புதுச்சேரி

சுயேட்சை வேட்பாளர்கள் வீடுகளில் காவல் காக்கும் போலீசார்

Published On 2024-04-02 09:53 GMT   |   Update On 2024-04-02 09:53 GMT
  • போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கடத்தல் நாடகமாடியது தெரியவந்தது.
  • பாராளுமன்ற தேர்தலில் 7 அரசியல் கட்சி வேட்பாளர்கள், 19 சுயேட்சை வேட்பாளர்கள் என 26 பேர் போட்டியிடுகின்றனர்.

புதுச்சேரி:

ஏனாம் பிராந்திய பா.ஜனதா தலைவர் தெம்மாடி துர்காபிரசாத் கடந்த சட்டசபை தேர்தலின்போது ஏனாம் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டார்.

ஏனாமில் பா.ஜனதா, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் முதலமைச்சர் ரங்கசாமி போட்டியிட்டார். இதனால் அதிருப்தியடைந்த துர்காபிரசாத் சுயேட்சை வேட்பாளராக களம் இறங்கினார். பா.ஜனதா அவரை கட்சியிலிருந்து நீக்கியது.

இந்த நிலையில் அவர் மாயமாகி 5 நாட்களுக்கு பிறகு வந்தார். அவரை சிலர் கடத்தி மனுவை வாபஸ்பெற மிரட்டியதாக தெரிவித்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கடத்தல் நாடகமாடியது தெரியவந்தது. இதனால் போலீசார் 5 நாட்கள் கடும் அலைச்சலுக்கு ஆளாகினர்.


இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்க டி.ஜி.பி. உத்தரவிட்டார்.

புதுச்சேரியில் தற்போது நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் 7 அரசியல் கட்சி வேட்பாளர்கள், 19 சுயேட்சை வேட்பாளர்கள் என 26 பேர் போட்டியிடுகின்றனர்.

அனைவருக்கும் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் நாள் முழுவதும் பாதுகாப்புக்கு இருக்கு வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

போலீஸ்துறையில் சிக்மா, நுண்ணறிவு, குற்றம், கடலோர காவல், பயிற்சி பள்ளி என பிற பணிகளில் உள்ளவர்கள் நியமிக்கப்பட்டு வேட்பாளர்களுடன் வலம் வருகின்றனர்.

வேட்பாளர் எங்கு செல்கிறார் என தொடர்ந்து கண்காணிக்கின்றனர். சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் பலர் பிரசாரம் ஏதும் செய்யாமல் தங்கள் வீடுகளில்தான் உள்ளனர். அவர்கள் வீடுகளில் போலீசார் காவல் காத்து வருகின்றனர்.

Tags:    

Similar News