search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முத்தாரம்மன்
    X
    முத்தாரம்மன்

    முத்தாரம்மன் கோவிலில் இன்று சூரசம்ஹாரம்: பக்தர்கள் பங்கேற்க தடை

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, விழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
    குலசேகரன்பட்டினம் :

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி, கோவில் உள்பிரகாரத்தில் வலம் வந்து அருள்பாலிக்கின்றார்.

    தசரா திருவிழாவையொட்டி, ஒவ்வொரு ஊரிலும் விரதம் இருந்து காப்புக்கட்டி பல்வேறு சுவாமி வேடங்களை அணிந்த பக்தர்கள், அந்தந்த ஊர்களில் காணிக்கை வசூலித்து வருகின்றனர். தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு ஊர்களிலும் தசரா குழுவினர் வீதி, வீதியாக சென்று கலைநிகழ்ச்சி நடத்தி, காணிக்கை வசூலித்து வருவதால், தென் மாவட்டங்களில்
    தசரா திருவிழா
    களைகட்டியது.

    தசரா திருவிழாவின் 8-ம் நாளில் கமல வாகனத்தில் கஜலட்சுமி திருக்கோலத்தில் அம்மன் எழுந்தருளி, கோவில் உள்காரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    9-ம் திருநாளான நேற்று (வியாழக்கிழமை) இரவு 8.30 மணியளவில் அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலத்தில் அம்மன் எழுந்தருளி, கோவில் பிரகாரத்தில் வலம் வந்து அருள்பாலித்தார்.

    இன்று காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

    முத்தாரம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றபோது எடுத்த படம்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 10-ம் திருநாளான இன்று(வெள்ளிக்கிழமை) நள்ளிரவில் கோவில் முன்பாக பக்தர்கள் பங்கேற்பின்றி எளிமையாக நடைபெறுகிறது.

    இதனை முன்னிட்டு இன்று இரவு 9.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து நள்ளிரவு 12 மணியளவில் கோவில் முன்பாக அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி, மகிஷாசூரனை வதம் செய்கிறார்.

    11-ம் திருநாளான நாளை (சனிக்கிழமை) அதிகாலையில் சூரசம்ஹாரத்துக்கு பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. மாலை 5 மணியளவில் அம்மன் கோவிலை வந்தடைந்தவுடன் காப்பு களைதல் நடைபெறும். தொடர்ந்து அந்தந்த ஊர்களில் உள்ள கோவில்களில் பக்தர்கள் காப்பு களையுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    12-ம் திருநாளான வருகிற 17-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 12 மணிக்கு பாலாபிஷேகத்துடன் தசரா திருவிழா நிறைவு பெறுகிறது.

    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, இன்று முதல் 12-ம் திருநாள் வரையிலும் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×