கோப்பு படம்.
கைது செய்யப்பட்ட 3 பேரிடம் 5 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் மீட்பு
- திருக்கனூர் போலீசார், சிறையில் அடைக்கப்பட்ட 3 பேரையும் கோர்ட்டு அனுமதி பெற்று, காவலில் வைத்து விசாரித்தனர்.
- திருடிய நகைகளை அவர்கள் அடகு வைத்திருந்தது தெரிய வந்தது.
புதுச்சேரி:
திருக்கனூார் போலீஸ் சரகத்தில் கடந்த மாதம் அடுத்தடுத்து பூட்டிய வீடுகளின் கதவை உடைத்து நகை, பணம் மற்றும் மளிகை பொருட்கள் திருடுபோனது.
இதில் ஏனாம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகத்தின் செட்டிப்பட்டு கிராமத்தில் உள்ள வீட்டிலும் திருடுபோனது. இது குறித்து திருக்கனுார் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தீவிரமாக தேடிவந்தனர்.
இந்நிலையில் கடந்த 1-ந் தேதி, நெட்டப்பாக்கம் போலீசார் வாகன சோதனை செய்தனர். அப் போது, பைக்கில் வந்த 3 பேரை பிடித்து விசாரித் தனர்.
அதில், அவர்கள் விழுப்புரம் மாவட்டம், வளவனூரை அடுத்த விநாயகபுரத்தைச் சேர்ந்த அய்யனார் (44), சீனிவாசன், (26), சிறுவந்தாட்டைச் சேர்ந்த தமிழ்ராஜ்(36), என்பதும், அவர்கள் ஓட்டி வந்த பைக், நெட்டப்பாக்கத்தில் திருடியது என்பதும், மேலும், இவர்கள், திருக்கனூரில் இன்ஸ்பெக்டர் வீடு உள்ளிட்ட 4 வீடுகளின் கதவை உடைத்து திருடியதும் தெரிய வந்தது.
அதன் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார், 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். அதனைத் தொடர்ந்து திருக்கனூர் போலீசார், சிறையில் அடைக்கப்பட்ட 3 பேரையும் கோர்ட்டு அனுமதி பெற்று, காவலில் வைத்து விசாரித்தனர்.
மேற்குப் பகுதி எஸ்.பி. வம்சித ரெட்டி திருக்கனூர் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோர் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
திருக்கனூர் பகுதியில் திருடிய நகைகளை அவர்கள் அடகு வைத்திருந்தது தெரிய வந்தது.
அவர்களிடமிருந்து 5 பவுன் தங்க நகை, 650 கிராம் வெள்ளி பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.