞ்சபூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஒவ்வொன்றிலும் நிறைந்து இருக்கிறாய். இருந்தும் உன்னை பிறப்பும், இறப்பும் இல்லாதவன் என்று புலவர்கள் புகழ்ந்து கூறி ஆடிப்பாடுகின்றனர். உன்னை கண்டறிந்தவர்கள், யார் என்று கேட்டு அறிந்தவர்கள் யாரும் இல்லை. சிந்தனைக்கு எட்டாதவனாக இருந்தாலும் எங்கள் முன் நேரில் தோன்றி நாங்கள் செய்கின்ற தவறுகளையும், குற்றங்களையும் மாற்றி அமைப்பவன் நீ நாங்கள் செய்யும் தவறுகளை நீக்கி எங்களுக்கு அருள்வாயாக! எம்பெருமானே பள்ளியெழுந்து வந்து அருள்புரிவாயாக.

    Next Story
    ×