search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மகா சிவராத்திரி: ராமேசுவரம் கோவிலில் நாளை இரவு முழுவதும் நடை திறந்திருக்கும்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    மகா சிவராத்திரி: ராமேசுவரம் கோவிலில் நாளை இரவு முழுவதும் நடை திறந்திருக்கும்

    • பகல் மற்றும் இரவு முழுவதும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
    • 19-ந்தேதி சுவாமி-அம்பாள் தேரோட்ட நிகழ்ச்சி நடக்கிறது.

    ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் மாசி சிவராத்திரி திருவிழா கடந்த 11-ந்தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள், சாமி புறப்பாடு நடைபெற்று வருகின்றது.

    இந்த நிலையில் மாசி மகா சிவராத்திரி திருவிழாவில் 6-வது நாளான நேற்று காலை சுவாமி-அம்பாள் தங்க கேடயத்தில் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளினர். தொடர்ந்து இரவு சுவாமி- அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருவிழாவின் 7-ம் நாள் விழா இன்று நடக்கிறது.

    திருவிழாவின் 8-வது நாளான நாளை(சனிக்கிழமை) மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு ராமேசுவரம் கோவில் நடையானது அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்படுகிறது. நாளை பகல் 1 மணிக்கு இரவு 8 மணிக்கு நடை சாத்தப்படாமல் பகல் மற்றும் இரவு முழுவதும் திறந்திருக்கும். மாசி சிவராத்திரியையொட்டி பகல் மற்றும் இரவு முழுவதும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

    அதுபோல் நாளை மறுநாள் 19-ந் தேதி அன்று பகல் 1 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகின்றது.

    திருவிழாவின் 9-வது நாளான 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 9.39 மணிக்கு சுவாமி-அம்பாள் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகின்றது.

    இதே போல் ராமநாதபுரம் மீனாட்சி சொக்கநாதர்கோவில், திருஉத்தரகோசமங்கை மங்களநாதர் கோவில், திருவாடானை

    ஆதிரெத்தினேஸ்வரர் கோவில் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் மகா சிவராத்திரியையொட்டி சிறப்பு பூஜை நடக்கிறது.

    Next Story
    ×