செய்திகள்

நித்ய கல்யாண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் தரிசனம்

Published On 2018-07-05 13:11 IST   |   Update On 2018-07-05 13:11:00 IST
திருவிடந்தையில் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் இன்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தையில் நித்ய கல்யாண பெருமாள் கோவில் உள்ளது.

இது 108 வைணவ கோவில்களில் 62-வது கோவிலாகும். இங்கு ஆதிவராக பெருமாள், அகிலவல்லி தாயாருடன் நித்ய கல்யாண பெருமாள், கோமளவல்லி தாயார் உற்சவர் என பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.

திருமண தடை நீக்கம் மற்றும் ராகு, கேது தோ‌ஷங்களின் பரிகார கோவிலாகவும் இது விளங்குகிறது. இந்து சமய அறநிலையத் துறை மற்றும் மத்திய தொல்லியல்துறை இணைந்து இந்த கோவிலை நிர்வாகம் செய்து வருகின்றனர்.

கோவிலில் புதிதாக கொடிமரம் அமைத்து கடந்த மூன்று ஆண்டுகளாக திருப்பணிகள் நடந்து வந்தது. பணிகள் முழுவதும் முடிந்து இன்று (வியாழக்கிழமை) கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி பிரதிஷ்டை, யாகம், வாஸ்து சாந்தி, அஷ்டபந்தனம் சாற்றுதல் வழிபாடுகள் தொடங்கி நடந்தது. காலை 9.45 மணியளவில் வேதபுஷ் பன்னர்கள் கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.



விழாவில் இந்து சமய அற நிலையத்துறை ஆணையர் அசோக்குமார், காஞ்சிபுரம் மாவட்ட எம்.பி மரகதம், குமரவேல், இந்து அறநிலையத்துறை ஆணையர் ஆர்.ஜெயா வேலூர் ஆணையர் அசோக்குமார் கலந்து கொண்டனர்.

கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, பஸ் வசதி செய்யப்பட்டு இருந்தது.
Tags:    

Similar News