என் மலர்tooltip icon

    இஸ்லாம்

    தீமைகளைத் தடுக்கும் ஆற்றல்களை வைத்துக்கொண்டு தீமைகளைத் தடுக்காமல் இருப்பது குற்றமே, அவர்கள் இறைத்தண்டனைக்கு ஆளாவார்கள் என்று கூறுகிறது குர்ஆன்.
    நன்மைகளை ஏவுவதோடு தீமையைத் தடுத்தால் மட்டுமே நீதிமிக்க, அமைதி மிக்க சமூகத்தை உருவாக்க முடியும். எனவே இஸ்லாம் எப்போதும் இவ்விரண்டையும் இணைத்தே பேசுகிறது. நன்மையை ஏவுவது சிலவேளைகளில் எளிதாக நடந்து முடிந்து விடுகிறது. ஆனால் தீமைகளை தடுக்க முயன்றால் எதிர்ப்புகளும், சோதனைகளும், நம்மை நோக்கி வரும்.

    பலவீனமான மக்களை பாதுகாக்கும்படியும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விடுதலை தந்து அவர்களை தலைவர்களாக ஆக்கும்படியும் குர்ஆன் நமக்கு இவ்வாறு கட்டளையிடுகின்றது.

    “பலவீனர்களாக்கப்பட்ட, அடக்கி ஒடுக்கப்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோருக்காக அல்லாஹ்வின் வழியில், நீங்கள் போர் புரியாமல் இருக்க என்னதான் காரணம்? அவர்களோ, “எங்கள் இறைவனே! அக்கிரமக்காரர்கள் வாழும் இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக, மேலும் எங்களைப் பாதுகாக்கக்கூடிய ஒருவரை உன்னிடமிருந்து தோற்றுவிப்பாயாக, எங்களுக்கு உதவி செய்பவரையும் உன்னிடமிருந்து தோற்றுவிப்பாயாக” என்று பிரார்த்தனை செய்கின்றார்கள்.” (திருக்குர்ஆன் 4 : 75)

    “மேலும், எவர்கள் பூமியில் ஒடுக்கப்பட்டிருந்தார்களோ அவர்கள் மீது நாம் அருள் புரியவும், அவர்களைத் தலைவர்களாக்கவும், அவர்களை வாரிசுகளாக்கி பூமியில் ஆட்சியதிகாரத்தை அவர்களுக்கு வழங்கவும் நாம் நாடியிருந்தோம்.” (28 : 5)

    தர்மத்தை வாங்குவதற்கு ஆட்கள் இல்லாத சமூகம், ஒரு பெண் நீண்ட தூரத்திற்கு தன்னந்தனியாகப் பயணம் செய்யும் சமூகம், அநீதி மிக்க ஆட்சியாளர்கள் அகற்றப்பட்ட சமூகம், இதை உருவாக்குவதே என் லட்சியம் என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

    நபிகள் நாயகம் தம் வாழ்நாளிலேயே மது, சூது, வட்டி, ஆபாசம், குலஆட்சிமுறை, சமூக ஏற்றத்தாழ்வுகள், பெண்ணடிமைத்தனம் ஆகியவைகளை அகற்றி ஒரு நீதிமிக்க சமூகத்தை உருவாக்கி காட்டினார்கள்.

    தீமைகளை முற்றிலுமாக ஒழிக்க முடியாவிட்டாலும் உங்களால் முடிந்தவரை முயலுமாறு கூறப்பட்டுள்ளது.“உங்களில் ஒருவர் தீயதைக் கண்டால் கைகளால் தடுக்கட்டும். அது அவரால் முடியவில்லை எனில் நாவால் தடுக்கட்டும். அதுவும் முடியவில்லை எனில் மனதால் வெறுத்து ஒதுக்கட்டும். இதுவே இறைநம்பிக்கையின் கீழ்நிலையாகும்” என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். (நூல் : முஸ்லிம்)

    தீமைகளைத் தடுக்கும் ஆற்றல்களை வைத்துக்கொண்டு தீமைகளைத் தடுக்காமல் இருப்பது குற்றமே, அவர்கள் இறைத்தண்டனைக்கு ஆளாவார்கள் என்று கூறுகிறது குர்ஆன். நன்மையை ஏவி தீமையை விலக்காதவர்களை நபிமொழி எப்படி எச்சரிக்கிறது என்பதைப் பாருங்கள்.

    “எனது ஆன்மா எவன் கையில் உள்ளதோ அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக! நிச்சயமாக நீங்கள் நன்மையைக் கட்டாயம் ஏவ வேண்டும். தீமையைக் கட்டாயம் தடுத்தாக வேண்டும். அவ்வாறு செய்யவில்லையென்றால் அல்லாஹ் அவனிடமிருந்து ஒரு வேதனையை உங்கள்மீது அனுப்புவான். பின்னர் நீங்கள் அவனிடம் பிரார்த்திப்பீர்கள். உங்கள் பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டா.” (திர்மிதி)

    எனவே நன்மையை ஏவுவது போல் தீமைகளை தடுப்போம், நீதிமிக்க சமூகத்தையும் உருவாக்குவோம்.

    டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முகம்மது, சென்னை.
    நன்மைகளின் பக்கம் மக்களை தொடர்ந்து அழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். மாற்றம் என்பது ஒரே இரவில் வந்து விடாது. எனவே பொறுமையாகவும் உற்சாகத்தை இழக்காமலும், நம்பிக்கையுடனும் இப்பணி நடை பெற வேண்டும்.
    உலகம் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்ததாக ஆக வேண்டும் என்றால் நல்ல மனிதர்களை உருவாக்க வேண்டும். அவர்கள் நல்ல சமூகத்தை உருவாக்குவார்கள். நாம் மட்டுமே நல்லவராக வாழ்ந்துவிட்டு இந்த உலகம் மாறவில்லையே என அங்கலாய்ப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. சமூகத்தில் சிலர் மட்டுமே நல்லவர்களாக இருப்பதால் மாற்றங்கள் வந்துவிடாது.

    எனவே, நல்ல செய்திகளை மக்களுக்கு வழங்கிக்கொண்டே இருக்க வேண்டும். இறைச்செய்திகளை இனம், மொழி, நாடு வேறுபாடின்றி அனைத்து மக்களுக்கும் வழங்க வேண்டும். இறைவனைப்பற்றிய கருத்துக்கள், மனிதர்களைப் பற்றிய கருத்துக்கள், இறப்புக்குப் பின் உள்ள வாழ்க்கை பற்றிய கருத்துக்கள், அற போதனைகள், வாழ்வியல் கோட்பாடுகள், ஒழுக்க மாண்புகள், இறைவன் - மனிதன், மனிதன்&மனிதன் இடையே உள்ள தொடர்புகள் ஆகியவை பற்றி இறைவன் வழங்கி உள்ள வழிகாட்டுதல்களை மக்களுக்கு சமர்ப்பிக்கவேண்டும்.

    நன்மைகளின் பக்கம் மக்களை தொடர்ந்து அழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். மாற்றம் என்பது ஒரே இரவில் வந்து விடாது. எனவே பொறுமையாகவும் உற்சாகத்தை இழக்காமலும், நம்பிக்கையுடனும் இப்பணி நடை பெற வேண்டும்.

    இப்பணி முதலில் குடும்பத்திலிருந்தே தொடங்க வேண்டும். நமது கணவன், மனைவி, குழந்தைகள், உறவினர்கள் ஆகியோரை நெறிப்படுத்த வேண்டும். கல்விக்கூடங்களிலும் இது தொடர வேண்டும். ஊடகங்கள், பொதுமேடைகள், வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றில் நல்ல சிந்தனைகளை விதைக்க வேண்டும். இவற்றில் எதையும் செய்யாமல் இருந்துவிட்டு, நாடு கெட்டுப் போய்விட்டதே என்று கூறுவதில் பயனில்லை.

    “இறைநம்பிக்கையாளர்களே! மனித இனத்தைச் சீர்படுத்துவதற்காக தோற்றுவிக்கப்பட்டிருக்கும் மிகச்சிறந்த சமூகத்தவராய் நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் நன்மை புரியும்படி ஏவுகின்றீர்கள்; தீமையிலிருந்து தடுக்கின்றீர்கள். மேலும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கின்றீர்கள்” என்று திருக்குர்ஆன் (3 : 110) குறிப்பிடுகிறது.

    “நன்மையின் பக்கம் அழைக்கக்கூடிய ஒரு குழுவினர் உங்களிடையே கண்டிப்பாக இருந்திட வேண்டும். அவர்களோ நல்லவை புரியும்படி ஏவவேண்டும்; தீயவற்றிலிருந்து தடுத்தவண்ணம் இருக்கவேண்டும். எவர்கள் இப்பணியை புரிகிறார்களோ உண்மையில் அவர்களே வெற்றியாளர் ஆவர்”  என்றும் திருக்குர்ஆன் (3 : 104) வலியுறுத்துகிறது.

    நன்மையை ஏவி, தீமையை விலக்கும் சமூகமே சிறந்த சமுதாயம் என்று குர்ஆன் வர்ணிக்கிறது. ஒரு சமுதாயத்தின் சிறப்பிற்கு பொருள்வளம், மனிதவளம், இயற்கை வளம், அறிவுவளம் ஆகியவற்றை மட்டுமே அடிப்படையாக கொள்ளக்கூடாது. அறம் சார்ந்து வாழும் சமூகம், தீமைகளற்ற சமூகம், மனித உரிமைகள் வழங்கப்பட்டு மனித மாண்புகளை பேணிக்காக்கும் சமூகமே சிறந்த சமூகமாகும். இந்த நோக்கில் செயல்படும் மனிதர்களையே வெற்றியாளர்கள் என குர்ஆன் குறிப்பிடுகிறது. மனித சமூகத்தை சீர்திருத்துபவனை விட மிகப் பெரும் வெற்றியாளர் யாராக இருக்க முடியும்?

    மேலும் இப்பணியில் ஈடுபடுவோருக்கு மிகுந்த வெகுமதியை மறுமையில் இறைவன் அளிக்கின்றான் என்று திருமறையில் கூறப்பட்டுள்ளது.

    டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முகம்மது, சென்னை.
    தொழுவது, ஜகாத் கொடுப்பது ஆகியவற்றோடு நலிவுற்ற மக்களுக்கு வழங்குவது, வாக்குறுதியை காப்பாற்றுவது, சோதனையின் போது நிலைகுலையாமல் இருப்பது ஆகியவையும் நற்செயல் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
    உலகில் செய்யப்படும் எந்த செயலுக்கும் ஒரு நோக்கம், லட்சியம் உண்டு. மனிதனைப் படைத்த இறைவனே இந்த லட்சியத்தை நிர்ணயித்துவிட்டான். இவ்வுலகில் நற்செயல் புரிவதற்காகவே நான் உன்னைப் படைத்தேன். அது இவ்வுலகில் உனக்கு வைக்கப்பட்ட தேர்வாகும். அதில் வெற்றி பெற்றால் மறுமையில் நிலையான, இவ்வுலகைவிட மேலான சுவனத்தை உனக்கு நான் நல்குவேன் என்று இறைவன் கூறுகின்றான்.

    அவன் மரணத்தையும் வாழ்வையும் ஏற்படுத்தினான். உங்களில் யார் மிகச் சிறந்த செயல் புரியக்கூடியவர் என்று உங்களைச் சோதிக்கும் பொருட்டு என்பது திருக்குர்ஆன் (67:2) வசனமாகும்.

    இப்போது எது நற்செயல் என்ற கேள்வி எழுகிறது. அதனை முடிவு செய்பவன் யார்? அதனை முடிவு செய்யும் பொறுப்பை மனிதனிடத்தில் கொடுத்தால், மனிதர்களே தங்களுக்குள் வேறுபட்டு நிற்பார்கள். எனவே நன்மை, தீமையை முடிவு செய்யும் பொறுப்பை இறைவனே ஏற்றுக்கொண்டான்.

    ஒரு செயல் நற்செயல் என்று ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு இரண்டு நிபந்தனைகள் உள்ளன. 1. இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட செயல்கள். 2. இறை திருப்தியை பெறுவதற்காக செய்யப்படும் செயல்கள். இந்த விதிக்கு உட்பட்டு செய்யப்படும் அனைத்து செயல்களும் நற்செயல்களே.

    தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் போன்ற செயல்கள் நற்செயல்களின் ஒரு பகுதியாகும். அதன் இன்னொரு பகுதி அவற்றை விட விரிவானது.

    நற்செயல் என்பது உங்களுடைய முகங்களைக் கிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ திருப்புவதல்ல. மாறாக அல்லாஹ்வையும், இறுதி நாளையும், வானவர்களையும், வேதங்களையும், நபிமார்களையும் ஒருவன் முழுமையாக நம்புவதும், மேலும் (அல்லாஹ்வின் மீதுள்ள நேசத்தின் காரணமாகத்) தமக்கு விருப்பமான பொருளை உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், வறியவர்களுக்கும், வழிப்போக்கருக்கும், யாசிப்போருக்கும், அடிமைகளை மீட்பதற்கு வழங்குவதும், மேலும் தொழுகையை நிலைநாட்டி, ஜகாத்தைக் கொடுத்து வருவதுமே நற்செயல்களாகும். மேலும், வாக்குறுதி அளித்தால் தம் வாக்குறுதி களை நிறைவேற்றுபவர்களும், வறுமை மற்றும் துன்பங்களின் போதும் சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் நடக்கும் போராட்டத்தின் போதும், பொறுமையுடன் நிலைத்து இருப்பவர்களுமே புண்ணியவான்கள் ஆவர். இவர்களே உண்மையாளர்கள்; மேலும் இவர்களே இறையச்ச முடையவர்கள். (2:177)

    இவ்வசனத்தில் தொழுவது, ஜகாத் கொடுப்பது ஆகியவற்றோடு நலிவுற்ற மக்களுக்கு வழங்குவது, வாக்குறுதியை காப்பாற்றுவது, சோதனையின் போது நிலைகுலையாமல் இருப்பது ஆகியவையும் நற்செயல் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

    தொழுகை, நோன்பு, தர்மம் ஆகியவற்றைவிட சிறந்த செயல் ஒன்றை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். கட்டாயம் அறிவியுங்கள் என்றனர் தோழர்கள். மக்களுக்கிடையில் சமாதானம் செய்து வையுங்கள். மக்களுக்கிடையில் உறவுகளை சீர்குலைப்பதே அழிவிற்கு காரணமாகும் என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். (நூல்: திர்மிதி)

    இறைக்கட்டளைகளுக்காக வாழ்வதே, வாழ்வின் லட்சியமாகும். ரமலான் நோன்பில் அந்த லட்சியத்தை நிறைவேற்றுவோம்.

    டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முகம்மது, சென்னை.
    முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தமது இறுதி ஹஜ்ஜின் போது ‘பத்னுல் வாதி’ என்ற இடத்திற்கு வந்து, அங்குக் குழுமியிருந்த ஓர் இலட்சத்திற்கும் மேலான முஸ்லிம்களுக்கு மத்தியில் நின்று உரையாற்றத் தொடங்கினார்கள்.
    முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தமது இறுதி ஹஜ்ஜின் போது ‘பத்னுல் வாதி’ என்ற இடத்திற்கு வந்து, அங்குக் குழுமியிருந்த ஓர் இலட்சத்திற்கும் மேலான முஸ்லிம்களுக்கு மத்தியில் நின்று உரையாற்றத் தொடங்கினார்கள்.

    “மக்களே, மிகக் கவனமாகக் கேளுங்கள்! இந்த ஆண்டுக்குப் பிறகு இந்த இடத்தில் உங்களை நான் மறுபடியும் சந்திப்பேனா என்று எனக்குத் தெரியாது. இந்த மக்கா நகரை புனிதமாகக் கருதுவதுபோல் உங்களில் ஒருவர் மற்றவரின் உயிரையும் பொருளையும் மானத்தையும் புனிதமாகக் கருதுங்கள். பழிவாங்குவதை, அப்படியான எண்ணங்களைக் கைவிடுங்கள். கொலை செய்வதிலிருந்து உங்களைத் தடுத்துக் கொள்ளுங்கள். வட்டி வாங்குவதை விட்டுவிடுங்கள். பெண்களை மரியாதையோடு நடத்துங்கள். அவர்கள் உங்கள் மனைவியராக இருந்தாலும் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்யுங்கள். நல்ல முறையில் அவர்களுக்கு உணவும் ஆடையும் அளியுங்கள். நீங்கள் விரும்பாதவர்களை உங்கள் இல்லத்திற்குள் அவர்கள் அனுமதிக்கக் கூடாது என்பதை மட்டும் நிபந்தனையாகச் சொல்லிவிடுங்கள்.

    நான் உங்களிடம் விட்டுச் செல்வதை நீங்கள் உறுதியாகப் பின்பற்றினால் ஒருபோதும் வழி தவறமாட்டீர்கள். அதுதான் அல்லாஹ்வின் வேதமாகும். எனக்குப் பின் எந்தவொரு இறைத்தூதரும் இல்லை, உங்களுக்குப் பின் எந்தவொரு சமுதாயமும் இல்லை. உங்களுக்கு விதிக்கப்பட்ட ஐவேளைத் தொழுகையை மட்டும் விட்டுவிடாமல் நிறைவேற்றுங்கள். ரமதான் மாதத்தில் நோன்பு இருங்கள். மனமுவந்து உங்கள் செல்வத்திலிருந்து ஒரு பங்கை தர்மமாக (ஜகாத்தாக) கொடுங்கள். உங்கள் இறைவனின் இல்லத்தை ஹஜ் செய்யுங்கள். இப்படியான நற்கருமங்கள் செய்தால் இறைவன் உங்களுக்காகப் படைத்துள்ள சுவனத்தில் நுழைவீர்கள். உங்கள் இறைவனை நீங்கள் சந்திக்கும்போது அவன் உங்கள் செயல்களைப் பற்றி உங்களிடம் விசாரணை செய்வான்.

    மக்களே! அறிந்து கொள்ளுங்கள். உங்கள் இறைவன் ஒருவனே. மக்களில் ஒருவரைவிட ஒருவர் எந்தவிதத்திலும் மேன்மையானவர்கள் இல்லை. மறுமையில் என்னைப் பற்றி உங்களிடம் விசாரிக்கும் போது நீங்கள் என்ன பதில் கூறுவீர்கள்?” என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். கூடியிருந்தோர் “நிச்சயமாக நீங்கள் எடுத்துரைத்தீர்கள் நிறைவேற்றினீர்கள் நன்மையையே நாடினீர்கள் என நாங்கள் சாட்சி கூறுவோம்” என்றார்கள். அதற்கு நபியவர்கள் “அல்லாஹ்! இதற்கு நீயே சாட்சி!” என்று மூன்று முறை கூறினார்கள். இங்கு வந்திருப்பவர்கள் அனைவரும் இங்கு வராத மற்றவர்களுக்கும் இன்று நான் சொன்னதையெல்லாம் எடுத்துக் கூறுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் சொல்லி உரையை முடித்தார்கள்.

    அப்போது “இன்றைய தினம் நாம் உங்களுக்கு உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி வைத்து என்னுடைய அருளையும் உங்கள் மீது முழுமையாக்கி வைத்து விட்டோம்” என்ற இறைவசனம் இறங்கியது.

    திருக்குர்ஆன் 5:3, ஸஹீஹ் புகாரி 5:65:4606, 1:2:53

    - ஜெஸிலா பானு
    “செயல்கள் அனைத்தின் விளைவுகளும் எண்ணத்தைப் பொறுத்தே அமைகின்றன. மனிதன் எதை எண்ணுகின்றானோ அதற்குரிய பலன் தான் அவனுக்குக் கிட்டும்” என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். (புகாரி, முஸ்லிம்)
    நற்செயல் பற்றிய இஸ்லாத்தின் பட்டியல் நீளமானது. அவற்றுள் சிலவற்றைப் பார்ப்போம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: “கதிரவன் எழும் ஒவ்வொரு நாளிலும் உடம்பின் ஒவ்வொரு பாகமும் ஒரு அறத்தைச் செய்ய வேண்டும். இருவருக்கிடையில் நீதியுடன் நடந்து கொள்வதும் அறமே. ஒருவருக்கு வாகனத்தை கொடுத்து உதவுவதும், வாகனத்தில் ஏற உதவுவதும், சரக்குகளை வாகனத்தில் ஏற்ற உதவுவதும் ஓர் அறமே.

    ஒரு நற்சொல் மொழிவதும் அறமே.தொழுகையை நோக்கி எடுத்து வைக்கப்படும் ஒவ்வோர் அடியும் அறமே. பாதைகளில் கிடக்கும் தொல்லை தரும் பொருட்களை அப்புறப்படுத்துவதும் அறமே. (நூல்:புகாரி, முஸ்லிம்)

    உங்கள் சகோதரனை புன்முறுவலுடன் சந்திப்பதும் ஓர் அறமே. (முஸ்லிம்)

    முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதை விதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து ஒரு பறவையோ, ஒரு மனிதனோ, ஒரு பிராணியோ உண்டால், அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான கூலி அவருக்குக் கிடைக்கும். (புகாரி)

    இரண்டு கோத்திரத்தாருக்கிடையே தகராறு என்ற செய்தி நபிகளாருக்குத் தெரிவிக்கப்பட்டது. நபியவர்கள் சமாதானம் செய்து வைப்பதற்காகத் தமது தோழர்களுடன் புறப்பட்டுச் சென்றார்கள். சமாதானப் பேச்சு வார்த்தையில் சற்று நேரம் தாமதமாகி விடவே உரிய நேரத்தில் தொழுகையில் கலந்துகொள்ள முடியவில்லை. பின்னர் தாமதமாகத் தொழுகையில் கலந்துகொண்டார்கள். (புகாரி)

    (சமாதானத்தில் ஈடுபடும் வேளைகளில் தொழுகையில் கலந்துகொள்ள தாமதமானாலும் பெருமானார் அதைப் பொருட்படுத்தவில்லை.)நேர்மையான முறையில் வணிகம் புரிவதும், நீதிமிக்க ஆட்சி செலுத்துவதும் இறை அருளுக்குரியவை என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

    எனவே வாழ்வின் அனைத்துத் துறைகளையும் நற்செயல் தழுவி நிற்கின்றது. அது வழிபாடுகளோடு முடிந்துவிடுவதல்ல என்பதையே மேற்கூறிய நபிமொழிகள் நமக்கு உணர்த்துகின்றன.

    நற்செயல் புரிபவர் உளத்தூய்மையோடு செய்தால் மட்டுமே அது இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படும். பகட்டுக்காகவும், விளம்பரத்திற்காகவும், பிறரிடம் நன்றி, கூலி, பாராட்டு, கைம்மாறு ஆகியவற்றை எதிர்பார்த்துச் செய்யப்படும் செயல்களை இறைவன் ஏற்பதில்லை.

    “செயல்கள் அனைத்தின் விளைவுகளும் எண்ணத்தைப் பொறுத்தே அமைகின்றன. மனிதன் எதை எண்ணுகின்றானோ அதற்குரிய பலன் தான் அவனுக்குக் கிட்டும்” என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். (புகாரி, முஸ்லிம்)

    “மேலும், அல்லாஹ்வின் மீதுள்ள அன்பினால் வறியவருக்கும், அநாதைக்கும், கைதிக்கும் உணவளிக்கின்றார்கள். (மேலும், அவர்களிடம் கூறுகின்றார்கள்:) நாங்கள் அல்லாஹ்வுக்காகவே உங்களுக்கு உணவளிக்கின்றோம். நாங்கள் உங்களிடமிருந்து எந்தப் பிரதிபலனையும், நன்றியையும் எதிர்பார்க்கவில்லை.”(76:8-9)

    நன்மைகளை விரிவாகச் செய்வோம். நல்ல உள்ளத்துடன் செய்வோம். இறைத் திருப்தியைப் பெறுவது மட்டுமே நமது நோக்கமாக இருக்க வேண்டும்.

    டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முகம்மது, சென்னை.
    இஸ்லாம் மனித குலத்திற்கு வழங்கியயுள்ள மனித உரிமைகள் குறித்து திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. அதில் சிலவற்றைப் பார்க்கலாம்.

    இஸ்லாம் மனித குலத்திற்கு வழங்கியயுள்ள மனித உரிமைகள் குறித்து திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. அதில் சிலவற்றைப் பார்க்கலாம்.

    'வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்'. (குர்ஆன் 6 : 151) சிசுக்கொலை, கருக்கொலை இதன் மூலம் தடைசெய்யப்படுகிறது.

    'அல்லாஹ் கண்ணியத்திற்கு உரியதாக்கிய எவ்வுயிரையும் நியாயமின்றிக் கொலை செய்யாதீர்கள்'. (6 : 151) கொலை, கலவரங்கள், வன்முறை, பயங்கரவாதம் மூலம் உயிரிழப்பை ஏற்படுத்துவது வரம்பு மீறிய செயலாகும்.

    'உங்களில் ஒருவர் மற்றவரின் பொருள்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்; மேலும் பிற மனிதர்களுடைய பொருள்களில் ஏதேனும் ஒரு பகுதியை அநீதியான முறையில் தின்பதற்காக, அது தவறு என நீங்கள் அறிந்திருந்தும், அதற்குரிய வாய்ப்பைப் பெற அதிகாரிகளை அணுகாதீர்கள்'. (2 : 188)

    'உறவினர்களுக்கும் வறியவர்களுக்கும் வழிப்போக்கர்களுக்கும் அவரவர்க்குரிய உரிமையை வழங்கிவிடுங்கள்'. (17 : 26)

    'இறைநம்பிக்கையாளர்களே, எந்த ஆண்களும் மற்றெந்த ஆண்களையும் பரிகாசம் செய்ய வேண்டாம். ஒருவேளை அவர்கள் இவர்களைவிடச் சிறந்தவர்களாயிருக்கலாம். எந்தப் பெண்களும் மற்றெந்தப் பெண்களையும் பரிகாசம் செய்ய வேண்டாம். ஒருவேளை அவர்கள் இவர்களைவிடச் சிறந்தவர்களாயிருக்கலாம். நீங்கள் ஒருவரையருவர் குத்திப் பேசாதீர்கள். ஒருவருக்கொருவர் மோசமான பட்டப் பெயர்களைச் சூட்டி அழைக்காதீர்கள். இறைநம்பிக்கை கொண்டதன் பின்னர் மோசமான பெயர்களைச் சூட்டுவது மிகவும் கெட்ட விஷயமாகும். எவர்கள் இந்த நடத்தையைக் கைவிடவில்லையோ அவர்கள்தாம் கொடுமைக்காரர்கள்'. (49 : 11)

    'இறைநம்பிக்கை கொண்டவர்களே! அதிகமாக சந்தேகம் கொள்வதைத் தவிர்த்து விடுங்கள். ஏனெனில், சில சந்தேகங்கள் பாவமாக இருக்கின்றன. மேலும் துப்பறிவதில் ஈடுபடாதீர்கள். இன்னும் உங்களில் ஒருவர் மற்றவரைப் பற்றி புறம் பேச வேண்டாம்'. (49 : 12)

    'இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களுடைய வீடுகளைத் தவிர மற்றவர்களின் வீடுகளில் அந்த வீட்டாரின் இசைவைப் பெறாமலும், அவர்களுக்கு ஸலாம் (முகமன்) கூறாத வரையிலும் நுழையாதீர்கள்'. (24 : 27)

    ஒருவர் தாம் விரும்பும் மதத்தை, கொள்கைகளை பின்பற்ற உரிமை உடையவர் ஆவார். கொள்கைத் திணிப்பு உரிமை மீறலாகும். தமது கொள்கையை எடுத்துரைக்க மட்டுமே ஒருவருக்கு உரிமை உண்டு.

    'இது (குர்ஆன்) உங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள சத்தியமாகும். இனி நம்பிக்கை கொள்ள விரும்புவோர் நம்பிக்கை கொள்ளட்டும்; நிராகரிக்க விரும்புவோர் நிராகரிக்கட்டும்'. (18 : 29)

    உயிர், உடைமை, கண்ணியம், அந்தரங்கம், நம்பிக்கை ஆகியவை மனிதனின் அடிப்படை உரிமைகளாகும். இவற்றைப் பறிக்க எவருக்கும் உரிமை இல்லை. பறிப்பது வரம்பு மீறிய செயலாகும். மறுமையில் இவற்றிற்கும் தண்டனைகள் கிட்டும்.
    இம்மையில் இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்து விட்டு அதேவேளையில் மனிதர்களுக்கு எதிரான செயல்களை செய்திருந்தால் அவனுக்கு மறுமையில் எதுவும் கிட்டாது.
    மனிதர்களுக்கு உதவுவதும் மனிதநேயம், மனிதர்களுக்கு தொல்லை கொடுக்காமல் இருத்தலும் மனிதநேயம்.

    இஸ்லாம் மனித உரிமைகள் பற்றி விரிவாக பேசுகிறது. மனித உரிமைகளும் இறைவனால் விதிக்கப்பட்டவையே. வழிபாடுகளை வகுத்த அதே இறைவன்தான் மனித உரிமைகளையும் வகுத்துள்ளான். மனித உரிமைகளை மீறுவது இறைக்கட்டளைகளை மீறுவதற்கு சமமாகும்.

    ஒருவர் இறைவனுக்கு செய்ய வேண்டிய கடைமைகளில் தவறிழைத்தால் இறைவனிடத்தில் மட்டும் மன்னிப்பு கோரினால் போதும். மனித உரிமைகளை பறித்தால் இறைவனிடமும் மனிதர்களிடமும் அவர் மன்னிப்பு கோர வேண்டும்.

    லஞ்சம், ஊழல், மோசடி, நாட்டின் வளங்களை சுரண்டுதல், நிலங்களை அபகரித்தால், ஊதியத்திற்கேற்றபடி உழைக்காதிருத்தல், மக்களின் ஒற்றுமையை குலைத்து துவேஷம், வெறுப்பு ஆகியவற்றை உண்டு பண்ணுதல் போன்றவை நாட்டிற்கு சமூகத்திற்கும் எதிரான குற்றங்களாகும். இக்குற்றங்களை நாட்டு மக்கள் மன்னிக்காதவரை அவன் செய்த பாவங்கள் அவனை விட்டு விலகாது.

    ஒருபுறம் தொழுகை நோன்பு போன்ற வழிபாடுகள், இன்னொரு புறம் மனிதர்களுக்கு எதிரான பாவங்கள், இவ்வாறு செய்வோரை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நயவஞ்சகர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

    நயவஞ்சகர்களின் பண்புகள் மூன்று ஆகும். அவை

    1. பேசினால் பொய்யே பேசுவான்.
    2. வாக்குறுதி கொடுத்தால் மீறுவான்.
    3. நம்பி ஒப்படைத்த பொருள்களில் மோசடி செய்வான்.

    அப்படிப்பட்ட மனிதன் நோன்பு நோற்று தொழுது உம்ராவை (புனிதபயணம்) நிறைவேற்றினாலும், இறைவனுக்குரிய கடமைகளை செய்து கொண்டே மனிதர்களுக்கு தீங்கிழைப்பவர்கள் நயவஞ்சகர்களாக கருதப்படுவார்கள்.

    இம்மையில் இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்து விட்டு அதேவேளையில் மனிதர்களுக்கு எதிரான செயல்களை செய்திருந்தால் அவனுக்கு மறுமையில் எதுவும் கிட்டாது. மறுமையில் திவாலாகிப்போன நிலையில் அவன் இருப்பான் என்றார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்.

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தோழர்களிடம் ஏழை என்பவன் யார்? என்று வினவினார்கள். எவரிடம் பணமோ வேறு எந்தப்பொருளோ இல்லையோ அவரே எங்களில் ஏழை எனத்தோழர்கள் பதிலளித்தனர்.

    நபிகள் (ஸல்) கூறினார்கள்: ஒருவன் மறுமைநாளில் தன் தொழுகை, நோன்பு, ஜகாத் (தானதர்மம்) ஆகியவற்றுடன் இறைவனிடம் வருவான். இவற்றுடன் அவன் உலகில் எவரையேனும் திட்டியிருப்பான். எவர் மீதாவது அவதூறு கூறியிருப்பான் எவரையேனும் கொலை செய்திருப்பான் எவரையேனும் நியாயமின்றி அடித்திருப்பான். எனவே அவனது நன்மைகள் அவனால் அநீதிக்குள்ளாக்கப்பட்டவர்களிடையே பங்கிடப்படும். அவனது நன்மைகள் தீர்ந்து போய் அநீதிக்குள்ளானவர்களின் பாவங்கள் அவன் கணக்கில் எழுதப்படும். பிறகு அவன் நரகத்தில் வீசி எறியப்படுவான். அத்தகையோரே உண்மையான ஏழை ஆவார். ( நூல்: முஸ்லிம்)

    எனவே இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்து விட்டேன். எனவே எப்படியும் சுவனத்தில் நுழைந்து விடுவேன் என்று கனவு காண வேண்டாம்.

    - டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முகம்மது, சென்னை.
    இறைப்பொருத்தத்தை நாடி, இந்த ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று, இம்மையில் மகிழ்ச்சியான வாழ்வைப்பெற்று, நாளை மறுமையில் ‘ரையான்’ என்ற சுவர்க்கத்தை பெறுவோம், இன்ஷா அல்லாஹ்.
    இஸ்லாமிய மாதங்களில், ரமலான் ஒன்பதாவது மாதமாகும். இந்த மாதத்தில், கிழக்கு வெளுத்த நேரத்திலிருந்து, சூரியன் மறையும் வரை நோன்பு நோற்பது, முஸ்லிம்கள் மீது இறைவனால் கடமையாக்கப்பட்டுள்ளது.

    ‘நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னுள்ளவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது. (அதனால்) நீங்கள் இறை அச்சமுடையவர்களாக ஆகலாம்’. (திருக்குர்ஆன் 2:183)

    சத்தியத்தையும், அசத்தியத்தையும் பிரித்து மக்களுக்கு வழிகாட்டும் இறைவேதமான திருக்குர்ஆன், நபி (ஸல்) அவர் களுக்கு இறைவனிடமிருந்து அருளப்பட்ட மாதம்தான் இந்த ரமலான் மாதம். இன்னும், ஆயிரம் மாதங்களை விட சிறப்புப் பெற்ற (லைலத்துல் கதர்) என்ற ஒரு சிறப்பான இரவை, தாங்கிக்கொண்டு வருகிறது இந்த மாதம்.

    ‘நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும். அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்); அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். (திருக்குர்ஆன் 97:1-5)

    மற்ற மாதங்களில் செய்யும் நற் காரியங்களுக்கு அந்தச் செயல்களுக்கான கூலி மட்டும் கிடைக்கும். இந்த நோன்பு மாதத்தில் இறைப்பொருத்தத்தை மனதில் வைத்து, நோன்பு நோற்று இரவு, பகல் பாராமல் நற்காரியங்கள் செய்து வந்தால், இறைவனே ஒரு நன்மைக்குப் பத்து மடங்கு கூலி கொடுக்கின்றான். அதனால்தான், அறுவடைக்குக் காத்திருக்கும் விவசாயி போன்று, நன்மையை அறுவடை செய்ய ரமலான் மாதத்தை, உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்கள் எதிர்நோக்கி இருக்கிறார்கள்.

    ‘நோன்பு நோற்பவன் தன் உணவையும், பானத்தையும், இச்சையையும் எனக்காகவே விட்டுவிடு கிறான். நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுக்கின்றேன். ஒரு நன்மைக்குப் பத்து மடங்கு கூலி வழங்குவேன்’ என்று அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி)

    மனிதனின் வளமான வாழ்விற்கு உடல் வலிமை எந்தளவிற்கு முக்கியமோ, அந்தளவு அமைதியான வாழ்விற்கு மனவலிமை அவசியப்படுகிறது. மனவலிமை பெற்றவர்களால் மட்டுமே இந்த வாழ்க்கையை முழுமையாகச் சுவைக்க முடியும். மனவலிமை பெறாத மனிதனுக்கு இந்த வாழ்வை முழுமைப்படுத்தும் வாய்ப்புகள் மிகக்குறைவாகத்தான் கிடைக்கின்றன. இன்னும், மனவலிமை பெறாத மனிதன், வாழ்வில் சந்திக்கும் சின்ன, சின்ன பிரச்சினைகளைக் கடந்து போக முடியாமல், தற்கொலையைத் தேர்வு செய்யும் நிலைக்குத் தள்ளப்படுகிறான்.

    பொய், சண்டை, மற்றவர்களுக்குத் தீங்கு ஏற்படுத்தும் செயல்கள் போன்ற சிறிய, பெரிய பாவங்களை விட்டுத் தவிர்த்துக்கொள்ள ரமலான் நோன்பு பயிற்சி கொடுப்பது நாம் அறிந்த ஒன்று. ஆனால், மனித வாழ்விற்கு அச்சாணியாக மாறும் மனவலிமைக்கும், ரமலான் மாதம் பயிற்சி அளிப்பது, நோன்பை உள்ளாய்வு செய்தால் நமக்குத் தெரியவரும்.

    நோன்பு காலத்தில் (பகல் நேரத்தில்) மற்ற நாட்களில் அனுமதிக் கொடுக்கப்பட்டவைகளை உண்ணாமலும், குடிக்காமலும், மனைவியுடன் உறவு கொள்ளாமலும் தன் உடலைத் தடுத்துக் கொள்ளுதல் வேண்டும். தனக்கு உரிமையான ஒன்று தன்னருகில் இருக்கும் போது, அதனருகில் நெருங்காமல் இருக்கச்செய்வது, மனதிற்கான நோன்பு தரும் உயர்தரப் பயிற்சியாகும். இந்தப் பயிற்சி மனித மனதுக்குள் பல மாற்றங்கள் ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணமாக அமைகிறது.

    அன்றாடம் புதிய, புதிய பிரச்சினைகள், மனிதனை திசை திருப்புவதால் இந்த உலகில், சந்தோஷ வாழ்விற்கான வழிகள் மிகக்குறைவாகவே இருக்கின்றன. அந்தப் பிரச்சினைகளை எதிர்நீச்சல் போட்டு நீந்திச்செல்ல, நோன்பு காலத்தில் எடுக்கும் பயிற்சி அவனுக்கு ஊக்கம் தருகிறது. இன்னும் வாழ்வின் மீது எதிர்மறையான எண்ணங்கள் அவனுக்குள் வீரியம் எடுக்காமல் இருக்கவும் இந்தப் பயிற்சி பயன்தருகிறது.

    உலகில் எங்கும், எந்தச் சூழ்நிலையிலும் விரும்பியது கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் மனமகிழ்வோடு வாழ்வை அமைத்துக்கொள்ள, இந்த நோன்பு மனபலத்தை தருகிறது.

    நன்மைகளை மட்டும் அள்ளிக்கொடுக்கும் மாதமாக மட்டுமில்லாமல், விரக்தி நிலையை அடையாமல் தடுக்கின்றது. மேலும், மனித மனதைப் பக்குவ நிலைக்குக் கொண்டு சென்று, அவன் அமைதியாக தன் வாழ்நாளைக் கழிக்க இந்த ரமலான் மாதம் காரணமாக அமைகிறது.

    அமைதியான வாழ்விற்கு எதிராக வரும் அனைத்துத் தீமை களுக்கும் நோன்பு கேடயமாக மாறி முன் சென்று தடுப்பதால், நபி (ஸல்) அவர்கள் ‘நோன்பு என்பது கேடயம்’ என்றார்கள்.

    சிலநாள் அமாவாசை இருளாகவும், சிலநாள் பவுர்ணமி வெளிச்சமாகவும் மாறக்கூடிய வானம் போன்றுதான் நம் வாழ்வும். இந்த இரு காலச்சூழ்நிலைகளிலும் மன மகிழ்ச்சியாகவும், மன உறுதியுடனும் நாம் வாழ, நமக்கான அழகான கேடயத்தை, இஸ்லாம் நம் கையில் கொடுக்கின்றது. நோன்பு என்ற அந்தக் கேடயத்தை பயன்படுத்தி, நம் வாழ்விற்கு எதிராக வரும் தீமைகளை தடுத்துக்கொள்வோம்.

    இறைப்பொருத்தத்தை நாடி, இந்த ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று, இம்மையில் மகிழ்ச்சியான வாழ்வைப்பெற்று, நாளை மறுமையில் ‘ரையான்’ என்ற சுவர்க்கத்தை பெறுவோம், இன்ஷா அல்லாஹ்.

    ஏ.எச். யாசிர் அரபாத் ஹசனி, லால்பேட்டை.
    இஸ்லாம் விதியாக்கியுள்ள அடிப்படை வழிபாடுகளில் ஹஜ் இறுதியானது ஆகும். உடல்நலமும், வாகன வசதியும், பொருள் வசதியும் உள்ளோர் மீதே இது கடமையாக்கப்பட்டுள்ளது.
    இஸ்லாம் விதியாக்கியுள்ள அடிப்படை வழிபாடுகளில் ஹஜ் இறுதியானது ஆகும். உடல்நலமும், வாகன வசதியும், பொருள் வசதியும் உள்ளோர் மீதே இது கடமையாக்கப்பட்டுள்ளது.

    இறைவனை தரிசிக்க மக்காவிற்கு தான் செல்ல வேண்டுமா? இறைவனை எங்கிருந்தும் தொழலாமே என்பது அர்த்தமுள்ள கேள்வி. ஹஜ் கடமை பல நோக்கங்களை கொண்டது. மற்ற வழிபாடுகளை போலவே ஹஜ்ஜின் முக்கிய நோக்கமும் இறையச்சம், இறை உணர்வு பெறுதல்(தக்வா)ஆகும்.

    நீங்கள் (ஹஜ்ஜுக்காக) வழித்துணை சாதனங்களை கொண்டு செல்லுங்கள். வழித்துணை சாதனங்களில் மிக மேலானவை இறையச்சம் தான் என்கிறது திருக்குர்ஆன் (2:197).

    ஹஜ்ஜின் போது பிராணிகளை பலியிடுகின்றனர். இது குறித்து குர்ஆன் சுறுகையில் பிராணிகளின் இறைச்சியும் இரத்தமும் இறைவனை சென்று சேர்வதில்லை. உங்களின் இறையச்சமே இறைவனை சென்று சேருகின்றது. என்று கூறுகின்றது.

    ஒழுக்கமுள்ள மனிதனை உருவாக்கும் ஒரு வழிமுறையே ஹஜ். ஏக இறைவனுக்காக எழுப்பப்பட்ட முதல் ஆலயத்திற்கு வரும் இறைநம்பிக்கையாளர்கள் அதனை கண்டு பரவசமடைகின்றனர். ஹஜ்ஜின் போது அதிகமாக தொழுகின்றர், பிரார்த்தனை புரிகின்றனர். பாவமன்னிப்பு கோருகின்றனர். இவை இறை உணர்வை வலுப்படுத்துகிறது. இது தவிர ஹஜ்ஜின் போது அவர்களிடத்தில் பல கட்டுப்பாடுகளும் உள்ளன. ஹஜ்ஜின் போது இச்சைகளை தூண்டக்கூடிய சொல், செயல் மற்றும் தீவினை, சண்டை சச்சரவு ஆகியவற்றில் ஈடுபடக்கூடாது என்று குர்ஆன் பணிக்கிறது(2:197)

    இறை இல்லத்தில் தரிசிக்க வந்துள்ளவர் மானக்கேடான செயல்கள், இச்சைகளை தூண்டக்கூடிய பேச்சுக்களிலிருந்து விலகி இருக்கிறார்கள் எனில் அவர் தம் தாயின் வயிற்றிலிருந்து பிறக்கும் தூய்மையான குழந்தையை போல் அவர் தம் வீட்டுக்கு திரும்புகிறார் என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். (நூல்: புகாரி, முஸ்லிம்)

    ஹஜ்ஜில் செய்யும் அவரது கிரியைகள் ஏக இறைப்பிரசாரத்திற்காக இறைத்தூதர் இப்ராஹீம் (அலை)அவர்களும், அவரது குடும்பத்தினரும் செய்த தியாகங்களை நினைவு கூர்வதாகவே உள்ளன. இது மக்கத்து மண்ணில் நான் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களும் அவது தோழர்களும் உன்னத தியாகங்களை செய்தனர். மக்காவில் ஒவ்வொரு அங்குலமும் இதற்கு சான்று பகரும்.

    ஹஜ்ஜின் போது மக்காவில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் இனம், மொழி, நாடு, நிறம் என்ற எல்லைகளை கடந்து உலகக்குடிமகன்களாக ஒரே உடையில் ஒரே முழக்கத்துடன் (தல்பியா) ஒன்று கூடுகின்றனர். மனிதகுலத்திற்கு இஸ்லாம் வழங்கிய சமத்துவக் கோட்பாடு உள்ளூர் பள்ளிவாசலில் தொடங்கி ஹஜ் பயணம் வரை செல்கிறது. எனவே ஹஜ் என்பது வெறும் பயணமும் அல்ல. சடங்கும் அல்ல. அது ஒரு சர்வதேச ஆன்மிக மாநாடாக சமத்துவ மாநாடாக திகழ்கின்றது.

    டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முகம்மது, சென்னை.
    திருச்சி ஹத்ரத் தப்லே ஆலம் பாதுஷா நத்தஹர்வலி தர்காவில் சந்தன கூடு விழா நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.
    திருச்சி ஹத்ரத் தப்லே ஆலம் பாதுஷா நத்தஹர்வலி தர்காவில் சந்தன கூடு விழா கடந்த 16-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் சந்தன கூடு ஊர்வலம் நேற்று இரவு நடந்தது. முன்னதாக தர்காவில் நத்தஹர்வலி சன்னதியில் (மஜார்) மலர்போர்வை போர்த்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மலர்போர்வை போர்த்தப்பட்டபின் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

    இதில் நிர்வாக தலைமை அறங்காவலர் ஏ.பி.டி. பாதுஷாஸ், மைசூர் செங்பட்னா தொழில்அதிபர் எஸ்.கே. சையத் சாதாத் சகாப், செய்யாறு எம்.எல்.ஏ. தூசிமோகன், முஸ்லிம் இலக்கிய மன்ற தலைவர் உஸ்மான், தர்கா பங்காளிகள் சையதுசர்புதீன், சலாவுதீன், சவுக்கத், தர்கா சதர் கலிபா சையது ஹயாத் கலந்தர், பரம்பரை பங்காளி சையது ஆரிப், ஹமீத் அலி சேட், தர்கா கலிபா மஜ்ஹருதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சந்தன கூடு ஊர்வலம் காந்திமார்க்கெட் நுழைவு வாயில் இருந்து நேற்று இரவு 11.30 மணிக்கு மேல் புறப்பட்டது. ஊர்வலம் பெரியகடை வீதி, சிங்காரதோப்பு உள்ளிட்ட வீதி வழியாக இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 4.30 மணி அளவில் தர்காவை வந்தடைந்தது. அதன் பின் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடந்தது. ஊர்வலத்தில் திரளான முஸ்லிம்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த அனைத்து மதத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

    ஊர்வலத்தையொட்டி நத்தஹர்வலி தர்கா மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. மேலும் தர்கா அமைந்துள்ள தெரு மற்றும் மதுரை சாலை மின்விளக்கு களால் ஜொலித்தன. அந்த பகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது. இன்று இரவு இன்னிசை கச்சேரி நடைபெற உள்ளது. நாளை (வெள்ளிக்கிழமை) பீர் சர்குரு எழுப்புதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நாளை மறுநாள் (சனிக்கிழமை) இரவு 10.30 மணிக்கு நிறைவு நாள் கச்சேரி நடைபெற உள்ளது. 
    நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள், ஆழ் மனதில் தாம் உலகில் சொற்ப காலங்களே இருப்போமென்று தோன்றியது. அதனால் தான் ஹஜ்ஜை நிறைவேற்ற இருப்பதாக அறிவித்தார்கள்.
    நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள், ஆழ் மனதில் தாம் உலகில் சொற்ப காலங்களே இருப்போமென்று தோன்றியது. அதனால் தான் ஹஜ்ஜை நிறைவேற்ற இருப்பதாக அறிவித்தார்கள். இதனைக் கேட்ட மக்கள் பல திசைகளில் இருந்தும் மதீனா வந்தனர்.

    'என்னுடைய இறைவனிடத்திலிருந்து வந்த வானவர் 'இந்த அபிவிருத்தி மிக்கப் பள்ளத்தாக்கில் தொழுவீராக! இன்னும் ஹஜ்ஜுடன் உம்ராவைச் சேர்த்துவிட்டதாக மொழிவீராக!' எனக் கட்டளையிட்டார்' என்று நபி(ஸல்) அவர்கள் அகீக் எனும் பள்ளத்தாக்கில் நின்று கூறினார்கள்.

    மதியவேளை தொஹ்ர் தொழுகைக்கு முன்பாக நபி (ஸல்) இஹ்ராமுக்காகக் குளித்து நறுமணத்தைத் தடவி, தொழுகையை நடத்தினார்கள். தொழுத இடத்திலிருந்தே ஹஜ் உம்ரா இரண்டையும் சேர்த்து நிறைவேற்றுவதாக நிய்யத் செய்து கொண்டு ‘தல்பியா’ கூறினார்கள். ஒட்டகத்தின் மீதேறியும் தல்பியா கூறினார்கள், வழிப் பிரயாணத்தில் தொடர்ச்சியாகத் தல்பியா கூறினார்கள். கிட்டத்தட்ட எட்டு நாட்களைக் கழித்துக் கஅபாவை வந்தடைந்தார்கள். தவாஃப் செய்துவிட்டு ஸஃபா மர்வாவில் ஸயீ செய்தார்கள். ஆனால், இஹ்ராமைக் களையவில்லை. ஏனெனில், நபி (ஸல்) உம்ராவையும் ஹஜ்ஜையும் சேர்த்து நிறைவேற்றுவதற்காக, தங்களுடன் குர்பானி பிராணியையும் அழைத்து வந்திருந்தார்கள்.

    குர்பானி பிராணியைத் தன்னுடன் கொண்டுவராத தோழர்களை உம்ரா முடித்துக் கொண்டு இஹ்ராமிலிருந்து வெளியேறும்படி உத்தரவிட்டார்கள். அதற்குத் தோழர்கள் தயங்கினர். அதைப் பார்த்து நபி (ஸல்) “நான் மீண்டும் ஒருமுறை இதுபோன்ற பயணத்தை நாடினால் என்னுடன் குர்பானி பிராணியைக் கொண்டு வரமாட்டேன். என்னுடன் இப்போது குர்பானி பிராணி இல்லை என்றால் நானும் இஹ்ராமைக் களைந்திருப்பேன்.” என்று கூறினார்கள். அதன் பிறகே பிராணி கொண்டு வராத தோழர்கள் இஹ்ராமைக் களைந்தனர்.

    மினாவில் தொஹ்ர், அஸ்ர், மஃரிப், இஷா, ஃபஜ்ர் என ஐந்து நேரத் தொழுகைகளைத் தொழுதார்கள். அங்கு மக்கள் நபி(ஸல்) அவர்களிடம் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தனர். 'நான் மார்க்கச் சட்டங்கள் அறிந்தவனல்ல. எனவே, மினாவில் குர்பானி கொடுப்பதற்கு முன் என் தலைமுடியைக் களைந்து விட்டேன்' என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'பரவாயில்லை; நீர் இப்போது குர்பானி கொடுக்கலாம்' என்றார்கள். அப்போது இன்னொருவர் நான் அறியாதவன் எனவே, கல் எறிவதற்கு முன்பே நான் குர்பானி கொடுத்து விட்டேன்' என்றார்.

    அதற்கு நபியவர்கள் 'பரவாயில்லை; எறிந்து கொள்ளும்!' என்றார்கள். முந்தியோ பிந்தியோ செய்துவிட்டதாகக் கேட்கப்பட்ட போதெல்லாம் 'பரவாயில்லை! செய்து கொள்ளுங்கள்' என்றே பதிலளித்தார்கள். ஃபஜர் தொழுகைக்குப் பின் சூரியன் உதயமாகி சிறிது நேரத்திற்குப் பின் அரஃபா நோக்கி பயணமானார்கள். அரஃபாவில் ஒரு கூடாரத்தில் தங்கினார்கள். அங்கிருந்து புறப்பட்டு ‘பத்னுல் வாதி’ என்ற இடத்திற்கு வந்தார்கள். அங்கு நபி (ஸல்) அவர்களைச் சுற்றி ஓர் இலட்சத்திற்கும் மேலான முஸ்லிம்கள் ஒன்று கூடியிருந்தனர். அவர்களுக்கு மத்தியில் நின்று கொண்டு நபி (ஸல்) உரையாற்றினார்கள்.

    “மக்களே! மிகக் கவனமாகக் கேளுங்கள். ஏனெனில், இந்த ஆண்டுக்குப் பிறகு இந்த இடத்தில் உங்களை நான் சந்திப்பேனா! என்று எனக்குத் தெரியாது” என்று தமது உரையை ஆரம்பித்தார்கள்.

    அர்ரஹீக் அல்மக்தூம், ஸஹீஹ் புகாரி 2:25:1534, 1558, 1:3:83

    -ஜெஸிலா பானு, துபாய்

    ஐந்து வேளை ஆற்றில் குளித்தால் உடலில் எவ்வாறு அழுக்கு இருக்காதோ அவ்வாறே ஐவேளை தொழுவதால் பாவ அழுக்கு மனிதனிடத்தில் இராது என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.
    இறைவழிபாடுகளில் தொழுகை முதலிடத்தை வகிக்கிறது. தொழுகை சுவனத்தின் திறவுகோல், இறைமார்க்கத்தின் தூண் என்றும், மறுமையில் கேட்கப்படும் முதல் கேள்வி தொழுகையை பற்றியதாக இருக்குமென்றும், தொழுகை மறுமையில் மனிதனுக்கு ஒளியாக திகழும் என்றும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

    ஐந்து வேளை ஆற்றில் குளித்தால் உடலில் எவ்வாறு அழுக்கு இருக்காதோ அவ்வாறே ஐவேளை தொழுவதால் பாவ அழுக்கு மனிதனிடத்தில் இராது என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

    இறைவனை வணங்க வாரத்தில் ஒருநாள் போதுமே. அல்லது காலையில் எழுந்த உடனும், இரவில் படுக்கச்செல்லும் முன்பும் அவனை வணங்கினால் போதுமே என்று நாம் எண்ணலாம். ஆனால் தொழுகை எதற்காகக் கடமையாக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொண்டால் இக்கேள்வி எழாது.

    நோன்பை போலவே தொழுகையும் ஒழுக்கழுள்ள, இறையச்சமுள்ள மனிதனை உருவாக்க இறைவன் வழங்கியுள்ள ஆன்மிகப்பயிற்சியாகும். மனிதன் தவறிழைக்கக்கூடியவன். அவனுக்கு இடப்பட்ட கட்டளைகளை மறக்கக்கூடியவன். சில வேளைகளில் இறைவனையேகூட மறந்து விடுவான். எனவே அவனுக்கு இறை நினைவூட்டி அவனை ஒரு பொறுப்புள்ள நேர்மையுள்ள மனிதனாக ஆக்கவே தொழுகை விதிக்கப்பட்டுள்ளது.

    மானக்கேடான தீய செயல்களிலிருந்து காக்கவே தொழுகை கடமையாக்கப்பட்டுள்ளது என்கிறது குர்ஆன்(29:45). நல்ல மனிதனை உருவாக்க வேண்டுமெனில் இறைவன் அவனை கண்காணித்து கொண்டிருக்கின்றான் என்ற உணர்வை உண்டாக்க வேண்டும். தொழுகை அந்த வேலையை செய்கிறது. ஒரு நாளைக்கு ஐந்து முறை இறைவனை வணங்குவதால் எப்போதும் இறை சிந்தனையில் மனிதனை ஆழ்த்தி தவறுகளிலிருந்து மனிதனை காக்கின்றது.

    தொழுகை மனிதனுக்கு மன அமைதியை தருகின்றது. இறைவனை நெருங்கி அவனிடம் முறையிடுவதால் உள்ளம் அமைதி பெறுகிறது. தொழுகையின் மூலம் இறைவனிடம் உதவி கோரும் வாய்ப்பு கிட்டுகிறது.

    தொழுகை சமத்துவம், சகோதரத்துவத்திற்காக இறைவன் செய்த ஏற்பாடாகும். நிறம், குலம், மொழி, செல்வம், அறிவு, அதிகாரம் இவற்றின் அடிப்படையில் எவ்வித பேதமும் இன்றி அனைவரும் ஒரே வரிசையில் நின்று தொழுவதால் சமத்துவம் செயல்படுத்திக்காட்டப்படுகிறது.

    நீங்கள் இறைவனை பார்க்காத போதும் அவனை நேரில் பார்த்துத் தொழுவது போல் தொழுவதே உயர் பண்பயாளனின் நிலை (இஹ்ஸான்) என்றார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்.

    தொழுகையை அலட்சியாக்குபவர்க்கு கேடுதான் என்ற இறைவசனத்தையும்(107:4) இறைநம்பிக்கையும் இறை நிராகரிப்பையும் பிரித்து காட்டுவதே தொழுகைதான் என்ற நபிமொழியையும் நினைவில் கொண்டு தவறாது தொழுது வாருங்கள். சாக்குபோக்கு சொல்லி தொழுகையில் இருந்து நழுவி விடாதீர்கள்.

    டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முகம்மது, சென்னை.
    ×