என் மலர்tooltip icon

    இஸ்லாம்

    பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் கந்தூரி விழா வருகிற 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தர்காக்களில் கடையம் அருகே பொட்டல்புதூரில் உள்ள முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் தர்காவும் ஒன்றாகும்.

    இங்கு ஆண்டு தோறும் கந்தூரி விழா சிறப்பாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா வருகிற 8-ந் தேதி (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    அதனை முன்னிட்டு அன்று மதியம் 2 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானை மீது கீழுர் ஜமாஅத் நிறைபிறை கொடி, மேள தாளம் முழங்க வான வேடிக்கையுடன் பொட்டல்புதூரின் முக்கிய வீதி வழியாக சென்று பள்ளிவாசலில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடக்கிறது.

    தொடர்ந்து 17-ந் தேதி (திங்கட்கிழமை) இரவு 8 மணிக்கு பச்சைக்கனை ஊர்வலம் நடைபெறும். 18-ந்தேதி காலை 10 மணிக்கு சுவாமி கம்முத்தவல்லி இனாம்தார் எஸ்.பி.ஷா இல்லத்தில் ராத்திபு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    பகல் 12 மணிக்கு அரண்மனை கொடியேற்றமும், மதியம் 2 மணிக்கு மேலூர் ஜமாஅத் சார்பில் கொடி ஊர்வலம் தொடங்கி, மாலை 6 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது.

    தொடர்ந்து இரவு 10 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானைகள் முன்வர மேள தாளங்கள் முழங்க ரவணசமுத்திரத்தில் இருந்து சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு, அதிகாலை 5 மணிக்கு பள்ளிவாசல் வந்தடையும். 19-ந் தேதி (புதன்கிழமை) அதிகாலை 5 மணிக்கு பள்ளிவாசலில் இனாம்தார் எஸ்.பி.ஷா மூலஸ்தானத்தில் சந்தனம் பூசும் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு தீப அலங்காரத்திடலில் தீப அலங்காரமும் நடைபெறுகிறது. 21-ந் தேதி இரவு ராத்திபு ஓதுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் நிர்வாக கமிட்டி தலைவர் எஸ்.பி.ஷா மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் செய்து வருகின்றனர். 
    நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தர்காக்களில் திசையன்விளை அருகே உள்ள ஆத்தங்கரை பள்ளிவாசலில் கந்தூரி விழா வருகிற 5-ந்தேதி தொடங்குகிறது.
    நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தர்காக்களில் திசையன்விளை அருகே ஆத்தங்கரை பள்ளிவாசலில் உள்ள சேகு முகம்மது (ஒலி), சையதலி பாத்திமா (ரலி) தர்காவும் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் கந்தூரி விழா வெகு சிறப்பாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா வருகிற 5-ந் தேதி (புதன்கிழமை) தொடங்கி, 6-ந் தேதி காலை வரை நடக்கிறது.

    விழாவையொட்டி 5-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு கத்முல் குர்ஆன் தொடக்கம், 7 மணிக்கு பள்ளிவாசல் இமாம் முகம்மது யூசுப் தலைமையில் குர்ஆன் தமாம் செய்தல் நடக்கிறது.

    8 மணிக்கு அரண்மனை புலிமான் குளத்தில் இருந்து யானை மீது கொடி, சந்தனகுடம் ஊர்வலமாக தர்காவுக்கு கொண்டு வரப்படுகிறது. 9 மணிக்கு தர்காவில் கொடியேற்றப்பட்டு, 10 மணி அளவில் பள்ளிவாசல் பரம்பரை டிரஸ்டிகள் நயாஸ் அகமத் பிஜிலி, ஹபிபுர் ரகுமான் பிஜிலி ஆகியோர் தர்காவில் சந்தனம் மெழுகுதல் நிகழ்ச்சியை நடத்துகிறார்கள்.

    மாலை 3.30 மணி முதல் 5.30 மணிவரை மவ்லூது ஷரீப் ஓதுதல், 5.30 மணி முதல் இரவு 7 மணிவரை ராத்திப்புத்துல் காதிரிய்யா திக்று மஜ்லீஸ் ஓதுதல், 7 மணி முதல் 12 மணிவரை இஸ்லாமியர்களின் மார்க்க சொற்பொழிவு நடக்கிறது. இரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணிவரை இஸ்லாமிய இன்னிசை கச்சேரி நடக்கிறது.

    மறுநாள் (வியாழக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு நன்றி நவிலல், 5.45 மணிக்கு சிறப்பு துவா ஓதுதல், 6 மணிக்கு நேர்ச்சை வினியோகம் செய்தல் நடக்கிறது. கந்தூரி விழாவை முன்னிட்டு நெல்லை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றது. விழா ஏற்பாடுகளை பள்ளிவாசல் பரம்பரை டிரஸ்டிகள் நயாஸ் அகமத் பிஜிலி, ஹபிபுர் ரகுமான் பிஜிலி ஆகியோர் செய்து வருகிறார்கள். 
    நீதியும், நேர்மையும் மனிதனின் இரு கண்களைப்போன்றது. இதில் ஒன்று தவறினாலும் அவனது வாழ்க்கைப்பாதை தடுமாறத்தொடங்கிவிடும். இதுகுறித்து திருக்குர்ஆன் வசனம் (46:13) இவ்வாறு குறிப்பிடுகிறது.
    பழகுவதற்கு இனிமையானவன் மனிதன். ஒருவரது நற்குணங்கள் தான் அவனை நல்லவன் என்று இவ்வுலகத்திற்கு அறிமுகம் செய்து வைக்கிறது. சிலர் ஆசை அல்லது வறுமை காரணமாக சமநிலையை இழக்கத் தொடங்குகிறார்கள். அதுவே பின்னர் நேர்மையற்ற தன்மைக்கு அவனை அழைத்துச் செல்கிறது.

    நீதியும், நேர்மையும் மனிதனின் இரு கண்களைப்போன்றது. இதில் ஒன்று தவறினாலும் அவனது வாழ்க்கைப்பாதை தடுமாறத்தொடங்கிவிடும். இதுகுறித்து திருக்குர்ஆன் வசனம் (46:13) இவ்வாறு குறிப்பிடுகிறது:

    ‘எவர்கள், எங்கள் இறைவன் அல்லாஹ் தான் என்று கூறி (அவன் அருள் புரிந்த இவ்வேதத்தை நம்பிக்கை கொண்டு), அதில் நேர்மையாக நீடித்திருக்கின்றார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக யாதொரு பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்’.

    நமது வாழ்க்கைக்கு அடிப்படையாக விளங்கும் வேதம் திருக்குர்ஆன். அது உண்மையானது, உறுதியானது, நிலையானது, நீதியானது என்று முழுயாக நம்பிச்செயல்பட வேண்டும். அது தான் நமது வேதத்திற்கு நாம் செய்யும் முதல்கடமை.

    அந்த வேதம் சொல்கிறது, ‘நீங்கள் நபிகள் நாயகத்தையும் முழுமையாக பின்பற்றி நடக்க வேண்டும்’ என்று. அப்படியானால், குர்ஆனுக்கு விளக்கமாக நபிகள் நாயகம் இருக்கிறார்கள் என்பது தானே பொருள்.

    ‘நம்பிக்கையாளர்களே, நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். நீங்கள் (நம் வசனங்களை) செவியுற்ற பின் அதற்குக் கீழ்ப்படிவதிலிருந்து விலகாதீர்கள்’. (திருக்குர்ஆன் 8:20)

    உங்களுக்கிடையில் ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள். உண்மையாகவே நீங்கள் உண்மையான நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்து நடங்கள். (திருக்குர்ஆன் 8:1)

    வேதத்தின் மொழிக்கும், தூதரின் வழிக்கும் நேர்மையாக நாம் நடந்து கொண்டால் அடுத்து நாம் செய்ய வேண்டியது நம்மைச் சுற்றி வாழும் மக்களுடன் நேர்மையாக நடந்து கொள்வது தான்.

    ‘அவர்கள் (தம் உடன்படிக்கைப்படி) உங்களுடன் நேர்மையாக நடந்து கொள்ளும்வரை நீங்களும் அவர்களுடன் நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோரை நேசிக்கின்றான்’. (திருக்குர்ஆன் 9:7)

    நாம் எல்லோருடனும் நேர்மையாக நடந்து கொண்டால் தான் மற்றவர்களும் நம்மிடம் நேர்மையாக நடந்து கொள்வார்கள். நாம் எதைக் கொடுக்கிறோமோ அதைத்தானே நாம் பதிலாகப் பெறமுடியும்.

    எனவே நமது சொல், செயல், உடை, நடை, பாவனை, கொடுக்கல், வாங்கல் என அனைத்திலும் நமது நேர்மையை வௌிப்படுத்திக் காட்டவேண்டும். எங்கே நாம் நேர்மை தவறுகிறோமோ அங்கே அநீதி ஆட்டம் போட ஆரம்பித்து விடுகிறது. எனவே நாம் எப்போதும் மிகக்கவனமாகவே இருக்க வேண்டும்.

    ‘நம்பிக்கையாளர்களே, அல்லாஹ்வுக்காக நீதமாக (உண்மை) சாட்சி சொல்பவர்களாகவே இருங்கள். ஒரு வகுப்பார் மீது (உங்களுக்கு)ள்ள துவேஷம் அவர்களுக்கு அநியாயம் செய்யும்படி உங்களைத் தூண்டாதிருக்கட்டும். (எவ்வளவு குரோதமிருந்த போதிலும்) நீங்கள் நீதியே செலுத்துங்கள். அதுதான் பரிசுத்தத் தன்மைக்கு மிக நெருங்கியது. (எத்தகைய சந்தர்ப்பங்களிலும்) நீங்கள் அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவனாக இருக்கின்றான்’ (திருக்குர்ஆன் 5:8).

    நீதியும், நேர்மையும் என்றைக்கும் தவறவிட்டு விடக்கூடாத ஒன்று. அது நமது வாய்ச் சொல்லிலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் அது குறித்தும் திருக்குர்ஆன் இப்படி குறிப்பிடுகிறது:

    ‘நம்பிக்கையாளர்களே, நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான சொற்களையே கூறுங்கள். அவன் உங்களுடைய காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து, உங்களுடைய குற்றங்களையும் மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகின்றாரோ, அவர் நிச்சயமாக மகத்தான பெரும் வெற்றியடைந்து விட்டார்’. (திருக்குர்ஆன் 33:70,71)

    நேர்மையான ஒரு சொல் அது ஏற்படுத்தும் பின்விளைவுகள் என்னென்ன என்பதை இவ்வசனம் தௌிவாக விளக்கிக் காட்டுகிறது. முக்கியமாக நமது காரியங்கள் அனைத்தும் சீர்பெறும், நமது குற்றங்கள் மன்னிக்கப்படும்,

    நேர்மை எனும் குணம் எங்கெல்லாம் இணைந்திருக்கிறதோ அங்கெல்லாம் நிம்மதி மலர்கள் நீடித்து மணம் பரப்புவதை கண்கூடாகக் காணலாம். இந்த உலகில் இறைத்தூதர்கள் பலர் இடைவிடாது வந்து சென்றதுக்கு முக்கியக் காரணம் நேர்மை எனும் மனிதப்பண்பு அவனை விட்டும் அறுந்து போய்விடக்கூடாது என்பதற்காகத் தான். ஒவ்வொரு வகுப்பினருக்கும் ஒரு தூதர் (நம்மால்) அனுப்பப்பட்டார்கள். அவர்களுடைய தூதர் (அவர்களிடம்) வந்த சமயத்தில் (அவரைப் பின்பற்றியவர்களை பாதுகாத்தும், பொய்யாக்கியவர்களை அழித்தும்) அவர்களுக்கிடையில் நீதமாகவே தீர்ப்பளிக்கப்பட்டது. அவர்களுக்கு (அணுவளவும்) அநியாயம் செய்யப்படவில்லை (திருக்குர்ஆன் 10:47).

    “மத்யன் (எனும் ஊர்)வாசிகளுக்கு அவர்களுடைய சகோதரர் ஷுஐபை (நம்முடைய தூதராக அனுப்பி வைத்தோம்.) அவர் (அவர்களை நோக்கி) ‘என்னுடைய மக்களே, அல்லாஹ் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள்; அவனைத் தவிர வேறு இறைவன் உங்களுக்கு இல்லை. அளவையும் நிறுவையையும் குறைக்காதீர்கள். நீங்கள் நல்ல நிலைமையில் இருப்பதையே நான் காண்கிறேன். (அவ்வாறிருக்க அளவையும் நிறுவையையும் குறைத்து ஏன்மோசம் செய்கிறீர்கள்?. அவ்வாறு செய்தால்) நிச்சயமாக உங்களைச் சூழ்ந்து கொள்ளக்கூடிய வேதனை ஒரு நாளில் உங்களை வந்தடையும் என்று நான் பயபடுகிறேன்”.

    “என்னுடைய மக்களே, அளவையும் நிறுவையையும் நீதமாகவே முழுமைபடுத்தி வையுங்கள். மனிதர்களுக்கு(க் கொடுக்க வேண்டிய) அவர்களுடைய பொருள்களைக் குறைத்து விடாதீர்கள். பூமியில் விஷமம் செய்து கொண்டும் அலையாதீர்கள்”.

    “நீங்கள் உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் (உங்கள் தொழிலில் லாபகரமாக) அல்லாஹ் மீதப்படுத்துவதே உங்களுக்கு மிக்க மேலானதாகும். நான் உங்களைக் கண்காணிப்பவனல்ல; (அல்லாஹ் தான் உங்களைக் கண்காணிப்பவன். ஆகவே, அவனுக்கு நீங்கள் பயந்து நடந்து கொள்ளுங்கள்)” என்றும் கூறினார். (திருக்குர்ஆன் 11:84-86)

    இன்றைக்கு நம்மைச் சுற்றி நடக்கும் யதார்த்த வாழ்க்கை எப்படி இருக்கிறது?, பொய்யும்-புரட்டும், லஞ்சமும்-மோசடியும், அநியாமும்-அட்டகாசமும், கொள்ளையும் திருட்டும், ஊழலும்-ஏய்ப்பும் என எங்கு திரும்பினாலும் நேர்மையற்ற நிலை தான் காணப்படுகிறது. இதை நாம் சீர் செய்ய வேண்டும் என்றால், முதலில் அதை நாம் தான் நம்மிடம் இருந்து தான் தொடங்கி வைக்க வேண்டும்.

    எந்தவொரு நற்காரியத்தை நாம் செய்வதாக இருந்தாலும், அல்லது தீயதொரு காரியத்தை விடுவதாக இருந்தாலும் அது நமது மனஉறுதியில் தான் நிலைத்திருக்கிறது. எண்ணம் சரியாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும் என்பார்கள். அதுதான் உண்மை. நேர்மைப் பண்பு என்பது வௌியிலிருந்து வருவதல்ல, நம் மனதுக்குள்ளிருந்து தோன்றுவது.

    நம் மனதை எப்போதும் ஆரோக்கியமானதாக வைத்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் நம் வாழ்க்கை என்றென்றைக்கும் ஆரோக்கியமானதாக இருக்கும். ஒருவனின் வாழ்க்கை நலமானதாக அமைந்து விட்டால் அதை விட வேறு என்ன பாக்கியம் வேண்டும்.

    வாருங்கள், நேர்மைப் பண்பைப் போற்றுவோம், நேர்மையின்மையை மாற்றுவோம்.

    மவுலவி எஸ்.என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3.
    அலங்காநல்லூர் அருகே அய்யூர் கிராமத்தில் அரபு மஸ்தான் பள்ளிவாசல் உள்ளது. இங்கு சந்தனக்கூடு கொடிமர விழா நடைபெற்றது.
    அலங்காநல்லூர் அருகே அய்யூர் கிராமத்தில் அரபு மஸ்தான் பள்ளிவாசல் உள்ளது. இங்கு சந்தனக்கூடு கொடிமர விழா நடைபெற்றது. இதனையொட்டி கொடி மரங்கள் அழைக்கப்பட்டு பள்ளி வாசலுக்கு வந்தன.

    பின்னர் பொது கொடிமரம், சந்தனம், ஜவ்வாது, மல்லிகை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இன்னிசை முழங்க ஒயிலாட்டத்துடன் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, மீண்டும் பள்ளிவாசலை அடைந்தது.

    அத்துடன் மற்ற கொடிமரங்களும் ஒன்றாகவே ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. விழாவில் ஏராளமான முஸ்லிம்கள் மற்றும் சுற்றுவட்டார மக்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அய்யூர் முஸ்லீம் ஜமாத்தார்கள் செய்திருந்தனர்.
    ஸாத் (ரலி) அவர்களின் சிறப்பு மிகு போர்த்தந்திரமும், குறிபார்த்து அம்பு எய்யும் தனித்திறமையும், நுணுக்கமாக திட்டமிடும் நுண் அறிவும் பல போர்களில் இஸ்லாமியருக்குப் பெரும் வெற்றியை ஈட்டுத்தந்திருக்கிறது.
    இறைவனின் திருத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் குறிப்பிடத்தக்கவர் ஸாத் (ரலி). இவர் போர் தந்திரங்களில் மிகவும் தேர்ச்சி பெற்ற வீரர். குறிபார்த்து அம்பெய்துவதில் மிக வல்லமை பெற்றவர்.

    உஹது போரில் அண்ணல் எம்பெருமானாரை பாதுகாக்கும் பொறுப்பு ஸாத் (ரலி) மற்றும் அபுதர் (ரலி) ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்தது.

    நபி (ஸல்) அவர்களை பாதுகாக்கின்ற அந்தப் பொறுப்பை நிறைவேற்றிக் கொண்டே எதிரிகளையும் எதிர்த்துப் போரிட்டு வெட்டி வீழ்த்தினார் ஸாத் (ரலி). முடிவில் வெற்றிக்கனியையும் பறித்து அண்ணலாரின் கரங்களில் பரிசாய் அளித்தார்கள்.

    அதுமட்டுமல்ல, நபி (ஸல்) அவர்களால் சுவனத்துப்பூக்கள் என்று சுபச்செய்தி சொல்லப்பட்ட பத்து பேர்களில் ஸாத் (ரலி) அவர்களும் ஒருவர். அந்த பெருமை மிகு சிறப்பு கொண்டிருந்தும் இஸ்லாம் விதித்த வழிமுறைகளில் சிறிதும் மாற்றம் இன்றி வாழ்ந்து வந்தார்.

    ‘இறைவா, ஸாத் (ரலி) அவர்களின் நியாயமான பிரார்த்தனைகளை நீ ஏற்றுக்கொள்வாயாக’ என்று நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள். இதன்காரணமாக ஸாத் (ரலி) அவர்களின் வாழ்க்கையில் பல கட்டங்களில் அவர் செய்த பிரார்த்தனைகள் இறைவனால் உடனே ஒப்புக்கொள்ளப்பட்டு அத்தாட்சிகள் வெளியானதை அன்றைய காலத்தில் வாழ்ந்த அத்தனை நபித்தோழர்களும் அறிந்திருந்தனர்.

    அதனால்தான் ஸாத் (ரலி) அவர்களின் துஆவிற்குப் பயந்து கொண்டிருந்தனர். இஸ்லாமிய கொள்கைகளுக்கோ, கோட்பாடுகளுக்கோ முரண்பாடாக நடக்க முயன்றால் அது ஸாத் (ரலி) அவர்களுக்கு தெரியும் பட்சத்தில் நம்மை சபித்து விடுவாரோ என்று அஞ்சி அதனை விட்டும் தவிர்த்து வாழ்ந்தனர். இந்த சிறப்பும் இறைவனால் அவருக்கு அளிக்கப்பட்ட மாபெரும் அருட்கொடையாகும்.

    இஸ்லாமிய படையினர் மாபெரும் வெற்றி பெற்ற கன்தக் போரின் மூலம் கிடைத்த பொருட்களை நபிகளாரிடம் கொண்டு வந்திருந்தனர். அதில் ஒரு வாளும் இருந்தது. போரில் கிடைத்த பொருட்கள் பங்களித்து கொடுப்பதற்கு முன்பாகவே அதனை நபி (ஸல்) அவர்களிடம் கேட்டு பெற்றுவிட வேண்டும் என்று ஸாத் (ரலி) விரும்பினார். இதுபோல மற்ற நபித்தோழர்களும் தனக்கென தான் விரும்பிய பொருட்களை தருமாறு நபிகளாரிடம் வேண்டி நின்றார்கள்.

    அப்போது ஸாத் (ரலி), நபி (ஸல்) அவர்களிடம், “யா! ரஸூலுல்லாஹ், நான் அம்பெய்வதில் வல்லவன். இருந்தும் வாள் பயிற்சியிலும் சிறந்து விளங்க நாடுகிறேன். போரில் கிடைத்த பொருளில் இந்த வாளை எனக்கு அன்பளிப்பாக தருவீர்களா?” என்று வினவினார்.

    ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மறுத்து, “ஸாதே அந்த வாளை இருந்த இடத்திலேயே வைத்துவிடுவீராக” என்றார்கள்.

    அந்த வாளை இழக்க தயாரில்லாத தன் மனதின் தூண்டுதலால் மீண்டும் நபி (ஸல்) அவர்களிடம் தன் ஆசையை வலியுறுத்தினார். அப்போது நபி (ஸல்) அவர்களின் குரலில் கடுமையை உணர்ந்தார் ஸாத் (ரலி).

    நபித்தோழர்களின் ஆசையையும் பிடிவாதத்தையும் விரும்பாத இறைவனும் ‘வஹி’ எனப்படும் இறைச்செய்தியை இறக்கினான்.

    “(நபியே!) ‘அன்ஃபால்’ (என்னும் போரில் கிடைத்த பொருள்களைப்) பற்றி அவர்கள் உங்களிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: ‘அன்ஃபால்’ அல்லாஹ்வுக்கும், (அல்லாஹ்வுடைய) தூதருக்கும் சொந்தமானது. ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து (அதில் யாதொன்றையும் மறைத்துக்கொள்ளாது) உங்களுக்கிடையில் ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள். உண்மையாகவே நீங்கள் உண்மை நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்து நடங்கள்”. (திருக்குர்ஆன் 8:1).

    இந்த இறைச்செய்தியை அறிந்த ஸாத் (ரலி) பயந்து நடுங்கியது மட்டுமில்லாமல் தன் மனோ இச்சைக்கு கட்டுப்பட்டு, ஷைத்தானுடன் கை கோர்த்துக் கொண்ட நிலையை எண்ணியும் வருந்தினார்கள்.

    இது, நபித்தோழர்களுக்கு பொதுவாக இறக்கப்பட்ட வசனமாக இருந்தாலும் ஸாத் (ரலி) தனக்காக அது இறக்கப்பட்டதாக எண்ணி பயந்தார்கள்.

    ஒரு சந்தர்ப்பத்தில் ஸாத் (ரலி) அவர்கள் மிகவும் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். நோயின் கடுமையைக் கருதி தனக்கு மரணம் நெருங்கி விட்டதோ என்று கவலை கொண்டார். மேலும் அப்போது தனக்கு ஆறுதல் சொல்ல வந்த நபி (ஸல்) அவர்களிடம் “நபியே! ரசூலே! எனக்கு மரணம் நெருங்கிவிட்டதோ என சந்தேகிக்கிறேன். அதற்கு முன்னால் என் செல்வம் முழுவதையும் அல்லாஹ்வின் பாதையில் கொடுத்து விடுகிறேன்” என்றார்கள்.

    ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை ஏற்க மறுத்துவிட்டார்கள்.

    ஆனால் ஸாத் (ரலி) அவர்கள் விடவில்லை, “என் செல்வத்தில் பாதியையாவது அல்லாஹ்வின் பாதையில் செலவிடலாமா?” என்று மீண்டும் வினவிய போது அதையும் அண்ணலார் மறுத்து விட்டார்கள்.

    “அப்படியானால் என் செல்வத்தில் மூன்றில் ஒரு பகுதியையாவது இறைவனுக்கு பொருத்தமான காரியத்தில் செலவிடலாமா?” என்று அடுத்து கேட்டபோது அண்ணலார் அவர்கள் அமைதி காத்தார்கள்.

    இந்த சந்தர்ப்பத்திற்குப் பிறகு தான், ‘ஒருவன் தன் செல்வத்தில் மூன்றில் ஒரு பகுதியை தான தர்மங்களில் செலவிடலாம். தன் தேவைக்குப் போக மீதியை குடும்பத்தினருக்காக விட்டுச் செல்லலாம்’ என்ற நிலைப்பாடு உறுதி செய்யப்பட்டது.

    அண்ணலாரின் மறைவிற்கு பின்பும் கூட அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் ஆட்சிக்காலத்திலும் அதன் பின்னால் உமர் கத்தாப் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்திலும் ஸாத் (ரலி) அவர்கள் இஸ்லாத்தின் கொள்கையில் உறுதி கொண்டு கலீபாக்களுக்கு உறுதியான துணையாக இருந்தார்கள்.

    ஸாத் (ரலி) அவர்களின் சிறப்பு மிகு போர்த்தந்திரமும், குறிபார்த்து அம்பு எய்யும் தனித்திறமையும், நுணுக்கமாக திட்டமிடும் நுண் அறிவும் பல போர்களில் இஸ்லாமியருக்குப் பெரும் வெற்றியை ஈட்டுத்தந்திருக்கிறது. அந்த வரிசையில் காதிஹிய்யா ஜலூலஸ் போர்களின் வெற்றியும் அடங்கும்.

    வீரம், வேகம், விவேகம், துடிப்பு, ஆர்வம், துணிவு, தியாகம், திட்டமிடும் நுண்ணறிவு போன்ற அருங்குணங்களைக் கொண்டவர் ஸாத் (ரலி). இஸ்லாத்திற்காக தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த அந்த பெருமகனார் தனது 82 வது வயதில் மரணம் அடைந்தார்.

    ஸாத் (ரலி) அவர்கள் மக்காவில் இருந்து ஹிஜ்ரத் செய்து வந்த முஹாஜிரீன்களில் இறுதியாக மரணம் எய்தியவர், நீண்ட நாட்கள் உயிர் வாழ்ந்த நபித்தோழரும் ஆவார். அவரைப்போன்ற நபித்தோழர்களின் அழகிய வழிமுறையை பின்பற்றி வாழும் நல்லறிவை நம் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் தந்தருள் புரிவானாக, ஆமின். 
    “உங்களில் எவர் நல்ல முறையில் கடனைத் திரும்பிச் செலுத்துகின்றாரோ அவரே உங்களில் சிறந்தவர்” என்று நபிகள் நாயகம் உரைக்கின்றார்கள்.
    கடன் இல்லாமல் வாழவே முடியாது என்ற உலகில் வாழ்ந்து வருகிறோம். பணம் இருப்பவர்களும் சரி, இல்லாதவர்களும் சரி, எல்லோருமே கடனுடனே தங்கள் வாழ்வை பிணைத்துக்கொள்கிறார்கள்.

    திருமணத்திற்கு, தொழில் தொடங்க, தொழிலை விரிவுபடுத்த, அன்றாடத் தேவைகளுக்கு, வீடு கட்டுவதற்கு, வாகனம் வாங்குவதற்கு, அவசர மருத்துவ செலவுகளுக்கு என பல்வேறு தேவைகளுக்கு கடன் வாங்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது.

    எப்படி தண்ணீர் இல்லாமல் வாழ முடியாதோ, அதுபோல் கடன் இல்லாமலும் வாழ முடியாது என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. பலருக்கு கடன் வாங்கும்போது இருக்கும் அக்கறை, திருப்பி செலுத்துவதில் இருப்பதில்லை. அதனாலேயே பலர் கடன் கொடுக்க தயங்குகின்றனர். பல கடைகளில் ‘கடன் அன்பை முறிக்கும்’ என்று எழுதியிருப்பதை பார்த்திருக்கலாம். கடன் கொடுத்து சிக்கிக்கொண்டதின் விளைவால் வந்ததுதான் அந்த வாசகம். கடன் கொடுக்கல்-வாங்கலில் பிரிந்த எத்தனையோ குடும்பங்கள் உண்டு, நண்பர்கள் உண்டு.

    கடினமான காலங்களில் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வதற்கு கடன் உதவுகிறது. ஆனால் கொடுத்த கடனை திருப்பி வாங்குவதில் உள்ள பிரச்சினையால் கடன் கேட்டாலே பலரும் அலறியடித்து ஓடும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

    கடன் ஓர் அமானிதம் ஆகும். நம்பிக்கை, நேர்மை, நீதி, உண்மைத்தன்மை ஆகியவற்றுடன் நடந்துகொள்வது அமானிதம் என்ற சொல்லின் பொருள். இறையச்சம் கொண்ட ஒவ்வொரு மனிதரும் இந்த அமானிதத்தை தங்கள் சொல்லிலும், செயலிலும் கடைப்பிடிக்க வேண்டும்.

    கடனும் அப்படிப்பட்ட அமானிதம் தான். ஆனால் அந்த விஷயத்தில் பலர் அலட்சியமாக இருக்கிறார்கள். கடன் எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்றால் திருக்குர்ஆனின் நீண்ட வசனம் கடனைப் பற்றியே பேசுகிறது. அந்த வசனம், கடன் பற்றிய சட்டதிட்டங்களை மிக விளக்கமாக குறிப்பிடுகிறது.

    கடன் விஷயத்தில் போதிய புரிதல் பலரிடம் இல்லை. தன்னிடம் பணமிருந்தாலும் கடனை அடைக்காமல் இழுத்தடிப்பதில் பலருக்கு பேரானந்தம். “வசதியுள்ளவர் (தன் கடனை அடைக்காமல் கடன் கொடுத்தவரிடம் தவணை சொல்லி) தள்ளிப்போடுவது அநியாயமாகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கிறார்கள். இந்த அநியாயத்தைத்தான் சிறிதுகூட சிந்திக்காமல் பலரும் செய்து வருகிறார்கள்.

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, தான் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டார். அப்போது அவர் சற்று கடுமையான வார்த்தைகளில் பேசினார். இதைக்கண்ட நபித்தோழர்கள் வருத்தப்பட்டனர். அதற்கு நபிகள் நாயகம் “அவரை விட்டுவிடுங்கள். பொருளுக்குரியவர் பேசுவதற்கு உரிமையுண்டு” என்று கூறினார்கள். (புகாரி).

    கடன் கொடுத்தவர் திருப்பிக் கேட்கும்போது உரக்க பேசினாலும், கடன் வாங்கியவர் பொறுத்துக்கொள்ள வேண்டும். இப்போது நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. கடன் கொடுத்தவர் பொறுமையாக கேட்கிறார். கடன் வாங்கியவர் கோபமாக பதிலளிக்கிறார்.

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடன் விஷயத்தில் மிகவும் கண்டிப்புடன் செயல்பட்டார்கள். ஏனென்றால் கடனை திருப்பி கொடுக்காமல் இருப்பது மன்னிக்க முடியாத பாவமாக இருப்பதால். இதனால் தான் கடன் விஷயத்தில் இறைவனிடம் அதிக பாதுகாப்பை வேண்டினார்கள்.

    “இறைவா! பாவத்திலிருந்தும், கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.

    இதைச் செவியுற்ற ஒருவர், நபிகள் நாயகத்திடம் “இறைத்தூதர் அவர்களே! தாங்கள் கடன்படுவதிலிருந்து இவ்வளவு அதிகமாகப் பாதுகாப்புத் தேடுவதற்கு காரணம் என்ன?” என்று கேட்டதற்கு அவர்கள் சொன்னார்கள், “மனிதன் கடன்படும்போது பொய் பேசுகின்றான்; வாக்குறுதி தந்து (அதற்கு) மாறு செய்கின்றான்” என்று பதிலளித்தார்கள் (புகாரி).

    பொய் சொல்வதும், சொன்ன தேதிக்கு கடன் பணத்தை தராமல் தனது வாக்குறுதியை மீறுவதும் சகஜமானதாக ஆகிவிட்டது. கடன் வாங்கும்போது திருப்பி செலுத்த வேண்டும் என்ற எண்ணத்தை முதலில் கொண்டிருக்க வேண்டும். நிறைய நபர்கள் ‘வாங்குவோம், திருப்பி கேட்டா பேசிக்குவோம்’ என்ற எண்ணத்துடனே இருக்கிறார்கள். கடனை அடைப்பதில் துளி அக்கறைகூட அவர்களிடம் இருப்பதில்லை. அப்படி ஏமாற்றி சேர்க்கும் அந்த செல்வம் நீடித்து நிலைக்காது என்பதை ஏமாற்ற நினைப்பவர்கள் உணர்வது நல்லது.

    ‘மக்களின் பணத்தை திருப்பி செலுத்த வேண்டும் என்ற எண்ணத்தை எவன் கொண்டிருக்கிறானோ, அவன் சார்பாக அல்லாஹ்வே திருப்பி செலுத்துவான். எவன் ஏமாற்ற நினைக்கிறானோ, அதை அழித்துவிட எண்ணுகிறானோ அவனை அல்லாஹ்வே அழித்துவிடுவான்’ என்ற எச்சரிக்கையை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும்.

    கடன் இருப்பவர்களுக்கு ஜனாஸா தொழுகையைகூட நபிகள் நாயகம் அவர்கள் நிறைவேற்ற முன்வரமாட்டார்கள். ஒருமுறை தொழுகை நடத்துவதற்காக ஒரு ஜனாஸா கொண்டு வரப்பட்டது. “இவர் கடனாளியா?” என்று கேட்கிறார்கள். “இல்லை” என்றனர் நபித்தோழர்கள். அவருக்கு தொழுகை நடத்தினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டபோது “இவர் கடனாளியா” என்று கேட்டார்கள் நபிகள் நாயகம். நபித்தோழர்கள் “ஆம்” என்றனர். “அப்படியென்றால் உங்கள் தோழருக்கு நீங்களே தொழுகை நடத்துங்கள்” என்றார்கள். அப்போது அபூகதாதா (ரலி) “இறைத்தூதர் அவர்களே! இவரின் கடனுக்கு நான் பொறுப்பு” என்று கூறியதும் அவருக்கு நபிகள் நாயகம் தொழுகை நடத்தினார்கள் (புகாரி).

    கடன் என்பது மன்னிக்க முடியாத பாவமாகும். அதனால்தான் கடனாளியின் ஜனாஸா தொழுகையை நடத்தக்கூட நபிகள் நாயகம் மறுத்தார்கள். கடன் என்பது ஒருவரை மட்டும் பாதிக்கச் செய்யாது. தனக்கு உதவிய மற்றொருவரையும் அது பாதிக்கச் செய்கிறது. அவர் மன்னிக்காத வரை அதன் பாவத்தை சுமந்துதான் ஆக வேண்டும்.

    இறைவனின் வழியில் போரிட்டு கொல்லப்படுபவர்களுக்கு ‘சஹீத்’ என்ற அந்தஸ்து கிடைக்கும். ‘அவனுடைய ஒரு சொட்டு ரத்தம் கீழே விழுவதற்குள் அவனுடைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன’ என்பது அதன் சிறப்பு. ஆனால் அந்த சஹீதிற்குகூட எல்லா பாவங்கள் மன்னிக்கப்பட்டாலும், கடனிற்கு மன்னிப்பு வழங்கப்பட மாட்டாது. கடனை அடைக்காமல் இருப்பது எவ்வளவு பெரிய பாவம் என்பதை இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம்.

    “உங்களில் எவர் நல்ல முறையில் கடனைத் திரும்பிச் செலுத்துகின்றாரோ அவரே உங்களில் சிறந்தவர்” என்று நபிகள் நாயகம் உரைக்கின்றார்கள். மனிதர்களில் சிறந்தவராக இருக்க வேண்டும் என்றால் கடன் விஷயத்தில் நேர்மையை கடைபிடிக்க வேண்டும். தேவைக்கு எப்படி அக்கறையுடன் கடன் பெறுகிறோமோ அதனைவிட அதிக அக்கறையை கடனை திருப்பி செலுத்துவதிலும் காட்டிட வேண்டும். அப்படி ஒரு அக்கறையை காட்டுபவனே சிறந்தவன்.

    வி.களத்தூர் எம்.பாரூக்.
    எல்லாப் பாவங்களையும் மன்னிக்கின்ற அல்லாஹ், இணை வைத்தலை மன்னிப்பதில்லை என்பதையும் இந்த நிகழ்வின் மூலம் நமக்கு பாடமாய் சொல்லித் தருகின்றான்.
    நபிகள் பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்களை, தன் பெற்றோரை விட மிக அதிகமாக நேசித்தவர், அதிகம் பாசம் கொண்டவர்- அஷ்ரத்துல் முபஷ்ஷரா ஸாத் இப்னு அபீ வக்காஸ் (ரலி).

    நபிகளாரின் ஏகத்துவ பிரச்சாரம் தொடங்கிய காலத்தில் ஆரம்ப நிலையிலேயே தன்னை இஸ்லாத்தில் இணைத்துக் கொண்ட நபித்தோழர்களில் முதன்மையானவர், மிக முக்கியமானவர் ஸாத் இப்னு அபீ வக்காஸ் (ரலி). அதுபோல, நபி (ஸல்) அவர்களால் மிகவும் நேசிக்கப்பட்டவர் என்ற சிறப்பும் இவருக்கு உண்டு.

    மக்கா மாநகரில் தன் செல்வத்தாலும், செல்வாக்காலும் மிகவும் பிரசித்தி பெற்றவர் ஸாத் (ரலி). இஸ்லாத்தில் இணைந்த அந்த இளமைப் பருவத்திலேயே மிகவும் துடிப்போடும், துணிவோடும் ஏக இறைத் தத்துவத்தை எடுத்தியம்புவதில் வல்லமை பெற்றிருந்தார்.

    பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் இருந்து வந்த காரணத்தால் அவருக்கு வெளியில் எதிர்ப்புகள் அவ்வளவு கடுமையானதாக இல்லை. அதே சமயம் சொந்த குடும்பத்தில் அவர் சொல்லொண்ணா வேதனைகளையும், எதிர்ப்புகளையும் சந்திக்க வேண்டியிருந்தது. அவர் கடைப்பிடித்து வந்த ஏக இறைக்கொள்கைக்கு மாற்றமாக அவரது பெற்றோர்கள் இருந்தனர்.

    தன் பெற்றோர் மீது அதிக அன்பும், பாசமும் கொண்டிருந்த காரணத்தால் அவர்களை கடிந்து கொள்ள மனமின்றி, அதே சமயம் அண்ணலாரின் சமதர்ம மார்க்கத்தையும் விட்டுக்கொடுக்காமல் இருந்தார். ஒரே வீட்டில் தன் பெற்றோருடன் வசித்தாலும், தாமரை இலை தண்ணீர் போன்று ஒட்டுதல் இருந்தும் இல்லாமல் ஒரு விசித்திர வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.

    ஸாத் (ரலி) தன் தாயார் மீது அளவு கடந்து பிரியம் வைத்திருந்தார். தாயாரும் தன் அன்பு மகனை எந்த நிலையிலும் இழந்து விட மனமில்லாதவராக இருந்தார்.

    இதனால், மகனை பல முறை கண்டித்தார். ஆனால், ஸாத் (ரலி) ஈமானை இழக்கத் தயாராக இல்லை.

    ‘ஸாதே! உன்னைப் பெற்றெடுத்த தாய் சொல்கிறேன். நம்முடைய முன்னோர்கள் நமக்கு செல்வங்களை மட்டும் விட்டுச் செல்லவில்லை. நம்முடைய குலப் பெருமையையும் அவர்கள் வழிபட்ட வணக்க வழிபாடுகளையும் நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார்கள். அவர்கள் சென்ற பாதையிலிருந்து திரும்பி நீ உனக்கென தனி வழியை ஏற்படுத்திக் கொள்ளலாமா? அது நம் குடும்ப பெருமைக்கு இழுக்கையல்லவா ஏற்படுத்தும். நீ சொல்கின்ற புதிய மார்க்கத்தை விட்டு நீ எங்களோடு இணையவில்லை என்றால் இந்த கணம் முதல் நான் உண்ண மாட்டேன், பருக மாட்டேன். என் உயிர் போயினும் சரியே. நான் உன்னை நம் பழைய மார்க்கத்தில் இணைக்காமல் விட மாட்டேன், இது சத்தியம். அப்படி எனக்கு ஏதாவது ஏற்படுமாயின் தாயைக் கொன்ற தனயன் என்ற பழிச்சொல் உன் வாழ்நாள் முழுவதும் உன்னை இழிவுபடுத்தி கொண்டிருக்கும். அந்த அவப்பெயரை உன்னால் எந்த நிலையிலும் துடைத்தெறிய முடியாது’ என்று கூறிவிட்டு தன் உண்ணா நோன்பை தொடங்கினார்.

    சில நாட்கள் கழிந்தன. தாயாரின் பிடிவாதம் கொஞ்சம் கூட தளர்ந்த பாடில்லை. ஸாத் (ரலி) அண்ணலார் மீது கொண்ட அன்பும், இஸ்லாமிய மார்க்கம் மீது கொண்ட பற்றும் தாய்ப்பாசத்தை விட அதிகமாக இருந்தது. இதனால் அவர் தன் மனதைக் கல்லாக்கிக் கொண்டார். இருந்தும் தாய் மீது இருந்த அன்பும் பாசமும் அவரை வேதனை அடையச் செய்தது.

    ‘அன்னையே! உங்கள் முடிவை மாற்றிக்கொள்ளுங்கள். என் பொருட்டால் நீங்கள் உங்களை வருத்திக் கொள்வதில் எந்தவித பயனும் விளையப் போவதில்லை. உங்கள் உயிரைக் காத்துக் கொள்வதற்காக ஏதாவது கொஞ்சமேனும் உண்ணுங்கள்’ என்று ஸாத் (ரலி) தன் தாயிடம் கெஞ்சினார்.

    ‘நீ நம்முடைய பழைய மார்க்கத்திற்கு வரவேண்டும், இல்லையெனில் என் உயிர் இப்படியே பிரிய வேண்டும், எதை விரும்புகிறாய் என்பதை நீயே முடிவு செய்து கொள்’ என்று கூறி அவரது தாயார் மறுத்துவிட்டார்.

    தாயாரின் உறுதியை கண்ணுற்ற ஸாத் (ரலி), “அன்பு தாயே! என் நபி மீது நான் என் அன்னையை விட ஏன் என் உயிரைவிட அதிக அன்பு செலுத்தவில்லையானால் நான் முழுமை பெற்ற மூமினாக முடியாது. அந்த தத்துவத்தை தான் அவர்கள் எங்களுக்குச் சொல்லித் தந்திருக்கிறார்கள். நீங்கள் தவறான வழியில் இருப்பதை கண்ணுற்றும் உங்களை சத்தியத்தின் பக்கம் கொண்டு சேர்க்கவில்லை என்றால் நாளை மறுமையில் நானும் இறைவன் முன் குற்றவாளியாகத்தான் நிற்க வேண்டியதிருக்கும். ஆனால் நீங்களோ என்னை இறைவனுக்கு இணை வைத்தலின் பக்கம் அழைக்கிறீர்கள், நான் எப்படி அதற்குச் செவிசாய்க்க முடியும்? அல்லாஹ் மீது ஆணையாக ஒன்றை மட்டும் சொல்கிறேன். உங்களுக்கு ஓர் உயிர் என்ன? ஓராயிரம் உயிர் இருந்து அவை ஒவ்வொன்றாய் உங்களை விட்டுப் பிரிந்து சென்றாலும் நான் கொண்ட ஈமானை விட்டுவிட மாட்டேன்” என்றார்.

    மேலும் தொடர்ந்து கூறும்போது, “தாயே, இது கடினமான செயல் தான். இருந்தாலும் நாளை மறுமையில் என் தாயை நரகத்திற்கு கொண்டு செல்லும் மாபெரும் கொடிய தண்டனையில் இருந்து காப்பாற்ற வேண்டியது என் தலையாய கடமை. அதனை ஒப்பிடும் போது இந்த தண்டனையை நான் மிக எளிதாகவே கருதுகிறேன்” என்றார்.

    ஸாத் (ரலி) கடைப்பிடித்த இந்த உறுதியைக் கண்டு அல்லாஹ் அண்ணலாருக்கு ‘வஹி’ (இறைச்செய்தி) அனுப்புகிறான்.

    “எனக்கு நன்றி செலுத்து, உன்னுடைய தாய்-தந்தைக்கும் நன்றி செலுத்து. எனினும், இறைவன் என்று நீ அறிந்து கொள்ளாத ஒரு பொருளை, எனக்கு இணை வைக்கும்படி அவர்கள் உன்னை நிர்பந்தித்தால், அவ்விஷயத்தில் நீ அவர்களுக்கு கீழ்படிய வேண்டாம். ஆயினும் இவ்வுலக விஷயத்தில் நீ அவர்களுக்கு நிதானமாக உதவி செய்து அன்பாக நேசித்து வா. எவ்விஷயத்திலும் என்னையே நோக்கி நிற்பவர்களின் வழியே நீ பின்பற்றி நட” (திருக்குர்ஆன் 31:14,15).

    தன் பொருட்டால் இறக்கப்பட்ட இந்த இறைச்செய்தியை நபிகள் மூலம் கேள்வியுற்றதும் ஸாத் (ரலி) அகமகிழ்ந்து போனார். அந்த சம்பவத்திற்குப் பிறகு அவரது ஈமானின் பிடிப்பு மேலும் அதிகமானது.

    திருக்குர்ஆனில் தன்னை எங்கெல்லாம் வணங்கச் சொல்கின்றானோ, அங்கெல்லாம் பெற்றோருக்கும் நன்றி செலுத்து என்று பல இடங்களில் இறைவன் கட்டளையிட்டு இருக்கின்றான். அப்படிப்பட்ட கட்டளை அமுலில் இருக்க, ஸாத் (ரலி) தனது பெற்றோருக்கு அடிபணியவில்லை என்பதை குற்றமாக கருதாமல், அவரது செயலை நியாயப்படுத்தி, அதன் மூலம் உலக மக்களுக்கும் ஒரு படிப்பினையை அல்லாஹ் வழங்கியிருக்கின்றான்.

    எல்லாப் பாவங்களையும் மன்னிக்கின்ற அல்லாஹ், இணை வைத்தலை மன்னிப்பதில்லை என்பதையும் இந்த நிகழ்வின் மூலம் நமக்கு பாடமாய் சொல்லித் தருகின்றான்.

    மு.முஹம்மது யூசுப், உடன்குடி.
    உடலும் உயிருமாய் இருக்கும் போதே இறைவனிடம் சரண் அடைய கற்றுக்கொள்வோம், இறையருளால் சாகா வரம் பெற்ற நல்லோர்களுடன் நாமும் இணைவோம்.
    உயிர் நம் உடலில் எங்கே இருக்கிறது? அது எப்படி தான் இருக்கும்? என்பதை அறிய நாமெல்லாம் மிக ஆவல் கொண்டவர்களாகவே இருக்கின்றோம்.

    உயிரைப் பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது. இருந்தாலும் உயிர் இப்படித் தான் இருக்கும் என்று விஞ்ஞானத்தால் கூற இயலவில்லை.

    கண்ணுக்கு தெரிகின்ற நம் உடலுக்கு கண்ணுக்கு தெரியாத உயிரே ஆதாரமாக நின்று செயல்படுகிறது.

    ‘உயிர் (ரூஹ்) என்றால் என்ன?’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வினவிய போது அண்ணலாருக்கு இறைவசனம் இவ்வாறு அருளப்பட்டது.

    ‘நபியே, ரூஹை (உயிரைப்) பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். (நீர் கூறும்) ரூஹ் (உயிர்) என்பது என்னுடைய இறைவனின் கட்டளையாகும். அதைப்பற்றிய அறிவுத்திறன் சிறிதளவே அன்றி, (மிகுதியாக) நீங்கள் வழங்கப்பட்டவர்களாக இல்லை (என்று)’. (திருக்குர்ஆன் 17:85)

    உயிரைப் பற்றிய திருக்குர் ஆன் கூறும் ரகசியம் இது தான், ‘உயிர் என்பது இறைவனின் கட்டளை என்பதேயாகும், அதை உணர்ந்து கொள்ளும் ஞானம் பொதுவாக மனிதர் களுக்கு மிகக்குறைவாகவே கொடுக்கப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்ட அறிவை கொண்டு இறையருளால் யார் அதனை உணர்ந்து கொள்கிறார்களோ அவர்களே பாக்கியம் பெற்றவர் களாக ஆகிவிடுகிறார்கள்’.

    அரசு இடும் ஒரு கட்டளை உடனே ரூபாய் நோட்டுகளை செல்லாமல் ஆக்கிவிடுகின்றது. காசோலையில் ஒரு கையொப்பம் தான் அக்காசோலை மதிப்பு மிக்கதாக மாற்றுகின்றது.

    கட்டளைகளைக் கொண்டுதான் உலகில் செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதை பார்க்கிறோம். அதைப்போல இறைவனின் கட்டளைதான் உடலோடு உயிரை பிணைத்து வைக்கிறது. அக்கட்டளை அவனால் வாபஸ் பெறப்படும் போது உடலை விட்டும் உயிர் விலகி, அது உடலை செயல் இழக்கச்செய்து விடுகிறது.

    இறைகட்டளையால் உயிர் வருவதைப் போன்றே, அது விலகிச்செல்வதும் அவனது கட்டளையால் தான் நடைபெறுகிறது. இவ்வாறு இறைக்கட்டளையை கொண்டு உடலில் சில காலம் தங்கியிருக்கும் அம்சமே உயிர் என்பதாகும்.

    உயிர், இறைவன் அவகாசம் கொடுக்கும் காலம் வரை அது உலகில் நம்மோடு தங்கி செய்கின்றது. அவனது கட்டளை வாபஸ் ஆகும் போது, அது மீண்டும் அவனிடமே சென்று அடைந்துவிடுகிறது என்பதை அருள் மறை குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது.

    ‘அவன் (இறைவன் தான்) உயிரூட்டக் கூடியவன். இன்னும் அவனே மரிக்க செய்கின்றான். இன்னும் அவனிடமே நீங்கள் (மீண்டும்) மீட்டப்படுவீர்கள்’ (திருக்குர்ஆன் 10:56)

    உயிர் என்ற அம்சம் இறைவனின் கட்டளையால் வாபஸ் ஆகும் போது உயிரினங்கள் பல்வேறு விதமாக மரணத்தை தொட்டுவிடுகின்றது.

    எனவே உலகில் உயிருடன் வாழும் காலத்திலேயே உடலோடு ஒன்றி இருக்கும் உயிரையும் அதன் மகத்துவத்தையும் உணர்ந்து அதனை பரிசுத்த செயல்களால் மேன்மைப் படுத்தியவர்கள் வெற்றியடைந்து விடுகிறார்கள்.

    இதை உணராது உடலின் சுகபோகங்களுக்கு இரையாகி, தனது உயிரின் உன்னத நிலையை மறந்தவர்கள், தோல்வியில் விழுந்து விடுகிறார்கள்.

    நுட்பமான அறிவைக் கொண்டு கவனிக்கும் போது, என்றும் மாறாததும், மறையாததும், பிறவாததும், இறவாததும், ஆன தனித்துவம் பெற்றது இறையாற்றல். அந்த இறையாற்றல் இப்பிரபஞ்சத்தில் தோன்றியுள்ள எல்லாவற்றையும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கும் படியாக செய்திருக்கின்றது. ஒன்றில் ஒன்று ஊடுருவி இருப்பதும், ஒன்று மற்றொன்றோடு பிணைக்கப்பட்டிருப்பதும் அவ்வாற்றலின் பேரருளாள் தான்.

    உயிர் குறித்து நபிகளார் கூறும் அற்புதமான வார்த்தை இது: ‘என் உயிர் யார் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக’ என்பார்கள்.

    எல்லா உயிர்களின் பிடியும் இறைவன் கைவசம் உள்ளது என்பதைதான் இது நமக்கு உணர்த்துகின்றது.

    உடலும் உயிருமாய் இருக்கும் போதே இறைவனிடம் சரண் அடைய கற்றுக்கொள்வோம், இறையருளால் சாகா வரம் பெற்ற நல்லோர்களுடன் நாமும் இணைவோம்.

    -முகம்மது சலாகுதீன், ஏர்வாடி, நெல்லை.

    ஏக இறை கொள்கையில் அவர்கள் கொண்டிருந்த உறுதியான பிடிப்பால் அவர்களின் ஈமான் அல்லாஹ்விடம் தனிப்பெரும் இடத்தை பெற்று தந்தது.
    இஸ்லாத்தின் அடித்தளத்தை மிக உறுதியாக அமைத்துக் கொடுத்த அண்ணலாரின் அன்புத்தோழர்களில் மிக முக்கியமானவர்கள் யாஸிர் (ரலி), சுமையா (ரலி), அம்மார் (ரலி). இந்த குடும்பமே தன் இன்னுயிரை ஈந்து இஸ்லாத்தை காத்தது.

    ஏமன் நாட்டைச் சேர்ந்தவர் யாஸிர் (ரலி). அவர் தன் சொந்த நாட்டை விட்டு வந்து மக்காவில் குடியேறினார். அக்கால கட்டத்தில் குரைஷி குலத்தலைவர்களின் முக்கியமானவரான அபூஹுதைபா அல்மக்ஸுமி என்பவரிடம் அடைக்கலம் பெற்று மக்காவில் தங்கினார்.

    அவருடைய நன்னடத்தையால் கவரப்பட்ட அபூஹுதைபா, தன் ஆளுமையின் கீழிருந்த அடிமைப்பெண்களில் ஒருவரான சுமையா என்பவரை யாஸிருக்கு மணமுடித்துக் கொடுத்தார். இல்லறத்தை நல்லறமாய் நடத்தி வந்த தம்பதியருக்கு அம்மார் (ரலி) தவப்புதல்வராய் பிறந்தார்.

    இவர்கள் மூவரும் அண்ணல் நபிகளின் போதனைகளால் ஈர்க்கப்பட்டு ஓரிறைக்கொள்கையை ஏற்றனர். அல்லாஹ் ஒருவனே இறைவன், அவனது தூதர் முஹம்மது நபிகள் (ஸல்) என்பதை ஏற்றுக்கொண்டு இஸ்லாமிய வழியில் வாழ்ந்தனர். ஆரம்பத்தில் இஸ்லாத்தில் இணைந்தவர்களில் ஆறாவது நபர் சுமையா (ரலி) ஆவார்.

    ஏக இறைவனை ஈமான் கொண்டதால் அரேபிய குரைஷியர்களால் யாஸிர் (ரலி), சுமையா (ரலி) இருவரும் கடுமையான தண்டனைக்கு ஆளாக்கப்பட்டு தங்கள் இன்னுயிரையும் இஸ்லாத்திற்காக தியாகம் செய்தார்கள்.

    தனது பெற்றோரின் ஈமானில் எள்ளளவும் குறையாத உறுதி மிக்கவராக அம்மார் (ரலி) திகழ்ந்தார். இந்த உறுதியை குலைக்க குரைஷியர்கள் முயன்றனர். கடும் தண்டனைகளும், சித்ரவதைகளும் செய்து அம்மார் (ரலி) அவர்களை கொடுமைப்படுத்தினார்கள். அம்மார் (ரலி) அவர்களைத் தீயிலிட்டு பொசுக்கினார்கள். தீயின் கங்குகளால் உடலை சூடு வைத்து கதற வைத்தனர்.

    ஒரு முறை அண்ணலார் (ஸல்) அவர்கள் அவ்வழியே செல்லும் சந்தர்ப்பத்தில் அம்மார் (ரலி) அவர்கள் படும் வேதனையை சகிக்க முடியாதவர் களாக அவர்கள் தலையை கோதி விட்டவர்களாக, “ஏ! அக்னியே அம்மாரை எரித்து விடாதே, இப்ராகிம் நபிகளுக்கு இறைவன் கட்டளைப்படி நிம்மதியூட்டும் குளிர்ச்சியாக மாறியது போல், அம்மாருக்கும் குளுமையையும் சுகத்தையும் கொடுத்து விடு” என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள்.

    ஒரு நாள் குரைஷியர்கள், பழுக்கக் காய்ச்சிய இரும்பினால் அம்மார் (ரலி) முதுகு முழுவதும் பயங்கரமாய் சூடு போட்டனர். ரண களமான முதுகை கொதிக்கும் பாலைவன மணலில் கிடத்தி வேதனையை அதி கரிக்கச் செய்தனர். அதோடு, முதுகை உயர்த்தி விடாமல் இருப்பதற்காக சுடுகின்ற பாறை கற்களை அம்மார் (ரலி) நெஞ்சில் வைத்து சித்ரவதை செய்தனர்.

    வேதனை தீரும் முன்பே அவர்களை எழுப்பி தலையை தண்ணீரில் அமுக்கி மூச்சு திணற திணற துடிதுடிக்கச் செய்தனர். அதன் பின் சவுக்கால் அடித்து துவைத்து கிட்டத்தட்ட மரணவாயிலின் அருகாமைக்கு கொண்டு சென்றனர்.

    தலை முடியை பிடித்து இழுத்து இப்போதாவது, ஏக இறை கொள்கையை விட்டு விடு என்று துன்புறுத்தினார்கள். கிட்டத்தட்ட சுயநினைவை இழந்து விட்ட நிலையில், உயிர் போய் விடுமோ என்று அஞ்சிய அம்மார் (ரலி) நிராகரிப்புச் சொற்களை வாயால் கூறினார்.

    இதையடுத்து குரைஷியர்கள் அவரை உயிரோடு விட்டனர்.

    நிர்பந்தத்தின் காரணமாக இந்த செயலை அம்மார் (ரலி) செய்தார். ஆனால் அவரது இதயத்தில் எந்தவித இணைவைத்தல் வேறுபாடும் இல்லாமல் அல்லாஹ் மீது நம்பிக்கை கொண்டவராக இருந்தார்.

    சிறிது நேரம் செல்ல, மெல்ல மெல்ல சுய நினைவு திரும்பியவர்களாக, உடம்பில் சிறிது தெம்பு வந்ததும், தன்னிலைக் குறித்து மிகவும் வருந்தினார்கள்.

    ‘உயிரை துச்சமாக மதித்து, ஏக இறைவனுக்காக தங்களது உயிரையே கொடுத்த பெற்றோருக்கு பிறந்த நான், எனது உயிரைப் பெரிதாய் எண்ணி எவ்வளவு பெரிய தவறைச் செய்து விட்டேன்’ என்று மிகவும் வருந்தினார்.

    இந்த பாவத்திற்கு மன்னிப்பு உண்டா? என்று மனம் பதைபதைத்தவர் களாக அண்ணலாரிடம் ஓடோடி சென்று நடந்ததை ஒன்று விடாமல் விவரித்துச் சொன்னார்கள்.

    அம்மார் (ரலி) அவர்களை ஆறுதலாய் அரவணைத்துக் கொண்ட அண்ணலார், ‘உயிர் இறைவன் அளித்த அமானிதம். அதனைக்காப்பது இறைநம்பிக்கையின் ஒரு பகுதி தான். நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். இறைவன் விரைவில் உங்களுக்கு நிவாரணத்தை தருவான்’ என்றார்கள்.

    அண்ணலாரின் கூற்றை ஆமோதிப்பது போல உடனே அல்லாஹ்விடம் இருந்து இறைச்செய்தியும் இறங்கியது.

    ‘இதயம் இறை நம்பிக்கையால் முற்றிலும் வியாபித்திருக்க பிறரின் வற்புறுத்தலுக்கு பணிந்து, மனதில் திடத்தோடு ஆனால் வாயினால் இறை நிராகரிப்பு என்ற சொற்கள் வந்து விட்டால், அதனால் அவர் மீது குற்றமில்லை’. (திருக்குர்ஆன் 16:106)

    கலவரச் சூழலில் உயிரையும், உடைமைகளையும் காப்பாற்றிக் கொள்வதற்காக உள்ளத்து நம்பிக்கையில் சிறிதளவும் சலனமில்லாமல் வாயால் மட்டும் அந்த நம்பிக்கைக்கு மாற்றமாக பேசுவது குற்றமல்ல என்று இந்த வசனம் பேசுகிறது.

    அண்ணலார் இந்த இறைச்செய்தியை அறிவித்ததும் அம்மார் (ரலி) அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. இதுவரை பட்ட துன்பங்கள் எல்லாம் பறந்தோடி விட்டன. தன்னை இறைவன் பொருந்திக் கொண்டான். தன் பொருட்டு இறைச்செய்தியை அறிவித்து விட்டான். இப்பெரும்பேறு யாருக்கு கிடைக்கும்? என்று மனம் மகிழ்ந்தார்கள்.

    ஆனால் அதன் பின் எதிர்கொண்ட எத்தனையோ வேதனைகளை துச்சமாக மதித்தார்களே ஒழிய ஈமான் இழந்து வாய்மொழியில் கூட நிராகரிப்பை சொல்லவில்லை.

    காலங்கள் கடந்தன. இஸ்லாமிய சுதந்திர காற்று மக்கா முழுவதும் வியாபிக்கத் தொடங்கியது. உமர் கத்தாப் (ரலி) அவர்களும் இஸ்லாத்தைத் தழுவினார்கள். இஸ்லாமியக் கொள்கைகள் மக்கா நகர் முழுவதும் வெளிப்படையாக உலா வரத் தொடங்கியது.

    அண்ணலாருக்கும் ‘ஹிஜ்ரத்’ செய்து மதீனா செல்ல வேண்டிய கட்டாயம். அம்மார் (ரலி) அவர்களும் மதீனாவில் குடியேறினார்கள்.

    அதன் பின் பிரகடனப்படுத்தப்பட்ட அத்தனை போர்களிலும் முன்னிலை வீரராக பங்கேற்று மிகவும் உக்கிரமுடன் போராடினார்கள் அம்மார் (ரலி).

    இஸ்லாமிய கலீபாக்களின் ஆட்சி காலத்திலும் ‘யமாமா’, பாரசீக, ரோமபுரி வல்லரசுகளுடன் தொடுக்கப்பட்ட பெரும் போர்களிலும் அம்மார் (ரலி) அவர்கள் பங்கேற்றார். பெரும் வெற்றியை ஈட்டுவதற்கு பெரும் துணையாகவும் இருந்தார்.

    ஏக இறை கொள்கையில் அவர்கள் கொண்டிருந்த உறுதியான பிடிப்பால் அவர்களின் ஈமான் அல்லாஹ்விடம் தனிப்பெரும் இடத்தை பெற்று தந்தது.

    யாஸிர் (ரலி), சுமையா (ரலி), அம்மார் (ரலி) ஆகிய மூவருமே அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட உயர் மக்கள். முதன்மையாக இஸ்லாத்தை ஏற்றதும், அவர்கள் செய்த தியாகங்களும் பின்னால் வந்து இணைந்து கொண்ட மற்ற சஹாபாக்களுக்கே ஒரு பாடமாக, ஓர் அற்புதமான அத்தாட்சியாக விளங்குகிறது என்றால் மிகையாகாது.

    மு.முஹம்மது யூசுப், உடன்குடி.

    கட்டாயக் கடமைகளை விட்டுவிட்டு உபரி வணக்கங்கள் மூலம் இறை நெருக்கத்தைப் பெற நினைப்பது ஒருவகையில் தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிப்பது போன்றதுதான்.
    மாட்டையோ, கன்றையோ முளைக்குச்சியில் கட்டிப்போடுவதற்காக அதன் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் நீளம் அதிகம் இல்லாத கயிறுக்கு ‘தும்பு’ என்பார்கள்.

    மாட்டைக் கட்டிப்போட வேண்டுமென்றால் தும்பைத்தான் பலமாகப் பிடிக்க வேண்டுமே தவிர, அதன் வாலை அல்ல. வாலைப் பிடித்தால் என்னவாகும்? மாடு மிரண்டு ஓடிவிடும், காரியம் கெட்டுவிடும்.

    இன்று மார்க்கத்தைப் பின்பற்றும் அனேகமானவர்கள், தும்பை விட்டுவிட்டு வாலைத்தான் பிடிக்கின்றார்கள். மார்க்கம் தன் மீது விதித்திருக்கும் கட்டாயக் கடமைகளைக் குறித்து அவ்வளவாகக் கவலைப்படுவதில்லை. ஆனால் உபரி வணக்கங்களில் அதிக ஆர்வத்துடன் செயல்படுவார்கள்.

    ‘கட்டாயக் கடமைகள் நிறைவேற்றப்படாத வரை உபரி வணக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது’ என்பது இஸ்லாமிய சட்டக்கலையின் அடிப்படை விதிகளில் ஒன்று. இதனைப் புரியாமல் அனேகமானவர்கள் தும்பை விட்டு வாலைப் பிடிக்கின்றனர்.

    அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: “எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றைவிட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்வதில்லை”. (புகாரி)

    ‘கட்டாயக் கடமைகளை நிறைவேற்றாத வரை இறை நெருக்கம் கிடைக்காது’ என்பது இறை வாக்கு. அவ்வாறு இருக்க, ‘பர்ளை விட்டுவிட்டு சுன்னத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதோ, சுன்னத்தை விட்டுவிட்டு உபரியானவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பதோ கூடாது’. ஏனெனில் இஸ்லாத்தின் சட்டதிட்டங்கள் ஒவ்வொன்றும் கட்டளைகளின் அடிப்படையில் மாறுபட்டவை.

    ஆகவேதான், கட்டாயக் கடமை (பர்ள்), நபிகளாரின் வழிமுறை (சுன்னா), உபரி வணக்கங்கள் (நபில்) என்று தனித்தனியாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஆகவே அவை ஒவ்வொன்றுக்குமான தனித்தனி முக்கியத்துவத்தைக் கொடுத்தே தீர வேண்டும். ‘எல்லாம் சமம்தான், எதை வேண்டுமென்றாலும் எப்போது வேண்டுமென்றாலும் செய்யலாம்’ என்று அனைத்தையும் ஒரே மாதிரியாகக் கருதி செயல்படக்கூடாது.

    ரமலான் மாதம் வந்துவிட்டால் தூங்காமல் கண் விழித்து இரவு வணக்கத்தில் அதிகம் ஈடுபட்டு காலையில் வேலைக்குச் செல்லும்போது தாமதமாகச் செல்வதையும் இதற்கான உதாரணமாகக் கூறலாம். தூக்கக் கலக்கத்தில் செய்யவேண்டிய வேலையை சரிவரச் செய்யாமல் இருப்பார்கள். இரவு வணக்கம் என்பது உபரி. ஆனால் வாங்கும் சம்பளத்திற்காக ஒழுங்காகவும் நேர்மையாக உழைப்பது கட்டாயக்கடமை அல்லவா.

    ‘ஹஜ்’ எனும் கட்டாயக் கடமையையும் அவ்வாறே. ஹஜ், வாழ்நாளில் ஒரு தடவை மட்டுமே கடமை. மீண்டும் மீண்டும் நிறைவேற்றுவது கடமையல்ல. ஆயினும் ஹஜ்ஜையும் உம்ராவையும் மீண்டும் மீண்டும் நிறைவேற்றுவதிலேயே ஒருசிலர் குறியாய் இருக்கின்றார்கள்.

    சொந்த ஊரில் பசியாலும் பட்டினியாலும் ஏழைகள் வாடுவார்கள். அதைக் குறித்து அவர்களுக்குக் கவலை கிடையாது. பள்ளிக்கூடம் இன்றியும், படிப்பறிவு இல்லாமலும் ஊர் மக்கள் தவிப்பார்கள். அது அவர்களுக்கு எவ்வித வேதனையையும் ஏற்படுத்தாது. வசிக்கும் ஊரில் போதிய மருத்துவ வசதிகள் இருக்காது. அது குறித்து யோசிப்பதே இல்லை. இவர்களின் கவலை எல்லாம் மீண்டும் மீண்டும் ஹஜ்ஜுக்குச் செல்லவேண்டும். மீண்டும் மீண்டும் உம்ராவுக்குச் செல்ல வேண்டும், பாவக்கறைகளை அங்கு சென்று கழுவ வேண்டும் என்பது மட்டுமே.

    எழுபது விழுக்காட்டினர் மீண்டும் மீண்டும் ஹஜ்ஜுச் செய்வதாக சவூதி அரசுக் குறிப்பு ஒன்று தெரிவிக்கின்றது. விளைவு..? மக்காவில் இட நெருக்கடி ஒருபக்கம். முதல் முறையாக ஹஜ்ஜு செய்யவேண்டும் என்று நினைப்பவர்களுக்கோ சந்தர்ப்பமும் கிடைப்பதில்லை. மறுபக்கமோ ஊரில் பசி, பட்டினி, வறுமை போன்றவை தலைவிரித்தாடும்.

    மீண்டும் மீண்டும் ஹஜ், உம்ரா செய்வதற்காக செலவிடும் பணத்தை ஏழையின் கண்ணீர் துடைக்க செலவிட்டால், உபரியான ஹஜ், உம்ரா செய்யும்போது கிடைக்கும் நற் கூலியைவிட அதிகக் கூலியை அல்லாஹ் கொடுப்பான் என்பது ஏனோ இவர்களுக்குத் தெரிவதில்லை. ஏழைகளுக்கு உதவுவது வசதி படைத்தவர்கள் மீதான கடமையல்லவா?

    ஒருமுறை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் ஈராக் பகுதியைச் சார்ந்த ஒருவர் வந்து, “கொசுவைக் கொல்லும்போது இஹ்ராம் ஆடையில் (ஹஜ், உம்ரா வழிபாட்டின்போது அணியும் ஆடைக்கு இஹ்ராம் என்பர்) கொசு ரத்தம் பட்டுவிட்டால் என்ன செய்வது? அது குறித்து நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்?” என்று கேட்டார்.

    அந்த நபரிடம் இப்னு உமர் (ரலி) கேட்டார்கள்: “நீ ஈராக் பகுதியைச் சார்ந்தவனா?”. அவர், “ஆம்” என்று கூறவும், அவருடைய கேள்விக்கு நேரடியாகப் பதில் கூறாமல் அருகில் இருந்தவர்களிடம் இப்னு உமர் (ரலி) கூறினார்:

    “ஈராக்வாசிகளைப் பாருங்கள்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அருமைப் பேரர் ஹுஸைன் (ரலி) அவர்களைக் கொலை செய்திருக்கின்றார்கள். அன்னாரது ரத்தத்தை ஓட்டியிருக்கின்றார்கள். ஆனால், அது குறித்து அவர்கள் கவலைப்படவில்லை. ஆடையில் படும் கொசுவின் ரத்தம் அவர்களுக்குப் பெரிதாகத் தோன்றுகிறது”.

    இப்படித்தான் அனேகமானவர்களின் இன்றைய நிலையும். தும்பை விட்டு வாலைப் பிடிக்கின்றார்கள். முக்கியமானவற்றை விட்டுவிடுவார்கள். உபரியானவற்றைச் செய்வார்கள். கட்டாயக் கடமையான தொழுகையை விட்டுவிடுவார்கள். அரிதிலும் அரிதான உபரித் தொழுகையை நிறைவேற்ற முயல்வார்கள்.

    ஏன் என்று கேட்டால்.. ‘இந்தத் தொழுகையைத் தொழுதால் ஒருவருடம் செய்த பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டுவிடுமாமே’ என்று பதில் கூறுவார்கள்.

    தொழுகைக்கு பள்ளிவாசல் பக்கமே ஒதுங்காதவர் திடீரென ஒருநாள், ‘கிப்லா (தொழுகையில் முன்னோக்கும் திசை) எந்தப் பக்கம் இருக்கு?’ என்று கேட்டார். நமக்கு பெரும் ஆச்சரியமும் மகிழ்ச்சியும். ‘தொழப் போறீங்களா..?’ ரொம்ப சந்தோஷம் என்று கூறி நாம் வாய் மூடவில்லை, அதற்குள் அவர், ‘இல்ல.. இல்ல.. தூங்கும்போது கிப்லா பக்கம் கால் நீட்டக்கூடாது என்பது எனக்கு இன்றுதான் தெரியும். அதனால்தான் உங்ககிட்ட கேட்கிறேன்’ என்று கூறி நம்மை வாய்பிளக்க வைத்தார்.

    லாபகரமாக வியாபாரம் செய்யும் அனேக வியாபாரிகள் வட்டி குறித்து கவலைப்படுவதும் கிடையாது. ஜகாத் கொடுப்பது குறித்து யோசிப்பதும் இல்லை. ஆனால் உபரி நோன்பு வைப்பது குறித்தும் குர்ஆன் ஓதும்போது ‘உளு’ (அங்க சுத்தி) கண்டிப்பாகச் செய்ய வேண்டுமா என்பது குறித்தும் விளக்கம் கேட்பார்கள்.

    கட்டாயக் கடமைகளை விட்டுவிட்டு உபரி வணக்கங்கள் மூலம் இறை நெருக்கத்தைப் பெற நினைப்பது ஒருவகையில் தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிப்பது போன்றதுதான். அப்படிப் பிடித்தால் மாடு மிரண்டு ஓடுவதைப் போன்று மார்க்கமும் ஓடிவிடும், எச்சரிக்கை.

    - மவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.
    நபியே! எவள் தன் கணவனைப் பற்றி உம்மிடம் தர்க்கித்து அவரைப் பற்றி அல்லாஹ்விடமும் முறையிட்டாளோ, அவளுடைய முறையீட்டை அல்லாஹ் நிச்சயமாக கேட்டுக் கொண்டான்.
    “நபியே! எவள் தன் கணவனைப் பற்றி உம்மிடம் தர்க்கித்து அவரைப் பற்றி அல்லாஹ்விடமும் முறையிட்டாளோ, அவளுடைய முறையீட்டை அல்லாஹ் நிச்சயமாக கேட்டுக் கொண்டான். அதைப்பற்றி உங்கள் இருவரின் தர்க்க வாதத்தையும் அல்லாஹ் செவியுற்றான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் செவியுறுபவன். ஒவ்வொருவரின் செயலையும் உற்று நோக்குபவன் ஆவான்” (திருக்குர்ஆன் 58:1)

    பண்டைய அரபு சமுதாயத்தினர், அறியாமையில் இருளில் மூழ்கி பண்பாட்டை இழந்தவர்களாக வாழ்ந்தனர். குறிப்பாக பெண்களை அடிமைகளாகவும், போதைப் பொருளாகவுமே பயன்படுத்தி வந்தனர்.

    அந்த காலகட்டத்தில் தான், அறியாமை இருளை அகற்ற வந்த அருந்தவ செல்வமாய் அண்ணல் நபிகள் பிறந்தார். இஸ்லாமின் ஏகத்துவத்தை எடுத்துக்கூறியதோடு, உறவுகள், பக்கத்து வீட்டார் உரிமைகள், பெண்களின் பாதுகாப்பு குறித்தும் மக்களுக்கு அறிவுரை கூறி வந்தார்கள்.

    குறிப்பாக, பெண்களின் அடிமைத்தளையை நீக்கி, அவர்களுக்கான பேச்சுரிமை, கல்வி கற்றல் உரிமை, ஆணுக்கு இணையான சொத்துரிமை போன்ற உரிமைகளைப் பெற்று தருவதில் நபிகள் நாயகம் ஈடுபட்டார்கள். இதில், இஸ்லாமிய தத்துவம் சொல்லும் பெண்களுக்கான உரிமைகள் அனைத்தையும் எடுத்துச் சொல்லி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

    அன்றைய காலகட்டத்தில் ஒரு விசித்திரமான பழக்கம் அரபு ஆண்களிடம் இருந்தது. அதாவது, தன் மனைவியை பிடிக்கவில்லை என்றாலோ, அல்லது ஏதாவது கோபதாபங்கள் இருந்தாலோ, மனைவியை தண்டிப்பதற்காக, அவளை தாம்பத்ய உறவிலிருந்து விலக்கி வைத்து விடுவதுண்டு. இந்த செயலுக்கு ‘ஸிஹார்’ என்ற பெயர் வழக்கில் இருந்து வந்தது. ‘ஸிஹார்’ என்றால் அரபியில் ‘முதுகு’ என்று பெயர்.

    கணவன் தன் மனைவியை நோக்கி ‘நீ என் தாயின் முதுகை ஒத்திருக்கிறாய்’ என்று சொல்லி விட்டால் அது அவள் தாயின் அந்தஸ்த்தை அடைந்து விடுவதாக ஆகி விடும்.

    இந்த முறையைப் பயன்படுத்தி, பலர் தங்கள் மனைவியரை ‘தலாக்’ சொல்லி விடுவிக்காமல், ‘தாய்’ என்று வார்த்தையைச் சொல்லி அந்தப்பெண்ணோடு வாழ்ந்தும் வாழாமல் அவர்கள் வாழ்வை கேள்விக்குறியாக்கி வந்தனர்.

    இதுபோன்ற ஒரு சந்தர்ப்பத்தில் தான், நபிகளை சந்தித்து ஒரு பெண் தன் கணவனைப் பற்றி முறையிட்டாள். “என் கணவர் என்ன காரணத்திற்காகவோ என்னை அவரின் தாய் போன்றிருக்கிறேன் என்று சொல்லி, என்னை அவரின் தாம்பத்ய வாழ்விலிருந்து விலக்கி வைத்துள்ளார். கேட்டால் இது போன்ற ‘ஸிஹார்’ என்ற முறை காலம் காலமாய் இருந்து வரும் ஒரு கொள்கை என்பதாகச் சொல்கிறார்.”

    “நபியே! இது ஆணாதிக்கம் அல்லவா? பெண்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதி அல்லவா? என்னைப் பிடிக்கவில்லை என்றால், என்னை மணவிலக்கு செய்து விலக்கி விட்டு என் வாழ்வில் இடைஞ்சல் செய்யாமல் விட்டிருக்கலாம். அதை விடுத்து நான் வாழ்ந்தும் வாழ முடியாத ஒரு நிலையை உருவாக்கி என்னை தண்டிப்பது எந்த வகை நியாயம்? எனக்கு ஒரு நல்ல முடிவைச் சொல்லுங்கள். என் கணவருக்கு புத்தி சொல்லுங்கள்?” என்று வேண்டி நின்றாள்.

    இந்த புகாரை மிக உன்னிப்பாக கேட்ட கண்மணி நாயகம் கண்மூடி சிறிது நேரம் மவுனமாக இருந்தார்கள். இது காலம் காலமாய் பெண்ணினத்திற்கு ஏற்பட்டிருக்கும் அநீதி. இதற்கான நீதி அல்லாஹ்விடம் இருந்து வந்தால் நன்றாக இருக்குமே? என்று எண்ணம் கொண்டவர்களாக பிரார்த்தனை செய்தபடி இருந்தார்கள்.

    அல்லாஹ்வின் வசனங்கள் வஹியாய் மளமளவென இறங்கியது. ‘நபியே! உங்களிடம் தர்க்கம் செய்த அந்த பெண்மணியின் வாதத்தை அல்லாஹ் கேட்டுக்கொண்டான். தன் மனைவியை தாய் என்று சொல்லி ‘ஸிஹார்’ முறையை பயன்படுத்தும் அத்தனை ஆண்களும் பெண்களுக்கு அநீதி இழைக்கிறார்கள், அந்த முறையை ரத்து செய்கிறேன்’ என்று சொல்லியவாறு வஹியை அறிவித்தான்.

    “உங்களின் எவரேனும் தன் மனைவிகளில் எவளையும் தன் தாயென்று கூறி விடுவதனால், அவள் அவர்களுடைய உண்மைத் தாயாகி விட மாட்டாள். அவர்களைப் பெற்றெடுத்தவர்கள் தான் உண்மைத் தாய் ஆவார்கள். இதற்கு மாறாக எவளையும் எவரும் தாயென்று கூறினால், கூறுகின்ற அவர்கள் நிச்சயமாகத் தகாததும் பொய்யானதுமான ஒரு வார்த்தையையே கூறுகின்றனர். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன். பிழை பொறுப்பவன் ஆவான். ஆகவே இத்தகைய குற்றம் செய்தவர்கள் அல்லாஹ்விடம் மன்னிப்பு கோரவும்” (திருக்குர்ஆன் 58:2)

    எனவே எவரேனும் தன் மனைவியை தாயென்று சொல்லி, அந்த வார்த்தையின் மூலம் பெண்களை வாழ்விழந்தவர்களாகச் செய்வதை குற்றம் என்றும் அதற்கு அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முதல் கட்டளையைப் பிறப்பிக்கின்றான்.

    தொடர்ந்து... “ஆகவே எவரேனும் தங்கள் மனைவிகளைத் தன் தாய்க்கு ஒப்பிட்டு கூறிய பின்னர் அவர்களிடம் திரும்ப சேர்ந்து கொள்ள விரும்பினால் அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தொடுவதற்கு முன்பாகவே இவ்வாறு ஒப்பிட்டு கூறிய குற்றத்திற்குப் பரிகாரமாக ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். இதை அல்லாஹ் உங்களுக்கு உபதேசம் செய்கிறான். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிபவன் ஆவான்” (திருக்குர்ஆன் 58:3) என்று குறிப்பிடுகிறான்.

    ஆனால் இந்த முறை பலதரப்பட்ட மக்களால் பின்பற்ற பட்டு வந்ததால் அடிமையை விடுதலை செய்யும் அளவு சக்தி பெறாத மக்கள் இரண்டு மாதங்கள் தொடர்ந்து நோன்பு நோற்க வேண்டும் என்றும், அல்லது அதற்கும் சக்தி பெறாதவர்கள் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்றும் கட்டளையிட்டான். தண்டனை கடுமையாக இருக்கும் போது குற்றங்கள் குறைய வாய்ப்பு உண்டு தானே. அதை திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

    “விடுதலை செய்யக்கூடிய அடிமையை எவரேனும் பெற்றிருக்கா விடில், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தொடுவதற்கு முன்னதாகவே அவன் இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக நோன்பு நோற்க வேண்டும். இவ்வாறு நோன்பு நோற்க சக்தி பெறாதவன் அறுபது ஏழைகளுக்கு மத்திய தரமான உணவளிக்க வேண்டும். அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொண்டிருக்கிறீர்கள் என்பதற்காக இந்த கட்டளையை இவ்வாறு இலேசாக்கி வைத்தான். இவை அல்லாஹ் ஏற்படுத்திய வரம்புகள் ஆகும். இதை மீறுபவர்களுக்கு துன்புறுத்தும் வேதனைஉண்டு” (திருக்குர்ஆன் 58:4).

    இந்த வசனங்கள் இறங்கிய அடுத்த கணம் அந்த பெண்மணியை அழைத்து நபிகள் நாயகம் நன்மாராயம் சொன்னார்கன். “உனது உண்மையான கோரிக்கையை அல்லாஹ் ஏற்று, உன் பொருட்டால் அத்தனை பெண்களுக்கும் நீதி செலுத்தினான்” என்றார்கள். அந்த பெண்மணியும் அகமகிழ்ந்து போனார்.

    பிற்காலத்தில் உமர் இப்னு கத்தாப் (ரலி) தனது ஆட்சி காலத்தில் ஒரு வயது முதிர்ந்த மூதாட்டியிடம் அதிக நேரம் பேசிக்கொண்டிருந்தார். அந்த வழியாகச் சென்ற ஒருவர் அவரிடம் “கலிபாவிற்கு எத்தனையோ வேலைகள் இருக்க இந்த மூதாட்டியிடம் ஏன் இத்தனை நேரம் வீணே காலம் தாழ்த்துகிறீர்கள்” என்று வினவினார்.

    உடனே உமர் கத்தாப் (ரலி) அவர்கள், “இவர் யார் என்று தெரிந்தால் இப்படி கேட்டிருக்க மாட்டீர்கள். இந்த பெண்மணியின் பொருட்டால் ‘ஸிஹார்’ என்ற கொடுமையை நீக்கி அதற்குப் பரிகாரமான சட்டங்களையும் இறைவன் இறைமறையில் அருளினான்” என்றார்கள்.

    அநீதியை எதிர்த்து பெண்களும் குரல் எழுப்பலாம் என்றும், அது அல்லாஹ்வின் சிம்மாசனம் வரை சென்று நீதி கிடைக்கச் செய்யும் என்பதையும் இந்த நிகழ்வின் மூலம் அறிந்து கொள்ளலாம். 
    நிகழ்ந்துவிட்ட பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கும், பாவங்கள் இனிமேல் நிகழாமல் இருப்பதற்கும் ஒரே வழி தொழுகைதான். இதுகுறித்து இறைவசனம் கூறுவது மிகப்பொருத்தமாக அமைகிறது.
    ‘பகலின் இரு ஓரங்களிலும், இரவின் பகுதிகளிலும் தொழுகையை நிலைநாட்டுவீராக! நன்மைகள் தீமைகளை அழித்துவிடும். படிப்பினை பெறுவோருக்கு இது அறிவுரை’. (திருக்குர்ஆன் 11:114)

    தினமும் ஐந்துவேளைத் தொழுகைகள் உண்டு என்பதை இந்த இறை வசனம் சுட்டிக் காட்டுகிறது. பகலின் இரு ஓரங்கள் என்பது லுஹர், அஸர் ஆகிய இருவேளைத் தொழுகைகளை குறிக்கிறது. இரவின் பகுதிகள் என்பது மக்ரிப், இஷா, சுபுஹ் ஆகிய மூன்று நேரத் தொழுகைகளை குறிக்கிறது.

    தொழுதால் நன்மைகள் கிடைக்கும் என்பது ஒருபக்கம். தொழுது வருவதால் சிறுசிறு பாவங்கள் மன்னிக்கப்படும் என்பது அதன் மறுபக்கம் ஆகும்.

    ‘ஐவேளைத் தொழுகைகள், ஜூம்ஆத் தொழுகை அடுத்த வார ஜூம்ஆத் தொழுகை வரை... ரமலான் நோன்பு அடுத்த ஆண்டு ரமலான் நோன்பு வரை, இவை இடையில் ஏற்படும் சிறுபாவங்களுக்கு பரிகாரமாக அமைந்து விடும். பெரும்பாவங்களை தவிர்ந்திருக்க வேண்டும் என நபிகள் (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர் : அபூஹூரைரா (ரலி) நூல் : முஸ்லிம்)

    உஸ்மான் (ரலி) அவர்கள் ஒருநாள் ஓரிடத்திற்கு வந்து அமர்ந்தார்கள். அவருடன் சில மக்களும் அமர்ந்தனர். அவர்களிடம் தொழுகைக்கு அழைப்பு கொடுக்கும் (பாங்கொலி) நபரும் வந்தார். அவரிடம் ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் கொண்டுவரும்படி உஸ்மான் (ரலி) வேண்டினார்கள். பிறகு, அவர்கள் அங்கசுத்தி (உளூ) செய்தார்கள். ‘நான் உளூ (அங்கசுத்தி) செய்தது போன்றே நபி (ஸல்) அவர்களும் செய்தார்கள். பிறகு எவர் நான் உளூ செய்தது போன்று உளூ செய்து, பிறகு எழுந்து லுஹர் (முற்பகல்) தொழுகையைத் தொழு கிறாரோ, சுபுஹ் (அதிகாலை) தொழுகைக்கும், லுஹர் தொழுகைக்கும் இடையில் நிகழ்ந்த சிறுபாவங்கள் மன்னிக்கப்படும். பிறகு அஸர் (மாலை நேரத்) தொழுகையை நிறைவேற்று கிறாரோ, அவருக்கு அஸருக்கும் லுஹருக்கும் இடையில் நிகழ்ந்த சிறுபாவங்கள் மன்னிக்கப்படும். பிறகு அவர் மக்ரிப் (சூரியன் மறையும் நேரத்) தொழுகையை தொழுதால், இதற்கும் அஸருக்கும் இடையில் நிகழ்ந்த சிறுபாவங்கள் மன்னிக்கப்படும். பிறகு இஷா (இரவு நேர)த் தொழுகையை தொழுதால், இதற்கும் மக்ரிபுக்கும் இடையில் நிகழ்ந்த சிறுபாவங்கள் மன்னிக்கப்படும். பிறகு அவர் இந்த நிலையிலேயே இரவில் நன்றாகத் தூங்கி, பிறகு எழுந்து உளூ செய்து, சுபுஹ் தொழுதால், இதற்கும் இஷாவுக்கும் இடையே நிகழ்ந்த சிறுபாவங்கள் மன்னிக்கப்படும். இந்தத் தொழுகைகள் யாவும் நன்மையான காரியங்கள் ஆகும். நன்மைகள், பாவங்களை போக்கிவிடும் என்று கூறினார்கள்’. (நூல்:அஹ்மது)

    ‘உங்களில் ஒருவரின் வாசலுக்கு அருகே நீர் அதிகம் நிறைந்த ஆறு ஒன்று இருந்து, அதில் ஒவ்வொரு நாளும் ஐந்து தடவை குளித்தால், அவரின் உடலில் அழுக்கு தேங்கி நிற்குமா? இது குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள்’ என நபி (ஸல்) கேட்டார்கள். ‘இறைவனின் தூதரே! அவ்வாறு இருக்காது’ என்று நபித் தோழர்கள் கூறினார்கள். ’இவ்வாறே ஐவேளைத் தொழுகைகளின் வாயிலாக பாவங்களையும், தவறுகளையும் இறைவன் அழித்துவிடுகிறான்’ என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர் : அபூஹூரைரா (ரலி), நூல் : முஸ்லிம்)

    பாவங்களை போக்கும் தன்மை ஐவேளைத் தொழுகைகளுக்கு மட்டுமல்ல, அனைத்து விதமான தொழுகைகளுக்கும் (அந்தத் தன்மை) உண்டு.

    ‘ஒவ்வொரு தொழுகையும் அதற்கு முன்பு ஏற்படும் தவறுகளை அழித்துவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூ அய்யூப் (ரலி), நூல் : அஹ்மது)

    அபூ உஸ்மான் (ரஹ்) கூறுவதாவது:-

    ‘நான் ஸல்மான் பார்ஸீ (ரலி) அவர்களுடன் ஒரு மரத்தடியில் இருந்தேன். அவர்கள் அந்த மரத்தின் காய்ந்து போன ஒரு கிளையை பிடித்து குலுக்கினார்கள். அதிலிருந்து இலைகள் உதிர ஆரம்பித்தன. பிறகு அவர்கள் ‘அபூ உஸ்மானே! நான் ஏன் இவ்வாறு செய்தேன்? என நீர் கேட்கவில்லையே’ என்றார்கள். பிறகு இதுகுறித்து நான் அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘இவ்வாறே நபி (ஸல்) அவர்களும் செய்தார்கள். மேலும், ஒரு முஸ்லிம் அழகிய முறையில் அங்கசுத்தி செய்து, பிறகு ஐவேளைத் தொழுகைகளையும் நிறைவேற்றினால், இந்த இலைகள் உதிர்வது போன்று அவரின் பாவங்களும் உதிர்ந்து விடும் என்று கூறிவிட்டு, திருக்குர்ஆனின் 11:114 வது வசனத்தை ஓதிக்காட்டினார்கள்’, என்று ஸல்மான் பார்ஸீ (ரலி) தெரிவித்தார்கள். (நூல் : புகாரி)

    அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) கூறிய தாவது:-

    ‘ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! நான் மதீனாவின் புறநகர்ப் பகுதியில் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டேன். இதோ நான் இங்கு தயாராக நிற்கிறேன். என் விஷயத்தில் நீங்கள் நாடியதை நிறைவேற்றுங்கள்’ என்று கூறினார். அவரிடம் உமர் (ரலி) அவர்கள் ‘அல்லாஹ்வே உனது குற்றத்தை மறைத்துவிட்டிருக்க, நீ உன் குற்றத்தை மறைத்திருக்கக்கூடாதா?’ என்று கேட்டார்கள். ஆனால், அந்த மனிதருக்கு நபி (ஸல்) அவர்கள் பதிலேதும் கூறவில்லை. பிறகு அந்த மனிதர் எழுந்து சென்றுவிட்டார். பின்னர் நபி (ஸல்) அவர்கள் அவரை அழைத்து வர அவருக்குப் பின்னால் ஆளனுப்பினார்கள். அவரிடம் ‘பகலின் இரு ஓரங்களிலும், இரவின் சில பகுதிகளிலும் தொழுகையை நிலைநாட்டுவீராக. நன்மைகள் தீமைகளை அழித்துவிடும். இது படிப்பினை பெறுவோருக்கு ஒரு பாடமாகும்’ எனும் இறைவசனத்தை (திருக்குர்ஆன் 11:114) ஓதிக்காட்டினார்கள்.

    அப்போது அங்கிருந்த மக்களில் ஒருவர், ‘அல்லாஹ்வின் தூதரே! இது இவருக்கு மட்டும் உரியதா? அல்லது அனைவருக்குமா?’ என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘இல்லை; மக்கள் அனைவருக்கும் உரியதுதான்’ என்று பதில் கூறினார்கள். (நூல் : முஸ்லிம்)

    தொழுவது நன்மையான காரியம். அது நன்மையான காரியங்களில் சிறந்ததும் ஆகும். ஒரு நாளைக்கு ஐவேளைத் தொழும் போது நம்மிடம் ஏற்படும் சிறுபாவங்களும், சிறு தவறுகளும் போக்கப்பட்டு, பாவஅழுக்கிலிருந்து விடுதலையும் கிடைத்து விடுகிறது.

    நிகழ்ந்துவிட்ட பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கும், பாவங்கள் இனிமேல் நிகழாமல் இருப்பதற்கும் ஒரே வழி தொழுகைதான். இதுகுறித்து இறைவசனம் கூறுவது மிகப்பொருத்தமாக அமைகிறது. ‘தொழுகை வெட்கக் கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும்’. (திருக்குர்ஆன் 29:45)

    தொழுகையாளிகள் பெரும்பாலும் பாவமான காரியங்களில் ஈடுபடுவது கிடையாது. ஒரு வேளை சந்தர்ப்பச் சூழ்நிலையின் காரணமாக ஏதேனும் சிறிய பாவம் நிகழ்ந்தாலும் அதற்குப்பிறகு நிறைவேற்றப்படும் தொழுகையின் காரணமாக அது மன்னிக்கப்பட்டு, அது முற்றிலும் போக்கப்படும். உண்மையான தொழுகை பாவத்திலிருந்து பாதுகாக்கும் ஒரு கேடயமாகும். பாவங்களை போக்கும் தொழுகைகளை பேணுதலாகத் தொழுது வருவோம்!

    மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுன்.

    ×