கார்த்திகை தீப திருவிழா: திருவண்ணாமலை கோவிலுக்கு காஞ்சிபுரத்தில் இருந்து செல்லும் மாலைகள்
- திருவண்ணாமலை கோவில் மலையில் இன்று மாலை மகாதீபம் ஏற்றப்படுகிறது.
- உற்சவர் அருணாசலேசுவரரும், உண்ணாமுலையம்மனும் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.
கார்த்திகை தீப திருவிழா இன்று கொண்டாடப்படுகிறது. திருவண்ணாமலை கோவில் மலையில் இன்று மாலை மகாதீபம் ஏற்றப்படுகிறது.
இந்த விழாவின்போது உற்சவர் அருணாசலேசுவரரும், உண்ணாமுலையம்மனும் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். வீதியுலா வரும்போது சுவாமிக்கும், அம்மனுக்கும் சாற்றப்படும் அலங்கார மாலைகள் காஞ்சிபுரத்தில் உள்ள ஜவுளி வியாபாரிகள் சங்கத்தினரே அனுப்பி வைத்து வருகிறார்கள். இந்த மாலைகளே சுவாமிகளுக்கு சாற்றப்படுகின்றது.
இந்த நிலையில் காஞ்சிபுரம் காந்தி ரோட்டில் உள்ள ஜவுளிக்கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் 163-வது ஆண்டாக அலங்கார மாலைகளை திருவண்ணாமலை கோவிலுக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சங்கத்தின் தலைவர் கே.கே.சிவகுமாரன் குத்து விளக்கேற்றி வைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக மாலைகள் அனைத்தும் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு தீபாராதனைகள் செய்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமிக்கு சாத்தப்படும் மாலைகளை வணங்கி சென்றனர்.