உலகம்

செங்கடலில் ஹவுதி டிரோன்களை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா

Published On 2024-04-01 03:19 GMT   |   Update On 2024-04-01 03:19 GMT
  • காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல் நடத்துகிறது ஹவுதி.
  • ஹவுதி தாக்குதலை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கூட்டாக இணைந்து முறியடித்து வருகின்றன.

செங்கடல் வழியாக செல்லும் வெளிநாட்டு வணிக கப்பல்கள் மீது ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சிக்குழு தாக்குதல் நடத்தி வருகிறது. ஆளில்லா விமானங்கள் மூலம் கப்பல்களை குறிவைத்து தாக்குகிறது.

இதனை எதிர்க்கும் வகையில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் ஒன்றிணைந்து செங்கடலில் ஹவுதி கிளர்ச்சி குழு தாக்குதலை எதிர்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் ஹவுதியின் இரண்டு டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

ஒரு டிரோன் செங்கடலில் பறந்து சென்றபோது சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், மற்றொரு டிரோன் தாக்குதலுக்கு புறப்பட தயாராக இருந்தபோது சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்கா, "எங்களுடைய படைகளை பாதுகாக்கவும், கடற்பயணம் சுதந்திரமாக மேற்கொள்ளவும், சர்வதேச கடற்பகுதி பாதுகாப்பானது என்பதை உருவாக்கவும், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் அதிகபட்ச பாதுகாப்பிற்காகவும் தேவையான நடவடிக்கை" எனத் தெரிவித்துள்ளது.

ஏமனின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இது தொடர்பாக எந்த தகவலையும் வெளியிடவில்லை.

காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் செல்லும் வணிக கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருக்கின்றன. மேலும் இஸ்ரேலை நோக்கி ஏவுகணை தாக்குதலும் நடத்தி வருகின்றன.

Tags:    

Similar News