அரசு கட்டிடத்தை இடித்த அரசியல் பிரமுகர்
- ரியல் எஸ்டேட் தொழிலுக்காக அங்கன்வாடி மைய கட்டிடத்தை கடந்த 23-ம் தேதி ஜே.சி.பி. இயந்திரம் கொண்டு இடித்தார்
- ஓ.பி.எஸ். அணி ஒன்றிய செயலாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி:
ஆரோவில் அருகே இரும்பை கிராமத்தில் தமிழக அரசின் அங்கன்வாடி மைய கட்டிடம் உள்ளது. இந்த அங்கன்வாடி மைய கட்டிடம் அந்தப்பகுதி மக்களின் வாக்குச்சாவடி மையமாகவும் இருந்து வருகிறது.
இந்நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணியின் ஒன்றிய செயலாளர் ராஜ கோபால் (வயது 70). அங்கன்வாடி மைய கட்டிடம் பின்புறம் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதற்கு இடத்தை செப்பணிட்டார் வந்தார்.
ரியல் எஸ்டேட் தொழிலுக்காக அங்கன்வாடி மைய கட்டிடத்தை கடந்த 23-ம் தேதி ஜே.சி.பி. இயந்திரம் கொண்டு இடித்தார். அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் அங்கு திரண்டு வந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் இரும்பை ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி கபாலி ஆரோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் ஆரோவில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் ராஜகோபால் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரியல் எஸ்டேட் தொழிலுக்கு பாதை அமைப்பதற்காக அரசின் அங்கன்வாடி மைய கட்டிடத்தை இடித்த ஓ.பி.எஸ். அணி ஒன்றிய செயலாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.