என் மலர்tooltip icon

    இஸ்லாம்

    அல்லாஹ் எல்லாம் அறிந்தவன், மிக்க ஞானமுள்ளவன். எதிரியிடமே மூஸாவை வளரச் செய்து அவர்கள் மூலமாக பிர்அவுனை அழித்தான். இந்த வரலாறு அல்லாஹ்வின் வல்லமையை எடுத்துக்காட்டுகிறது.
    எகிப்து நாட்டை கொடுங்கோலன் பிர்அவுன் ஆட்சி செய்த காலம் அது. அவன் ஆட்சியின் கீழ் மக்கள் மிகவும் தொல்லைகளுக்கு ஆளாயினர்.

    ஒரு நாள் பிர்அவுன் கனவு ஒன்றை கண்டான். கிழக்குத் திசையில் இருந்து ஒரு ஒளி வந்து எகிப்து அரச வம்சத்தை எரித்து நாசமாக்குவது போலவும், அங்கு அடிமையாய் வாழும் இஸ்ரவேலர்களை அந்த ஒளி காப்பது போலவும் அந்த கனவு அமைந்திருந்தது.

    மறுநாள் சபையைக்கூட்டி மந்திரிகளிடம் அந்த கனவிற்கான விளக்கத்தைக் கேட்டான்.

    “இஸ்ரவேலர் சந்ததியில் இருந்து ஒரு ஆண் மகன் பிறப்பான். அவனால் உனக்கும் இந்த நாட்டிற்கும் பெரும் அழிவு ஏற்படும், இதுதான் இந்த கனவின் விளக்கம்” என்று மந்திரி ஒருவர் கூறினார்.

    “இதனை தடுக்க ஏதாவது வழி உள்ளதா?” என்று பிர்அவுன் கேட்டான்.

    “ஆம்! இதற்கு ஒரு வழி இருக்கிறது. இஸ்ரவேலர் சந்ததிகளிலிருந்து தான் ஆபத்து வர இருக்கிறது. எனவே இனிமேல் அவர்களுக்கு பிறக்கும் ஆண் குழந்தைகளை கொல்ல வேண்டும். இதனால், எந்த குழந்தையால் உனக்கு ஆபத்து ஏற்படுமோ அந்த குழந்தையும் கூட்டத்தில் ஒன்றாய் அழிந்து விடும்” என்று பதில் அளித்தனர்.

    பிர்அவுனுக்கு அந்த யோசனை சரியாகப்படவே, உடனே அதனை அமுல்படுத்த ஆணையிட்டான். அதனை திருக்குர்ஆன் இப்படி விவரிக்கின்றது:

    “நிச்சயமாக பிர்அவுன் பூமியில் மிகவும் பெருமை கொண்டு அதில் உள்ளவர்களைப் பல வகுப்புகளாய் பிரித்து, அவர்களில் ஒரு பிரிவினரை பலவீனப்படுத்தும் பொருட்டு, அவர்களுடைய ஆண் மக்களை கொலை செய்து, பெண் மக்களை உயிருடன் வாழவைத்து வந்தான். மெய்யாகவே இவ்வாறு விஷமிகளில் ஒருவனாகவே இருந்தான்” (திருக்குர்ஆன் 28:4).

    ஆனால் அல்லாஹ்வின் நாட்டம் வேறாக இருந்தது. இஸ்ரவேலர் சந்ததியில் இருந்தே மூஸா நபிகளை பிறக்கச் செய்தான். மூஸாவின் தாயார் இறைவனிடம் முறையிட்ட போது, “பெண்ணே நீ கலங்காதே. என்னுடைய கட்டளைப்படி பிறந்த அந்த மகவை ஒரு பேழையில் இட்டு மூடி இந்த நைல் நதியில் விட்டு விடு. அதை நான் எங்கு சேர்க்க வேண்டுமோ அங்கு சேர்த்து விடுவேன். அதுமட்டுமல்ல உன் கண் குளிர்ச்சி பெறும் பொருட்டு உன்னிடமே அந்த குழந்தை பால் அருந்த வரும். நீ தாயாய் இல்லாமல் செவிலித் தாயாய் மூஸாவை வளர்க்கலாம்” என்று உள்ளுணர்வின் மூலமாக உணர்த்தினான்.

    அல்லாஹ்வின் கட்டளைப்படி அன்னையும் தன் மகனை பேழையில் வைத்து நதியில் விட்டு விட்டாள். மூஸாவின் சகோதரியை அந்த பேழையைத் தொடர்ந்து சென்று என்ன நடக்கிறது என்பதை அறிந்து வரச்செய்தாள்.

    பேழையும் மிதந்து சென்று அரசியர் குளிக்கும் அந்தப்புரத்திற்கு சென்றது. அரசி ஆஷியா பேழையைப் பிடித்து அதனைத் திறந்து பார்க்க, அங்கே அழகிய ஆண் குழந்தையை கண்டார். பிள்ளைப்பேறு அற்ற அந்த அரசியின் நெஞ்சில் இரக்கம் சுரந்தது. அரசியே அறியாமல் அந்த குழந்தை மீது அன்பும் பாசமும் பிறீட்டு எழுந்தது. அதுவும் அல்லாஹ்வின் ஏற்பாடு தான். குழந்தையை வாரி அணைத்த அரசி, தன் கணவன் பிர்அவுனிடம் சென்று நடந்ததைச் சொன்னார்.

    ஆனால், பிர்அவுன், ‘இது இஸ்ரவேலர்களின் குழந்தையாக இருக்கலாம். ஒரு வேளை இதன் மூலமே எனக்கு துன்பம் வரலாம். எனவே எனது ஆணைப்படி இதனை கொன்று விடுங்கள்’ என்றான்.

    அரசி ஆஷியா கெஞ்சினார், “இது பச்சிளம் குழந்தை. இதற்கு எங்கே துரோகம் செய்யும் எண்ணம் இருக்கும். இதனை நாம் தத்து எடுத்து வளர்த்து வந்தால் நம் அரவணைப்பிலும், அன்பிலும் நம்மிடம் பாசத்தோடு இருக்குமே ஒழிய நமக்கு பாதகத்தை ஏற்படுத்தாது. அதுமட்டுமல்ல நம் கண்காணிப்பில் வளர்வதால் அது நமக்கு கண் குளிர்ச்சியாகவும் அமையலாம்” என்றார்கள்.

    உடனே பிர்அவுன் “உனக்கு வேண்டுமானால் அது கண் குளிர்ச்சி தரலாம். எனக்கு அது தேவையில்லை. என் உயிருக்கு ஆபத்து தரும் எந்த குழந்தையையும் நான் கொல்லாமல் விடப் போவதில்லை” என்றான்.

    அரசி ஆஷியா கெஞ்சிக்கூத்தாடி பிர்அவுனிடம் அந்த குழந்தையை வளர்க்கும் பொறுப்பை ஏற்கச் செய்தார். அதனை திருக்குர்ஆன் (28:9) இவ்வாறு விவரிக்கின்றது:

    “அக்குழந்தையைக் கண்ட பிர்அவுனின் மனைவி தன் கணவனை நோக்கி, ‘நீ இதை கொலை செய்து விடாதே. எனக்கும் உனக்கும் இது ஒரு கண் குளிர்ச்சியாக இருக்கிறது. இதனால் நாம் நன்மை அடையலாம். அல்லது இதனை நாம் நம் குழந்தையாக தத்தெடுத்து கொள்ளலாம்’ என்று கூறினாள்”.

    அந்த காலத்தில் செவிலித்தாய் மூலம் குழந்தைகளுக்கு பாலூட்டப்பட்டது. ஆனால், குழந்தையாக இருந்த மூஸா நபிகள் எந்த செவிலித்தாயிடமும் பாலருந்த மறுத்து விட்டார்.

    இதனை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்த மூஸாவின் சகோதரி, அரசியிடம் சென்று, “இந்த குழந்தைக்கு பாலூட்டும் இன்னுமொரு செவிலித்தாயை உங்களுக்கு நான் அறிவித்து தரட்டுமா?” என்று கேட்டார். அனுமதி கிடைக்கவே மூஸா நபியின் தாயையே அழைத்து வந்தார். மூஸா நபிகளும் தன் தாயிடம் பாலருந்தினார்கள். ஏற்கனவே மூஸாவின் தாயாருக்கு அளித்த உறுதியை இதன் மூலம் அல்லாஹ் நிறைவேற்றி விட்டான். இதை திருக்குர்ஆன் (28:13) இவ்வாறு குறிப்பிடுகிறது:

    “இவ்வாறு அவருடைய தாயாரின் கண்குளிர்ச்சியடையவும், அவள் துக்கப்படாதிருக்கவும், நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்பதை அவள் அறிந்து கொள்வதற்காகவும் நாம் அவரை, அவர் தாயாரிடத்தே திரும்பச் சேர்த்தோம். எனினும், அவர்களில் பெரும்பாலானோர் (இதை) அறிய மாட்டார்கள்”.

    மூஸா நபிகள் எங்கு வளர வேண்டும்?, யாரிடம் வளர வேண்டும்? என்ற அல்லாஹ்வின் திட்டப்படி எல்லாமே மிகச்சரியாக நிறைவேறியது.

    மூஸா நபிகள் அரண்மனையில் வாழ்ந்து வரும் காலத்தில் ஒரு நாள் பிர்அவுன் தாடியைப் பிடித்து இழுத்து கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார்கள்.

    இதில் பிர்அவுன் நிலைகுலைந்து போனான். அந்த அடியின் அழுத்தம் குழந்தையின் செல்ல அடியாகத் தெரியவில்லை. மாறாக அவனிடம் ஒரு அதிர்வையே ஏற்படுத்தியது.

    உடனே அரசியாரை அழைத்து, “இது குழந்தையாய் தெரியவில்லை. என்னைக் கொல்ல வந்த எதிரியாய் நினைக்கிறேன். என்னையே அடிக்கும் அளவிற்கு துணிவு எங்கிருந்து இதற்கு வந்தது?” என்றான்.

    ‘இது குழந்தை, அதற்கு அரசர் என்றும் பிறர் என்றும் என்ன தெரியும். குழந்தை எதுவும் அறியாதது’ என்று அரசி கூறினார்.

    “அப்படியானால் அதனை நான் எப்படி தெரிந்து கொள்வது?” என்றான் பிர்அவுன்.

    குழந்தையை சோதித்து பார்க்க ஒரு கண்ணாடி குவளையில் சிவந்த நிறம் கொண்ட பளிச்சிடும் மாணிக்கங்களையும், இன்னொரு பேழையில் சிவந்த தீக்கங்குகளையும் வைத்து அதனிடம் குழந்தையை அனுப்பினர். இறைவனின் திட்டப்படி குழந்தை மூஸா நெருப்பை எடுத்து வாயில் போட்டுக்கொண்டது.

    தீயின் வேதனையால் கதறி அழுத குழந்தையைத் தூக்கிய அரசியார் “பார்த்தீர்களா, குழந்தைக்கு மாணிக்கம் எது? நெருப்பு எது? என்றே தெரியவில்லை. உங்களை அரசர் என்று எப்படி அது அறியும்?” என்றார். அந்த பதிலால் ஏதோ அந்த சந்தர்ப்பத்தில் சமாதானம் ஆனானே தவிர பிர்அவுன் முழுமையாக திருப்தி அடையவில்லை.

    இதிலிருந்து அல்லாஹ் எல்லாம் அறிந்தவன், மிக்க ஞானமுள்ளவன். எதிரியிடமே மூஸாவை வளரச் செய்து அவர்கள் மூலமாக பிர்அவுனை அழித்தான். இந்த வரலாறு அல்லாஹ்வின் வல்லமையை எடுத்துக்காட்டுகிறது.

    மறுமை வாழ்வை மட்டுமின்றி, தொடர்ந்து சோதனைகளைத் தராமல் இவ்வுலக வாழ்க்கையையும் அல்லாஹ் இலேசாக்கித் தருவான் என்ற நம்பிக்கையையும் கொடுக்கிறது.
    மனிதர்களைப் படைத்த இறைவன், மனிதர்கள் நன்றியுள்ளவர்களாக நடந்து கொள்கிறார்களா என்பதற்காகவும், எந்நிலையிலும் அவனை மட்டுமே சார்ந்திருக்கிறார்களா என்பதற்காகவும், அவர்களை, பல வழிகளில் சோதித்துப் பார்க்கிறான்.

    நமக்கு அருளியுள்ள பொருட்செல்வத்தின் மூலமாகவும், குழந்தைச்செல்வத்தின் மூலமாகவும் நம்மை, நம் நம்பிக்கையைப் பரிசோதிக்கிறான். இச்செல்வங்கள் குறைவாகக் கொடுக்கப்பட்டிருப்பது மட்டுமல்ல, நிறைவாகக் கொடுக்கப்பட்டிருப்பதும் சோதனைதான்.

    செல்வம் குறைவாகக் கொடுக்கப்பட்டவர்கள், தங்கள் வறுமை நிலையிலும் இறைவன் தங்களுக்கு அளித்திருப்பவைகளைக் கொண்டும், தங்கள் மீதான இறைவனின் கருணை குறித்தும் திருப்தி கொண்டவர்களாக இருத்தல் வேண்டும். தங்களின் முழு நம்பிக்கையையும் இறைவனின் மீதே வைத்து தங்களின் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்.

    இன்னும் இறைப்பொருத்தத்தை வேண்டி தங்களால் முடிந்த நல்ல காரியங்களை செய்யக்கூடியவர்களாக இருக்க வேண்டும். இல்லை, இல்லை என்று குறைபட்டுக்கொண்டிருப்பவர்களின் வாழ்க்கை என்றுமே நிறைவாக இருக்காது என்பதுடன், அவர்கள் நிம்மதி இன்றித் தவித்துக் கொண்டிருப்பர்.

    செல்வம் ஒருவருக்குக் கொடுக்கப்பட்டிருப்பது மற்றவர் பார்வைக்கு பெரிதாகத் தோன்றலாம். ஆனால் செல்வம் கொடுக்கப்பட்டவர் களுக்கு இறைவனின் கேள்விக்கணக்கு அதிகமாக இருக்கும். இறைவன் அளித்தவற்றிலிருந்து, இறைவனின் பாதையில் செலவழிக்காதவர்களுக்கு தண்டனை கடுமையாக இருக்கும்.

    குழந்தைகள் இல்லாமலிருப்பது ஒரு சோதனை என்றால், குழந்தைகள் இருப்பதும் சோதனையாகத்தான் நம் மீது ஏவப்பட்டுள்ளது. எத்தனையோ பெற்றோர்கள் தாம் பெற்ற குழந்தைகளால் மனம் வெறுத்து, நொந்து போயிருக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம்.

    இது மட்டுமின்றி அருட்கொடையாக இறைவன் வழங்கிய குழந்தைகளை தாங்கள் என்றுமே எதிர்பார்த்திராத ஒரு தருணத்தில் இழந்து தவிக்கும் பெற்றோர்களையும் நாம் பார்க்கிறோம்.

    நம் செல்வத்தை இழந்தாலும் சரி அல்லது எல்லா செல்வங்களுக்கும் மேலான குழந்தைகளை இழந்தாலும் சரி, நாம் பொறுமையை மேற்கொண்டால் நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உயர்ந்த கூலி உண்டு என்பதை அல்லாஹ் தன் திருமறையில் வாக்களிக்கிறான்.

    இன்னும் இப்படிப்பட்ட இழப்புகளின் போது இவ்வுலக வாழ்வில் அனைத்தும் அழியக்கூடியவையே என்றும், என்றுமே நிலையான செல்வம் அவனிடமே உள்ளன என்பதை நாம் அறியக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.

    ‘’நிச்சயமாக, ‘உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன. நிச்சயமாக அல்லாஹ்விடத்தில்தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு’ என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள்’’. (திருக்குர்ஆன் 8:28).

    பொருட்சேதம், உயிர்சேதம், நோய், விபத்து போன்ற எண்ணற்ற சோதனைகளை நாம் சந்திக்க நேரிடுகிறது. அதுவும் நாம் எதிர்பார்க்காத நேரத்தில் இவை ஏற்படுவது இறைவனின் புறத்தில் இருந்து, அவன் நாடுவதால்தான் நிகழ்கிறது.

    இத்தகைய சோதனைகளின் போது யார் ஒருவர் பொறுமையுடனும், இறைவனிடம் உதவி தேடிக்கொண்டும் இருக்கிறாரோ அவருக்கு அல்லாஹ் நற்கூலியை வழங்குகிறான்.

    “(நம்பிக்கையாளர்களே!) பயம், பசி மேலும் பொருள்கள், உயிர்கள், கனிவர்க்கங்கள் ஆகியவைகளைக் கொண்டு நிச்சயமாக நாம் உங்களைச் சோதிப்போம். (நபியே! இச்சோதனைகளால் ஏற்படும் கஷ்டங்களைச்) சகித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நீங்கள் நற்செய்தி கூறுங்கள்”. (திருக்குர்ஆன் 2:155).

    “(சோதனைக்குள்ளாகும்) அவர்கள் தங்களுக்கு எத்தகைய துன்பம் ஏற்பட்டபோதிலும், ‘’நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றோம். நிச்சயமாக நாம் அவனிடமே மீளுவோம்’’ எனக் கூறுவார்கள்”. (திருக்குர்ஆன் 2:156).

    இன்னும் அல்லாஹ் தன் திருமறையில், சோதனைகளில் வெற்றி பெறுபவர்களுக்கு தன்னிடம் மகத்தான கூலி உள்ளதாகக் கூறுகிறான்.

    மனிதர்கள் பலவீனமானவர்களாகப் படைக்கப்பட்டுள்ளனர். இந்த பலவீனத்தை சைத்தான் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளவே முற்படுவான்.

    சோதனைகளின் போது மனிதர்களின் மனதில் வீணான எண்ணங்களை உருவாக்கி, இறைவனுக்கு மாறுசெய்யத் தூண்டுவான். நிராசையை ஏற்படுத்துவான். இன்னும் இறைவனின் மீதுள்ள நம்பிக்கையை சிதைத்து, நிந்திக்கத் தூண்டுவான்.

    இம்மாதிரியான சந்தர்ப்பத்தில் ஒரு மனிதன், ‘இந்த சோதனை என் இறைவனிடம் இருந்தே வந்துள்ளது, இதில் எனக்கு நிச்சயமாக ஒரு நன்மையை நாடியிருப்பான்’ என்று உறுதியாக நம்பி, ‘நாம் இறைவனிடம் இருந்தே வந்திருக்கிறோம், இன்னும் அவனிடமே திரும்பிச்செல்ல வேண்டியிருக்கிறது’ என்றும், ‘நான் இழந்ததற்கு ஈடாக அதைப் போன்றோ அல்லது அதை விடச் சிறந்ததை எனக்குத் தருவதற்கு என் இறைவனே போதுமானவன்’ என்று அவனிடமே தன்னையும், தன்னுடைய காரியங்களையும் ஒப்படைத்து விட்டு பொறுமையுடன் காத்திருப்பது இறைவனுக்கு மிகவும் உவப்பைத் தரும்.

    மேலும், வேறொரு வெகுமதியின் மூலம் அந்த மனிதருக்கு நிம்மதியையும், மகிழ்ச்சியையும் இறைவன் தருவான், இன்ஷாஅல்லாஹ். இப்படிப்பட்ட மனிதர்கள் இறைவனின் சோதனையில் தேர்ச்சி பெற்று விட்டார்கள் என்று கொள்ளலாம்.

    ‘உங்களுடைய பொருள்களும், உங்களுடைய சந்ததி களும் (உங்களுக்கு) ஒரு சோதனையாகவே உள்ளன. (இச்சோதனையில், நீங்கள் தேர்ச்சி பெற்றால் உங்களுக்கு) அல்லாஹ்விடத்தில் மகத்தான கூலி இருக்கின்றது’ (திருக்குர்ஆன் 64:15).

    சோதனைகள் ஏற்படும் காலங்களில் நபிமார்களையும், இறுதித்தூதர் நபி (ஸல்) அவர்களையும், அவர்களின் தோழர்களையும், அவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகளையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

    இன்ஷாஅல்லாஹ், யாரெல்லாம் அதிகமாக சோதிக்கப்பட்டு, சோதனைகளில் வெற்றியும் பெறுகிறார்களோ அவர்களுக்கு, மறுமை வாழ்வை அல்லாஹ் இலேசாக்கித் தருவான். இவ்வுலகில் அவர்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சோதனையும் அவர்களைப் புடம் போடுகிறது. வாழ்க்கையைப் பற்றிய தெளிவான புரிதலை ஏற்படுத்துகிறது.

    கடுமையான சோதனைகளும், அனுபவங்களும் அல்லாஹ்வின் பக்கம் நம்மை நெருங்கச் செய்யும். அவனின் மீதான, மறுமையின் மீதான அச்சத்தை அதிகரிக்கும். இவ்வுலகில் சோதனைகளுக்கு ஆட்பட்டதால் மறுமை வாழ்வில் தன்னுடைய சோதனைகள் குறைக்கப்படும் என்ற ஆறுதல் அடியானின் மனதில் ஏற்படுகிறது.

    மறுமை வாழ்வை மட்டுமின்றி, தொடர்ந்து சோதனைகளைத் தராமல் இவ்வுலக வாழ்க்கையையும் அல்லாஹ் இலேசாக்கித் தருவான் என்ற நம்பிக்கையையும் கொடுக்கிறது.

    ம. அஹமது நவ்ரோஸ் பேகம், சென்னை-84
    கண்மணி நாயகம் தமது 40-ம் வயதில் ஹீரா குகையில் சென்று தனிமையில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டு இறைவனை துதி செய்ததால் ‘திருக்குர் ஆன்’ என்னும் அற்புத பொக்கிஷத்தைப் பெற்று தந்தார்கள்.
    “(மக்காவில் இப்ராகிம் கட்டிய ‘கஅபா’ என்னும்) வீட்டை மனிதர்கள் ஒதுங்கும் இடமாகவும், (அவர்களுக்கு) பாதுகாப்பு அளிக்கக் கூடியதாகவும் நாம் ஆக்கியிருக்கின்றோம். (அதில்) இப்ராகிம் நின்ற இடத்தை (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் தொழும் இடமாக வைத்துக்கொள்ளுங்கள். ‘(ஹஜ்ஜு செய்ய அங்கு வந்து) அதை வலம் சுற்றுபவர்களுக்கும், தியானம் புரிய (அதில்) தங்குபவர்களுக்கும், குனிந்து சிரம் பணி(ந்து அதில் தொழு) பவர்களுக்கும் என்னுடைய அந்த வீட்டை சுத்தமானதாக ஆக்கி வையுங்கள்’ என்று இப்ராகீமிடத்திலும் இஸ்மாயீலிடத்திலும் நாம் வாக்குறுதி வாங்கியிருக்கின்றோம்”. (திருக்குர்ஆன் 2:125)

    உலகம் தோன்றிய காலம் முதல், ஒவ்வொரு காலகட்டத்திலும் மக்களை நேர்வழிப்படுத்த இறைவன் தன் தூதர்களை அனுப்பி வழிகாட்டினான். ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் தனித்தனியாக நபிகள் அனுப்பப்பட்டனர். அவர்களும் ஏக இறைக்கொள்கைகளை எடுத்துக்கூறினார்கள். ஆனால் மக்கள் அதை ஏற்க மறுத்து இறைவனுக்கு இணைவைத்து அவனது அருளை புறக்கணித்தனர். இதனால் அந்த மக்கள் அழிவைச்சந்தித்தார்கள்.

    பல கால கட்டங்களில் உலகம் பகுதி பகுதியாகத்தான் அழிவுபட்டது. சில கூட்டத்தாரை காற்று, இடி, மின்னல், பூகம்பம் போன்ற இயற்கைச் சீற்றங்களினால் இறைவன் தண்டித்தான். லூத் நபியின் கூட்டத்தை மட்டும் அந்த ஊரையே தலை கீழாக்கி புரட்டி அழித்தான். நூஹ் நபிகள் கூட்டத்தினரைத் தண்டிக்க எண்ணிய அல்லாஹ் பெரும் வெள்ளத்தை அனுப்பினான். இந்த வெள்ளத்தில் உலகமே அழிந்து போனது. இறைவன் கட்டளைப்படி நூஹ் நபியின் கப்பலில் பயணம் செய்தவர்கள் மட்டும் தப்பினார்கள். இந்தக்கப்பல் ஜுதி மலையில் தங்கியது. அந்த கப்பலில் இருந்த உயிரினங்களை கொண்டு உலகம் மீண்டும் புத்துயிர் பெற்றது.

    அந்த வெள்ளத்தில் இறை இல்லமான ‘கஅபா’ சேதம் அடைந்தது. காலங்கள் மாறி இப்ராகிம் நபிகள் தோன்றிய பின்னர் இறைவன் மீண்டும் கஅபாவை புதுப்பித்து கட்ட நினைத்தான். இதனை இப்ராகிம் நபிகளுக்கு உள்ளுணர்வால் உணர்த்தி, அந்த பாலைவனத்தில் தேடச்செய்து அதன் அஸ்திவாரங்களை அறிவித்துக்கொடுத்தான். பின்னர் அல்லாஹ்வின் கட்டளைப்படி அங்கே இப்ராகிம் நபிகள் ‘கஅபா’ என்ற இல்லத்தை அமைத்தார்கள்.

    இறை இல்லம் கட்டி முடிக்கப்பட்டதன் பின்னர் தான் மேலே குறிப்பிட்ட இந்த இறைவசனம் இறக்கியது. இறை இல்லத்தில் தங்கி தியானம் செய்வதையே கண்மணி நாயகம் (ஸல்) ‘இக்திகாப்’ என்ற அமலாக நமக்கு அமைத்து தந்தார்கள்.

    ஒரு மனிதன் தன் உலக வாழ்வின் தொடர்புகள் அத்தனையும் துறந்து தனிமையை நாடி, அதுவும் இறை இல்லத்திற்கு வந்து தங்கி இருந்து இறைவனோடு நேரடி தொடர்பில் ஈடுபடுவதே இக்திகாப் எனப்படும். இது பரவலாக ரமலான் மாதத்தின் கடைசி பத்து இரவுகளில் உலகெங்கிலும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.

    ரமலான் மாதத்தில் கடைசி பத்து இரவுகளில் இறை இல்லங்களில் வந்து தங்கி அமல் செய்வதற்கு சுன்னத்தான இக்திகாப் என்றும்; ரமலானில் கடைசி பத்தில் பத்து இரவுகளுக்கு குறைவாக கடைபிடிப்பதற்கு வாஜிப் அல்லது நபில் இக்திகாப் என்றும்; ரமலான் தவிர்த்து மற்றைய நாட்களில் இருப்பதற்கு முஸ்தகபான இக்திகாப் என்றும் அழைக்கப்படுகின்றது.

    இந்த மூன்று நிலைகளையும் தவிர்த்து எப்போதெல்லாம் பள்ளிவாசலுக்கு தொழுகையை நிறைவேற்றுவதற்காக வருகிறோமோ, அப்போதெல்லாம் இக்திகாப் நிய்யத்தோடு பள்ளிவாசல் வந்தால், அந்த குறுகிய கால அளவும் கூட இக்திகாப் என்ற சுன்னத்தை நிறைவேற்றியதாக கொள்ளப்படும். அதன் நன்மையையும் பெற்றுத்தரும்.

    இக்திகாப் இருக்க நாடியவர்கள் ரமலான் மாதத்தின் 21-ம் பிறை பிறப்பதற்கு முன்பாக, குறிப்பாக அஸர் என்ற மாலை நேரத் தொழுகைக்காக வரும்போதே பள்ளிவாசலில் வந்து தங்கி விட வேண்டும். ஈது பிறை கண்டு பெருநாள் அறிவிக்கப்பட்ட பின்னரே வீட்டிற்கு திரும்ப வேண்டும். இடைப்பட்ட இந்த கால அளவில் பள்ளிவாசலில் தங்கி இருந்து நல்லறங்கள், குர்ஆன் ஒதுதல், துஆ செய்தல், இறை வழிபாடுகளில் ஈடுபடுதல், தியானங்கள் போன்றவற்றில் தன்னை ஆட்படுத்தி கொள்ள வேண்டும்.

    பள்ளிவாசல் வந்ததும் தனக்கென தனியாக ஒதுக்கப்பட்ட இடத்தில் தன் உடமைகளை வைத்து விட்டு இரண்டு ரக்காத் இக்திகாப் நிய்யத் தொழுைக தொழ வேண்டும். அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட எல்லையில் மட்டுேம தங்கி இருக்க வேண்டும். இயற்கை உபாதைகள் தவிர்த்து ேவறு எந்த காரணங்களுக் காகவும் பள்ளிவாசலைவிட்டு வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். உலக தொடர்புகள் அத்தனையும் தவிர்த்து தனிமையிலேேய இறைவனை வணங்கி வழிபட வேண்டும்.

    இப்படி இக்திகாபின் சட்ட வரைமுறைகளைப் பற்றி குறிப்பிட்டு வருகையில் இன்னுமொரு இடத்தில், “நோன்புகளை நோற்று முழுமையாக்குங்கள். ஆயினும் நீங்கள் வணங்குவதற்காக மஸ்ஜிதுகளில் தங்கி இக்திகாப் இருக்கும் போது உங்கள் மனைவியர் களுடன் கூடாதீர்கள். இது அல்லாஹ்வுடைய திட்டமான சட்ட வரம்புகளாகும். ஆதலால் அவ்வரம்புகளை மீற நெருங்காதீர்கள்” (திருக்குர்ஆன் 2:187) என்று இறைவன் தெளிவாக குறிப்பிடுகின்றான்.

    இந்த வசனத்தின் மூலம் இரண்டு விஷயங்களை நாம் தெளிவாக புரிந்து கொள்ள முடியும். இக்திகாப் என்ற அமலை பள்ளி வாசல்களில் சென்று தங்கி செயல்படுத்த வேண்டும். நோன்பிருக்க வேண்டும். உலக தொடர்புகளை அறுத்து தனிைமயிலேயே தங்கி இருக்க வேண்டும். அந்தக்காலத்தில் மனைவியர்களுடன் சேர்ந்து குடும்ப வாழ்க்ைகயில் ஈடுபடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    அதோடு முத்தாய்ப்பாக இந்த வசனத்தின் கடைசியில், இவையனைத்தும் அல்லாஹ் விதித்த சட்ட வரம்புகள் ஆகும். அதனை எந்த நிலையிலும் மீறுவதற்கு முயற்சி செய்யாதீர்கள் என்று கடுமையாக எச்சரிக்கையும் செய்யப்பட்டுள்ளது.

    அல்லாஹ் நோன்பைப்பற்றி விவரிக்கும் போது, ‘அதன் கடைசி பத்து இரவுகளில் ஏதாவது ஒன்றில் தான் ஆயிரம் மாதங்களை விட கண்ணியம் நிறைந்த ஒரு சிறந்த இரவு உள்ளது’ என்று குறிப்பிடுகின்றான்.

    ‘(நபியே!) அந்தக் கண்ணியமுள்ள இரவின் மகிமையை நீங்கள் அறிவீர்களா?. கண்ணியமுள்ள அந்த இரவு ஆயிரம் மாதங்களைவிட மிக்க மேலானதாகும். அதில் மலக்குகளும், ஜிப்ரயீலும், தங்கள் இறைவனின் கட்டளையின் பேரில் (நடைபெற வேண்டிய) எல்லா காரியங்களுடன் இறங்குகின்றனர். ஈடேற்றம் உண்டாகுக! (அவ்விரவின் இச்சிறப்பு) விடியற்காலை உதயமாகும் வரை (நீடிக்கிறது)’. (திருக்குர்ஆன் 97:2-5)

    எனவே, இக்திகாப் இருப்பவர்கள் மொத்த பத்து நாட் களுமே இறை தியானத்தில் ஈடுபட்டிருப்பதால் நிச்சயமாக அந்த கண்ணியமிகுந்த ‘லைலத்துல் கத்ர்’ என்ற இரவைப் பெற்றுக்கொள்ளும் பாக்கியம் அவர்களுக்கு கிடைக்கும்.

    கண்மணி நாயகம் தமது 40-ம் வயதில் ஹீரா குகையில் சென்று தனிமையில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டு இறைவனை துதி செய்ததால் ‘திருக்குர் ஆன்’ என்னும் அற்புத பொக்கிஷத்தைப் பெற்று தந்தார்கள். அல்லாஹ், மூஸா நபிகளை தூர்ஸினாய் மலையடிவாரம் வரவழைத்து 40 இரவுகள் தனிமையில் தங்கச் செய்து தவ்ராத் வேதத்தை அருளினான். இவ்வாறு வேதங்களைப் பெற்று தந்த சிறந்த அமல் இக்திகாப்.

    இக்திகாப் இருக்க நம்மில் எத்தனைபேர் முயன்றாலும் அல்லாஹ் சிலரையே தேர்ந்தெடுக்கின்றான். அதன் மூலம் நமக்கு அளப்பறிய அருள் வளங்களைத் தருவதற்கு இறைவன் நாடுகிறான் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். அப்படிப்பட்ட மேலான நற்பாக்கியங்களை நம் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் தந்து அருள்பாலிப்பானாக, ஆமின். 
    அல்லாஹ்வை வணங்கி வாழ்ந்தால் மட்டும் போதாது, “பிறருக்கு வழங்கியும் வாழ வேண்டும்“ இதுதான் இஸ்லாமின் அடிப்படை தத்துவம்.
    வளைவதெல்லாம் வில்லா...
    ஜொலிப்பதெல்லாம் மாணிக்க கல்லா...
    உனக்கு ஈடு இணையில்லையே... அல்லா
    உயிரினங்களை காக்க வேண்டுமே.... நல்லா.
    “லாயிலாஹா இல்லல்லா
    முஹம்மதுர் ரசூலுல்லா”

    நாம் எப்படி ஒருவரை ஒருவர் அனுசரித்து ஆதரித்து வாழ வேண்டும் என்று ரமலான் நோன்பு வெகு ஆழமாக, அழகாக சொல்லிக் கொடுத்திருக்கிறது. புனிதமிகு ரமலான் நோன்பின் காரணமாக அனைவரிடமும் கோபப்படாமல், பொறுமையாக, நிதானமாக இந்த மாதத்தில் நடந்து கொண்டோம்.

    உண்மையிலேயே இது மிகவும் வரவேற்கத் தக்கதாகும். இது ரமலானில் மட்டுமின்றி எல்லா நாட்களிலும் பின்பற்றப்பட வேண்டும்.

    அல்லாஹ்வை வணங்கி வாழ்ந்தால் மட்டும் போதாது, “பிறருக்கு வழங்கியும் வாழ வேண்டும்“ இதுதான் இஸ்லாமின் அடிப்படை தத்துவம். இதனால்தான் “ஜகாத்” (தர்மம்) நமக்கு கடமை ஆக்கப்பட்டிருக்கிறது. ஒரு முஸ்லிமிடம் குறிப்பிட்ட அளவு செல்வம் சேர்ந்து அது ஒரு வருடத்திற்கு மேலாக அவரது உடமையில் இருந்தால் அந்தப் பணத்தில் 40-ல் ஒரு பங்கு அதாவது 2 1/2 சதவீதம் ஜகாத் (தர்மம்) செய்ய வேண்டும்.

    ரமலான் நோன்பின் மூலம் 30 நாட்களும் பெறும் பயிற்சியின் மூலம் அந்த ஆண்டின் மீதமுள்ள 335 நாட்களிலும் நாம் நல்லொழுக்கமும் நல்ல சிந்தனையும், உள்ளவர்களாக நடந்து கொள்ள வேண்டும். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் நல் அமல்களை நாம் தொடராமல் விட்டு விடுகிறோம். இந்த நிலை மாற வேண்டும்.

    “சலாமத்” எனும் நிம்மதி கிடைக்க வேண்டுமெனில் ஒற்றுமை எனும் குர் ஆனியக் கயிற்றை கட்டாயம் நாம் கைப்பற்றி நிற்க வேண்டும்.
    அல்லாஹ்வை வணங்குவோம்
    அடியார்களுக்கு வாழங்குவோம்
    புனித ரமலான் வாழ்த்துக்கள்.
    அல்லாஹ் விதித்த விதிப்படியே எல்லாம் நடக்கும். அதை தடுப்பதற்கு எந்த சக்தியும் கிடையாது. விதியை மாற்றுவதற்கும் யாராலும் முடியாது என்பதே யதார்த்தம்.
    எல்லாம் வல்ல அல்லாஹ், ஒவ்வொரு நபி களுக்கும் ஒவ்வொரு விசேஷமான தன்மையைக் கொடுத்து கவுரவப்படுத்தி இருக்கின்றான். அந்த வரிசையில் சுலைமான் நபிகளுக்கு காற்றை வசப்படுத்தி கொடுத்தான். அதன் மூலம், நினைத்த இடத்திற்கு நினைத்த நேரத்தில் செல்லும் ஆற்றலை அவர் பெற்றிருந்தார். அதோடு பறவைகளின் மொழியை அறியும் ஆற்றலையும் அவருக்கு அல்லாஹ் கொடுத் திருந்தான். இது தவிர ஜின்களை அடக்கியாளும் சக்தியும் அவருக்கு அளிக்கப்பட்டு இருந்தது. ஆற்றல்கள் அனைத்தையும் தருபவன் அல்லாஹ் ஒருவன் தான்.

    ஒரு முறை யுத்த களத்திற்கு தனது படைகளுடன் சுலைமான் நபி புறப்பட்டார். அந்தப்படை, எறும்பு புற்றுகள் நிறைந்திருக்கும் ஓர் ஓடையை நெருங்கிய போது, அங்கிருந்த ஒரு எறும்பு, மற்ற எறும்புகளை நோக்கி இவ்வாறு கூறியதாக திருக்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது:

    “எறும்புகளே! நீங்கள் உங்கள் வீடுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள். சுலைமானும் அவருடைய ராணுவமும் (நீங்கள் இருப்பதை) அறியாது உங்களை(த் தங்கள் கால்களால்) மிதித்துவிட வேண்டாம்” என்று கூறியது. (திருக்குர்ஆன் 27:18)

    எறும்பின் பரிபாஷை அறிந்திருந்த சுலைமான் நபிகள் இதைக்கேட்டு புன்னகைப் பூத்தவர் களாக தன் ராணுவத்தினரை நோக்கி, “நீங்கள் அப்படியே நிற்பீர்களாக, அருகே எறும்பு புற்று ஒன்று உள்ளது. அதனை நீங்கள் மிதித்து சேதப்படுத்தி விடாதீர்கள்” என்றார்.

    அதுமட்டுமல்ல இத்தனை அரிய சக்தி வாய்ந்த அறிவு ஞானத்தை வழங்கிய அல்லாஹ்விற்கு உடனே தன் நன்றியைத் தெரிவித்து பிரார்த்தனை செய்தார். அந்த சம்பவம் பற்றி திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

    “என் இறைவனே! நீ என் மீதும் என் தாய் தந்தை மீதும் புரிந்த உன் அருள்களுக்கு உனக்கு நான் நன்றி செலுத்த நீ எனக்கு அருள் புரிவாயாக. உனக்கு திருப்தியளிக்க கூடிய நற்செயல்களையும் நான் செய்யக்கூடிய பாக்கியத்தை எனக்கு அருள் புரிந்து உன் கருணையைக் கொண்டு உன் நல்லடியார்களுடன் என்னைச் சேர்த்து விடுவாயாக” என்று பிரார்த்தனை செய்தார். (திருக்குர்ஆன் 27:19)

    ஒவ்வொரு நபிகளும் கேட்ட சிறந்த துஆக்களை திருமறையில் பதிவு செய்த அல்லாஹ். சுலைமான் நபிகளின் சிறந்த துஆவாக இதனைக் குறிப்பிடுகின்றான்.

    திருக்குர்ஆனின் 27-வது அத்தியாயமான ‘சூரத்துல் நம்லி’ (எறும்புகள்) என்பதில் இடம்பெற்றுள்ள மற்றொரு முக்கிய படிப்பினையை இங்கே காண்போம்.

    பறவைகள் அனைத்தும் சுலைமான் நபியின் கட்டுப்பாட்டில் உள்ளதால் ஒவ்வொரு முறையும் அதனை கணக்கெடுப்பது அவரது வழக்கமாய் இருந்தது. அப்படி ஒரு முறை பரிசோதித்த போது “ஹூத் ஹூத்” என்ற பறவையை காணவில்லை. அதைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்த போது எங்கிருந்தோ அது வந்து சேர்ந்தது.

    “ஏன் வருவதற்கு இத்தனை தாமதம்?” என்று வினவிய போது, அது சொன்னது: “ஸபா நாட்டைப் பற்றி நீங்கள் அறியாததை நான் அறிந்து, உண்மைச் செய்தியை கொண்டு வந்திருக்கிறேன். மெய்யாகவே அந்நாட்டு மக்களை ஒரு பெண் ஆட்சி புரிவதை நான் கண்டேன். எல்லா வசதிகளும் அவள் பெற்றிருக்கிறாள். மகத்தான அரசு கட்டிலும் அவளுக்கு இருக்கிறது. அவளும் அவளுடைய மக்களும் அல்லாஹ்வையன்றி சூரியனைச் சிரம் பணிந்து வணங்குவதை நான் கண்டேன்” என்று கூறியது. (திருக்குர்ஆன் 27:22-24)

    “ஹூத் ஹூத் பறவையே நீ உண்மை சொல்வதாய் இருந்தால் நிச்சயமாக நாம் அவளுக்கு ஏக இறைவனின் சக்தியை எடுத்துச் சொல்ல வேண்டும். சூரியனை இறைவனுக்கு இணை வைக்கும் பாவச்செயலிலிருந்து அவளைக் காப்பாற்ற வேண்டும்” என்று சுலைமான் நபிகள் கூறினார்.

    பின்னர் அந்த அரசிக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், ‘அல்லாஹ் தான் வணக்கத்திற்குரிய இறைவன். அவனுக்கு இணையாக உலகில் எந்த பொருளுக்கும் எந்த வித சக்தியும் இல்லை. எனவே அல்லாஹ்வை ஏக இறை வனாக ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்று கட்டளையிட்டு இருந்தார்.

    பின்னர் அதை ஹூத் ஹூத் பறவையிடம் கொடுத்து, ‘பல்கீஸ் அரசியின் முன்பு அந்த கடிதத்தை எறிந்துவிட்டு, அங்கு என்ன நடக்கிறது என்று மறைந்திருந்து பார்த்து தகவல் தெரிவிக்க வேண்டும்’ என்றார்.

    பறவையும் அவ்வாறே செய்தது. கடிதத்தை படித்த அரசி தன் மந்திரிகளிடம் இவ்வாறு கூறினார்:

    “தலைவர்களே! மிக்க கண்ணியமான கடிதம் என்முன் எறியப்பட்டுள்ளது. மெய்யாகவே அது சுலைமானிடம் இருந்து வந்துள்ளது. நிச்சயமாக அதன் ஆரம்பத்தில் ‘பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர்ரஹீம்’ என்றெழுதியுள்ளது” என்றார்.

    “அக்கடிதத்தில் சுலைமான் சூரியனை வணங்குவதை தவிர்த்து அல்லாஹ்வை வணங்க கட்டளையிட்டுள்ளார். இதற்கு உங்கள் அபிப்பிராயம், ஆலோசனை என்ன?” என்று வினவினார்.

    அதற்கு அவர்கள் “அரசியே! நாம் மிக பலம் பொருந்திய ராணுவம் கொண்டுள்ளோம், நீங்கள் ஆணையிட்டால் நாம் போர் முரசு கொட்டலாம்” என்றார்கள்.

    ஆனால் அரசியோ, “இங்கே நாம் பலம்-பலவீனம் பற்றி சிந்திக்க தேவையில்லை. அதில் சொல்லப்பட்டுள்ள சத்தியம், அசத்தியம் பற்றி மட்டுமே நாம் முடிவு எடுக்க வேண்டும். போர் என்று வந்துவிட்டால் இருசாரருக்கும் உயிர்பலி என்பதும், இழப்பும் தவிர்க்க முடியாததாகி விடும். எனவே அவரிடம் சமாதானமாகவே போய் விடலாம். அவரை சென்று சந்தித்து அவர் சொல்வதில் உள்ள நியாய, அநியாயங்களை சீர்தூக்கி முடிவு செய்யலாம்” என்று சொன்னார்.

    அரசியார் சமாதானம் பேச வருகிறார், என்றதுமே சுலைமான் நபிகள், தன் அரசவையில் இருந்த ஜின்களை நோக்கி, ‘அரசி என்னிடம் வந்து சேருவதற்கு முன்பாகவே அவருடைய அரியணையை என்னிடம் யாராவது கொண்டு வந்து சேர்க்க முடியுமா?’ என்று வினவினார்.

    “அதற்கு ஜின்கள் கூட்டத்தைச்சேர்ந்த இப்ரீத் என்னும் ஒரு வீரன், ‘நீர் இந்த சபையை முடித்துக் கொண்டு எழுந்திருப்பதற்கு முன்னதாகவே அதை நான் உம்மிடம் கொண்டு வந்து விடுவேன்’ என்றார்.

    “எனினும் அவர்களில் வேத ஞானம் பெற்ற ஒருவர் இருந்தார். அவர் சுலைமான் நபியை நோக்கி, ‘உமது பார்வை உம்மிடம் திரும்புவதற்குள் அதை நாம் உம்மிடம் கொண்டு வந்து விடுவேன்’ என்று கூறினார். அவ்வாறே கொண்டு வந்தும் சேர்த்தார்”.

    பல்கீஸ் அரசியாரும் அங்கு வந்து சேர்ந்தார். அவருக்கு முன்பு அந்த சிம்மாசனம் போடப்பட்டது. அது தன்னுடைய அரியணை தான் என்பதை அவரால் நம்ப முடியவில்லை. தன் நாடு அத்தனை தூரம் இருக்கும் போது கண் சிமிட்டும் நேரத்தில் எப்படி அதை கொண்டு வருவது சாத்தியம்? என்று ஆச்சரியப்பட்டார். சுலைமான் நபிகளுக்கு அல்லாஹ் அருளிய ஆற்றல் மூலமே அது சாத்தியமானது என்பதையும் புரிந்து கொண்டார்.

    பின்னர், சுலைமான் நபிகள் எடுத்துச் சொன்ன அல்லாஹ்வின் உண்மைத் தன்மையை உணர்ந்து கொண்டு, அவரும் அவரைச்சேர்ந்தவர்களும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள். சுலைமான் நபிகள், பல்கீஸ் அரசியை மணமுடித்து நீண்ட காலம் வாழ்ந்தார்.

    சுலைமான் நபிகள் தன் வயது முதிர்ந்த நிலையில் பாலஸ்தீனத்தில் இறையில்லம் ஒன்றை கட்ட வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். அவரது அடிமைகளாய் இருந்த ஜின்களைக் கொண்டு “மஸ்ஜிதே அக்ஸா” என்று அழைக்கப்பட்டு வருகின்ற அந்த பள்ளிவாசலை கட்டினார்கள். அந்த பள்ளிவாசலின் மிக்ராபில் (நடுப்பகுதி) நின்றவாரே, கைத்தடியை ஊன்றி அதில் சாய்ந்தவர்களாக ஜின்களை வேலை ஏவி வந்தார்கள். அந்த நிலையிலேயே அவருக்கு மரணமும் ஏற்பட்டது. ஆனால் பள்ளிவாசல் கட்டி முடிக்கப்படும் வரையில் சுலைமான் நபிகள் தடியில் சாய்ந்த சடலமாக நின்று கொண்டிருந்தார்கள்.

    “சுலைமானுக்கு நாம் மரணத்தை விதித்த போது, அவர் இறந்து விட்டார் என்பதை அவர் சாய்ந்திருந்த தடியை அரித்து விட்ட பூச்சியைத் தவிர மற்ற எவரும் அந்த ஜின்களுக்கு அறிவிக்கவில்லை. அவர் சாய்ந்திருந்த தடியை கரையான் பூச்சிகள் அரித்து விட்டன. ஆகவே அதன் மீது சாய்ந்திருந்த சுலைமான் கீழே விழுந்து விட்டார். அவர் கீழே விழவே வேலை செய்து கொண்டிருந்த அந்த ஜின்களுக்கு, தாங்கள் மறைவான விஷயங்களை அறியக் கூடுமாக இருந்தால் இரவு பகலாக உழைக்க வேண்டிய இழிவு தரும் இவ்வேதனையில் தங்கி இருக்க மாட்டோம் என்று தெளிவாக தெரிந்தது” (திருக்குர்ஆன் 34:14)

    இந்த வசனத்தின் மூலம் நாம் அறிவது, சுலைமான் நபி மரணித்த பின்னும் மஸ்ஜித் அக்ஸாவை கட்டி முடித்தார்கள். இன்று வரை அது நிலை பெற்று நிற்கின்றது. அது மட்டுமல்லாமல் ஜின்கள், சைத்தான்களுக்கு மறைவான விஷயம் பற்றி எந்த ஞானமும் கிடையாது என்பதும் இங்கே நிரூபணம் ஆகிறது.

    எனவே எதிர்காலம் பற்றி குறி சொல்லுதல், ஜோதிடம் பார்த்தல் போன்றவற்றின் மூலம் எந்த உண்மைத் தன்மையையும் அறிய முடியாது. அல்லாஹ் விதித்த விதிப்படியே எல்லாம் நடக்கும். அதை தடுப்பதற்கு எந்த சக்தியும் கிடையாது. விதியை மாற்றுவதற்கும் யாராலும் முடியாது என்பதே யதார்த்தம். இதை உணர்ந்து ஏக இறைவன் அல்லாஹ்விடம் சரணடைவோம். 
    அல்லாஹ் கூறுகின்றான்: “மேலும் நீங்கள் உண்ணுங்கள்; பருகுங்கள்; விரயம் செய்யாதீர்கள். விரயம் செய்வோரை அவன் (அல்லாஹ்) நேசிப்பதில்லை”. (திருக்குர்ஆன் 7:31)
    மதிய வேளை. வீட்டில் உணவு எதுவும் இருக்கவில்லை. பசி வயிற்றைக் கிள்ளியது. வீட்டைவிட்டு வெளியே வந்தார்கள் இறைவனின் இறுதித்தூதர் (ஸல்) அவர்கள். பள்ளிவாசலில் அபூபக்கர் (ரலி) அவர்களைச் சந்திக்கின்றார்கள்.

    “என்ன இந்த நேரம் வெளியே வந்துள்ளீர்கள்?” என்று நபி (ஸல்) அவர்கள் அபூபக்கர் (ரலி) அவர்களிடம் கேட்க, “இறைத்தூதர் அவர்களே! தாங்கள் எதற்காக வீட்டைவிட்டு வெளியே வந்தீர்களோ, அதற்காகவே நானும் வந்துள்ளேன்” என்று அபூபக்கர் (ரலி) பதிலளித்தார்.

    “சரி, வாருங்கள் நடக்கலாம்” என்று இருவரும் நடக்க, சற்று நேரத்தில் அங்கே உமர் (ரலி) அவர்களும் வெளியே வருகின்றார்.

    “என்ன இந்த நேரம் வெளியே வந்துள்ளீர்கள்?” என்று நபிகளார் (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம் கேட்க, “அல்லாஹ் மீது ஆணை! நீங்கள் இருவரும் எதற்காக வெளியே வந்தீர்களோ, அதற்காகவே நானும் வெளியே வந்துள்ளேன்” என்று அவரும் பதிலளித்தார்.

    இவர்கள்தான் இஸ்லாமிய உலகின் முப்பெரும் ஆளுமைகள். அன்றைய தினம் இந்த மூவருக்குமே உண்பதற்கு வீட்டில் உணவு எதுவும் இருக்கவில்லை என்பது எவ்வளவு கவலைக்குரிய விஷயம்.

    அபூஹைஸம் அல் அன்சாரி (ரலி) என்ற நபித்தோழரின் வீட்டில் மூவருக்கும் விருந்து. பலவகைப் பேரீச்சம் பழங்கள், ரொட்டி, ஆட்டிறைச்சி, குளிர்ந்த நீர் முதலியன விருந்தில் உணவாகக் கொடுக்கப்பட்டன.

    அவற்றை உண்டபின் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “மறுமை நாளில் விசாரணையின்போது இந்த அருட்கொடைகளைக் குறித்து அல்லாஹ் விசாரிப்பான்”.

    (அதாவது சற்றுமுன் நாம் பசியோடு இருந்தோம். இப்போது இந்த உணவு நமக்குக் கிடைத்துள்ளது. எனவே இந்த உணவு நமக்குக் கிடைத்தமைக்காக இறைவனுக்கு நாம் நன்றி செலுத்தினோமா? புசிக்கும்போது வீணடித்தோமா? இந்த உணவை உண்டபின் கிடைக்கும் உடல் ஆரோக்கியத்தின் மூலம் பயனுள்ள விஷயங்களைச் செய்தோமா? என்பது குறித்தெல்லாம் இறைவன் மறுமையில் விசாரிப்பான் என்று பொருள்)

    இதனைச் செவியுற்ற உமர் (ரலி) அவர்களுக்கு, ‘இது குறித்துமா இறைவன் விசாரிப்பான்?’ என்று ஆச்சரியம்.

    பெருமானார் (ஸல்) அவர்களிடமே விசாரித்தார்: “அல்லாஹ்வின் தூதரே! நாம் புசித்த இந்த உணவு அசுத்தமாகவும், நாம் அருந்திய இந்தத் தண்ணீர் சிறுநீராகவும் உடலில் இருந்து வெளியேறிவிடுகின்றது. இது குறித்துமா அல்லாஹ் மறுமையில் விசாரிப்பான்?”

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஆம், எனது உயிர் யார் கைவசம் இருக்கிறதோ அந்த இறைவன் மீது ஆணை! மறுமையில் இந்த அருட்கொடைகளைக் குறித்து நிச்சயம் அல்லாஹ் விசாரிப்பான். சற்றுமுன் வீட்டைவிட்டு நீங்கள் பசியுடன் வெளியே வந்தீர்கள். இதோ இப்போது இந்த அருட்கொடைகளை அல்லாஹ் உங்களுக்கு வழங்கியுள்ளான் என்பதை மறந்துவிடாதீர்கள். “பிறகு அந்நாளில் இந்த அருட்கொடைகளைக் குறித்து கட்டாயம் நீங்கள் வினவப்படத்தான் போகின்றீர்கள்” (திருக்குர்ஆன் 102:08) என்று அல்லாஹ் கூறவில்லையா?” (முஸ்லிம், அஹ்மத், நஸாயி)

    உணவும் பானமும் இறைவனின் அருட்பேறுகளில் ஒன்று. ஆனால் அது குறித்த சிந்தனை எதுவும் இல்லாமல் எவ்வளவு உணவுகளைத்தான் அன்றாடம் நாம் வீணடித்துக்கொண்டிருக்கின்றோம். மறுமையில் இது குறித்த விசாரணை உண்டு என்பது ஏன் நமக்கு இன்னும் உறைக்கவில்லை?

    வியாபார நோக்கில் செயல்படும் உணவு விடுதிகளை விட்டுத்தள்ளுங்கள். இந்த உபதேசம் எல்லாம் அவர்களின் செவிகளில் எடுபடாது. நமது வீடுகளை எடுத்துக்கொள்ளுங்கள். எவ்வளவு உணவுகள் அனுதினமும் வீணடிக்கப்படுகின்றது. சாக்கடைகளிலும் குப்பைத் தொட்டிகளிலும் கொட்டப்படும் உணவுகளைக் காணும்போது மனம் ஏனோ வேதனையால் அவதிப்படுகிறது.

    ‘வீணான உணவைக்கூட கொட்டக்கூடாதா?’ என்று புத்திசாலித்தனமகாக் கேள்வி கேட்க வேண்டாம். ‘உணவை ஏன் வீணாக்குகின்றோம்?’ என்பதுதான் இங்கே கேள்வியே. என்றாவது ஒருநாள் வீணானால்கூட பரவாயில்லை. அன்றாடம் கொட்டப்படுவது உணவு குறித்த அலட்சியத்தின் வெளிப்பாடுதானே.

    அதிலும் குறிப்பாக, திருமண வீடுகளிலும் விசேஷங்களின்போதும் வீணடிக்கப்படும் உணவுகள்தான் எவ்வளவு? அவற்றைச் சேகரித்து ஏழை எளியோருக்கு வழங்கினால் எவ்வளவு நன்மை கிடைக்கும்.

    ‘பணம் இருக்கிறது, எனவே நாங்கள் செலவு செய்கிறோம். இது எங்கள் பணத்தில் வாங்கிய உணவுப்பொருள். எனவே இதனை நாங்கள் எப்படி வேண்டுமென்றாலும் செலவு செய்வோம்’ என்று கருதினால்... இதைவிட அறிவீனம் வேறொன்றும் இருக்க முடியாது.

    அல்லாஹ் கூறுகின்றான்: “மேலும் நீங்கள் உண்ணுங்கள்; பருகுங்கள்; விரயம் செய்யாதீர்கள். விரயம் செய்வோரை அவன் (அல்லாஹ்) நேசிப்பதில்லை”. (திருக்குர்ஆன் 7:31)

    இந்த வசனம் குறித்து முற்கால அறிஞர்களில் ஒருவரான அலி பின் அல்ஹுஸைன் பின் வாகித் (ரஹ்) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்: “அல்லாஹ் மருத்துவ சிகிச்சை முறை அனைத்தையும் பாதி வசனத்திற்குள் அடக்கிவிட்டான்; அது இந்த வசனம்தான்”.

    இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுவதாவது: “நீ விரும்பியதை உண்ணலாம்; விரும்பியதை அணியலாம். ஆனால், ஒரு நிபந்தனை: விரயமும், கர்வமும் உன்னிடம் இருக்கக் கூடாது”. (புகாரி)

    இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களாவது, ‘விரும்பியதை உண்ணலாம் விரயம் செய்யாதே’ என்று கூறினார்கள். ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோ, விரயத்திற்கு கொடுத்திருக்கும் விளக்கம் என்ன தெரியுமா?

    பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நீ விரும்பிய அனைத்தையும் உண்பதுகூட விரயம்தான்”. (இப்னுமாஜா, தாரகுத்னி)

    கவனிக்கத்தக்க மற்றுமோர் விஷயம் என்னவென்றால், ‘விரயம் செய்வோரை இறைவன் விரும்ப மாட்டான்’ என்பதுதான். அனுமதிக்கப்பட்டவற்றிலும், தடை செய்யப்பட்டவற்றிலும் அல்லாஹ் விதித்துள்ள எல்லையை மீறுவோரை அவன் நேசிப்பதில்லை. அப்படி என்றால், இன்றைய திருமண வீடுகள், விசேஷ வீடுகள், விருந்து உபச்சார சபைகள் எல்லாம் அல்லாஹ்வின் நேசம் பெற்றவையா இல்லையா என்பதைக் கொஞ்சம் யோசிக்க வேண்டும்.

    உலக உணவு தினமாக அக்டோபர் 16-ந் தேதி கொண்டாடப்படுகிறது. பசியாலும் பட்டினியாலும் வாடும் ஏழைகளின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே இருக்க, உணவை வீணடிக்கும் மக்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்வதுதான் நகை முரண்.

    உலகில் 100 கோடி பேர் பசியால் அவதிப்படும் பரிதாபம் ஒருபுறம் இருக்க, வருடம்தோறும் 280 மில்லியன் டன் உணவு தானியங்கள் வீணடிக்கப்படுகின்றன என்று ஐ.நா. உணவு அமைப்பு கூறுகிறது.

    எவ்வளவு பெரிய வேதனை..! உணவை வீணடிக்கும் ஒவ்வொருவரும் நினைவில் வைக்க வேண்டிய விஷயம் என்னவென்றால்.. நாம் வீணடிக்கும் உணவின் ஒவ்வொரு பருக்கையும் ஏதோ ஓர் ஏழைக்குரிய உணவு என்பதை மட்டும்தான். மட்டுமல்ல, இதுகுறித்தும் மறுமை விசாரணை உண்டு என்பதையும் மறந்துவிடலாகாது.

    மவுலவி நூஹ் மஹ்ளரி, குளச்சல்.
    அல்லாஹ், உலகில் தன் தூதுவத்தை எடுத்துச் சொல்வதற்காக கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 24 ஆயிரம் நபிமார்களை அனுப்பி வைத்தான்.
    “தாவூதையும், சுலைமானையும் நபியாக அனுப்பி வைத்தோம். ஒருவருடைய ஆடுகள் மற்றொருவரின் பயிரை மேய்ந்து விட்டது பற்றி தாவூது, சுலைமான் ஆகிய இருவரும் தீர்ப்பு கூற இருந்த சமயத்தில், அவர்களுடைய தீர்ப்பை நாம் கவனித்து பார்த்துக் கொண்டிருந்தோம். தீர்ப்பு கூறுவதில் இவர்கள் இருவருக்குமே கல்வியையும், ஞானத்தையும் நாம் கொடுத்திருந்த போதிலும், சுலைமானுக்கு நியாயத்தை விளக்கி காண்பித்தோம்”. (திருக்குர்ஆன் 21:78-79)

    அல்லாஹ், உலகில் தன் தூதுவத்தை எடுத்துச் சொல்வதற்காக கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 24 ஆயிரம் நபிமார்களை அனுப்பி வைத்தான். ஆனால் ஒரு சில நபிகள் குறித்த விவரங்கள் மட்டுமே அங்கொன்றும் இங்கொன்றுமாக திருக்குர்ஆனில் சொல்லப் பட்டிருக்கின்றன. அவற்றை கோர்வையாக சேர்த்து படிக்கும் போது தான், முழு வரலாற்றையும் தெரிந்து கொள்ள முடியும்.

    அப்படி படைக்கப்பட்ட நபிமார்களில் ஒரு சிலரை குடும்பமாகவும், கோத்திரமாகவும் இறைவன் அங்கீகரித்துள்ளான். உதாரணமாக, நபிகள் இப்ராகிம்-இஸ்மாயில், யாகூப்-யூசுப் ஆகியோரை குறிப்பிடலாம். அந்த வரிசையில் தாவூது-சுலைமான் ஆகியோரை தந்தை-தனயனாக நபி பட்டம் கொடுத்து பூமிக்கு அனுப்பி வைத்தான் இறைவன்.

    தாவூது நபிகள் மன்னராக இருந்தபோது, சுலைமான் நபிகளும் அரசவையில் ஓர் அங்கத்தினராக வீற்றிருந்தார்கள். அவருக்கு அப்போது வயது பதினொன்று.

    தாவூது நபிகள், தன் கையால் இரும்பை தொட்டால் அது மெழுகாய் இளகி ஓடும் தன்மையை அல்லாஹ் கொடுத்திருந்தான். அதன் மூலம் அவர்கள் சங்கிலி வளையங்கள், போரில் பயன் படுத்தும் உருக்கு சட்டை கவசம் போன்றவற்றை செய்யக் கூடிய ஆற்றல் பெற்றவர்களாக இருந்தார்கள். அவர் இறை வணக்கத்தில் ஈடுபடும் போது, அவரோடு சேர்ந்து மலைகளும், பறவைகளும் அல்லாஹ் விற்கு சிரம் பணிந்தன என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

    சுலைமான் நபிகளுக்கு, காற்றை வசப் படுத்தி கொடுத்ததோடு, பல உயிரினங்களின் பரிபாஷையை தெரிந்து கொள்ளும் ஆற்ற லையும் இறைவன் கொடுத்திருந்தான். காற் றின் உதவியுடன் பல மைல் தூரங்கள், நொடி யில் பயணம் செய்யும் ஆற்றலும் அவருக்கு இருந்தது.

    ஒருமுறை அவரது அரசவையில் ஒரு விசித்திரமான வழக்கு ஒன்று வந்தது. வாதியும் பிரதிவாதியும் முறையிட்டார்கள். வாதி சொன்னார், “எனது சொந்த நிலத்தில் நான் பாடுபட்டு பண்படுத்தி பயிர் விளைவித்திருந்தேன். அது நன்றாக பருவம் எய்தியபோது, பிரதிவாதியின் ஆட்டு மந்தை கள் எனது நிலத்தில் புகுந்து அத்தனை பயிர் களையும் தின்று நாசம் செய்து விட்டன” என்றார்.

    பிரதிவாதியும், “ஆம்! உண்மை அரசே! நான் எனது மந்தையை விட்டு அகன்று பிறிதொரு இடத்திற்கு சென்று விட்டதால் எனது கவனக்குறைவின் காரணமாக என் மந்தை அந்த நாச வேலைகளைச் செய்து விட்டது. அது மட்டுமல்ல, இதற்காக எந்த நியாயமான தீர்ப்புக்கும் நான் கட்டுப்படுகிறேன்” என்று உறுதிமொழியும் அளித்தார்.

    தாவூது நபிகள் பிரதிவாதியால் வாதிக்கு என்ன நஷ்டம் ஏற்பட்டிருக்கும் என்பதை கணக்கிட்டே தீர்ப்பு வழங்க ஆர்வம் காட்டினார். வாதியின் உழைப்பும், அதில் அவர் செலவிட்ட தொகையும், பயிர் விளைந்ததால் அவருக்கு கிடைத்திருக்க வேண்டிய முறையான லாபம் எவ்வளவு என்பதை கணக்கிட்டார்.

    அதன் அடிப்படையில் பிரதிவாதியின் ஆட்டு மந்தையின் ஆடுகளின் எண்ணிக்கையையும், அதன் விலை எவ்வளவு என்பதையும் கணக்கிட்ட தாவூது நபிகள், அந்த இரண்டு கூட்டுத்தொகையும் ஒன்றாக இருந்ததின் காரணத்தால் கீழ்க்கண்டவாறு தீர்ப்பு வழங்கினார்:

    “நான் கணக்கிட்ட வகையில் வாதிக்கு ஏற்பட்ட நஷ்டமும், பிரதிவாதியின் ஆட்டு மந்தையின் மொத்த மதிப்பும் ஒன்றாக இருக்கின்ற காரணத்தால், வாதிக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய பிரதிவாதி தன் ஆட்டு மந்தை முழுவதையும் வாதியிடம் ஒப் படைத்து விட வேண்டும்”.

    இவ்வாறு அவர் தீர்ப்பு வழங்கினார்.

    அந்த தீர்ப்பு இருதரப்பினருக்கும் நியாயமாகப் படவே இருவரும் அந்த தீர்ப்பை ஒத்துக்கொண்டனர்.

    இந்த நிகழ்வை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்த சிறுவர் சுலைமான், தாவூது நபிகளை நோக்கி, “என்னருமை தந்தையே, இந்த தீர்ப்பை இருவரும் ஏற்றுக்கொண்டாலும் சற்று ஆழமாக சிந்திக்கும் போது பிரதிவாதிக்கு நிரந்தரமான இழப்பு ஏற்பட்டுள்ளதை யாரும் மறுப்ப தற்கில்லை. காரணம் ஒட்டு மொத்த ஆட்டு மந்தையையும் அவர் இழந்து விடுகிறாரே?. அதற்கு பதிலாக, நான் இதற்கு மாற்றமான, அதே சமயம் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளும் படியான இன்னுமொரு தீர்ப்பை வழங்கலாமா? அதற்கு அனுமதியுண்டா தந்தையே?” என்று வினவி நின்றார்.

    இந்த நிகழ்வின் மூலம், அரசரே ஆனாலும், நபியாக இருந்தாலும், தந்தையாக இருந்தாலும், ஒரு பிரச் சினையில் அவர் தீர்ப்பு சொல்லி விட்ட பிறகு அந்த தீர்ப்புக்கு ஒரு மாற்று கருத்தைச் சொல்வதற்கு வயது வரம்பின்றி எல்லோருக்கும் உரிமை உண்டு என்பதையும், அதனை வழங்கியது இஸ்லாமிய கோட்பாடு என்பதையும் உணர்ந்து கொள்ள முடியும்.

    தாவூது நபிகள் புன்னகை பூத்தவர்களாக, “இதை விட நல்ல தீர்ப்பு ஒன்றிருந்தால் நீ என்ன? சாதாரண குடிமகனுக்கும் அதைச்சொல்ல உரிமை உண்டு. எங்கே உன் தீர்ப்பைச் சொல் பார்க்கலாம்” என்றார்.

    சுலைமான் நபிகள் இவ்வாறு தனது தீர்ப்பை கூறினார்.

    வாதிக்கு நிலம் சொந்தம், பிரதிவாதிக்கு ஆட்டு மந்தை சொந்தம். இரண்டு சொந்தத்திற்கும் பங்கம் விளைவிக்க கூடாது. அதே சமயம் நடந்து விட்ட அநீதிக்கு நீதி வழங்கியாக வேண்டும்.

    எனவே பிரதிவாதி தன் ஆட்டு மந்தையை வாதி யிடம் ஒப்படைத்து விட வேண்டும். வாதி தன் நிலத்தை பிரதிவாதியிடம் கொடுத்து விட வேண்டும்.

    ஆட்டு மந்தை குறிப்பிட்ட காலம் வரை வாதியிடம் இருக்க வேண்டும். அதனை அவர் முறையாக பராமரிக்க வேண்டும். அதே சமயம் அதிலிருந்து கிடைக்கும் பால், ரோமங்கள், குட்டிகள் ஆகிய பலன் களை அவர் முழுமையாக அனுபவித்து கொள்ளலாம்.

    பிரதிவாதி அந்த நிலத்தை பண்படுத்தி உரமிட்டு நன்றாக பயிரிட்டு அந்த குறிப்பிட்ட கால அவகாசத்தில் விளைச்சலைப் பெருக்க வேண்டும். ஆடுகள் மேயும் போது பயிர்கள் எந்த நிலையில் இருந்ததோ அந்த நிலையை எட்டும் போது நிலத்தை வாதியிடம் ஒப்படைத்து விட்டு ஆட்டு மந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் தீர்ப்பு வழங்கினார்.

    இந்த தீர்ப்பின் மூலம் மிக துல்லியமாக நீதி நிலை நிறுத்தப்பட்டுள்ளது என்பதை உணர்ந்த தாவூது நபிகள், மகன் சுலைமானை ஆரத்தழுவி “சரியான தீர்ப்பை வழங்கினாய்” என்று வாழ்த்துச் சொன்னார்.

    சற்று கால இடைவெளியில் இருவருக்குமே எந்த வித பாதிப்பும் இல்லாமல் இழந்தவை சரி செய்யப்பட்டது. இப்படிப்பட்ட நியாயமான தீர்ப்புகள் தான் இஸ்லாம் கூறும் சமத்துவம். பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதே இதன் குறிக்கோள்.

    எனவே தீர்ப்புகள் ஒரு நியாயத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டாலும், நியாயத்தையும் தாண்டி தொலை நோக்கு சிந்தனையில் அந்த தீர்ப்புகள் திருத்தப் படலாம் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணமாக அமைகிறது. குறுகிய கால நன்மையைத் தாண்டி, நிரந்தரமாக நீண்ட காலம் நன்மை தரும் தீர்ப்பே சாலச் சிறந்தது என்பதையும் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

    இதுபோன்ற வரலாற்றை தெரிந்து கொள்வதோடு சந்தர்ப்பங்கள் வாய்க்கும் போது நீதியின் பக்கம் உறுதியாக நிற்க கூடிய சக்தியை நம் எல்லோருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் தந்தருள் புரிவானாக, ஆமின். 
    ‘மக்களுக்கு செய்யும் பயனுள்ள சேவை இறைவனுக்கு செய்யும் சேவை’ என இஸ்லாம் புகழாரம் சூட்டுகிறது. அவர்தான் மக்களில் உயர்ந்தவர், சிறந்தவர், உன்னதமானவர்.
    ‘மக்களில் இறைவனுக்கு மிகவும் பிரியமானவர், அவர்களில் மக்களுக்கு அதிகம் பயன்தருபவரே ஆவார்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: தப்ரானீ)

    ‘ஒரு இறைவிசுவாசி மக்களுடன் நெருங்கி இனிமையாக பழகக்கூடியவராகவும், மக்களும் அவருடன் நெருங்கி பழகுபவர்களாகவும் இருக்க வேண்டும். எவரிடம் இவ்விரு அம்சங்கள் இல்லையோ, அவரிடம் எந்த நன்மையும் கிடையாது. மேலும், மக்களில் சிறந்தவர் மக்களுக்கு மிகவும் பயனளிப்பவரே’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: தப்ரானீ)

    இஸ்லாம் என்பது பன்முகத்தன்மை வாய்ந்த மார்க்கம். அதில் ஆன்மிகச் சிந்தனையும் உண்டு, அரசியல் பார்வையும் உண்டு. தர்ம சிந்தனையும் உண்டு, பொருளியல் கோட்பாடும் உண்டு. இறை வணக்க வழிபாடுகளும் உண்டு, மக்கள் இணக்க செயல்பாடுகளும் உண்டு. இல்லறம் சார்ந்த நல்லறமும் உண்டு. இதன் வரிசையில் மக்களுக்கு பயன்தரும் வகையில் செயல்பட வேண்டிய செயல்திட்டங்களும் அவற்றை விவரமான முறையில் விளக்கும் போதனைகளும் உண்டு.

    ஒரு நாளைக்கு ஐந்து வேளைத் தொழுகை, ஆண்டுக்கு ஒருமுறை ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது, தான தருமங்கள் செய்வது, ஆயுளில் ஒரு தடவை ஹஜ் செய்வது, ஆகியவற்றுடன் மட்டும் ஒரு முஸ்லிமுடைய நற்செயல் முடிந்து விடக்கூடியவை அல்ல.

    அதையும் தாண்டி மக்களுக்கு நன்மை செய்வதிலும், அவர்களுக்கு பயன்தரும் வகையில் நடப்பதிலும் தான் ஒரு முஸ்லிம் பரிபூரணம் அடைகின்றான்.

    மக்களுக்கு பயனளிப்பதின் வாயிலாக இஸ்லாம் பரிபூரணம் பெறுகிறது. இதுகுறித்து இறைவன் பேசுவதை பார்ப்போம்:

    ‘நம்பிக்கை கொண்டோரே! குனியுங்கள், சிரசை தாழ்த்துங்கள், மேலும் உங்கள் இறைவனை வணங்குங்கள், நன்மையைச் செய்யுங்கள், நீங்கள் வெற்றி பெறுவீர்கள்’. (திருக்குர்ஆன் 22:77)

    இந்த வசனத்தில் தொழுகை, வணக்கம், நன்மை புரிவது ஆகிய மூன்று அம்சங்கள் இடம் பெறுகிறது. இங்கே நன்மை புரிவது என்பது மக்களுடன் சம்பந்தப்பட்டது. மற்ற இரண்டும் இறைவனுடன் சம்பந்தப்பட்டது ஆகும்.

    நன்மை புரிவது என்றால், ‘உறவுகளுடன் சேர்ந்து வாழ்வது மற்றும் நற்குணங்களுடன் வாழ்வது ஆகும்’ என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் விளக்கம் கூறுகிறார்கள். இதனால் ஏற்படும் பயன் என்பது வெற்றி ஆகும். இந்த வெற்றி என்பது சாதாரணமானது அல்ல, சொர்க்கமே கிடைக்கும் என்பதுதான் உண்மையான வெற்றி எனவும் அவர் விளக்கம் தருகிறார்.

    ஒரு முஸ்லிம் தமது நற்குணங்களின் வாயிலாகவும், தமது நற்சேவையின் வழியாகவும் மக்களுக்கு பயன்தரும் வகையில் நல்லதை செய்யும் போது அவர் சிறந்த மனிதராகவும், வெற்றி வாகை சூடியவராகவும் போற்றப்படுகிறார்.

    ‘இறைவனுக்கு சில அடியார்கள் உண்டு. அவர்கள் மக்களுக்கு பயன்கள் அளிப்பதற்காக அவர்களுக்கு இறைவன் தமது அருட்கொடைகளை பிரத்யேகமாக வழங்குகிறான். அவர்கள் மக்களுக்கு பயன்தரும் காலமெல்லாம் இறைவன் அவர்களுக்கு தமது அருட்கொடைகளை நீட்டித்து கொடுக்கிறான். அவர்கள் பயன்தர மறுத்தால், அவர்களிடமிருந்து இறைவன் தமது அருட்கொடைகளை நிறுத்திவிட்டு மற்றவர்களுக்கு அவைகளை மாற்றிக் கொடுக்கிறான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி) நூல்: தப்ரானீ).

    ‘மக்களில் சிலர் நன்மையின் கதவுகளை திறந்த வண்ணமும், தீமையின் கதவுகளை அடைத்த வண்ணமும் உள்ளனர். மேலும் சிலர் தீமையின் கதவுகளை திறந்தும், நன்மையின் கதவுகளை அடைத்து இப்படியும் உள்ளனர். யாருடைய கரத்தின் வழியே இறைவன் நன்மையின் கதவுகளை திறந்து வைத்துள்ளானோ, அவருக்கு சுப சோபனம் உண்டாகட்டும். மேலும், யாருடைய கரத்தின் வழியே இறைவன் தீங்கின் கதவுகளை திறந்து வைத்துள்ளானோ அவனுக்கு நாசம் ஏற்படட்டும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி) நூல்: இப்னுமாஜா)

    ‘எந்த ஒரு தலைவன் தேவையுடையவருக்கும், நலிந்தவருக்கும், வறுமையில் வாடுபவருக்கும் தமது கதவை அடைத்துக் கொள்கிறானோ, அவன் தேவையாகும் பட்சத்தில், அவன் வறுமையில் வாடும் பட்சத்தில், அவன் நலிந்து போகும் பட்சத்தில் வானத்தின் கதவுகளை இறைவன் அடைத்து விடுகின்றான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : முஆவியா (ரலி) நூல்: திர்மிதி)

    பலவிதமான மக்கள் வாழும் உலகில் பலவிதமான தேவைகளும் ஏற்படுகிறது. பிறரின் தேவை அறிந்து அவருக்கு நம்மால் இயன்றளவு சேவையாற்றி பயனளிக்க வேண்டும்.

    ஒருவருக்கு உதவி தேவைப்படும். இன்னொருவருக்கு பரிந்துரை தேவைப்படும். வேறு சிலருக்கு பொருள் தேவைப்படும். இவ்வாறு மனிதர்கள் மாறுபட மாறுபட தேவைகளும், சேவைகளும் மாறுபட்டுக் கொண்டேயிருக்கும். நம்மால் முடிந்தால் யாருக்கும் எந்தவிதத்திலும் பயன்அளிக்க முடியும்.

    ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் கூறும் போது, ‘காலையில் எனது வாசலில் தேவையுடையவர் எவரும் வராதபட்சத்தில் அப்போது நான் அறிந்து கொள்வேன், ‘இது எனக்கு ஏற்பட்ட சோதனைகளில் ஒன்று. இவற்றிலிருந்து விடுபட நான் இறைவனை வேண்டிக்கொள்வேன்’ என்கிறார்.

    தேவையுடையவர் நமது வீட்டுக்கு வருவது நமக்கு சோதனையாகத் தெரிகிறது. ஆனால், வராமல் இருப்பது அந்த பெரியவருக்கு சோதனையாகத் தெரிந்தது. இவர்தான் மக்கள் பயனில் முழு அக்கறை கொண்டவர்.

    அதாஉ பின் அபி ரபாஹ் (ரஹ்) கூறும்போது, ‘நீங்கள் உங்களின் சகோதரனை மூன்று தினங்களுக்கு மேலே கண்டு கொள்ளாவிடின், ஒன்று அவர்கள் நோயாளிகளாக இருப்பார்கள். எனவே, அவர்களிடம் சென்று நலம் விசாரியுங்கள். அல்லது ஏதேனும் செயல்களில் அவர்கள் ஈடுபட்டிருப்பார்கள். எனவே, அவர்களுக்கு உதவிடுங்கள். அல்லது அவர்கள் மறந்து இருப்பார்கள். அவர்களுக்கு நினைவூட்டுங்கள்’ என்று குறிப்பிடுகிறார்.

    ஒருவர், ஹஸன்பின் ஸஹ்ல் (ரஹ்) அவர்களிடம் வந்து, தமது தேவை நிறைவேறிட பரிந்துரை செய்யும்படி வேண்டுகிறார். அந்தப் பெரியவரும் அவருக்கு பரிந்துரை செய்து, அவரின் தேவையை நிறைவேற்றி கொடுத்து விடுகிறார்.

    இதற்கு அவர் பெரியவருக்கு நன்றி தெரிவித்தபோது, ஹஸன் பின் ஸஹ்ல் (ரஹ்), ‘நீர் நன்றி கூறுகிறீர். பொருளாதாரத்திற்குரிய சேவை வரியாக ‘ஜகாத்’ இருப்பது போன்று, முயற்சிக்குரிய ஜகாத்தாக இது போன்ற சேவை உள்ளது. இப்படித்தான் நாம் இதை காணுகிறோம்’ என கூறினார்.

    ‘முயற்சிக்குரிய ஜகாத் மக்களுக்கு பயன்தரும்படி நடப்பதே’ என்று ஒற்றை வரியில் ஒரு உன்னதமான உதாரணத்தை அவர் குறிப்பிட்டது வைர வரிகளால் உலக வரலாற்றில் பதியப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.

    உமர் (ரலி) அவர்கள் ஆதரவு இல்லாத, பார்வையற்ற, வயதான சில விதவைப் பெண்களுக்கு தான் சேவையாற்றுவதாக உறுதிமொழி எடுத்திருந்தார். இதன் அடிப்படையில் இரவு நேரத்தில் அவர்களுக்கு தண்ணீர் புகட்டுவது உட்பட ஏராளமான சேவைகளை அவர் மனதார செய்து வந்தார். சில பெண்களின் வீட்டிற்கு உமர் (ரலி) இரவில் செல்வதை தல்ஹா (ரலி) கண்டுகொண்டு, அதை தெரிந்து கொள்ள அந்தப் பெண்களின் வீடுகளுக்கு பகல் பொழுதில் சென்றார். அப்போது அங்கு பார்வையற்ற வயதான பெண்கள் இருப்பதை கண்டு கொள்கிறார்.

    ‘உங்களிடத்திலே உமருக்கு என்ன வேலை? இங்கு வந்து அவர் என்ன செய்கிறார்?’ என தல்ஹா (ரலி) விசாரிக்கிறார். அதற்கு அந்தப்பெண்கள், ‘உமர் (ரலி) எங்களை பராமரிப்பதாக வாக்குறுதி கொடுத்துள்ளார். அதை நிறைவேற்ற எங்களிடம் வருகிறார். எங்களுக்கு பயன்தரும் சேவையில் அவர் ஈடுபடுகிறார். எங்களுக்கு நோவினை தருபவற்றை அவர் அகற்றிவிடுகிறார். குடிக்க தண்ணீரும் புகட்டுகிறார்’ என்றார்கள். இதைக்கேட்ட தல்ஹா (ரலி) உமரின் அடிச்சுவடுகளை பின்பற்றி தானும் நடக்க வேண்டும் என்று உறுதிபூண்டார்.

    ஒரு நாள் உமர் (ரலி) இரவில் தூங்கிவிட்டார். எனவே, அந்தப்பெண்களுக்கு உதவிசெய்யச் செல்வதில் தாமதம் ஆகிறது. அந்த வீடுகளுக்கு அவர் தாமதமாக சென்றபோது, அங்கே அபூபக்கர் (ரலி) அவர்கள் உமரின் சேவையை செய்து கொண்டிருந்தார். உடனே உமர் (ரலி) ‘இந்த சேவையிலும் அபூபக்கர் (ரலி) என்னை முந்திவிட்டார்’ என்றார்.

    ‘யாருக்கு என்ன தேவை என அறிந்து அவர்களுக்கு பயனுள்ள சேவையை செய்திடவேண்டும்’ என இஸ்லாம் கூறுகிறது. ‘மக்களுக்கு செய்யும் பயனுள்ள சேவை இறைவனுக்கு செய்யும் சேவை’ என இஸ்லாம் புகழாரம் சூட்டுகிறது. அவர்தான் மக்களில் உயர்ந்தவர், சிறந்தவர், உன்னதமானவர்.

    -மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுன்.
    அன்றுமுதல் இஸ்லாத்தில் போதையற்ற, தூய சிந்தனை ஒளிர்ந்தது. உடலையும், உள்ளத்தையும், ஆன்மாவையும் சீரழிக்கும் மது அன்றோடு அரபு பாலையில் குழி தோண்டி புதைக்கப்பட்டது.
    பாவங்களில் எல்லாம் பெரும் பாவம் மது அருந்துதல் ஆகும். அதனால்தான் இஸ்லாத்தில் மது மட்டுமல்ல, போதை தரும் எந்த பொருளையும் அருந்துவது, உட்கொள்வது, வியாபாரம் செய்வது, பிறரை உட்கொள்ளத் தூண்டுவது போன்ற அத்தனை செயல்பாடுகளுமே ‘ஹராம்’ (முற்றிலும் விலக்கப்பட்ட ஒன்று) என்று கட்டளையிடப்பட்டுள்ளது.

    அதுமட்டுமல்ல, பாவங்களில் முதன்மையானது, மற்ற பாவங்களின் ஆணிவேராக இருப்பது மது குடிக்கும் பழக்கம். மதுவின் ஆதிக்கத்தில் கட்டுப்பட்டு இருக்கும் மனிதன், கொலை- கொள்ளை-விபச்சாரம் போன்ற குற்றங்களையும் செய்யத்தயங்குவதில்லை.

    சாதாரண நிலையில் இயங்கி கொண்டிருக்கும் மனிதனின் சிந்தனையை சீரழித்து, மூளையை கலங்கச்செய்து, நிலை தடுமாறும் நிலைக்குத் தள்ளிவிடும் ஆபத்து நிறைந்தது, மது போதை.

    மதுவின் போைதயால் சிறிது நேரம் மதிமயங்கி இருக்கும்போது, தன்னுடைய கவலை, துக்கம், தொல்லைகளின் தீவிரம் குறைகிறது என்று மனிதன் தப்புக் கணக்கு போடுகின்றான். சிறிது சிந்தித்துப் பார்த்தால் எந்த அளவிற்கு மனிதன் தன்னையே ஏமாற்றிக் கொள்கிறான் என்பது புரியும். இதனால் அவனது உடல் நலமும் பாதிக்கப்படுகிறது.

    இஸ்லாம் உலகில் தோன்றிய காலகட்டத்தில் அரேபியர்கள் வீண் விளையாட்டுகளிலும், கேளிக்கைகளிலும், கூத்துகளிலும் தங்கள் நேரங்களை விரயம் செய்து கொண்டிருந்தார்கள்.

    அண்ணல் எம்பெருமானார் (ஸல்) அவர்கள், ஏக இறைக்கொள்கையை எடுத்தியம்பும் போது, நற்குணங்கள் பற்றிய பிரச்சாரத்தையும் தீவிரப்படுத்தினார்கள். நற்குணங்கள், நற் செயல்கள் மூலம் இறைவனின் அருளைப்பெற முடியும் என்று மக்களிடம் விளக்கினார்கள்.

    இதுதொடர்பாக இறைவசனம் ஒன்றையும் அல்லாஹ் எடுத்துக்கூறினான். மதுவைப் பற்றிய வசனங்களை அருளும்போது மக்கள் மனதில் அதன் தீமைகள் ஆழப்பதிய வேண்டும் என்பதற்காக மிக எச்சரிக்கையாக வசனங்களைத் தெளிவுபடுத்துகின்றான்.

    “(நபியே!) மதுவைப் பற்றியும், சூதாட்டத்தைப் பற்றியும் உங்களிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: “அவ்விரண்டிலும் பெரும் பாவங்களும் இருக்கின்றன; மனிதர்களுக்குச் சில பயன்களும் இருக்கின்றன. ஆனால், அவைகளில் உள்ள பாவம், அவைகளிலுள்ள பயனைவிட மிகப் பெரிது”. (திருக்குர்ஆன் 2:219)

    மதுவில் பாவங்கள் தான் அதிகமாக உள்ளன என்ற எச்சரிக்கையைத் தொடர்ந்து, அந்த செய்தியை உள்வாங்கியவர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் திருந்த ஆரம்பிப்பார்கள் என்ற எதிர்ப்பார்ப்பும் இந்த வசனம் மூலம் வெளிப்படுகிறது.

    இந்த வசனம் இறங்கிய பிறகும் கூட சிலர் மதுவை விடுவதற்கு தயக்கம் காட்டினார்கள். காரணம் அப்போது அது முற்றிலும் தடை செய்யப்படவில்லை.

    அப்துல் ரஹ்மான் ஆவ்ப் (ரலி) என்ற பெரும் சகாபி ஒருநாள் தன் நண்பர்கள் அனைவருக்கும் தன் வீட்டில் விருந்து வைத்தார். அதில் மது பானங்களும் பரிமாறப்பட்டன. இடையில் தொழுகையின் நேரம் வந்ததும், எல்லோரும் ஜமாத்தாக (கூட்டுத் தொழுகை) தொழ ஆரம்பித்தார்கள். தொழ வைத்த இமாமும்கூட மது அருந்தி இருந்தார். தொழுகையில் அல் காபிரூன் என்ற சூராவை ஓதிவரும் போது “நீங்கள் வணங்குபவைகளை நாங்கள் வணங்க மாட்டோம் என்ற பொருளில் ஓதுவதற்குப் பதிலாக நீங்கள் வணங்குபவைகளை நாங்களும் வணங்குவோம்” என்று ஓதிவிட்டார். மதுவின் ஆதிக்கத்தால் திருக்குர்ஆன் வசனத்தின் பொருளையே மாற்றிச்சொல்லும் அளவிற்கு சிந்தனையில் தடுமாறிவிட்டார்.

    அதனைத் தடுக்கும் விதமாக கீழ்க்கண்ட திருக்குர்ஆன் வசனம் ‘வஹி’யாய் இறங்கியது. “நம்பிக்கையாளர்களே, நீங்கள் கூறுவது இன்னதென்று நீங்கள் அறிந்து கொள்ள முடியாதவாறு நீங்கள் போதையில் இருக்கும் சமயத்தில் தொழுகைக்கு செல்லாதீர்கள்.” (திருக்குர்ஆன் 4:43)

    இந்த இறைவசனம் இறங்கியதுமே அத்தனை சகாபாக்களும் மது அருந்தி விட்டு தொழ வருவதை தவிர்த்தார்கள். ஒருநாளின் பல மணித்துளிகள் மது போதையிலிருந்து விடுபட்டார்கள். கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றம் நிகழ்ந்தது. மதுவிற்கும் அவர்களுக்கும் இருந்த இடைவெளியும் நாளடைவில் அதிகமாகியது.

    இன்னுமொரு முறை அருமை சகாபா உவைஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் இதுபோன்று தம் நண்பர்களுக்கு விருந்து வைத்தார். அந்த விருந்திலும் மது பரிமாறப்பட்டது. அரேபியர்கள் கவி புனைவதில், கவி பாடுவதில் திறம்மிக்கவர்கள். விருந்து வைபவத்தைத் தொடர்ந்து கவி அரங்கம் அரங்கேறியது.

    கவி பாடிக்கொண்டிருந்த அபி இப்னு வக்காஸ் (ரலி) அவர்கள் மதினத்து அன்சாரிகளை விட மக்கத்து குரைஷியர்கள் மிக உயர்ந்தவர்கள் என்ற பொருள் படும்படி கவிபாடினார். இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத மதினத்து அன்சாரி ஒருவர் விருந்தில் பரிமாறப்பட்ட ஒட்டக எலும்பைத் தூக்கி அபி இப்னு வக்காஸ் (ரலி) அவர்களின் தலையில் பலமாகத் தாக்கினார். அங்கு ஒரு மிகப் பெரிய கலவரம் ஏற்படுவதற்கான சூழ்நிலை உருவானது. அப்போது இந்த இறைவனின் வசனம் இறங்கியது:

    ‘நம்பிக்கையாளர்களே, நிச்சயமாக மதுவும், சூதாட்டமும், சிலை வணக்கமும், அம்பெறிந்து குறிகேட்பதும் சைத்தானுடைய அருவருக்கத்தக்க செயல்களில் உள்ளவையாகும். ஆகவே இவைகளிலிருந்து நீங்கள் விலகி கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்’. (திருக்குர்ஆன் 5:90)

    “மதுவாலும், சூதாட்டத்தாலும் உங்களிடையே பகைமையும், பொறாமையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் ஞாபகத்திலிருந்தும் தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடவே நிச்சயமாக சைத்தான் விரும்புகிறான். (ஆகவே) அவைகளிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள்”. (திருக்குர்ஆன் 5:91)

    இந்த வசனங்களின் மூலம் மது ‘ஹராம்’ என்று முற்றிலுமாக விலக்கப்பட்டது.

    இந்த செய்தியைக் கேட்டதும் அத்தனை சகாபாக்களும் ஏற்கனவே தங்களைப் படிப்படியாய் பக்குவப்படுத்தி கொண்டிருந்தவர்கள் உடனே அதனை கைவிட்டார்கள். செய்தி கேட்ட போது மது அருந்திக் கொண்டிருந்தவர்கள் கூட கைகளை வாயில் விட்டு வாந்தி எடுத்து மதுவை வெளியேற்றினார்கள். தங்கள் வீடுகளில் ஆண்டாண்டு காலமாய் சேமித்து வைத்திருந்த மது புட்டிகளை உடைத்து எறிந்தனர். மதீனத்து வீதியில் மது ஆறு கரைபுரண்டு ஓடியது. அனைவருமே அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்தனர்.

    அன்றுமுதல் இஸ்லாத்தில் போதையற்ற, தூய சிந்தனை ஒளிர்ந்தது. உடலையும், உள்ளத்தையும், ஆன்மாவையும் சீரழிக்கும் மது அன்றோடு அரபு பாலையில் குழி தோண்டி புதைக்கப்பட்டது.

    மதுவின் தீமையை அனைவருக்கும் உணர்த்துவோம், போதையற்ற புது உலகை உருவாக்குவோம்.
    தனக்களித்த வாக்குறுதிகளைப்பற்றி கேட்பவர்களை, தமது உடல் பலம், ஆள் பலம், பண பலம், படை பலம், செல்வாக்கு உள்ளிட்டவை களைக்கொண்டு மிரட்டுவது சர்வ சாதாரணமாகி விட்டது.
    இஸ்லாம் கூறும் நல்லொழுக்கங்களின் முக்கியமானது வாக்குறுதிகளை நிறைவேற்றுதல்.

    ‘இன்னும் அவர்கள் எத்தகையோரென்றால், அமானிதங்களையும் தாங்கள் அளித்த வாக்குறுதிகளையும் பேணுவார்கள்’ (திருக்குர்ஆன் 23:2).

    மனிதர்களிடையே நிலவும் சண்டை சச்சரவுகளில் முதன்மை காரணமாக விளங்குவது வாக்குத்தவறுதல்.

    ஒருவருக்கு அளிக்கப்படும் வாக் குறுதியில் வாக்கு அளிப்பவரின் கவுரவமும், வாக்கு அளிக்கப்படுப வரின் வாழ்க்கையும் அடங்கியிருக்கிறது.

    வாக்கு தவறுதல் என்பது நம்பிக்கை மோசடி வகையைச் சார்ந்தாகும். ஒருவரிடம் ஒரு காரியம் ஆக வேண்டும் என்பதற்காக அந்த நேரத்தில் வாக்குறுதியை அளித்துவிட்டு, தனது வேலை முடிந்துவிட்டால், தான் அளித்த வாக்குறுதியை சவகாசமாக மறந்துவிடுகிறார்கள். அதைப்பற்றி கேட்கும்போது பிரச்சினை வெடிக்கிறது.

    மனிதர்கள் மரணித்த பின்பு கேட்கப்படும் கேள்விகளில் வாக்குறுதி நிறைவேற்றாததும் அடங்கியிருக்கும்.

    வாக்குறுதியும் ஒரு கடனே

    கடன் வாங்கியவர் திருப்பித்தரவேண்டியது எந்த அளவு கடமையோ அதே போன்றுதான் பிறருக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதுமாகும்.

    நபி (ஸல்) அவர்கள் இறந்தபோது, ஹஜ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்களுக்கு அலா இப்னுஹள்ரமீ (ரலி) அவர்களிடமிருந்து (சிறிது) செல்வம் வந்தது. அப்போது ஹஜ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்கள் அங்கிருந்தவர்களைப் பார்த்து, ‘யாருக்காவது நபி (ஸல்) அவர்கள் கடன் பாக்கி தரவேண்டியிருந்தால், அல்லது யாருக்காவது வாக்கு ஏதும் தரப்பட்டு இருந்தால், அவர் நம்மிடம் வரட்டும். (அவரது உரிமையை நாம் நிறைவேற்றுவோம்) என்று கூறினார்கள்’. அறிவிப்பவர் ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி), (நூல்: புகாரி)

    ‘வாக்குறுதியை நிறைவேற்றாதது நம்பிக்கை மோசடியாகும். இவர்களை நயவஞ்சகர்கள்’ என இஸ்லாம் கூறுகிறது.

    நயவஞ்சகர்களைப்பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறும்போது ‘பேசினால் பொய் பேசுவான், வாக்களித்தால் மாறு செய்வான், நம்பினால் மோசம் செய்வான்’ என்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)

    போரில் கலந்துகொள்வதைவிட வாக்குறுதி முக்கியம் என நபிகள் நாயகம் (ஸல்) கூறியிருக்கிறார்கள். இதுகுறித்து நபிகள் கூறியதாக ஹுதைபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

    “நான் பத்ருப் போரில் கலந்துகொள்ளாததற்குக் காரணம் யாதெனில், நானும் என் தந்தை ஹுசைல் (எனும் அல்யமான்) அவர்களும் (பத்ர் நோக்கிப்) புறப்பட்டோம். அப்போது குறைஷி இறைமறுப்பாளர்கள் எங்களைப் பிடித்துக்கொண்டனர். ‘நீங்கள் முஹம்ம(துடன் சேர்ந்து எங்களுக்கு எதிராகப் போர் செய்வ)தை நாடித்தானே செல்கிறீர்கள்?’ என்று கேட்டார்கள்.

    நாங்கள் “(இல்லை) மதீனாவை நோக்கியே செல்கிறோம்” என்று (பேச்சை மாற்றிச்)சொன்னோம். அப்போது குறைஷியர் “நாங்கள் மதீனாவுக்கே திரும்பிவிட வேண்டும்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சேர்ந்து (குறைஷியருக்கெதிராக) போரிடக்கூடாது” என அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு எங்களிடம் வாக் குறுதி பெற்றுக்கொண்டனர்.

    நாங்கள் இருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைத் தெரிவித்தோம். அப்போது அவர்கள், “நீங்கள் இருவரும் (மதீனாவுக்கே) திரும்பிச்செல்லுங்கள். நாம் அவர்களுக்கு ஆதரவாக அவர்களது வாக்குறுதியை நிறைவேற்றுவோம். அவர்களுக்கெதிராக அல்லாஹ்விடம் உதவி கோருவோம்” என்று சொன்னார்கள். (நூல்: முஸ்லிம்).

    போரில் கலந்து கொள்ளாதவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையாக சாடியிருக்கிறார்கள். ஆனால் இந்த சம்பவத்தில் ஒரு தோழர் கொடுத்த வாக்குறுதியின் காரணமாக அவரை போருக்கு வரவேண்டாம் என்று கூறியிருக்கிறார்கள் என்றால், வாக்குறுதியின் முக்கியத்தை நாம் உணர வேண்டும்.

    தொழிலாளிகளிடம் வேலைவாங்குவதற்காக பல்வேறு வாக்குறுதிகளை அளிக்கும் முதலாளிகள் முதல், அரசியல்வாதிகள் வரை பலரும் வாக்குறுதிகளை வழங்கிக்கொண்டுதான் இருக்கின்றனர்.

    தனக்களித்த வாக்குறுதிகளைப்பற்றி கேட்பவர்களை, தமது உடல் பலம், ஆள் பலம், பண பலம், படை பலம், செல்வாக்கு உள்ளிட்டவை களைக்கொண்டு மிரட்டுவது சர்வ சாதாரணமாகி விட்டது.

    நிறுவனங்களில் பங்குதாரராக சேர்த்து, பின் அவர்களுக்கே தெரியாமல் பங்குதாரர்களை ஏமாற்றும் நம்பிக்கை துரோகங்களும் நடக்கத்தான் செய்கின்றன. வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்புபவர்கள் தவறான வாக்குறுதிகளை அளிக்கின்றனர். இவர்களின் தவறான வாக்குறுதிகள் பலரின் வாழ்வையே கேள்விக்குறியாக்கி விடுவதுடன், குடும்பமே சிரமத்தில் ஆழ்ந்துவிடுகிறது. ஒரு குடும்ப நாசத்திற்கு காரணம் தவறான வாக்குறுதிதான் என்பதை சிந்திக்க மறந்துவிடுகின்றனர்.

    பணம் சம்பாதிப்பது மட்டும்தான் வாழ்க்கை என்று பலரும் எண்ணுகின்றனர். நமக்கு என்ன விதிக்கப்பட்டு இருக்கிறதோ அதுதான் கிடைக்கும்.

    இறைவனை நம்புகிறவர்கள், தமது வாக்குறுதியை நிறைவேற்றுவது மிகவும் அவசியம்.

    மதம் கடந்து மனித நேயம் வளர ‘வாக்குறுதி நிறைவேற்றுதல்’ முக்கிய பங்காற்றுகிறது.

    வி.களத்தூர் கமால் பாஷா.
    தர்மபுரி மாவட்டம், தொப்பூர் ஹஜரத் சையத்ஷா வலியுல்லாவின் 59-வது ஆண்டு உரூஸ் என்ற சந்தனக்குட விழா இன்றும், நாளையும்தொப்பூர் ஹஜரத் சையத்ஷா வலியுல்லாவின் உறைவிடத்தில் நடைபெற உள்ளது.
    தர்மபுரி மாவட்டம், தொப்பூர் ஹஜரத் சையத்ஷா வலியுல்லாவின் 59-வது ஆண்டு உரூஸ் என்ற சந்தனக்குட விழா இன்றும்(வியாழக்கிழமை), நாளையும்(வெள்ளிக்கிழமை) தொப்பூர் ஹஜரத் சையத்ஷா வலியுல்லாவின் உறைவிடத்தில் நடைபெற உள்ளது. முதல்நாளான இன்று இரவு 10 மணியளவில் ஹஜரத் வீட்டில் இருந்து சந்தனக்குடம் ஊர்வலமாக புறப்பட்டு இரவு தர்காவுக்கு வந்து சேரும்.

    நாளை காலை 5 மணியளவில் சந்தனம் பூசப்படும். இந்த இரண்டு நாட்களும் இஸ்லாமிய இசைக்கச்சேரி நடைபெறும். அதேநேரம் முஸ்லிம், இந்து, கிறிஸ்தவ மற்றும் அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து ஹஜரத் சையத்ஷா வலியுல்லாவின் நல்லாசியும், துவாவையும் பெற்று கொண்டு தர்காவில் நடைபெறும் பாத்திஹாலில் கலந்து கொண்டு தப்ரூக்கையும் பெற்று செல்லுமாறு விழா ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    இந்த விழாவையொட்டி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 5 மணி வரை மன்சூர் ஜானி(மும்பை)-சாதிக்கா சஞ்சேரி (ஐதராபாத்) ஆகியோரின் போட்டி உருது கவ்வாலி கச்சேரியும், நாளைஇரவு 7 மணி முதல் 11 மணிக்குள் கலைமாமணி சென்னை எம்.ஏ.குத்தூஸ் குழுவினரின் தமிழ் இஸ்லாமிய இன்னிசை நிகழ்ச்சியும், நாளை இரவு 11 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை சமீர் ஷேஹசாதே(கர்நாடகம்)-சல்மாதாஜ்(ஆந்திரா) குழுவினரின் உருது கவ்வாலி கச்சேரியும் நடைபெறும். தர்காவில் பாத்திஹாவிற்கு தேவையான பொருட்கள் அனைத்தும் கிடைக்கும், தங்குவதற்கு இடவசதி உண்டு என்று தர்கா குடும்ப உரிமையாளர்கள் தெரிவித்தனர். 
    யாஜூஜ், மாஜூஜ் தோற்றம் பற்றி மிக தெளிவாக அண்ணல் எம் பெருமானார் (ஸல்) அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். அவர்கள் உலக முடிவின் கடைசி காலத்தில் வருவார்கள்.
    “உலகம் அழிவுபட்டு மறுமைநாள் ஏற்படுவதற்கு ஓர் அடையாளமாக யாஜூஜ், மாஜூஜ் என்ற கூட்டத்தினர் வருவார்கள். இவர்கள் மனித இனத்தின் ஒரு வகையைச் சார்ந்தவர்கள். அவர்கள் மனிதர்கள் போன்று இருந்தாலும் உயரத்தில் மிகவும் குறைந்தவர்களாக இருப்பார்கள். இவர்களின் உயரம் ஒரு சாண் அல்லது இரண்டு சாண்கள் அளவிற்கே இருக்கும்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாக ஹாகிம் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    “யாஜூஜ், மாஜூஜ் கூட்டத்தினர் வரும்வரை நீங்கள் போராடிக் கொண்டே இருப்பீர்கள். அவர்களின் முகங்கள் அகன்றதாகவும், கேடயம் போல் வட்டமாகவும், கண்கள் சிறியதாகவும், முடிகள் செம்பட்டையாகவும் அமைந்திருக்கும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று காலித் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாக அஹ்மது என்ற நூலிலே பதிவு செய்யப்பட்டுள்ளது.

    யாஜூஜ், மாஜூஜ் தோற்றம் பற்றி மிக தெளிவாக அண்ணல் எம் பெருமானார் (ஸல்) அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். அவர்கள் உலக முடிவின் கடைசி காலத்தில் வருவார்கள். மிகப்பெரும் குழப்பத்தை ஏற்படுத்துவார்கள்.

    “யாஜூஜ், மாஜூஜ் மக்கள் ஆதம் (அலை) அவர்களின் சந்ததியாவார்கள். அவர்களின் நோக்கம் மற்ற இன மக்களை அழிப்பது, அவர்களுக்குள் குழப்பம் விளைவிப்பது ஆகும். அவர்கள் ஒவ்வொருவரும் ஆயிரம் அல்லது அதற்கும் மேலான வாரிசுகளை உருவாக்காமல் மரணிப்பதில்லை”.

    புகாரி ஹதீஸின் அடிப்படையில் நரகத்தில் நாம் ஒருவர் என்றால் அவர்கள் ஆயிரம் பேர்களுக்கும் மேலாக இருப்பார்கள் என்று அறியமுடிகிறது.

    மேலும் திருக்குர்ஆன் அல் அன்பியா சூராவிலே (21:96) “யாஜூஜ், மாஜூஜ் கூட்டத்திற்கு வழி திறக்கப்பட்டால், அவர்கள் ஒவ்வொரு மேட்டிலிருந்தும் தண்ணீர் பாய்வதை போல் வழிந்து உலகின் பல பாகங்களிலும் அதிவிரைவில் பரவி விடுவார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வசனத்தின் மூலம் இவர்கள் அதிவேகமாக இயங்கக் கூடியவர்கள் என்ற உண்மையையும் அறிய முடிகிறது.

    உலக அழிவு நெருங்கும் நாள்வரை துல்கர்னைன் எழுப்பிய இரும்பு சுவற்றின் பின்பகுதியிலேயே அடைபட்டு கிடப்பார்கள்.

    “ஒவ்வொரு நாளும் யாஜூஜ், மாஜூஜ் கூட்டத்தினர் துல்கர்னைன் எழுப்பிய சுவரை உடைக்க முயற்சி செய்வார்கள். காலை முதல் மாலை வரை சிறிது முயற்சி செய்து கொஞ்சம் உடைத்திருப்பார்கள். களைப்பின் மிகுதியால் மறுநாள் வந்து மீதியை உடைக்கலாம் என்று சென்று விடுவார்கள். ஆனால் இறைவனின் கட்டளைப்படி அந்த உடைப்புகள் சரி செய்யப்பட்டு மீண்டும் புது சுவராக மாறி விடும். மீண்டும் அவர்கள் முயற்சி தொடரும். இந்த நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். எது வரை என்றால் இறைவன் நாடி அந்த இரும்பு சுவரை தவிடு பொடியாக்கும் வரை. மறுமை நாளின் அடையாளம் வரும் வரை அவர்கள் முயற்சி தொடர்ந்து கொண்டே இருக்கும்’’ என்று திர்மிதியில் ஒரு ஹதீஸில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

    “யாஜூஜ், மாஜூஜ் கூட்டத்தினர் எண்ணிக்கையில் மற்ற ஜனங்களைவிட அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள்” (இப்னு கதீர்)

    “அந்நாளில் அவர்களில் சிலரை சிலருடன் அலை போல் மோதவிடுவோம். மேலும் சூர் ஊதப்பட்டதும் அவர்களை ஒன்று திரட்டுவோம்”. (திருக்குர்ஆன் 18:99)

    மறுமையின் காலம் அறிவிக்கப்பட்டவுடன், அடைபட்டுக்கிடக்கும் யாஜூஜ், மாஜூஜ் கூட்டத்தினரை அல்லாஹ் வெளிப்படுத்துவான். அவர்கள் பூமியின் மூலை முடுக்கெல்லாம் சென்று மனிதர்கள் அனைவரையும் கொன்று குவிப்பார்கள்.

    நபி ஈஸா தன் கூட்டத்தாரை காப்பாற்றும் பொருட்டு, அவர்களை தூர் மலையின் உயரத்துக்கு கொண்டு சென்று விடுவார்கள். ஆனால் பூமியில் கொன்று குவித்த மனித இனத்தை தாண்டி யாஜூஜ், மாஜூஜ் கூட்டத்தினர் அவ்வழியே செல்வார்கள். முதலில் ஒரு கூட்டத்தினர் ஒரு நீரோடையை காண்பார்கள். அதில் நீர் பருகுவார்கள். அதன் பின் வரும் கூட்டத்தினர் அதே இடத்தை கடந்து செல்லும்போது அந்த இடத்தில் முன் ஒரு காலத்தில் தண்ணீர் இருந்ததாக கூறுவார்கள். அதாவது, பூமி காய்ந்து போகும் அளவுக்கு ஒரு சிறிய கூட்டத்தினரே அவ்வளவு நீரையும் பருகி நீரோடையே வற்றிப்போகச் செய்வார்கள்.

    பின்னர் யாஜூஜ், மாஜூஜ் கூட்டத்தினர் ஈஸா நபி அவர்கள் தங்கி இருக்கும் மலை உச்சியை அடைந்து ஈஸா நபியையும் அவர்களைச் சார்ந்தவர்களையும் முற்றுகை இடுவார்கள். அவர்களின் கொடுமைகள் எல்லை மீறிச்செல்லவே, ஈஸா நபியும் அவரின் தோழர்களும் இறைவனிடம் மனம் கசிந்துருகி துஆ செய்வார்கள். அந்த கொடுமைகளிலிருந்தும், கொடிய மக்களிடம் இருந்தும் காப்பாற்றும்படி பிரார்த்தனை செய்வார்கள்.

    இறைவன் அவர்களின் பிரார்த்தனைகளை ஏற்றுக் கொண்டு புழுக்களை கொண்டு யாஜூஜ், மாஜூஜ் கூட்டத்தினரை தாக்குதல் செய்வான். புழுக்களின் தாக்குதலுக்கு தாக்குபிடிக்காமல் யாஜூஜ், மாஜூஜ் கூட்டத்தினர் அனைவரும் செத்தொழிந்து போவார்கள். பின்னர் ஈஸா நபி அவர்களும், அருமை தோழர்களும் தங்கள் இருப்பிடம் திரும்பி விடுவார்கள்.

    இதனை நபிநாதர் இயம்பியதாக முஸ்லிம் ஹதீது கிரந்தத்தில், நவ்வாஸ் இப்னு ஸம்ஆன் (ரலி) அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

    யாஜூஜ், மாஜூஜ் கூட்டத்தினர் முழுமையாக அழிக்கப்பட்டபின் அல்லாஹ் அருள் மழையை அனுப்புவான். அது பூமியையும் அதன் வீடுகளையும் மிகவும் சுத்தமாக கழுவி விடும். பின்னர் பூமியை நோக்கி, உன்னின் கனிகளை முளைக்கச் செய், உன்னிடம் உள்ள பரக்கத்தையும் திரும்ப கொடு என்று கட்டளையிடப்படும். அதன் அடிப்படையில் ஒரு கூட்டமே உண்ணும் அளவிற்கு அந்த கனிகளில் பரக்கத் மிகுந்திருக்கும். ஒரு ஒட்டகை பாலை ஒரு கூட்டமே பருகும் அளவு அதிலும் பரக்கத் பொருந்தியிருக்கும். வளமான வாழ்க்கையை மக்கள் அனுபவிப்பர்.

    அப்போது, “அல்லாஹ், ஒரு சுகமான காற்றை அனுப்புவான். அக்காற்று மனிதனின் அக்குள் வரை செல்லும். மூமீன்கள், முஸ்லிம்கள் அனைவரின் உயிர்களும் கைப்பற்றப்படும். கெட்ட மக்கள் மட்டுமே எஞ்சி நிற்பர். அவர்கள் இருக்கும் போது தான் மறுமை நாள் நிகழும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்.

    அப்போது தான் வானம் பிளக்கப்படும். சூரியன் பிரகாசம் குறைக்கப்படும். நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும். மலைகள் அதன் இடத்திலிருந்து அகற்றப்படும். கர்ப்பமடைந்த ஒட்டகங்கள் தெறித்தலையும், காட்டு மிருகங்கள் ஊர்களில் வந்து ஒன்று கூடும். கடல் நீர் நெருப்பாக மாற்றப்படும். உலகம் முடிவு பெறும். விசாரணை காலம் ஏற்படும். உயிர்கள் உடலுடன் மீண்டும் சேர்க்கப்படும். அந்த மறுமை நாள் ஏற்பட்டு விடும். 
    ×