தலித் கிறிஸ்தவர்களுக்கு இடஒதுக்கீடு
- புதுவை காங்கிரஸ் வலியுறுத்தல்
- மத்திய அரசு முன்வர வேண்டும் என்ற ஒரு தீர்மானத்தை தமிழக சட்டசபையில் நிறை வேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களுக்கு, அரசியல் சாசனத்தின் சட்டப்படி அளிக்கப்படுகின்ற, உதவிகள், உரிமைகள், பாதுகாப்புகள், மற்றும் இட ஒதுக்கீடுகள் உள்ளிட்ட அனைத்து சலுகைகளும், இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ள அட்டவணை இனத்தில் இருந்த தலித் கிறிஸ்தவ மக்களுக்கும் கிடைக்க வழி செய்யும் ஒரு அரசியல் திருத்த சட்டத்தை நிறைவேற்றி தர மத்திய அரசு முன்வர வேண்டும் என்ற ஒரு தீர்மானத்தை தமிழக சட்டசபையில் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளனர்.
இதேபோல புதுவை சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசு அனுப்ப வேண்டும். தலித் அல்லது ஆதிதிராவிட அட்டவணை ஜாதியில் இருந்த மக்கள், கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பின்பும் அவர்களது சமூக மற்றும் பொருளாதார நிலை அப்படியே உள்ளது. இந்து மதத்தில் இருந்து மாறிய கிறிஸ்தவ மக்களையும் தீண்டாமை எண்ணத்தோடுதான் பார்க்கின்றனர். கிறிஸ்தவ மதத்தில் தீண்டாமை இல்லை என்பதை காரணம் காண்பி த்து அவர்களுக்கு சலுகைகள் மறுக்கப்படக்கூடாது. இட ஒதுக்கீடுகளே இல்லாமல் அனைத்து மக்களுக்கும் பொருளாதார அடிப்படையில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு கொடுக்க முன்வந்தால், இந்த தலித் கிறிஸ்தவர்கள் நிச்சயமாக அதிக ஒதுக்கீடு பெறுவார்கள்.
கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய தலித் ஆதிதிராவிட மக்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைகளுக்கு ஏற்ப, பூர்வீக இந்தியர்களா கிய இவர்களுக்கும் உதவு வதுதான் மனித நேயமாகும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.