search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சாமி தரிசனத்துக்காக நின்ற பக்தர்களை படத்தில் காணலாம்.
    X
    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சாமி தரிசனத்துக்காக நின்ற பக்தர்களை படத்தில் காணலாம்.

    முத்தாரம்மன் கோவிலில் 2-வது நாளாக நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம்

    சூரசம்ஹாரத்தையொட்டி 3 நாட்களாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில் கொடியிறக்கம் மற்றும் திருக்காப்பு அவிழ்த்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.
    மைசூருக்கு அடுத்தபடியாக வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 5-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் கடந்த 15-ந்தேதி நள்ளிரவு கோவில் முன் பிரகார மண்டபத்தில் நடந்தது. திருவிழாவையொட்டி நாள்தோறும் இரவு பல்வேறு திருக்கோலங்களில் அம்மன் உள் திருவீதி உலா நடந்தது.

    மத்திய, மாநில அரசுகள் வகுத்த கொரோனா தொற்று விதிமுறைகளைப் பின்பற்றி திருவிழாவில் 5 நாட்கள் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. சூரசம்ஹாரத்தையொட்டி 3 நாட்களாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில் கொடியிறக்கம் மற்றும் திருக்காப்பு அவிழ்த்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. வேடமணிந்த பக்தர்கள் அந்தந்த ஊர்களிலேயே அமைக்கப்பட்டிருந்த தசரா குடில்களிலும், கோவில்களிலும் காப்புகளை அவிழ்த்தனர்.

    இந்தநிலையில் பக்தர்களுக்கு நேற்று முன்தினம் காலை முதல் தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியதையடுத்து பல்வேறு பகுதிகளிலிருந்து கார், வேன், லாரி, ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் பக்தர்கள் குலசேகரன்பட்டினம் வந்து குவிந்தனர்.

    15 நாட்களுக்கும் மேலாக சிதம்பரேஸ்வரர் கடற்கரை பகுதிக்கு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படாமல் இருந்தது. நேற்று முன்தினம் முதல் தளர்வு அளிக்கப்பட்டதால் ஏராளமான பக்தர்கள் அந்த பகுதியில் புனித நீராடினர். சாமி தரிசனமும் செய்தனர்.

    நேற்று 2-வது நாளாக சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
    Next Story
    ×