search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சித்ரா பவுர்ணமி: அருணாசலேஸ்வரர் கோவிலில் 8 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்
    X

    சாமி தரிசனம் செய்ய காத்திருந்த பக்தர்கள்.

    சித்ரா பவுர்ணமி: அருணாசலேஸ்வரர் கோவிலில் 8 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்

    • இன்று காலை வரை பக்தர்கள் கிரிவலம் வந்த வண்ணம் இருந்தனர்.
    • கிரிவலப் பாதையில் உள்ள கழிவறைகள் திறக்கப்படாததால் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

    திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியொட்டி நேற்று முன்தினம் இரவு முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    நேற்று மாலை கிரிவலத்திற்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

    இரவு வரை பக்தர்கள் கிரிவலப் பாதையை சுற்றி வந்தனர். இதனால் நகரின் முக்கிய பகுதியில் உள்ள சின்ன கடை தெரு, தேரடி தெரு, திருவூடல் தெரு, திருமஞ்சன கோபுர தெருக்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    தொடர்ந்து இன்று காலை வரை பக்தர்கள் கிரிவலம் வந்த வண்ணம் இருந்தனர்.

    நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலில் பொது தரிசன வரிசையில் சென்ற பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். ரூ.50 கட்டண தரிசன வரிசையில் சென்ற பக்தர்கள் 7 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    இன்று காலையில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் குறைவாக காணப்பட்டது. ஆனால் கோவிலில் கூட்டம் அலைமோதியது.

    இதனால் சாமி தரிசனம் செய்ய 5 மணி நேரமானது. சித்ரா பவுர்ணமிக்கு வரும் பக்தர்கள் 2 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும் வகையில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக கலெக்டர் முருகேஷ் தெரிவித்திருந்தார்.

    அதன்படி கூடுதலாக தரிசன வரிசைகள் அமைக்கப்பட்டிருந்தன ஆனால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    இதே போல பக்தர்களின் பயன்பாட்டிற்காக குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதுவும் சீராக செய்யப்படவில்லை.

    இன்று பக்தர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டதால் சிறப்பு ரெயில், பஸ் நிலையங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    கிரிவலப் பாதையில் உள்ள கழிவறைகள் திறக்கப்படாததால் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

    Next Story
    ×