search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மீனாட்சி அம்மனுக்கு நாளை பட்டாபிஷேகம்: திருக்கல்யாண ஏற்பாடுகள் தீவிரம்
    X

    தங்க ரிஷப வாகனத்தில் சுந்தரேஸ்வரர்-பிரியாவிடையுடனும், வெள்ளி ரிஷப வாகனத்தில் மீனாட்சி அம்மனும் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

    மீனாட்சி அம்மனுக்கு நாளை பட்டாபிஷேகம்: திருக்கல்யாண ஏற்பாடுகள் தீவிரம்

    • நாளை இரவு 7.05 மணிக்கு மேல் 7.29 மணிக்குள் மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.
    • மீனாட்சி திருக்கல்யாணம் வருகிற 2-ந் தேதி நடைபெறுகிறது.

    மதுரை என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது மீனாட்சி அம்மன் கோவில் தான். ஏன் என்றால் இங்குள்ள மீனாட்சி அம்மன் பாண்டிய மன்னனுக்கு மகளாக பிறந்து நாட்டை ஆண்டு, பட்டத்து அரசியாக மகுடம் சூட்டி, தேவதேவா்களை போரில் வென்று சிவபெருமானை திருமணம் செய்து கொண்டார். அவ்வாறு மதுரையை ஆண்ட மகாராணி மீனாட்சிக்கு சித்திரை மாதம் நடைபெறும் திருவிழா உலகப்புகழ் பெற்றது.

    அந்த 12 நாட்கள் நடைபெறும் திருவிழாவை காண பல்வேறு நாடுகள், வெளிமாநிலங்கள், வெளியூர்களில் இருந்து பக்தா்கள் கூட்டம், கூட்டமாக வருவார்கள். அந்த ஒரு மாதமும் மதுரை விழாக்கோலம் பூண்டு இருக்கும். மேலும் இந்த திருவிழாவிற்காக ஒரு மாதத்திற்கு முன்பே கோவில் திருவிழாவிற்கான வேலைகள் தொடங்கி விடும்.

    சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்ததும். காலை, மாலை என இருவேளையும் மீனாட்சி சுந்தரேசுவரா் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருவர். வயதானவா்கள் முதல் அனைத்து ஜீவராசிகளும் காட்சி கொடுக்கவே இறைவன் மாசி வீதியில் வலம் வருவதாக ஐதீகம். எனவே நம்மை தேடி வரும் இறைவனை காண மாசி வீதி முழுவதும் மக்கள் கூட்டமாக கூடி வரவேற்பார்கள். இது தவிர சுவாமிக்கு முன்னால் வரும் டங்கா மாடு, யானை, ஒட்டகம் மற்றும் சிறுவா், சிறுமியா்கள் இறைவனை வரவேற்று ஆடி பாடி வரும் காட்சியை காண உலகம் முழுவதும் இருந்தும் பக்தா்கள் கூட்டம் இந்நாளில் வந்து விடும்.

    இவ்வளவு சிறப்பு வாய்ந்த மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடை பெறும் விழாவில் 6-ம் நாளான நேற்று இரவு சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை யானை மகால் முன்பு நடந்தது. அப்போது தங்க ரிஷப வாகனத்தில் சுந்தரேசுவரர் பிரியாவிடையுடனும், வெள்ளி ரிஷப வாகனத்தில் மீனாட்சி அம்மனும் எழுந்தருளினார்கள். பின்னர் மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் சூடும் விழா. இந்த விழா நாளை (30-ந் தேதி) நடைபெறுகிறது. அன்றைய தினம் இரவு 7.05 மணிக்கு மேல் 7.29 மணிக்குள் அம்மன் சன்னத்தியில் உள்ள 6 கால் பீடத்தில் மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. அப்போது மீனாட்சிக்கு ராயர் கிரீடம் சூட்டி, நவரத்தினத்தால் ஆன செங்கோலை வழங்கி பட்டத்து அரசியாக பட்டாபிஷேகம் சூடப்படும். அதில் மீனாட்சி அம்மனிடமிருந்த செங்கோல் அம்மன் பிரதிநிதியான கோவில் தக்கார் கருமுத்து கண்ணனிடம் வழங்கப்படும். அவர் செங்கோலை பெற்று சுவாமி சன்னதி 2-ம் பிரகாரம் வழியாக வலம் வந்து மீண்டும் மீனாட்சி அம்மனிடம் செங்கோலை ஒப்படைப்பார். பின்னர் மீனாட்சி அம்மன் பட்டத்து அரசியாக வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி, 4 மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

    அந்த திருவிழாவிற்கு அடுத்த நாள் சிவபெருமானாகிய சுந்தரேசுவரரை போருக்கு அழைத்து எட்டு திக்கிலும் தேவா்களை வென்று கடைசியாக இறைவனிடம் போர் புரியும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    சித்திரை விழாவில் முத்தாய்ப்பாக மீனாட்சி திருக்கல்யாணம் வருகிற 2-ந் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் வடக்கு, மேற்கு ஆடி வீதியில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. எனவே திருக்கல்யாணத்தை பக்தர்கள் காணுவதற்கு 500, 200 ரூபாய் டிக்கெட்டுகள் தற்போது விற்பனை செய்யப்படுகிறது.

    சுமார் 12 ஆயிரம் பக்தர்கள் திருக்கல்யாணத்தை அமர்ந்து பார்ப்பதற்கு பந்தல் அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் தீவிரமாக நடந்த வருகிறது. இது தவிர திருக்கல்யாணம் முடிந்த பின்னர் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரருடன் திருக்கல்யாண கோலத்தில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் தீவிரமாக செய்து வருகிறது.

    Next Story
    ×