
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடந்தது. முன்னதாகசிறப்பு அலங்காரத்தில் தியாகராஜசாமி தேரில் எழுந்தருளினார். இதை தொடர்ந்து தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் யாழ்ப்பாணம் வரணி ஆதீனம் செவ்வந்திநாத பண்டார சன்னதி, கோவில் செயல் அலுவலர் ஜெயச்சந்திரன், முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் எம்.எல்.ஏ., ஸ்தலத்தார்கள் கயிலமணி வேதரத்தினம், கேடிலியப்பன், உபயதாரர்கள், தொண்டு நிறுவனத்தினர், வர்த்தக சங்கத்தினர், நகராட்சி ஆணையர் ஹேமலதா மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மறைகாடார்... தியாகேசா... என பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேருக்கு முன்னால் விநாயகர், சுப்பிரமணியர் பல்லக்கும், தேருக்கு பின்னால் அம்மன், சண்டிகேஸ்வரர் பல்லக்கும் சென்றது. தேர் நான்கு வீதிகளிலும் வலம் வந்து நிலையை அடைந்தது.
விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு உணவு மற்றும் குடிநீர், நீர்மோர், குளிர்பானம் ஆகியவற்றை பல்வேறு அமைப்புகள் மூலம் வழங்கப்பட்டன. நகராட்சி சார்பில் சுகாதார பணி மற்றும் தூய்மை பணி செய்யப்பட்டு இருந்தது
நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.