34% வரியை குறைக்க சொல்லி மிரட்டிய டிரம்ப்.. 84% ஆக உயர்த்தி சீனா அறிவிப்பு - வலுக்கும் வர்த்தக போர்
- இன்று முதல் இந்த வரிவிதிப்பு அமலுக்கு வந்துள்ளன.
- 34 சதவீத வரியை திரும்பப்பெற சீனாவுக்கு 24 மணி நேரம் கெடு விதித்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி பல்வேறு உலக நாடுகளின் இறக்குமதிக்கு அதிக வரிகளை விதித்தார்.
அதன்படி இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 26 சதவீத வரியும், சீனா பொருட்களுக்கு 34 சதவீதம் வரியும் வியட்நாமுக்கு 46 சதவீதமும், வங்க தேசத்துக்கு 37 சதவீதமும், ஜப்பானுக்கு 24 சதவீதமும் விதிக்கப்பட்டது. இன்று (புதன்கிழமை) முதல் இந்த வரிவிதிப்பு அமலுக்கு வந்துள்ளன.
34 சதவீத வரி விதிப்புக்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்கவுக்கு 34 சதவீத வரியை விதித்தது. இதற்கு டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்தார். 34 சதவீத வரியை திரும்பப்பெற சீனாவுக்கு 24 மணி நேரம் கெடு விதித்தார். ஆனால் டிரம்ப்புக்கு அடிபணிய மறுத்த நிலையில் சீனா மீது 104 சதவீத வரியை அமெரிக்கா விதித்துள்ளது. அதுவும் உடனே அமலுக்கு வரும் என்றும் தெரிவித்தது.
இந்நிலையில் அமெரிக்காவுக்கு ஏற்கனவே விதித்த 34 சதவீத வரியை 84 சதவீதமாக சீனா தற்போது உயர்த்தி உள்ளது. இந்த 84 சதவீத வரிவிதிப்பு நாளை (வியாழக்கிழமை) முதல் அமலுக்கு வரும் என்றும் சீனா தெரிவித்துள்ளது.
இவ்வாறு போட்டி போட்டு இரண்டு வல்லரசுகளும் வரி விதித்துக்கொள்வதால் டிரம்ப் தொடங்கிய சர்வதேச வர்த்தக போர் மேலும் தீவிரமடைந்துள்ளது.