search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நாங்குனேரி வானமாமலை பெருமாள் கோவில்
    X
    நாங்குனேரி வானமாமலை பெருமாள் கோவில்

    நாங்குனேரி வானமாமலை பெருமாள் கோவில்

    வானமாமலை பெருமாள் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் இது 48-வது திவ்ய தேசம் ஆகும். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    வானமாமலை பெருமாள் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் இது 48-வது திவ்ய தேசம் ஆகும். இக்கோவில் நெல்லை மாவட்டத்தில் உள்ள நாங்குநேரியில் அமைந்துள்ளது. இத்தலத்து இறைவனின் பெயர் ‘வானமாமலை’ என்கிற ‘தோத்தாத்திரி நாதர்’. உற்சவர் தெய்வநாயகப் பெருமாள். இத்தலத்திற்கு திருச்சிரீவரமங்கை, திருவரமங்கை, திருச்சிரீவரமங்கள நகர், தோத்தாத்திரி சேத்திரம், வானமாமலை என பல பெயர்கள் உள்ளன. 108 திவ்ய தேசங்களில், எட்டு ஆலயங்கள் சுயம்பு தலமாகும். அந்த எட்டு தலங்களில் இந்த ஆலயமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

    ஸ்ரீவரமங்கை என்னும் இத்தலத்திற்கு வானமாமலை, நாங்குநேரி, தோத்தாத்ரி, ஸ்ரீவரமங்கை நகர் என்ற பல்வேறு பெயர்களும் உண்டு. பிரம்மாண்ட புராணம், ஸ்கந்த புராணம், நரசிம்ம புராணம் போன்றவற்றில் இத்தலம் பேசப்படுகிறது. உரோம(ரிஷி) முனிவர் தவஞ்செய்து திருமாலைக் கண்டதால் உரோமசேத்திரம் என்றும், ஸ்ரீவரமங்கையாக திருமகள் இவ்விடத்தில் வந்து வளர்ந்து பிறகு எம்பெருமானை மணந்து கொண்டதால் ஸ்ரீவரமங்கை (ஸ்ரீவரமங்கல நகர்) எனவும், ஆதிசேடன் இங்கு தவமியற்றி திருமாலுக்கு அணையாக இருக்கும் பேறு பெற்றதால் நாகணை சேரி எனவும், மரங்கள் நிறைந்த வனமும் மலையும் சூழ்ந்த இடமாதலின் வானமாமலை எனவும் பேச்சு வழக்காயிற்று.

    தைல அபிஷேகம்

    இங்கு இறைவனுக்கு தினந்தோறும் தைல அபிஷேகம் நடைபெறும். அந்த எண்ணையை எடுத்து இங்குள்ள நாழிக்கிணற்றில் ஊற்றி வருகின்றனர். இந்த நாழிக்கிணற்றில் உள்ள எண்ணையை நம்பிக்கையுடன் உண்டால் நோய் தீரும் என்பது நம்பிக்கை ஆகும்.

    ஆழ்வார் திருநகரியை ஆண்ட மன்னரான காரிக்கு குழந்தைபேறு இல்லாததால், திருக்குறுங்குடிக்குச் சென்று வேண்டினார். மன்னரின் கனவில் தோன்றிய நம்பிராயர் எப்படிபட்ட குழந்தைவேண்டும் என்று வினவினார். அதற்கு காரி தங்களைப்போன்ற ஒரு ஆண்பிள்ளை வேண்டுமென்றார். அவ்வாறே ஆகும் என உரைத்த நம்பிராயர், இங்கிருந்து கிழக்கே சென்றால் நான்கு ஏரிகள் சூழ்ந்த இடத்தில் எறும்புகள் சாரைசாரையாகச் செல்லும்.

    அதற்கு நேர் மேலே கருடன் வட்டமிட்டுக் கொண்டிருப்பான். அந்த இடத்தில் அகழ்ந்தால் வானமாமலை தென்படுவான். அவன் கேட்டதை அருளுவான் என்றார். அதன்படி அந்த இடத்தைக் கண்டறிந்து அங்கே மன்னன் அகழ்ந்தபோது, அங்கே வானமாமலைப் பெருமாள் கிடைத்தார். நாங்குநேரி என்ற அவ்வூரிலேயே அவரை நிலைநாட்டி அவருக்கு கோயில் கட்டி அவரை வழிபட்டார். அதன்பிறகு நம்பிராயர் அருளியபடியே காரி மன்னருக்கு மகனாக நம்மாழ்வார் பிறந்தார்.

    கோயில் கருவறையில் ஆதிசேடன் குடையாய் இருக்க, வானமாமலைப் பெருமாள் வைகுண்டபதியாக அமர்ந்த திருக்கோலத்தில் இருக்கிறார். அவருக்கு இருபுறமும் ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி தாயார்கள் காட்சி தருகின்றனர். இவர் களுக்கு ஊர்வசியும் திலோத்தமையும் சாமரம் வீசுகின் றனர். பிருகு முனிவர், மார்க்கண்டேய முனிவர், சூரியன், சந்திரன் ஆகியோர் பெருமாளை சேவித்தபடி, கருவறையில் வீற்றிருக்கின்றனர். அர்த்த மண்டபத்தில் கருடாழ்வார், விஷ்வக்சேனர் இருக்கிறார். இந்த 13 விக்கிரகங்களும் சுயம்புகள் என்றும். வைகுண்டத்தில் பெருமாள் எப்படி வீற்றிருப்பாரோ அத்தகைய கோலத்திலேயே சுவாமி இங்கு இருப்பதாக நம்பிக்கை உள்ளது.

    இத்திருக்கோவிலில் அமைந்துள்ள ஒவ்வொரு தூண்களிலும் நான்கைந்து சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் சிறப்பானவை, அனுமனை அணைத்து நிற்கும் ராம பிரானின் திருக்கோலமும், பீமனை எட்டிப்பிடிக்கும் புருஷாமிருகத்தின் சிற்பமும் ஆகும்.

    சனிக்கிழமை எண்ணெய் அபிஷேகம்

    ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் திருவோணத்தன்று பெருமாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. இம்மாதத்தில் வரும் அனைத்து சனிக்கிழமையும் பெருமாளுக்கு நல்லெண்ணை அபிஷேகம் சிறப்பாக நடைபெறும். புரட்டாசியின் மற்ற நாட்களை விட சனிக்கிழமை பக்தர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. புரட்டாசியில் வரும் சனிக்கிழமை காலை 7 மணிக்கு நடை திறக்கப்படும்.

    தொடர்ந்து 8 மணிக்கு சிறப்பு நல்லெண்ணெய் அபிஷேகம் நடைபெறும். 10 மணிக்கு கால சாந்தி பூஜை நடைபெறும். 10.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை பால், தயிர் அபிஷேகங்களை தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெறும். பெருமாளை வணங்க வரும் பக்தர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் சர்க்கரை பொங்கல், புளியோதரை உள்ளிட்ட நைவேத்தியம் படைப்பார்கள். வானமாமலை பெருமாளுக்கு புரட்டாசியில் கருட சேவை கிடையாது.

    உற்சவ திருவிழா

    இக்கோவிலில் தினமும் காலை 7 மணிக்கு நடை திறக்கப்பட்டு ஆறுகால பூஜைகள் நடைபெறுகிறது. சித்திரை மாதத்தில் சித்திரை பிரமோற்சவம், வைகாசி மாதத்தில் வைகாசி வசந்த உற்சவம், ஆவணி மாதத்தில் ஆவணி பவித்ர உற்சவம், தை மாதத்தில் வரும் அமாவாசையன்று எண்ணெய் காப்பு, பங்குனி மாதத்தில் திருக்கல்யாண உற்சவம் ஆகியவை முக்கிய திருவிழாக்களாகும்.

    கருட சேவை

    வானமாமலை பெருமாளுக்கு தை அமாவாசை அன்று தான் ஒரு கோட்டை (3 கொப்பரை) எண்ணெய் காப்பு வெகு விமரிசையாக நடைபெறும். இத்திருநாளில் பக்தர்களின் கூட்டம் சொல்லி மாளாத அளவிற்கு இருக்கும். இரவு கருட சேவை நடைபெறும். பங்குனி, சித்திரை மாதத்தில் 5-வது நாள் கருட சேவை நடைபெறும். ஐப்பசி மாதத்தில் வரும் பவுர்ணமி அன்றும், ஆவணி மாதத்தில் வரும் அமாவாசை அன்றும் கருட சேவை சிறப்பாக நடைபெறும்.

    தீராத நோய் தீர்க்கும் எண்ணெய்

    இது தானாக தோன்றிய தலம். பெருமாளுக்கு தினம் தைல அபிஷேகம் உண்டு. அந்த எண்ணையை எடுத்து சுமார் 25 அடி நீளமும் 15 அடி அகலமும் உள்ள கிணற்றில் ஊற்றி விடுகிறார்கள். இந்த எண்ணையை நம்பிக்கையுடன் உண்டால் தீராத வியாதிகள் நீங்கும். இங்குள்ள பெருமாளின் சடாரியில் நம்மாழ்வாரின் திருஉருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது. பகவான், மதுகைடபர்களை சம்ஹரித்துப் பூமியைப் புனிதமாக்கி, ஆனந்தமயமாக, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக, இங்குக் காட்சி கொடுக்கிறார். ஊர்வசியும் திலோத்தமையும், பெருமாள் பக்கம் நின்று வெண் சாமரம் வீசிக் கொண்டிருக்கின்றனர். தல புராணம் இந்த தலத்தைப் பூலோக வைகுந்தமாகப் பேசுகிறது.

    சிந்து சேத்து அரசன் குசாசன முனிவரால் சாபம் பெற்று நாய் வடிவத்துடன் அலைந்து திரிந்து இத்தலத்தில் உள்ள சேற்றுத் தாமரைப் புஷ்கரணியில் நீராடும்போது நாய் வடிவம் மாறித் தன் பழைய அரச வடிவத்தைப் பெற்று விளங்கினான். திருமால் மது-கைடபன் என்னும் அரக்கர்களை அழித்தபோது ரத்தம் பரவித் துர்நாற்றம் வீசப் பூதேவியின் வேண்டுகோள்படி சக்கராயுதத்தை ஏவி அமிர்தமழை பொழியச் செய்து அமுக்கையும், நாற்றத்தையும் போக்கினார்.

    மணவாள முனிவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட அஷ்டதிக் புஜங்களில் ஒருவர் ஸ்ரீ வானமாமலை ஜீயர் சாமி. ஒவ்வொரு ஐப்பசி மாதம் மூலம் நட்சத்திரத்தன்று வானமாமலை ஜீயர் சாமிகள் மணிவாள முனிவர் அணிந்த தங்க மோதிரம் அணிந்து கொண்டு தீர்த்தம் சாதிப்பது வழக்கம்.

    கஷ்டம் வராமல் இருக்கவும் நோய்களினால் உள்ளமும், உடலும் கெட்டு திண்டாடாமல் இருக்கவும், மாணவர்கள் நன்கு படிக்கவும், குடும்பத்தில் சந்தோஷமும் மகிழ்ச்சியும் நிலைக்கவும் தோத்தாரி நாதப் பெருமாளை வணங்கி, அவருக்கு அபிஷேகம் செய்யப்பட்ட தைலத்தை உண்டு வந்தால் போதும். வாழ்க்கை இனிக்க ஆரம்பிக்கும்.
    Next Story
    ×