உக்ரைன்- ரஷியா போர் நிறுத்த ஒப்பந்தம்: அமெரிக்கா காலக்கெடு நிர்ணயித்துள்ளதாக ஜெலன்ஸ்கி தகவல்
- உக்ரைன்- ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் விரும்புகிறார்.
- முக்கிய அம்சங்கள் கொண்ட போர் நிறுத்த திட்டங்களை வழங்கியுள்ளார்.
ரஷியா உக்ரைன் மீது படையெடுத்து 4 வருடங்கள் நிறைவடைய இருக்கிறது. இருந்தபோதிலும் இரு நாடுகளுக்கு இடையிலான போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ரஷியா- உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
உக்ரைன்- ரஷியா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முக்கிய அம்சங்கள் கொண்ட போர் நிறுத்த பரிந்துரையை அறிவித்துள்ளார். அதனடிப்படையில் உக்ரைன் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இருந்த போதிலும் நிலத்தை விட்டுக்கொடுப்பது மற்றும் நாட்டின் பாதுகாப்பு உத்தரவாதம் ஆகியவற்றில் உக்ரைன் உடன்படவில்லை. இதனால் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்ந்து இழுபறியாகவே உள்ளது.
இந்த நிலையில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒப்பந்தத்தை அடைவதற்கு உக்ரைன் மற்றும் ரஷியாவுக்கு ஜூன் மாதம் வரை அமெரிக்கா காலக்கெடு வழங்கியுள்ளதாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஜூன் மாதத்திற்குள் ஒப்பந்தம் ஏற்படவில்லை என்றால், டிரம்ப் நிர்வாகம் அதற்கான அழுத்தத்தை கொடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஜூன் மாதத்திற்குள் எல்லாவற்றையும் செய்ய அமெரிக்க விரும்புகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர எல்லாவற்றையும் செய்வார்கள். அனைத்து நிகழ்ச்சிக்குமான தெளிவான அட்டவணையை அமெரிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளது என ஜெலன்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் பரிந்துரை தொடர்பான அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை அடுத்த வாரம் மியாமியில் நடைபெற வாய்ப்புள்ளது. இதில் உக்ரைன் பங்கேற்கும் எனவும் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஒரு பக்கம் போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்ற போதிலும், மறுபக்கம் ரஷியா உக்ரைனின் மின்கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.