புதுச்சேரி

கடன் பிரச்சினையில் மதுவில் விஷம் கலந்து குடித்து வி.ஏ.ஓ. தற்கொலை

Published On 2023-08-11 11:54 IST   |   Update On 2023-08-11 11:54:00 IST
  • மதுக்கடை அருகே ஒருவர் மயங்கிய நிலையில் வாயிலும் மூக்கிலும் நுரை தள்ளிய நிலையில் படுத்து கிடந்தார்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாகூர்:

புதுவை அடுத்த கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் மதுக்கடை அருகே நேற்று காலை ஒருவர் மயங்கிய நிலையில் வாயிலும் மூக்கிலும் நுரை தள்ளிய நிலையில் படுத்து கிடந்தார்.

இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கிருமாம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் விஷம் குடித்து இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து கிருமாம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் அவரை பரிசோதித்த போது பாக்கெட்டில் இருந்த ஆதார் கார்டை வைத்து அடையாளம் கண்டனர். விசாரணையில் இறந்து கிடந்தவர் கடலூர் முட்லூரை சேர்ந்த தாமரைச்செல்வன் (வயது 39) என்பதும். கடலூர் மாவட்டம் மேல் புவனகிரியில் வி.ஏ.ஓ.வாக பணிபுரிந்து வந்ததும் திருமணமாகி தீபா கவுரி (28) என்ற மனைவியும் 1 ½ வயதில் மகன் இருப்பதும் தெரிய வந்தது.

மேலும் கடன் வாங்கியதில் மன உளைச்சல் இருந்ததாகவும் இதனால் பூச்சி மருந்தை மதுவுடன் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இதைதொடர்ந்து பிணத்தை புதுவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து கிருமாமாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News