புதுச்சேரி

புதுச்சேரி சட்டசபையில் 22-ந்தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல்

Published On 2024-02-15 07:24 GMT   |   Update On 2024-02-15 07:24 GMT
  • 2024-25-ம் நிதியாண்டிற்கான கூடுதல் செவினங்களும் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பும் உள்ளது.
  • மீதமுள்ள நிதியை முழுமையாக செலவு செய்ய முதலமைச்சர் ரங்கசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி:

புதுச்சேரி சட்டசபையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

ஆனால் புதுச்சேரி சட்டசபையில் 2011-ம் ஆண்டு முதல் தொடர்ந்து இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. நடப்பு நிதியாண்டு மார்ச் மாதம் 9-ந்தேதி கவர்னர் உரையுடன் தொடங்கிய சட்டசபையில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

6 மாதத்திற்கு ஒரு முறை சட்டசபையை கூட்ட வேண்டும் என்ற விதிமுறை காரணமாக கடந்த செப்டம்பர் 9-ந்தேதி மீண்டும் சட்டசபை கூட்டப்பட்டது. ஒருநாள் நடந்த கூட்டம் அலுவல்கள் முடிந்து ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் குறுக்கிடுவதால் மார்ச் மாதம் மீண்டும் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. அதேநேரத்தில் அரசின் நிதி செலவினங்களுக்கு ஒப்புதல் பெற வருகிற 22-ந் தேதி காலை 9.45 மணிக்கு புதுவை சட்டசபை கூடுகிறது.

அன்றைய தினம் நிதி பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி, 2024-25-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அனேகமாக 4 மாதத்திற்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.

சட்டசபை கூடும் தகவலை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

2024-25-ம் நிதியாண்டுக்கான மானிய திட்ட முன்வரைவு பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமியால் அறிமுகப்படுத்தப்பட்டு கருத்துகை செய்யப்படும். பேரவை முன்வைக்கப்பட வேண்டிய ஏடுகள் இருந்தால், அவற்றை சட்டசபையில் வைக்க அரசு துறைகளுக்கு அறிவுறுத்தப்படும்.

2024-25-ம் நிதியாண்டிற்கான கூடுதல் செவினங்களும் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பும் உள்ளது. கடந்த நிதியாண்டு பட்ஜெட்டில் 75 சதவீதம் செலவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள நிதியை முழுமையாக செலவு செய்ய முதலமைச்சர் ரங்கசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் இந்த நிதியாண்டில் முழுமையாக நிதி செலவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News