ஈரான் தாக்குதல்... பதிலளிக்காத இஸ்ரேல் - ஜெர்மனியில் நெதன்யாகு?
- சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் போர்க்குற்றங்களுக்காக நெதன்யாகுவிற்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
- நெதன்யாகு விமானம் பெர்லினில் தரையிரங்கியதாக தகவல்கள் பரவல்
ஈரான்மீது அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில் ஈரான் உச்சத் தலைவர் அலி கமேனி உயிரிழந்ததை அறிவித்ததில் இருந்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின், நேரலையிலோ, பொதுவெளியிலோ தோன்றவில்லை. இச்சூழலில் இன்று இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதனால் நெதன்யாகுவின் உயிருக்கு ஏதேனும் ஆபத்துகள் ஏற்பட்டிருக்குமா என கேள்விகள் எழுந்தது. ஆனால் தற்போதுவரை இந்த தாக்குதல் தொடர்பாக இஸ்ரேல் தரப்பில் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை.
இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஜெர்மனியில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கு ஆதாரமாக அவரது "விங் ஆஃப் சியோன்" (Wing of Zion) விமானம் பெர்லினில் தரையிறங்கியதாகச் சில தரவுகள் பகிரப்பட்டு வருகின்றன. ஆனால் நெதன்யாகு தொடர்ந்து இஸ்ரேலில் தான் உள்ளார் என அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல் அவிவில் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் மொசாத் தலைவர்களுடன் நெதன்யாகு ஆலோசனை நடத்தும் புகைப்படங்களை இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ளது.
மறுபுறம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் போர்க்குற்றங்களுக்காக நெதன்யாகுவிற்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. ஜெர்மனி இந்த நீதிமன்றத்தின் உறுப்பு நாடு என்பதால், நெதன்யாகு அங்கு சென்றால் அவரைக் கைது செய்ய வேண்டிய சட்டப்பூர்வக் கடமை ஜெர்மனிக்கு உள்ளது. எனவே, இப்போதைக்கு அவர் அங்கு செல்வதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு எனவும் கூறப்படுகிறது.
இருப்பினும் ஜெர்மனி அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சமீபத்தில் ஜெர்மனிக்கு அழைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.