என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    ‘புயலுக்கு நடுவிலும் பயணிக்க முடியும் விசுவாசம் வை, பதற்றமடையாதே’’ என்கிறார். அவரை விசுவசிப்போம். துன்ப காலங்களிலும், நம்பிக்கையோடு வாழ்வோம்.
    யோர்தான் நதியும், கலிலேயா கடலும் இயேசுவின் வாழ்க்கையில் முக்கியமான நீர்நிலைகள். குறிப்பாக கலிலேயா கடலில் அடிக்கடி பயணம் செய்து அக்கரையில் இருந்த கப்பர்நாகூம் என்ற நகரத்துக்கு இயேசு தன் சீடர்களோடு சென்று வந்ததை விவிலியம் சுட்டிக்காட்டுகிறது. அப்படித்தான் கலிலேயா கடலில் சீடர்களை ஒருமுறை தனியாக பெத்சயிதா என்ற ஊருக்குச் செல்லும்படி அனுப்பிவைத்தார். ஐந்து ரொட்டிகளையும், இரண்டு மீன்களையும் வைத்து ஐயாயிரம் பேருக்கு உணவளித்து இயேசு அற்புதம் செய்த நாளில் தன் தந்தையாகிய கடவுளிடம் தனித்திருந்து பிரார்த்தனை செய்த இயேசு, சீடர்களை முன்னதாகச் செல்லுமாறு பணித்தார்.

    தங்கள் போதகர் இல்லாமல் தனியே பயணித்த சீடர்கள் கலிலேயா கடலில் புயலை எதிர்கொண்டனர். அந்தக் கடலில் மீன்பிடித்து வாழ்ந்த வகையில் நான்கு சீடர்கள் திடீர் சூறைக்காற்றையும் புயலையும் பலமுறை எதிர்கொண்டிருப்பார்கள். ஆனால், கடவுளின் அதிகாரத்தில் இயங்கும் இயற்கையை எதிர்த்து சாமானிய மனிதர்களால் என்ன செய்துவிட முடியும். எதிர் காற்று கடும் சூறைக்காற்றாக மாறி வீசியதால், துடுப்புகளை வலிக்க அவர்கள் கஷ்டப்பட்டார்கள் என்று மாற்கு எழுதியிருக்கிறார்.

    அப்போது சூறைக்காற்று புயல்போல் வீசியதால் படகைச் செலுத்த முடியாமல் சீடர்கள் திணறினார்கள்; இயேசு அதைத் தன் மனக்கண்ணால் கண்டு, சுமார் நான்காம் யாமத்தில் கடல்மேல் நடந்து அவர்களை நோக்கி வந்தார்; ஆனால், அவர்களைக் கடந்துபோவதுபோல் போனார். அவர் கடல்மேல் நடந்து வருவதை அவர்கள் பார்த்தபோது, “ஏதோ மாய உருவம்!” என்று நினைத்து அலறினார்கள். எல்லாருமே அவரைப் பார்த்துக் கலக்கமடைந்தார்கள். உடனே அவர், “தைரியமாக இருங்கள், நான்தான், பயப்படாதீர்கள்” என்று சொன்னார். பின்பு அவர்களுடன் படகில் ஏறினார், அப்போது காற்று அடங்கியது. அதைப் பார்த்து அவர்கள் மிகவும் பிரமித்தார்கள். ரொட்டிகளை வரவழைத்தவரால் இந்த அற்புதத்தையும் செய்ய முடியும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை; இதையெல்லாம் புரிந்துகொள்ள முடியாதபடி அவர்களுடைய இதயம் மந்தமாகவே இருந்தது (மாற்கு 6:48-52).

    இயேசு கடலில் நடந்துவந்து சீடர்களின் கலக்கத்தைப் போக்கிய சம்பவத்துக்கு முன்னர் கலிலேயா கடல் பட்டணத்தில் மற்றொரு சம்பவம் நிகழ்ந்ததை மாற்குவே பதிவு செய்திருக்கிறார். கடுகு விதை உவமையைக் கூறி பிரசங்கித்த நாளில் மாலையில் இயேசு தன் சீடர்களோடு கப்பர்நகூம் நகரத்துக்குப் படகில் பயணித்துக்கொண்டிருக்கிறார். அவரது படகைப் பின்தொடர்ந்து வேறு சில படகுகளும் வந்துகொண்டிருந்தன. அப்போது பயங்கரமான புயற்காற்று வீச ஆரம்பித்தது; படகு கிட்டத்தட்ட மூழ்கும் நிலையில் இருந்தது.

    ஆனால், அவர் படகின் பின்புறத்தில் தலையணை வைத்துத் தூங்கிக்கொண்டிருந்தார். அதனால், அவர்கள் அவரை எழுப்பி, “போதகரே, நாம் சாகப்போகிறோம்! உங்களுக்குக் கவலையே இல்லையா?” என்று பதற்றமும் பரிதவிப்புமாகக் கேட்டார்கள். அப்போது, அவர் எழுந்து காற்றை அதட்டினார்; கடலைப் பார்த்து, “ஆழியே அமைதியாக இரு!” என்று சொன்னார். அப்போது காற்று அடங்கி, மிகுந்த அமைதி உண்டானது. அதன் பின்பு, “ஏன் இப்படிப் பயப்படுகிறீர்கள், இன்னும் உங்களுக்கு விசுவாசம் வரவில்லையா?” என்று அவர்களிடம் கேட்டார். ஆனால் அவர்கள் பீதியடைந்து, “இவர் உண்மையில் யார்? காற்றும் கடலும்கூட இவருக்கு அடங்கிவிடுகின்றனவே!” என்று ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டார்கள்.

    இயேசுவின் காலத்தில் அவரால் நிகழ்த்தப்பட்ட இப்பேர்பட்ட அற்புதமான அருள் அடையாளங்களைப் பார்க்கும் வாய்ப்பு இன்று நமக்குக் கிடைப்பதில்லை. இன்று மிகவும் ஆபத்தான காலத்தில் வாழ்ந்துவரும் சாமானிய மனிதர்களாகிய நாம் இயற்கைச் சீற்றங்களை எதிர்த்துப் போராட முடியாமல் துவண்டுபோகிறோம். அவ்வளவு ஏன், நம் சொந்த வாழ்க்கையில் இழப்பு, பிரிவு, வேதனை, நோய் எனும் புயல்கள் அடித்துவிட்டால் துவண்டுபோய்விடுகிறோம்.

    ஆனால் இந்தப் புயலை எதிர்கொள்ள இயேசு நமக்குக் கற்றுத்தந்திருக்கிறார். “நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.” என்கிறார். ‘‘புயலுக்கு நடுவிலும் பயணிக்க முடியும் விசுவாசம் வை, பதற்றமடையாதே’’ என்கிறார். அவரை விசுவசிப்போம். துன்ப காலங்களிலும், நம்பிக்கையோடு வாழ்வோம்.
    குமரி மாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களின் தலைமை தேவாலயமாக கிறிஸ்தவர்களால் போற்றப்படுவது கோட்டார் புனித சவேரியார் பேராலயம் ஆகும்.
    குமரி மாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களின் தலைமை தேவாலயமாக கிறிஸ்தவர்களால் போற்றப்படுவது கோட்டார் புனித சவேரியார் பேராலயம் ஆகும். கேட்ட வரங்களையெல்லாம் புனித சவேரியார் அருள்வதாக பக்தர்கள் நம்பிக்கை. அதனால் தான் புனித சவேரியாரை ‘கேட்ட வரம் தரும் கோட்டார் சவேரியார்‘ என்று வாயார புகழ்கிறார்கள்.

    புனித சவேரியார்

    கிறிஸ்தவர்களின் இதய ஆசனத்தில் வீற்றிருக்கும் புனித சவேரியார், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர். அந்த நாட்டின் நவார் மாகாணத்தில் சேவியர் அரண்மனையில் 1506-ம் ஆண்டு பிறந்தார். 1529-ம் ஆண்டு புனித இஞ்ஞாசியாரை சந்தித்த பிறகுதான் சவேரியாரின் வாழ்க்கை ஆன்மிகத்துக்கு திரும்பியது. அதைத்தொடர்ந்து 1537-ம் ஆண்டு சவேரியார் குருப்பட்டம் பெற்றார். 1542-ம் ஆண்டு அவர் கோவாவுக்கு வந்தார்.

    ஏழைகளிடம் மிகுந்த இரக்கம் காட்டினார். அவரது வார்த்தைகளும், செயல்பாடுகளும் மக்களின் மனதில் நீங்கா இடத்தை அவருக்கு பெற்றுத்தந்தன. அவர் பாடிய கத்தோலிக்க பாடல்கள் மக்களின் எண்ண ஓட்டங்களில் இடைவிடாது தவழ்ந்தன.

    புனித சவேரியார் கோவாவில் இருந்து, கடற்கரை ஓரமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மணப்பாடுக்கு சென்று மக்களுக்கு போதனை நடத்தினார். அங்கிருந்து அடிக்கடி நாகர்கோவில் கோட்டாருக்கு அவரது பயணம் அமைந்தது.

    நற்செய்தி

    அந்த நேரத்தில்தான் திருவிதாங்கூர் மன்னருக்கும், பாண்டிய மன்னருக்கும் போர் நடந்தது. இந்த போரில் திருவிதாங்கூர் மன்னர் வெற்றிபெற புனித சவேரியார் உதவி புரிந்தார். இதனால் திருவிதாங்கூர் மன்னர் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தார். தனது வெற்றிக்கு கை கொடுத்த புனித சவேரியாரை அவரும் போற்றினார். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நற்செய்தியை மக்களுக்கு அறிவிக்க புனித சவேரியாருக்கு அனுமதி வழங்கப்பட்டது. தற்போதுள்ள சவேரியார் பேராலயத்தைச் சுற்றி ஒரு சிறிய ஆலயம் கட்ட நிலத்தையும், பணத்தையும் மன்னர் பரிசாக கொடுத்தார். அதைத்தொடர்ந்து கோட்டாரை மையமாகக் கொண்டு நற்செய்தி பணிகளை சவேரியார் மேற்கொண்டார்.

    அதன்பின்னர் புனித சவேரியார் பசிபிக் கடல் தீவுகள், இலங்கை, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு சென்றார். இறுதியாக சீனாவுக்கு செல்லும் வழியில் சான்சியன் தீவில் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இந்த நிலையில் 1552-ம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி உயிர்நீத்தார்.

    அழியாத உடல்

    அவரது புனித உடல் பல மாதங்களுக்குப் பிறகும் அழிவுறாமல் அப்படியே இருந்ததால் அனைவரும் ஆச்சரியப்பட்டனர். இதனால் அதை பாதுகாக்க முடிவு செய்தனர். அதன்படி கோவாவில் நல்ல இயேசு ஆலயத்தில் புனித சவேரியாரின் உடல் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    இறைப்பணி வாழ்வுக்காக லட்சக்கணக்கான மைல்கள் தூரம் நடந்து, நூற்றுக்கும் மேற்பட்ட ஊர்களிலும், தீவுகளிலும் இயேசுவின் நற்செய்தியை போதித்து, இறைஊழியம் செய்து பெரும்சாதனை புரிந்த சவேரியாருக்கு 1622-ம் ஆண்டு புனிதர் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    முதல் ஆலயம்

    புனிதர் பட்டம் பெற்ற சவேரியாருக்கு முதல் ஆலயம், நாகர்கோவில் கோட்டார் ஆலயமாகவே இருக்க வேண்டும் என்பது இந்த மறைமாவட்டத்து மக்களின் விருப்பமாக இருந்தது. அதை நிறைவேற்றினார்கள். உலகில் புனித சவேரியாருக்கு கட்டப்பட்ட முதல் ஆலயமாக கோட்டார் ஆலயம் விளங்கி வருகிறது.

    கோட்டார் மறைமாவட்ட பேராலயமாக திகழும் இந்த ஆலயத்துக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து பிரார்த்தனை நடத்திச் செல்கிறார்கள். அவர்களது வேண்டுதல்கள் நிறைவேறுகின்றன.

    சவேரியார் ஆலயம் கட்டும்போது நாகர்கோவில் அறுகுவிளை மற்றும் ராஜாவூர் மக்கள் அக்காலத்தில் சம்பளம் வாங்காமல் வேலை செய்தனர். இதன்காரணமாக ஆண்டுதோறும் திருவிழாவின்போது இவ்வூர்களின் மக்கள் சிறப்பிக்கப்படுகிறார்கள்.

    கொடிபட்டத்தில் கட்டுவதற்கான பூக்கள் மற்றும் பூ மாலைகளை ராஜாவூரில் இருந்தும், நாகர்கோவில் அறுகுவிளையில் இருந்தும் மேளதாளங்கள், பேண்டு வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக புனித சவேரியார் பேராலயத்துக்கு கொண்டு வரப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.
    சிலுவையில் தொங்கும் போது கூட, “தந்தையே, இவர்களை மன்னியும், இவர்கள் என்ன செய்வதென்று அறியாமல் செய்கிறார்கள்“ என்று சகித்து கொண்டு அவர்களுக்காக தம் தந்தையிடம் பரிந்து பேசுகின்றார்.
    கடவுள், மனிதனை படைத்த போது, அருள் நிறைந்த நிலையில் உருவாக்கினார். பாவம் இழைத்த மனிதத்தை புறம் தள்ளி நித்தியசாபம் அவர் கொடுக்கவில்லை. மாறாக, அன்பின் ஊற்றாகிய அவர் இரக்கம் நிறைந்து மனிதனின் குற்ற உணர்வை சகித்துக்கொண்டார். ஆதிப்பெற்றோர் பாவத்தை சகித்ததன் விளைவாக தனது திருமகனையே மீட்பராக அனுப்பும் அளவிற்கு சகித்துக்கொண்டார்.

    எகிப்தில் அடிமைகளாக இருந்த இஸ்ராயேல் மக்களை மீட்டு காணான் தேசத்திற்கு அழைத்துவர பாலைவனத்தில் 40 ஆண்டுகள் அவர்களோடு இருந்து பயணித்த இறைவன் அந்த மக்களின் மறத்த இதயத்தையும், வணங்கா கழுத்தையும் சகித்து ஏற்றார். விடுதலை பயணத்தின் தலைவரான மோசே பல சமயங்களில் ஆண்டவரிடம் மக்களின் மனநிலையை பற்றி முறையிட்டார்.

    ஆனால் ஆண்டவர், பாலை நிலத்தில் மக்களின் தேவைகளான உண்ண உணவு, குடிக்க தண்ணீர், மனதிற்கேற்ற மாமிசம் ஆகியவற்றை கொடுத்தார். இருப்பினும் மக்கள் முணுமுணுத்தனர். ஆண்டவரிடம் மோசே அந்த முணுமுணுத்தலை சொல்லும் போது, ஆண்டவர் மோசே, உனக்கு எதிராக மக்கள் முணுமுணுக்கவில்லை. எனக்கு எதிராக செய்கிறார்கள். ஆகவே, கவலை கொள்ளாதே என்றார்.

    இயேசுவின் காலத்தில் எருசலேமை நோக்கி அழுது புலம்பினார். (லூக் 13:34) “பேதுரு இயேசுவிடம் சகோதரன் ஒருவனை ஏழு முறை மன்னிக்கலாமா? என்று கேட்க, அவர் பல முறை மன்னிக்க வேண்டும், மன்னிப்பதில் எண்ணிக்கையில்லை“ என்றார். சகிப்பு தன்மை இருந்தால் தான் மனதிற்கு இளகிய நிலை என்பது சாத்தியமாகும்.

    இயேசு தனக்கு ஏற்பட்ட அனைத்து துன்பங்களையும் சகித்து கொண்டார். சிலுவையில் தொங்கும் போது கூட, “தந்தையே, இவர்களை மன்னியும், இவர்கள் என்ன செய்வதென்று அறியாமல் செய்கிறார்கள்“ என்று சகித்து கொண்டு அவர்களுக்காக தம் தந்தையிடம் பரிந்து பேசுகின்றார். நாமும் பலவீனப்பட்டவர்கள். நாம் ஒருவரை ஒருவர் ஏற்று, சகித்து கொண்டு வாழ்ந்தால் இந்த தவக்காலம் சகிப்பின் காலமாக அமையும் என்பதில் ஐயமில்லை.

    திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்” (மத்தேயு 5:17) என்று இயேசு கூறியது உண்மையே.
    மனிதர்கள் அனைவரும் கடவுளுக்கு உகந்தவர்களாக வாழ்வது எப்படி என்று இயேசு கிறிஸ்து போதித்தார். நீதிக்காக குரல் கொடுக்குமாறு அழைப்பு விடுத்த அவர், உண்மையை நிலைநாட்ட துன்புறவும் தயாராக இருக்க வேண்டும் என்கிறார்.

    பொதுவான சந்தேகம்

    “மண்ணுலகில் தீயை மூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்” (லூக்கா 12:49) என்றும், “நான் உலகிற்கு அமைதி கொணர வந்தேன் என எண்ண வேண்டாம். அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன்” (மத்தேயு 10:34) என்றும் இயேசு போதித்தார். “திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்” (மத்தேயு 5:17) என்று இயேசு கூறியதால், ‘கண்ணுக்கு கண்’ போன்ற பழைய ஏற்பாட்டு சட்டங்களை அவர் ஆதரித்தார். ஆனால், அவரது உண்மை முகத்தை மறைத்து, அவர் அன்பை போதித்ததாக கிறிஸ்தவர்கள் கதை அளக்கின்றனர் என்று ஒரு பிரிவினர் சந்தேகத்தை கிளப்புகின்றனர்.

    "மண்ணுலகில் தீயை மூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்."

    சட்டத் தெளிவு

    “‘கண்ணுக்குக் கண்’, ‘பல்லுக்குப் பல்’ என்று கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்.” (மத்தேயு 5:38-39) “‘உனக்கு அடுத்து இருப்பவரிடம் அன்பு கூர்வாயாக’, ‘பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக’ எனக் கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள்.” (மத்தேயு 5:43-45) “நீங்கள் பெற்றுக் கொண்ட மரபின் பொருட்டு கடவுளின் வார்த்தையைப் பயனற்றதாக்கி விடுகிறீர்கள். இதுபோல நீங்கள் பலவற்றைச் செய்கிறீர்கள்” (மாற்கு 7:13) என்று இயேசு கண்டிக்கிறார். இவ்வாறு, மனித விருப்பத்துக்கு ஏற்ப வளைக்கப்பட்ட சட்டங்களுக்கு பதிலாக, மனிதகுல நலனுக்கான கடவுளின் சட்டங்களை இயேசு தெளிவாக போதித்தார்.

    நிறைவேற்றவே

    “திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்” (மத்தேயு 5:17) என்று இயேசு கூறியது உண்மையே. ஆனால், கடவுளின் திட்டத்தை வெளிப்படுத்தும் மறைநூல் பகுதிகளைக் குறித்தே இயேசு கூறினார் என்பதில் ஐயமில்லை. ஏனெனில், “மோசேயின் சட்டத்திலும் இறைவாக்கினர் நூல்களிலும் திருப்பாடல்களிலும் என்னைப் பற்றி எழுதப்பட்டுள்ள அனைத்தும் நிறைவேற வேண்டும் என்று நான் உங்களோடு இருந்தபோதே உங்களுக்குச் சொல்லியிருந்தேனே” (லூக்கா 24:44) என்று உயிர்த்த இயேசு நினைவூட்டியதாக நற்செய்தியில் காண்கிறோம். ஆகவே, இயேசுவின் வாழ்வும் போதனைகளுமே திருச்சட்டத்தையும் இறைவாக்குகளையும் நிறைவு செய்கின்றன. “தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை” என்று தம்மை சிலுவையில் அறைந்தவர்களுக்காக மன்றாடிய இயேசு, அன்பையே போதித்தார் என்று உறுதியாக கூற முடியும்.

    தீயும் வாளும்

    “உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன்” (யோவான் 18:37) என்ற இயேசுவின் வார்த்தைகளில், “மண்ணுலகில் தீயை மூட்ட வந்தேன்” (லூக்கா 12:49) என்று அவர் கூறியதன் பொருளை உணர முடிகிறது. அதாவது கடவுளைப் பற்றிய உண்மையை அறியும் ஆர்வத்தையே, தீ என்று உருவகமாக இயேசு குறிப்பிடுகிறார். உண்மையை ஏற்போருக்கும் எதிர்ப்போருக்கும் இடையே பிளவு ஏற்படும் என்பதை வாள் என்ற உருவகத்தால் இயேசு விளக்குவதைக் காண்கிறோம்: “நான் உலகிற்கு அமைதி கொணர வந்தேன் என எண்ண வேண்டாம். அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன். தந்தைக்கு எதிராக மகனையும் தாய்க்கு எதிராக மகளையும் மாமியாருக்கு எதிராக மருமகளையும் நான் பிரிக்க வந்தேன். என்னைவிடத் தம் தந்தையிடமோ தாயிடமோ மிகுந்த அன்பு கொண்டுள்ளோர் என்னுடையோர் என கருதப்படத் தகுதியற்றோர். தம் சிலுவையைச் சுமக்காமல் என்னைப் பின்பற்றி வருவோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர்.” (மத்தேயு 10:34-37) தம்மைப் பின்பற்றுவோர் அனைவரும் துன்பத்தை ஏற்கத் தயாராக இருக்க வேண்டும் என்று போதித்த ஆண்டவர் இயேசுவை அன்பின் வடிவாக மட்டுமே பார்க்க முடியும்.
    தன்னுடைய சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்பற்றி வராத எவனும் எனக்குச் சீடனாக இருக்க முடியாது. தன்னுடைய உயிரைக் காத்துக்கொள்ள முயல்கிறவன் அதை இழந்துபோவான்
    இயேசு யூதேயாவில் இருந்த எல்லா நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் போய், அங்கிருந்த ஜெபக்கூடங்களில் போதித்தார். கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைப் பிரசங்கித்தார். நோய்களையும் பலவீனங்களையும் குணமாக்கினார். மக்கள் கூட்டத்தைப் பார்த்தபோது, அவருடைய மனம் உருகியது. ஏனென்றால், மேய்ப்பர் இல்லாத ஆடுகளைப் போல அவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டும், புறக்கணிக்கப்பட்டும் இருந்தனர். அவர் தன்னுடைய சீடர்களிடம், “அறுவடை அதிகமாக இருக்கிறது, ஆனால் வேலையாட்கள் குறைவாக இருக்கிறார்கள். அதனால், அறுவடைக்கு வேலையாட்களை அனுப்பச் சொல்லி அறுவடையின் எஜமானராகிய பரலோகத் தந்தையிடம் கெஞ்சிக் கேளுங்கள்” என்று கூறினார்.

    அதன் பின்னர் தன் பன்னிரண்டு சீடர்களையும் அழைத்தார். மனிதர்களைப் பிடித்த பேய்களை விரட்டுவதற்கும் எல்லா விதமான நோய்களையும் உடல் பலவீனங்களையும் குணமாக்குவதற்கும் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார். தன் சீடர்களை மற்ற ஊர்களுக்கு அனுப்பி வைக்கும்முன் அவர்களுக்கு இயேசு விரிவான அறிவுரைகளைக் கொடுத்து அனுப்பினார்.

    “பரலோக அரசாங்கம் நெருங்கி வந்துவிட்டது எனப் பிரசங்கியுங்கள். நோயாளிகளைக் குணப்படுத்துங்கள், இறந்தவர்களை உயிரோடு எழுப்புங்கள், தொழுநோயாளிகளைச் சுத்தமாக்குங்கள், பேய்களை விரட்டுங்கள். தங்கம், வெள்ளி, அல்லது செப்புக் காசுகளை உங்களோடு கொண்டு போகாதீர்கள். பயணத்துக்காக உணவுப் பையையோ, இரண்டு உடைகளையோ, செருப்புகளையோ, தடியையோ எடுத்துக்கொண்டு போகாதீர்கள். ஏனென்றால், வேலை செய்கிறவன் தன் உணவைப் பெறத் தகுதியுள்ளவனாக இருக்கிறான்.

    நீங்கள் எந்த நகரத்துக்குப் போனாலும், எந்தக் கிராமத்துக்குப் போனாலும், தகுதியுள்ளவர் யார் என்று தேடிக் கண்டுபிடியுங்கள். அங்கிருந்து புறப்படும்வரை அவருடனேயே தங்கியிருங்கள். ஒரு வீட்டுக்குள் செல்லும்போது, அங்கிருப்பவர்களுக்கு வாழ்த்துச் சொல்லுங்கள். அந்த வீட்டில் இருப்பவர்கள் தகுதியுள்ளவர்களாக இருந்தால், நீங்கள் வாழ்த்துச் சொன்னபடி அவர்களுக்குச் சமாதானம் கிடைக்கட்டும்; தகுதியில்லாதவர்களாக இருந்தால், அந்தச் சமாதானம் உங்களிடமே திரும்பட்டும். யாராவது உங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அல்லது உங்களுடைய வார்த்தைகளைக் கேட்காவிட்டால், அந்த வீட்டையோ, நகரத்தையோ விட்டுப் புறப்படும்போது உங்களுடைய பாதங்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள். உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், நியாயத்தீர்ப்பு நாளில் அந்த நகரத்துக்குக் கிடைக்கும் தண்டனை பயங்கரமாக இருக்கும்” என்றார்.

    பின்னர் செல்லும் நகரங்களில் மக்கள் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதை அவர் எடுத்துக் கூறினார். “இதோ! ஓநாய்கள் நடுவில் ஆடுகளை அனுப்புவதுபோல் உங்களை அனுப்புகிறேன்; அதனால், பாம்புகளைப் போல் எச்சரிக்கையாகவும், புறாக்களைப் போல் கள்ளம் கபடம் இல்லாமலும் நடந்துகொள்ளுங்கள். அதே நேரம் கவனமாக இருங்கள்; ஏனென்றால், மனிதர்கள் உங்களை உள்ளூர் நீதிமன்றங்களுக்குக் கொண்டுபோய் நிறுத்துவார்கள்; தங்களுடைய ஜெபக்கூடங்களில் உங்களை முள்சாட்டையால் அடிப்பார்கள். அது மட்டுமல்ல; நீங்கள் என்னுடைய சீடர்களாக இருப்பதால், உங்களை ஆளுநர்களுக்கும் அரசர்களுக்கும் முன்னால் நிறுத்துவார்கள். அப்போது நீங்கள் அவர்களுக்கும் மற்ற தேசத்து மக்களுக்கும் சாட்சி கொடுக்க முடியும். ஆனாலும், அவர்கள் உங்களை அதிகாரிகள் முன் நிறுத்தும்போது, எப்படிப் பேசுவது என்றோ, என்ன பேசுவது என்றோ கவலைப்படாதீர்கள். நீங்கள் என்ன பேச வேண்டுமோ அது அந்த நேரத்தில் உங்களுக்குத் தந்தையால் அருளப்படும். அப்போது நீங்களாகவே பேச மாட்டீர்கள், உங்கள் பரலோகத் தகப்பனுடைய சக்தி உங்களைப் பேச வைக்கும்.

    நீங்கள் என் சீடர்களாக இருப்பதால் எல்லா மக்களும் உங்களை வெறுப்பார்கள்; ஆனால், முடிவுவரை சகித்திருப்பவர்தான் மீட்பு பெறுவார். அவர்கள் உங்களை ஒரு நகரத்தில் துன்புறுத்தினால், வேறொரு நகரத்துக்குத் தப்பித்து ஓடுங்கள். உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், மனித குமாரன் வருவதற்குள் உலகில் உள்ள எல்லா நகரங்களிலும் பிரசங்கித்து முடித்திருக்கவே மாட்டீர்கள்” என்றவர், ஊழியப் பயணத்தில் எவ்வாறு பிரசங்கிக்க வேண்டும் என்பதையும் எடுத்துக் கூறினார்.

    “மூடி மறைக்கப்படுகிற எதுவும் வெளியில் தெரியாமல் போகாது, ரகசியமாக வைக்கப்படுகிற எதுவும் வெட்ட வெளிச்சமாகாமல் போகாது. நான் உங்களுக்கு இருட்டில் சொல்வதை நீங்கள் வெளிச்சத்தில் சொல்லுங்கள்; காதோடு காதாகச் சொல்வதை விட்டு வீட்டின் மாடிகளில் நின்று உரக்கப் பிரசங்கியுங்கள். உங்கள் உடலைக் கொல்ல முடிந்தாலும் உங்கள் உயிரைக் கொல்ல முடியாத ஆட்களுக்குப் பயப்படாதீர்கள். மனிதர்களுக்கு முன்னால் என்னை ஏற்றுக்கொள்கிறவனை என் பரலோகத் தந்தைக்கு முன்னால் நானும் ஏற்றுக்கொள்வேன். என்மேல் காட்டும் பாசத்தைவிடத் தன் அப்பாவிடமோ அம்மாவிடமோ அதிக பாசம் காட்டுகிறவனும் தன் மகனிடமோ மகளிடமோ அதிக பாசம் காட்டுகிறவனும் எனக்குச் சீடனாக இருக்க முடியாது. தன்னுடைய சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்பற்றி வராத எவனும் எனக்குச் சீடனாக இருக்க முடியாது. தன்னுடைய உயிரைக் காத்துக்கொள்ள முயல்கிறவன் அதை இழந்துபோவான்; ஆனால், எனக்காகத் தன் உயிரை இழப்பவன் அதைக் காப்பாற்றிக்கொள்வான்” என்றார்.
    ஆண்டவரின் பிறப்பை முன்னறிவித்தபோது வானதூதர் குறிப்பிட்ட ‘இயேசு’ எனும் பெயருக்கு, “கடவுள் மீட்கிறார்” என்பது பொருள். இப்பெயர் அவரது தனித்துவத்தையும் பணியையும் வெளிப்படுத்துகின்றது
    “கடவுளின் ஒரே மகனாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புகின்றேன்” (I believe in Jesus Christ, God’s only Son, our Lord) என திருத்தூதர்களின் ஏற்கையின் 2ஆம் பகுப்பில் அறிக்கையிடுகிறோம். இதையே, “தந்தையிடமிருந்து கடவுளின் ஒரே மகனாக பிறந்த ஒரே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையும் நம்புகின்றேன். இவர் காலங்களுக்கு முன்பே தந்தையிடமிருந்து பிறந்தார். கடவுளினின்று கடவுளாக, ஒளியினின்று ஒளியாக, உண்மை கடவுளினின்று உண்மை கடவுளாக பிறந்தார். இவர் பிறந்தவர், உண்டாக்கப்பட்டவர் அல்லர்; தந்தையோடு ஒரே பொருள்மம் கொண்டவர். இவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன” என்று நிசேயா ஏற்கை குறிப்பிடுகிறது.

    இயேசு

    ஆபிரகாமுக்கும் அவரது வழிமரபினருக்கும் வழங்கப்பட்ட மீட்பரைக் குறித்த வாக்குறுதிகளை, ரோமில் அகுஸ்து சீசரும், பாலஸ்தீனில் ஏரோது அரசனும் ஆடசி செய்த காலத்தில் கடவுள் நிறைவேற்றினார். ஆண்டவரின் பிறப்பை முன்னறிவித்தபோது வானதூதர் குறிப்பிட்ட ‘இயேசு’ எனும் பெயருக்கு, “கடவுள் மீட்கிறார்” என்பது பொருள். இப்பெயர் அவரது தனித்துவத்தையும் பணியையும் வெளிப்படுத்துகின்றது: “ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்” (மத்தேயு 1:21). “நாம் மீட்புப் பெறுமாறு வானத்தின்கீழ், மனிதரிடையே இவரது பெயரன்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை” (திருத்தூதர் பணிகள் 4:12) என்று திருத்தூதர் பேதுரு பறைசாற்றினார்.

    கிறிஸ்து

    கிரேக்க மொழியில் ‘கிறிஸ்து’ என்பதும் எபிரேய மொழியில் ‘மெசியா’ என்பதும், “அருள்பொழிவு பெற்றவர்” எனப் பொருள்படும். மீட்பளிக்கும் தமது பணிக்காக இயேசு கடவுளால் திருநிலைப்படுத்தப் பெற்று, தூய ஆவியாரால் அருள்பொழிவு செய்யப்பட்டதால் ‘கிறிஸ்து’ என அழைக்கப்படுகிறார். உலகிற்குத் தந்தையால் அனுப்பப்பட்ட இவரே இஸ்ரயேல் மக்களால் எதிர்பார்க்கப்பட்ட மேசியா. இயேசுவும் ‘மெசியா’ எனும் சிறப்பு பெயரை ஏற்றுக்கொண்டார்; அத்தோடு அதன் பொருளையும் தெளிவாக்கினார். “அவர் விண்ணத்தில் இருந்து இறங்கி வந்தவர்” (யோவான் 3:13); “பலருடைய மீட்புக்கு ஈடாக” (மத்தேயு 20:28) தம் உயிரை சிலுவையில் பலியாக்கி உயிர்த்தெழுந்தவர். ‘கிறிஸ்தவர்’ எனும் நமது பெயர் ‘கிறிஸ்து’ எனும் பெயரிலிருந்தே வருகிறது.

    இறைமகன்

    இயேசு தன்னிகரற்ற, நிறைவான முறையில் இறைமகனாக இருக்கிறார். அதி தூய திரித்துவத்தின் இரண்டாம் ஆளும், “கடவுளின் ஒரே மகனுமாகிய” (1யோவான் 4:9) அவர், “தந்தையோடு ஒரே பொருள்மம் கொண்டவராக” உள்ளார். இயேசுவின் திருமுழுக்கு மற்றும் உருமாற்ற நிகழ்வுகளில் தந்தையின் குரலொலி, “அன்பார்ந்த மகன்” என்று அவரை வெளிப்படுத்தியது. “தந்தையை அறிந்துள்ள” (மத்தேயு 11:27) மகன் என்று இயேசு தம்மை வெளிப்படுத்தினார்; அதன் வழியாக தந்தையாகிய கடவுளோடு தனிப்பட்ட மற்றும் நிலையான விதத்தில் தாம் உறவு கொண்டிருப்பதை அவர் உறுதிப்படுத்தினார். “தந்தையின் ஒரே மகன்” (யோவான் 1:14) என்னும் நிலையில் இயேசுவின் மாட்சியைக் கண்ட திருத்தூதர்கள், அவரை “வாழும் கடவுளின் மகன்” (மத்தேயு 16:16) என்று அறிக்கையிட்டார்கள்.

    ஆண்டவர்

    விவிலியத்தில் ‘ஆண்டவர்’ எனும் பெயர் பொதுவாக, கடவுளின் அரசுரிமையைக் குறிக்கும். இயேசு இந்த சிறப்பு பெயரைத் தம்மைக் குறிக்கப் பயன்படுத்துகிறார். தமது இறை அரசுரிமையை இயற்கை, அலகை, பாவம், சாவு ஆகியவற்றின் மீது கொண்ட அதிகாரத்திலும், எல்லாவற்றிற்கும் மேலாகத் தமது சொந்த உயிர்ப்பிலும் வெளிப்படுத்தினார். தொடக்க காலத்து கிறிஸ்தவர்களின் நம்பிக்கை அறிக்கைகள், இறைத்தந்தைக்கே உரிய ஆற்றலும் மாண்பும் மாட்சியும் இயேசுவுக்கும் உரியதென பறைசாற்றின; ஆகவே கடவுள் “எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்” (பிலிப்பியர் 2:9) என்று அறிக்கையிட்டன. இயேசுவே உலகத்திற்கும் வரலாற்றுக்கும் ஆண்டவர். அவர் ஒருவருக்கே நம்மை முழுமையாகக் கையளிக்க வேண்டும்.
    வாழ்வோரையும் இறந்தோரையும் தீர்ப்பிட இயேசு கிறிஸ்து விண்ணகத்திலிருந்து மாட்சியுடன் மீண்டும் வரவிருக்கின்றார்; அவரது ஆட்சிக்கு முடிவு இராது” என்று நிசேயா ஏற்கை குறிப்பிடுகிறது.

    “வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு வழங்க இயேசு கிறிஸ்து விண்ணகத்திலிருந்து வருவார்” (From heaven Jesus Christ will come to judge the living and the dead) என திருத்தூதர்களின் ஏற்கையின் 7ஆம் பகுப்பில் அறிக்கையிடுகிறோம். இதையே, “வாழ்வோரையும் இறந்தோரையும் தீர்ப்பிட இயேசு கிறிஸ்து விண்ணகத்திலிருந்து மாட்சியுடன் மீண்டும் வரவிருக்கின்றார்; அவரது ஆட்சிக்கு முடிவு இராது” என்று நிசேயா ஏற்கை குறிப்பிடுகிறது.

    மாட்சியில் வருவார்

    படைப்பிற்கும் வரலாற்றிற்கும் ஆண்டவராகவும், திருச்சபைக்குத் தலைவராகவும் திகழ்கின்ற மாட்சிப்பெற்ற கிறிஸ்து, மறைபொருளாக இந்த மண்ணுலகில் இருக்கிறார். இங்கு அவரது ஆட்சி ஏற்கனவே விதைக்கப்பட்டுள்ளது. அதுவே, திருச்சபையில் தொடக்க நிலையில் உள்ளது. ஒருநாள் அவர் மாட்சியோடு திரும்பி வருவார்; ஆனால் எந்த நேரத்தில் வருவார் என நமக்குத் தெரியாது. இதன் காரணமாகவே, “ஆண்டவரே வாரும்” (திருவெளிப்பாடு 22:20) என இறைவேண்டல் செய்தவாறு நாம் விழிப்புடன் காத்திருக்கிறோம். ஆண்டவர் இயேசுவின் இரண்டாம் வருகையிலும், இறுதித் தீர்ப்பிலும், கடவுளின் நிலையான வெற்றி வெளிப்படும். இவ்வாறு இறையாட்சி நிலைநாட்டப்படும்.

    தீர்ப்பு வழங்குவார்

    நிலையில்லா இவ்வுலகு முடிவுறும் வேளையில், கிறிஸ்துவின் மாட்சிமிகு வருகை நிகழும். அந்நாளில் எக்காளம் முழங்க இறந்தோர் அனைவரும் உயிர்பெற்று எழுவர். வாழ்வோரும் அவர்களோடு கிறிஸ்துவின் முன்பு ஒன்றுகூட்டப்படுவர். அனைவருக்கும் மீட்பு அளிக்க வந்த கிறிஸ்து, உலக மீட்பராகத் தாம் பெற்றுக்கொண்ட அதிகாரத்தோடு தீர்ப்பு வழங்குவார். மறைவான எண்ணங்களையும், கடவுளோடும் பிறரோடும் நமக்குள்ள உறவுநிலைகள் அனைத்தையும் வெளிப்படுத்துவார். ஒவ்வொருவரும் தத்தம் செயல்களுக்கு ஏற்ப நிலை வாழ்வையோ தண்டனைத் தீர்ப்பையோ முடிவில்லாக் காலத்திற்கும் பெற்றுக்கொள்வர். இவ்வாறு “கிறிஸ்துவிடம் காணப்பட்ட நிறைவு” (எபேசியர் 4:13) வரும்போது, “கடவுளே அனைத்திலும் அனைத்துமாய் இருப்பார்” (1கொரிந்தியர் 15:28).
    கடவுளின் நீதி, இரக்கம், அன்பு ஆகியவை பற்றியும் இயேசு கற்பித்தார். உலகின் முடிவில் மக்கள் அனைவருக்கும் தீர்ப்பு வழங்கும் அரசராக தாம் வரவிருப்பதாகவும் இயேசு கூறியிருக்கிறார்.
    இயேசு கிறிஸ்து தமது பணி வாழ்வில் பல்வேறு காரியங்கள் குறித்து கற்பித்ததாக விவிலியம் குறிப்பிடுகிறது. இயேசு வழங்கிய போதனைகளை கடவுள் சார்ந்தவை, மனிதர் சார்ந்தவை என்று இரண்டு வகையாக பிரிக்கலாம்.

    கடவுள் சார்ந்தவை

    இயேசுவின் போதனைகள் விண்ணரசு அல்லது இறையாட்சியை மையப்படுத்தியதாக இருந்தன. தமது அதிகாரம் குறித்து விளக்கும் இயேசு, தம்மை இறைமகன் என்றும் விண்ணகத் தந்தையால் அனுப்பப்பட்டவர் என்றும் கூறுகிறார். தந்தையும் மகனும் ஒன்றித்து இருப்பதாகவும், அவர்களிடம் இருந்து தூய ஆவியார் புறப்படுகிறார் என்றும் இயேசு போதித்தார். இவ்வாறு, தந்தை, மகன், தூய ஆவியாருக்கு இடையில் நிலவும் உறவை எடுத்துரைக்கும் இயேசு, கடவுள் ஒருவரே என்றும் போதித்ததால் ஒரே கடவுளில் மூன்று ஆட்கள் இருக்கின்றனர் என்று நாம் நம்புகிறோம். மேலும், கடவுளின் நீதி, இரக்கம், அன்பு ஆகியவை பற்றியும் இயேசு கற்பித்தார். உலகின் முடிவில் மக்கள் அனைவருக்கும் தீர்ப்பு வழங்கும் அரசராக தாம் வரவிருப்பதாகவும் இயேசு கூறியிருக்கிறார்.

    "காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்."

    மனிதர் சார்ந்தவை

    மனிதர்கள், கடவுளையும் பிறரையும் அன்பு செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய இயேசு, அனைவரும் தம்மைப் போல் பிறரை அன்பு செய்யுமாறு வலியுறுத்தினார். பிறரைத் தீர்ப்பிட வேண்டாம் என்றும், பகைவரையும் அன்பு செய்ய வேண்டும் என்றும் அவர் போதித்தார். உடல் இச்சையை விலக்க வேண்டும் என்றும், திருமண உறவை முறிக்கக் கூடாது என்றும் அவர் கற்பித்தார். கடவுளை நம்பி வாழ வேண்டும் என்றும், உலகப் பொருட்கள் மீது பற்று வைக்கக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தினார். உலகின் முடிவில் இறந்தோர் அனைவரும் உயிர்த்தெழுவர் என்றும், அப்போது ஒவ்வொருவரும் அவரவர் செயலுக்கு ஏற்ப நிலை வாழ்வையோ தண்டனையையோ பெறுவர் என்றும் இயேசு கூறியிருக்கிறார்.
    இந்நற்செய்தியைப் படித்த நாம், இந்நற்செய்தியின் பொருளை ஆழ்ந்து ஆராய்வோம். ஏன் இப்படி ஒரு வேறுபாடு ஏற்படுகிறது என்பதை எண்ணிப் பார்ப்போம்.
    இயேசு பெருமான், இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், தாம் வளர்ந்த ஊராகிய ‘நாசரேத்’துக்கு வந்தார். தமது வழக்கப்படி, ஓய்வு நாளன்று தொழுகைக்கூடம் சென்றார். வாசிப்பதற்காக எழுந்தார். இறைவாக்கை அருளிய ‘எசயாவின்’ சுருள் ஏடு, அவரிடம் தரப்பட்டது. அவர் அதைப் பிரித்தார். அவர் பிரித்த பகுதியில், கீழ்க்கண்டவாறு எழுதப்பட்டிருந்தது.

    “ஆண்டவரின் ஆவியானது, என் மேல் உள்ளது. ஏனென்றால், அவர் எனக்கு அருள்பொழிவைச் செய்துள்ளார். ஏழை மக்களுக்கு நற்செய்தியை அறிவிக்கவும், சிறைப்பட்டவர்கள் விடுதலை பெறுவர், பார்வையற்றவர்கள் பார்வை பெறுவர் என்று முழக்கமிடவும், ஒடுக்கப்பட்டவர்களை விடுதலை செய்து அனுப்பவும், ஆண்டவர், அருளைத்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்.”

    பிறகு அந்த ஏட்டைச் சுருட்டி, ஏவலரிடம் கொடுத்து விட்டு, அங்கே அவர் அமர்ந்தார்.

    அக்கூடத்தில் அமர்ந்திருந்தவர்களின் கண்கள் எல்லாம், அவரையே உற்று நோக்கியிருந்தன. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, “நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று” என்றார். அவருடைய வாயில் இருந்து வந்த அருள் மொழிகளைக் கேட்டு, அனைவரும் வியப்படைந்தனர்.

    ‘இவர் யோசேப்பின் மகன் அல்லவா?’ என்று கூறி, எல்லோரும் அவரைப் பாராட்டினர்.

    அவர், அவர்களிடம், “நீங்கள் என்னிடம், ‘மருத்துவரே! உம்மையே நீர் குணமாக்கிக் கொள்ளும்’ என்னும் பழமொழியைச் சொல்லி, ‘கப்பர் நாகும்’ என்ற ஊரில், நீர் செய்ததாக, நாங்கள் கேள்விப்பட்டவற்றையெல்லாம் உம் சொந்த ஊராகிய இவ்விடத்திலும் செய்யும் என்று கண்டிப்பாய் கூறுவீர்கள். ஆனால் நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

    ‘இறைவாக்கினர் யாரும் சொந்த ஊரில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.’ உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன். எலியாவின் காலத்தில், சில ஆண்டுகளாக வானம் பொய்த்துப் போனது. நாட்டிலே, பெரிய பஞ்சம் உண்டானது. அந்தக் காலத்தில், இஸ்ரவேலரிடையே, கைம்பெண்கள் பலர் இருந்தனர். ஆயினும் அவர்களுள் எவரிடமும், ‘எலியா’ அனுப்பப்படவில்லை.

    ‘சீதோனைச்’ சேர்ந்த ‘சரிபாத்தில்’ வாழ்ந்த ஒரு கைம்பெண்ணிடமே அனுப்பப்பட்டார். மேலும் இறைவாக்கினரான ‘எலியாவின்’ காலத்தில் இஸ்ரேவலர்களிடையே ‘தொழுநோயாளர்கள்’ பல பேர் இருந்தனர். ஆயினும் அவர்களுள் எவருக்கும் நோய் நீங்கவில்லை. சிரியாவைச் சார்ந்த ‘நாமான்’ என்பவருக்கே நோய் நீங்கியது” என்றார்.

    தொழுகைக் கூடத்தில் இருந்த அனைவரும் இவ்வார்த்தைகளைக் கேட்டபோது, கோபம் கொண்டனர். அனைவரும் எழுந்து, அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வூரில் இருந்த மலை உச்சியில் இருந்து கீழே தள்ளி விட இழுத்துச் சென்றனர். அவர், அவர்கள் நடுவே நடந்து சென்று, அங்கிருந்து சென்று விட்டார்.

    இந்நற்செய்தியைப் படித்த நாம், இந்நற்செய்தியின் பொருளை ஆழ்ந்து ஆராய்வோம். ஏன் இப்படி ஒரு வேறுபாடு ஏற்படுகிறது என்பதை எண்ணிப் பார்ப்போம்.

    இயேசு பெருமானாருக்கும், இந்த மக்களுக்கும் இடையே காணப்பட்ட பகைமைக்குக் காரணம் என்ன? மறைநூல் வாக்கை, அவர்கள் புரிந்து கொண்டதில் ஏற்பட்ட வேறுபாடுதான்.

    இயேசு பெருமானின் ஊர் மக்கள், ‘யூதர்களாகிய நம்மோடு மட்டும் கடவுள் உடன்படிக்கை செய்து கொண்டார். அந்த உடன்படிக்கையின்படி, நம்மை மட்டும், அவர் தம் எதிரிகளிடம் இருந்து மீட்பார்’ என்று எண்ணிக் கொண்டிருந்தனர்.

    ஆனால் இயேசு பெருமான் இவற்றில் இருந்து மாறுபடுகிறார். அதனால்தான், அவருடைய சொந்த ஊரைச் சேர்ந்தவர்கள், கோபம் அடைகின்றனர்.

    ‘இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.’

    இக்கருத்தை இன்றும் நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். ஆம்! சாதாரண மனித வாழ்க்கையில்கூட, தம் சொந்த ஊரில், மதிப்பில்லாமல் போவதை நாம் அறிய முடிகிறது. காரணம், அவர் யார் என்பதை நாம் நேரிலே பார்த்த காரணத்தால், இப்படி எண்ண முடிகிறது. சாதாரண மனிதருக்கே இப்படியென்றால், இறைவாக்கை அருள்வதற்கு வந்தவருக்கு என்ன மதிப்பு இருக்கும். இதைத்தான் இயேசு பெருமான், இப்படிக் கூறுகிறார்.

    அவர் வாயிலில் இருந்து வந்த அருள்மொழியைக் கேட்டவர்கள், ‘இவர் யோசேப்பின் மகன் அல்லவா?’ என்று பாராட்டினார்கள்.

    ‘கப்பர் நாகும்’ என்ற ஊரில் செய்ததைச் செய்யும் என்று கேட்பீர்கள் என்று சொல்லி விட்டு, அக்காலத்தில் நடந்ததைக் கூறுகிறபொழுது, அவர்கள் இவரை வெறுக்கின்றனர்.

    காரணம், ‘எந்த வித்தியாசமும் பார்க்காமல், எல்லா ஏழை மக்களையும், ஒடுக்கப்பட்டவர்களையும் விடுவிப்பார்’ என்ற கருத்தை ஏற்க மறுத்ததுதான்.

    இறைவனின் மீட்பு என்பது, சகலருக்குமானது என்ற இயேசு பெருமானின் புரிதலை ஏற்றுக் கொள்ள இவர்களுக்கு மனமில்லை என்பதுதான்.

    இயேசு பெருமானின் போதனை, குறிப்பிட்ட இனத்தவர்களுக்கல்ல. எல்லோருக்குமானது என்பதை உணர்வோம். நற்செய்தியைப் பின்பற்றி உயர்வடைவோம். ஆழ்ந்து நற்செய்தியைப் பயில்வோம்.
    நாம் எல்லாம் எவ்வளவுதான் பெரியவர்களானாலும் வானக தந்தையின் குழந்தைகள்.நாம் அவருக்கு கீழ்ப்படியாமல் எவ்வளவு தூரம் ஓடி போனாலும் நம்மை அரவணைக்க அவரது கைகள் எப்போதும் நீட்டப்பட்டே இருக்கின்றன.
    திருப்பலி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருக்கின்றார்கள் அக்குடும்பத்தினர்.மூத்த பையன்கள் இருவரும் நடக்கின்றனர்..இளைய பையனுக்கு ஒன்றரை வயது.அவனை அப்பா தூக்கி வைத்து இருக்கிறார். அண்ணன்மார்களுடன் எட்டிவைத்து நடக்கவே இந்த இளைய மகனுக்கு ஆசை.அதற்காக அவன் அப்பாவின் இடுப்பில் இருந்து வலுக்கட்டாயமாக இறங்க பார்க்கிறான். சாலைகள் பரப்பப்பட்டு இருந்ததால் அவனை அப்பா நடக்க விட வில்லை.

    இருப்பினும் அவன் அப்பாவின் கைகளை நெட்டி தள்ளி இறங்கத்தான் எத்தனிக்கிறான்.இறுதியில் அவனை அப்பா கீழே விடுகிறார்.அவனும் தனது அண்ணன் மார்களுடன் குடுகுடுவென ஓடினான்.ஆனால் சிறிது நேரத்தில் அவன் கால் இடறி கீழே விழுந்து ஓவென அழுதான்.உடம்பில் காயம் ஏதும் இல்லை ஆனாலும் அலறினான்.அண்ணன்மார்கள் அணைத்தார்கள் ஆயினும் அழுகையை நிறுத்தவில்லை.இறுதியில் அப்பா கைகளை நீட்ட அவன் ஓடி வந்து அப்பாவின் தோளில் ஏறிக் கொண்டான்.அப்பாவின் தோளை அடைந்த போதுதான் அவன் ஆறுதல் அடைந்தான்.

    நாம் எல்லாம் எவ்வளவுதான் பெரியவர்களானாலும் வானக தந்தையின் குழந்தைகள்.நாம் அவருக்கு கீழ்ப்படியாமல் எவ்வளவு தூரம் ஓடி போனாலும் நம்மை அரவணைக்க அவரது கைகள் எப்போதும் நீட்டப்பட்டே இருக்கின்றன.அத்தகைய அன்பின் தந்தை நமக்கு இருக்க நாம் ஏன் பாவக்குழிகளை விட்டு விட்டு அவரிடம் செல்லக்கூடாது?அவரது வலிய கரங்களை அணுகிச் செல்ல ஏன் இன்னும் தாமதம்?

    "ஆண்டவர் கூறுவது இதுவே :நீ திருப்பி வந்தால் நான் உன்னை முன்னய நிலைக்கு உயர்த்துவேன் "
    தன்னை சுற்றியிருந்த ஒவ்வொருவராலும் பாவி என்று இழிவாக கருதப்பட்ட சக்கேயு, தன்னுடைய பாவத்தை அறிக்கையிடுவதைவிட, அதற்கு பரிகாரம் செய்வதை முக்கியமாகக் கருதினார்.
    ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ள போதே அவரைத் தேடுங்கள்; அவர் அண்மையில் இருக்கும்போதே அவரை நோக்கி மன்றாடுங்கள். கொடியவர் தம் வழிமுறையையும், தீயவர் தம் எண்ணங்களையும் விட்டுவிடுவார்களாக; அவர்கள் ஆண்டவரிடம் திரும்பி வரட்டும்; அவர் அவர்களுக்கு இரக்கம் காட்டுவார்; அவர்கள் நம் கடவுளிடம் வரட்டும்; ஏனெனில் மன்னிப்பதில் அவர் தாராள மனத்தினர் (எசாயா: 55:6,7).

    லூக்கா 19-ம் அதிகாரத்தில் சக்கேயு என்ற மனிதரை பற்றி கூறப்பட்டுள்ளது. இயேசு எரிகோவுக்கு வந்திருக்கிறார் என்பதை அறிந்த சக்கேயு, அவரைப் பார்க்கும் ஆவலில் அதற்கு என்ன வழி என்று தேடினார். அதற்கு ஒரு தடை இருந்தது. அவர் மிகவும் குள்ளமாய் இருந்தார். மேலும் அங்கு ஏற்கனவே இயேசுவை காண்பதற்கு மக்கள் திரளாய் கூடி நின்றிருந்தனர். அதனால் அவரால், இயேசுவை நெருங்கிப் பார்க்க முடியவில்லை.

    சக்கேயு பெரிய செல்வந்தர் மட்டுமல்ல, அவர் வரிதண்டுவோருக்குத் தலைவராகவும் இருந்தார். அவருக்கு கீழ் பலர் வேலை செய்தனர். ஆனாலும் அவர் அதை பற்றியெல்லாம் சிந்திக்கவில்லை. அவருடைய உள்ளத்தில் ‘இயேசுவை காண வேண்டும்’ என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கி இருந்தது. எனவே தன்னுடைய தகுதி மற்றும் அந்தஸ்தை அவர் ஒரு பொருட்டாக எண்ணாமல், அங்கிருந்த ஒரு காட்டு அத்தி மரத்தின் மேல் ஏறினார். ஏனெனில் அந்த வழியாகத்தான் இயேசு வருகிறார் என்பதை அவர் முன்பே அறிந்திருந்தார்.

    தங்களது தேவைக்காக இயேசுவை தேடி வந்த மக்களின் மத்தியில், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அவரை காண வேண்டும் என்ற எண்ணத்தோடு மட்டுமே மரத்தின் மீது ஏறி இருந்தார், சக்கேயு. ‘மனிதனோ முகத்தை பார்க்கிறான் தேவனோ உள்ளத்தை காண்கிறார்’ என்ற வசனத்தின்படி, சக்கேயுவின் அன்பை உணர்ந்த இயேசு, தாமாகவே சக்கேயு ஏறி அமர்ந்திருந்த மரத்தின் அருகில் வந்தார்.

    வந்தவர் அவரை பார்த்து, “சக்கேயு.. விரைவாய் இறங்கி வாரும். இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்” என்றார்.

    சக்கேயு, யாரை தான் காண வேண்டும் என்று ஆர்வமுடன் வந்தாரே, அவரே தன்னுடைய வீட்டிற்கு வருகிறேன் என்கிறாரே என்ற ஆனந்தத்தில், ஆர்வமாய் மரத்திலிருந்து இறங்கி வந்தார். பின்னர் இயேசுவை வணங்கி, அவரை தன்னுடைய வீட்டிற்கு மகிழ்ச்சியுடன் அழைத்துச் சென்றார்.

    சக்கேயுவையும், அவர் செய்யும் தொழிலையும் பற்றி அறிந்த மக்கள், அவரை ‘பாவி’ என்று அழைத்தனர். ‘ஒரு பாவியின் வீட்டிற்கு இயேசு செல்கிறார்’ என்று அவர்கள் கூறிக்கொண்டனர். ஆனால் அனைத்தையும் அறிந்த தேவன், சக்கேயுவை குற்றப்படுத்தவும் இல்லை, குறை கூறவும் இல்லை.

    இயேசுவின் அழைப்பை ஏற்ற சக்கேயு, மரத்தில் இருந்து மட்டும் இறங்கி வரவில்லை, தன்னுடைய பாவ வாழ்க்கையை விட்டும் விலகி வந்தார். தன்னுடைய பாவத்தை பற்றி இயேசு எதுவும் கூறாத போதும், சக்கேயு எழுந்து நின்று, “ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகிறேன்; எவர் மீதாவது பொய்க் குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால், நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்” என்று இயேசுவிடம் கூறினார்.

    தன்னை சுற்றியிருந்த ஒவ்வொருவராலும் பாவி என்று இழிவாக கருதப்பட்ட சக்கேயு, தன்னுடைய பாவத்தை அறிக்கையிடுவதைவிட, அதற்கு பரிகாரம் செய்வதை முக்கியமாகக் கருதினார். அதனால்தான் மன்னிப்பதில் தாராள மனம் படைத்தவராக இருந்த இயேசு கிறிஸ்து, தாமாகவே சக்கேயுவின் செயல்களைப் பார்த்து அவரை நோக்கி இவ்வாறு கூறினார். “இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று; ஏனெனில் இவரும் ஆபிரகாமின் மகனே! இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிட மகன் வந்திருக்கிறார்” என்று சொன்னார்.

    இறைவனின் அழைப்பு என்பது ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்படுகிறது. அதனை நாம் ஏற்கும் விதம்தான் மாறுபடுகிறது. தொடக்க நூலில் ஆதாம் - ஏவாள் பாவம் செய்ததால், இறைவனுக்கு பயந்து தோட்டத்தில் ஒரு மரத்தின் பின் மறைந்து இருந்தார்கள். கடவுள் தாமே அவர்களை அழைத்தபோதும், அவரை எதிர்கொள்ள முடியாமல் தவித்து நின்றனர். கீழ்படியாமையால் பாவம் செய்த அவர்கள் இருவரும், தங்களின் பாவத்தை குறித்து வருந்தவும் இல்லை; அதற்கான பரிகாரத்தை தேடவும் இல்லை. செய்த செயலுக்கு மற்றவர்களை காரணம் காட்டினர்.

    ஆனால் சக்கேயுவோ, இறைவன் தனக்கு விடுத்த அழைப்பை ஏற்று, அதை சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டு மீட்பை அடைந்தார். எனவே இந்த நாளில் நாமும் நமக்கு வாய்ப்பு கிடைக்கும் இந்த தருணத்திலேயே, பாவ வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொள்வோம். அத்துடன் நம்மால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டு, அவர்களின் பாதிப்புக்கு ஈடாக நம்மால் இயன்ற உதவிகள் செய்யும் வரத்தையும், பலத்தையும் இறைவனிடம் மன்றாடி கேட்போம்.
    ஜீவனுள்ள ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்மைத்தாமே சிலுவையில் அறையப்பட ஒப்புக் கொடுத்ததின் நோக்கம் நாம் ஆரோக்கியமாக இருப்பதற்காகவே.
    ‘அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக் கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார்’ (மத்தேயு 8:17).

    ஜீவனுள்ள ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்மைத்தாமே சிலுவையில் அறையப்பட ஒப்புக் கொடுத்ததின் நோக்கம் நாம் ஆரோக்கியமாக இருப்பதற்காகவே. நம்முடைய சரீரத்தில் ஏற்படுகிற ஒவ்வொரு பலவீனங்களையும், ஒவ்வொரு நோய் களையும் சிலுவையில் சுமந்து விட்டார் என வேதம் சொல்லுகிறது.

    அப்படியானால் இனி நாம் வியாதிகளை சுமக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை முதலாவது நாம் விசுவாசிக்க வேண்டும். இச்செய்தியை வாசிக்கிற உங்களுக்குள்ளே தீராத நோய்களும் பலவீனங்களும் இருக்குமானால் கட்டாயம் ஆண்டவர் உங்களை சுகமாக்கி, உங்களுக்கு விடுதலைத் தர வல்லவராயிருக்கிறார்.

    இயேசு எனக்காக சிலுவையில் மரித்தார் என்றும், அவர் சிந்தின விலையேறப்பெற்ற ரத்தம் என்னுடைய வியாதிகளைப் போக்கும் என்றும் மனதார நீங்கள் விசுவாசிக்க வேண்டும். அப்பொழுது கட்டாயம் அவரது தெய்வீக சுகத்தை அனுபவிக்க முடியும்.

    வாழ்நாளெல்லாம் வியாதியோடும், பலவீனத்தோடும் இருப்பதுதான் தேவனுடைய சித்தம் என அநேகர் தவறான கருத்துடையவர்களாக இருக்கிறார்கள்.

    ‘பிரியமானவனே, உன் ஆத்மா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்’ (III யோவான் 2)

    மேற்கண்ட வசனத்தை கவனித்தீர்களா? நாம் ஆரோக்கியமாகவும், சுகமாகவும் இருப்பதுதான் தேவனுடைய விருப்பம். இதை மனப்பூர்வமாக விசுவாசியுங்கள். மாத்திரமல்ல, ‘நம் முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது. அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்’ (ஏசாயா 53:5) என வேதம் தெளிவாகக் கூறுகிறது.

    ஆகவே, எப்படிப்பட்ட வியாதிகளாக இருந்தாலும் சிலுவையில் சிந்தின தம்முடைய ரத்தத்தின் வல்லமையினால் பிசாசின் கிரியைகளை அழித்து தெய்வீக சுகத்தை கட்டாயம் இயேசு தருவார். ஏனெனில் அவர் இன்றும் ஜீவிக்கிறார்.
    ×