புதுச்சேரி

இங்கிலாந்தில் வேலை வாங்கித்தருவதாக புதுவை பெண்ணிடம் ரூ.30 லட்சம் மோசடி: 4 பேர் கைது

Published On 2023-09-13 04:32 GMT   |   Update On 2023-09-13 04:32 GMT
  • வங்கிக் கணக்கின் மூலம் மோசடி பணத்தை பெற்றவர்கள் அவருக்கு அவ்வப்போது சிறுதொகையை கமிஷனாகவும் லால்சங்லிர் சோரிக்கு கொடுத்துள்ளனர்.
  • வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரி:

இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு தேடுபவர்களை குறிவைத்து ஒரு கும்பல் வேலைவாய்ப்பு உள்ளது போன்று அவர்களை நம்பவைத்து போலியாக தயாரிக்கப்பட்ட ஆவணங்களை அனுப்பி மோசடி செய்வது வழக்கமாக உள்ளது.

இதை நம்பி படித்த இளைஞர்கள் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து வருகின்றனர்.

இதே போல் புதுவையை சேர்ந்த பெண் ஒருவரிடம் இங்கிலாந்தில் வேலைவாய்ப்பு உள்ளதாக கூறி ரூ.30 லட்சத்தை ஆன்லைன் மூலம் பெற்று மோசடி செய்துள்ளனர்.

இதுதொடர்பாக புதுவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக நைஜீரியாவை சேர்ந்த ரியூபென், உகாண்டாவை சேர்ந்த நம்லேபுரோசி, பெங்களூருவை சேர்ந்த ராஜேஷ் ஆகிய 3 பேரை இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு தலைமையிலான குழு கைது செய்தது.

கைது செய்யப்பட்டவர்கள் அசாம் மாநிலத்தை சேர்ந்த லால் சங்லிர் சோரி (வயது 24) என்பவரது வங்கிக்கணக்கு மூலம் பணத்தை பெற்றிருப்பது தெரியவந்தது. 9-ம் வகுப்பு வரையே படித்த அந்த வாலிபர் பெங்களூருவில் ஓட்டல் ஒன்றில் சமையல் வேலை செய்துவந்தார்.

அவரது வங்கிக் கணக்கின் மூலம் மோசடி பணத்தை பெற்றவர்கள் அவருக்கு அவ்வப்போது சிறுதொகையை கமிஷனாகவும் லால்சங்லிர் சோரிக்கு கொடுத்துள்ளனர். மோசடி பணம் என்று தெரிந்தும் அதை அவர் செலவு செய்து வந்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து லால் சங்லிர் சோரியையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News