புதுச்சேரி

கடலில் கட்டுமரங்களை தடுப்பு போல் நிறுத்தி மீனவர்கள் போராட்டம்

Published On 2023-12-31 07:05 GMT   |   Update On 2023-12-31 07:05 GMT
  • சென்னையிலிருந்த வந்த ஒரு தம்பதி முகத்துவாரத்தில் விழுந்து காயமடைந்தது.
  • புதுவையில் புத்தாண்டு கொண்டாட சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கில் குவிந்துள்ளனர்.

புதுச்சேரி:

புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகள் கடல், ஆற்றின் முகத்துவாரத்தில் படகு பயணம் செய்வதை விரும்புகின்றனர்.

இதையடுத்து புதுவை அரசின் சுற்றுலாத்துறை மூலம் ஆற்றுப்பகுதியில் படகுகளை இயக்க சில நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் புற்றீசல்போல 100-க்கும் மேற்பட்ட படகுகள் சுற்றுலா பயணிகளுக்காக பாதுகாப்பின்றி இயக்கப்பட்டன. சென்னையிலிருந்த வந்த ஒரு தம்பதி முகத்துவாரத்தில் விழுந்து காயமடைந்தது.

இதையடுத்து பாதுகாப்பு கருதி சுற்றுலா படகுகள் இயக்குவதை அரசு தடை செய்தது. முறையாக அனுமதி பெற்று, பாதுகாப்புடன் படகுகளை இயக்கும் நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதன்படி புதுவையில் 300-க்கும் மேற்பட்டோர் சுற்றுலா படகு இயக்க அனுமதி கோரினர். அனுபவம் கொண்ட 8 நிறுவனங்களுக்கு அரசு அனுமதியளித்துள்ளது.

இந்தநிலையில் புதுவையில் புத்தாண்டு கொண்டாட சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கில் குவிந்துள்ளனர். சுற்றுலா பயணிகள் பலர் கடலில் படகு சவாரி செய்து மகிழ்கின்றனர்.

இந்த படகுகளை துறைமுக பகுதியிலிருந்து இயக்குகின்றனர்.

மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால் மீன்பிடி தொழில் பாதிக்கப்படுவதாகவும், சுற்றுலா படகுகள் இயக்கப்படுவதை கண்டித்தும் புதுவை மீனவர்கள் இன்று திடீர் போராட்டத்தில் இறங்கினர். துறைமுகத்தை நோக்கி வரும் பெரியாறு பகுதியில் கட்டுமரங்களை கடலில் குறுக்கே நிறுத்தி வலை வீசி போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து மீனவர்கள் கூறும்போது, சுண்ணாம்பாறு படகு குழாம் முழுமையாக சுற்றுலாவுக்கு ஒதுக்கப்பட்டது.

தற்போது பெரியாறு பகுதியில் படகுகள் இயக்கப்படுவதால் மீன்வளம் பாதிக்கப்படும்.

இறால் முட்டைகள், மீன் குஞ்சுகள் அழிந்து வருகிறது. இதனால் கடல் வளமும், ஆற்று வளமும் பாதிக்கப்படுகிறது. இதனால் மீன்பிடி தொழில் பாதிக்கப்படுகிறது. அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அனைத்து விசைப்படகு மீனவர்களுடன் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்துவோம் என அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News