எதிர்க்கட்சிகளுக்கு வாக்களித்து ஓட்டுகளை வீணாக்காதீர்கள்: ஜி.கே.வாசன்
- நமச்சிவாயம் வெற்றி பெற்றால், மத்திய அரசு பிரதமருடன் ஒத்த கருத்துடன் இருப்பார்.
- உங்கள் பிரச்சனையை தீர்க்கும் நமச்சிவாயத்திற்கு ஓட்டு அளிக்க வேண்டும்.
புதுச்சேரி:
தேசிய ஜனநாயக கூட்டணியில் புதுச்சேரி தொகுதியில் பா.ஜனதா சார்பில் அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிடுகிறார்.
அவரை ஆதரித்து லாஸ்பேட்டையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
புதுச்சேரியில் காமராஜர் எண்ணங்களை பிரதிபலிக்கும் முதலமைச்சராக ரங்கசாமி திகழ்கிறார். மாணவர்கள் படிப்படியாக உயர்ந்து, நல்ல நிலையை அடைய வேண்டும் என்பதற்காக, மத்திய அரசுடன் இணைந்து புதுச்சேரி அரசு செயலாற்றி வருகிறது. கொரோனாவில் இருந்து இந்தியாவை மீட்டவர் பிரதமர் மோடி.
கொரோனா காலத்தில் அண்டை நாடுகள் பசி பட்டினியால் தவித்தபோது, இந்தியாவில் பசி பட்டினி கிடையாது. நாட்டின் பொருளாதாரத்தையும் மிக சிறப்பாக கையாண்டார். உள்நாட்டிலே கொரோனா தடுப்பூசி தயாரித்து மக்களுக்கு வழங்கினார்.
நமச்சிவாயம் மண்ணின் மைந்தர். காங்கிரசில் பணியாற்றிய அவருக்கு முறையான அங்கீகாரம் இல்லாததால், பா.ஜனதா அவரை அடையாளம் கண்டு அமைச்சராக்கியது. தற்போது அவரது குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும்.
நமச்சிவாயம் வெற்றி பெற்றால், மத்திய அரசு பிரதமருடன் ஒத்த கருத்துடன் இருப்பார். காங்கிரஸ் வெற்றி பெற்றால் மத்திய பா.ஜனதாவுடனும், மாநில என்.ஆர். காங்கிரஸ் அரசுடனும் ஒத்தகருத்து இருக்காது.
அ.தி.மு.க. வெற்றி பெற்றாலும் இதே நிலை தான். அதனால் உங்கள் ஓட்டுக்களை வீணாக்காதீர்கள். எதிர்க்கட்சிகளுக்கு நீங்கள் அளிக்கும் ஓட்டு குப்பை தொட்டியில் போடுவதிற்கு சமம்.
உங்கள் ஓட்டுக்கு உரிமை, மரியாதை உள்ளது. அதை நிலைநாட்ட, உங்கள் பிரச்சனையை தீர்க்கும் நமச்சிவாயத்திற்கு ஓட்டு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தில் முதலமைச்சர் ரங்கசாமி உட்பட கூட்டணி கட்சியினர் பலர் பங்கேற்றனர்.