அமெரிக்கா தாக்குதல்: வெனிசுலாவில் பொதுமக்கள் உட்பட 40 பேர் உயிரிழப்பு
- தலைநகர் காரகாஸ்-இல் உள்ள முக்கிய ராணுவ நிலைகள் மீது அமெரிக்கா, ஆபரேஷன் சதர்ன் ஸ்பியர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது.
- வெனிசுலாவில் பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
வெனிசுலா தலைநகர் காரகாஸ்-இல் உள்ள முக்கிய ராணுவ நிலைகள் மீது அமெரிக்கா, ஆபரேஷன் சதர்ன் ஸ்பியர் என்ற பெயரில் நேற்று அதிகாலை வான்வழித் தாக்குதல் நடத்தியது.
இதில், அந்நாட்டு அதிபர் நிகொலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்க ராணுவம் சிறைபிடித்தது. அவர்கள் அமெரிக்காவுக்கு நாடு கடதப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
மேலும் வெனிசுலா எண்ணெய் இருப்பை இனி அமெரிக்க நிறுவனங்களே நிர்வகிக்கும் என்றும், அமெரிக்காவுக்கு சாதகமான அரசு அமையும் வரை அங்கு அமெரிக்க ராணுவம் தங்கியிருக்கும் என்றும் டிரம்ப் அறிவித்தார்.
வெனிசுலாவில் பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. வெனிசுலா இடைக்கால அதிபராக துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ்-ஐ நியமிக்க வெனிசுலா உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் நேற்று வெனிசுலாவில் அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உடபட 40 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோர் மதுரோவின் பாதுகாப்பிற்கு இருந்த வெனிசுலா ராணுவத்தைச் சேர்ந்தவர்கள்.
அதிபர் மாளிகை மற்றும் ராணுவ முகாம்களுக்கு அருகில் வசித்து வந்த பொதுமக்களும் இந்தத் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்க தாக்குதலில் பல கட்டிடங்கள் தரைமட்டமானதாகவும், ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக டொனால்ட் டிரம்ப் பேசுகையில் இந்த ராணுவ நடவடிக்கையில் ஒரு அமெரிக்க வீரர் கூட காயமடையவில்லை என்றும், முழு தாக்குதலையும் டிவி ஷோ போல தான் நேரலையில் பார்த்ததாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.