உலகம்
null

இங்கிலாந்து ராணி எலிசபெத்தை கொல்ல முயற்சி நடந்தது- 40 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான தகவல்

Published On 2023-05-27 05:22 GMT   |   Update On 2023-05-27 07:41 GMT
  • 1983-ம் ஆண்டு மார்ச் மாதம் ராணி 2-ம் எலிசபெத் தனது கணவர் மன்னர் பிலிப்புடன் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டார்.
  • போலீஸ் அதிகாரி மற்றும் போலீசில் பேசிய நபரின் பெயர்கள் திருத்தப்பட்டு உள்ளன.

வாஷிங்டன்:

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ந்தேதி தனது 96-வது வயதில் மரணம் அடைந்தார். இந்த நிலையில் 1983-ம் ஆண்டு அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட அவரை கொல்ல முயற்சி நடந்ததாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.

இது தொடர்பாக ஆவணங்கள், அமெரிக்க மத்திய புலனாய்வு பிரிவின் (எப்.பி.ஐ.) இணையதளத்தில் வெளியிட்டுள்ளன. இதில் ராணி எலிசபெத்தின் அமெரிக்க பயணம் தொடர்பாக சேமிக்கப்பட்ட கோப்புகள் வெளியிட்டு உள்ளது. 1983-ம் ஆண்டு மார்ச் மாதம் ராணி 2-ம் எலிசபெத் தனது கணவர் மன்னர் பிலிப்புடன் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டார்.

அதற்கு முன்பாக சான்பிரான்சிஸ்கோ போலீஸ் அதிகாரிகளுக்கு வந்த தொலைபேசி அழைப்பில் பேசிய நபர், வடக்கு அயர்லாந்தில் தனது மகள் ரப்பர் புல்லட்டால் கொல்லப்பட்டதாகவும் அதற்காக ராணி எலிசபெத் படகில் செல்லும் போது கோல்டன் கேட் பாலத்தில் இருந்து ஒரு பொருளை வீசி ராணிக்கு தீங்கு விளைவிக்க முயற்சிப்பேன் அல்லது யோசெமிட்டி தேசிய பூங்காவுக்கு அவர் வரும் போது கொல்ல முயற்சிப்பேன் என்று தெரிவித்தார்.

இதையடுத்து ராணி எலிசபெத் படகு அருகில் வரும் போது பாலத்தின் நடைபாதைகளை மூடுவதற்கு உளவுத்துறையால் உத்தேசிக்கப்பட்டதாக அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

யோசெமிட்டி தேசிய பூங்காவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதா? அல்லது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது குறித்து சொல்லப்படவில்லை.

மேலும் போலீஸ் அதிகாரி மற்றும் போலீசில் பேசிய நபரின் பெயர்கள் திருத்தப்பட்டு உள்ளன. 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்த தகவல் வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News