உலகம்

உக்ரைன் மீது ரஷியா டிரோன், ஏவுகணை தாக்குதல்: 9 பேர் பலி

Published On 2025-06-23 14:46 IST   |   Update On 2025-06-23 14:46:00 IST
  • நேற்றிரவு முதல் இன்று காலை வரை டிரோன் மற்றும் ஏவுகணை மூலம் தாக்குதல்.
  • குடியிருப்பு கட்டிடங்கள், மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் குற்றச்சாட்டு.

உக்ரைன் தலைநகர் கீவ் மீது நேற்றிரவு முதல் இன்று காலை வரை ரஷியா டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. குடியிருப்பு இடங்கள், மருத்துவமனைகள், விளையாட்டு கட்டமைப்புகள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். 25-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

குடியிருப்பு கட்டிடம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், அந்த கட்டிடம் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளது. இடிபாடுகளில் மக்கள் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது. இதனால் மீட்புப்படையினர் மற்றும் தீயணைப்புப்படை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கீவ் நகரை தவிர்த்து செர்னிஹிவ் பிராந்தியத்தில் குறுகிய தூரம் சென்று தாக்கும் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 3 குழந்தைகள் உள்பட பலர் காயம் அடைந்துள்ளனர்.

பிலா டிசெர்க்வாவில் உள்ள நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 8 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த நகர் கீவில் இருந்து தெற்மேற்கில் 85 கி.மீ. தூரத்தில் உள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை கீவ் மீது ரஷியா கடுமையான தாக்குதல் நடத்தியது. இதில் 28 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 23 பேர் குடியிருப்பு கட்டிடத்தில் வசித்து வந்தவர்கள். கடந்த 4 வருடமாக நடைபெற்று வரும் போரில் இது மிகவும் கொடூரமான தாக்குதல் என் ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார்.

கீவ் மீது கடுமையான தாக்குதல் நடத்தி ஒருவாரம் கூட முடியவடையாக நிலையில், தற்போது புதிய தாக்குதலை ரஷியா நடத்தியுள்ளது.

Tags:    

Similar News