மீனை சைவத்தில் சேர்க்கலாம்- கவர்னர் தமிழிசை புதுயோசனை
- புதுவையில் கடல் அரிப்பை தடுக்க திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
- இந்தியாவிலேயே முதல் முறையாக புதுவை அரசு நீல புரட்சிக்காக கையெழுத்திட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை கம்பன் கலையரங்கத்தில் மீன்வளத்துறை சார்பில் விழா நடந்தது. இதில் கவர்னர் தமிழிசை பேசியதாவது:-
புதுவையில் கடல் அரிப்பை தடுக்க திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. தமிழக பகுதியில் கற்கள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் இருமாநில அரசுகளும் பேச்சு வார்த்தை மூலம் கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே முதல் முறையாக புதுவை அரசு நீல புரட்சிக்காக கையெழுத்திட்டுள்ளது.
42 கி.மீ. கடற்கரையை நீல பொருளாதார மண்டலமாக மாற்ற புதுவையை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. அந்தளவு மத்திய அரசு புதுவை மீது அக்கறையும், பாசமும் கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
கவர்னர் தமிழிசை பேசும்போது, முட்டை அசைவமா? சைவமா? என்ற சர்ச்சை நீடித்து வருகிறது.
அதேபோல மீனை சாப்பிடாதோர் அசைவம் என்றும், சாப்பிடுவோர் சைவம் என்றும் சொல்கின்றனர். எனக்கு பிடித்த உணவு மீன். என்னை பொருத்த வரை மீனை சைவத்தில் சேர்க்கலாம். இதனால் மீனவர்களின் வாழ்வு மேம்படும் என்றார்.