அரசு துறைகளின் காலி பணியிடங்களில் 90 சதவீதத்திற்கு நியமன அறிவிப்பு வெளியிடவில்லை
- மார்க்சிஸ்டு, கம்யுனிஸ்டு கண்டனம்
- பணி நியமன அறிவிப்பாணை வெளி யிட்டு 6 மாதங்களுக்குள் பணி தேர்வை முடித்திருக்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை மாநில மார்க்சிஸ்டு கம்யுனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
புதுவை மாநிலத்தில் சுமார் 11 ஆயிரத்திற்கும் அதிகமான அரசு காலி பணியிடங்கள் உள்ளன. மத்திய பா.ஜனதா அரசு புதுவை அரசு காலி பணியிடங்களை நிரப்ப அனுமதிக்கவில்லை. நிர்வாக செயல்பாட்டில் ஏற்பட்ட மந்தம், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற அரசியல் அழுத்தம் காரணமாக தற்போது சில காலி பணியிடங்கள் நிரப்பப்பட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைகளில் ஓட்டுநர் பதவிக்கு 31 .3.2023-ல் உடல் தகுதி, திறன் தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் எழுத்துத் தேர்வு இதுவரை நடத்தப்பட வில்லை. பணி நியமன அறிவிப்பாணை வெளி யிட்டு 6 மாதங்களுக்குள் பணி தேர்வை முடித்திருக்க வேண்டும். அறிவித்து 10 மாதங்கள் ஆகியும் பணி நியமனத்திற்கான எழுத்துத் தேர்வை நடத்தாதது கடும் கண்டனத்திற்குரியது.
தேர்வை உடனே நடத்த வேண்டும். காலியாக உள்ள அரசு பணியிடங்களில் 10 சதவீத அளவில்தான் பணி நியமன அறிவிப்பும் நியமனங்களும் நடந்துள்ளன.
90 சதவீத காலி பணியிடங்களுக்கு அரசு பணி நியமன அறிவிப்பு வெளியிடவில்லை. மாநில அரசு காலி பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.