உலகம்

காசாவில் தொடரும் உயிரிழப்புகள் ஏற்க முடியாதது - இந்தியா திட்டவட்டம்

Published On 2024-01-10 07:50 GMT   |   Update On 2024-01-10 07:50 GMT
  • இஸ்ரேல் ஹமாஸ் போர், 95 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது
  • தொடரும் குழந்தைகள் மற்றும் பெண்களின் உயிரிழப்பு அச்சுறுத்துவதாக உள்ளது

கடந்த 2023 அக்டோபர் 7 தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போரினால் பாலஸ்தீன காசா பகுதியில் இதுவரை 23,210 பேர் உயிரிழந்துள்ளனர்.

95 நாட்களுக்கும் மேலாக போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இது குறித்து பேச அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொது சபை (UNGA) கூட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற இந்தியாவின் நிரந்தர ஐ.நா. பிரதிநிதி ருசிரா கம்போஜ் (Ruchira Kamboj), பாலஸ்தீன காசா பகுதியில் நிலவும் சூழல் குறித்து இந்தியாவின் தற்போதைய நிலைப்பாட்டை குறித்து பேசினார்.

அதில் அவர் தெரிவித்ததாவது:

காசாவிற்கு இதுவரை இந்தியா 70 டன் அளவிற்கு மனிதாபிமான உதவிகள் வழங்கி உள்ளது. அதில் 16.5 டன் மருந்துகளும் இடம்பெற்றன. அத்துடன் $5 மில்லியன் நிதியுதவி வழங்கினோம்.

அக்டோபர் 7 அன்று நடைபெற்ற பயங்கர தாக்குதல்தான் இந்த பிரச்சனைக்கெல்லாம் தூண்டுதல் என்பதை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். பயங்கரவாத தாக்குதல்களை ஒரு போதும் இந்தியா ஆதரிக்காது.

ஆனால், காசாவில் தொடர்ந்து நடைபெறும் பெருமளவு உயிரிழப்புகள் சற்றும் ஏற்று கொள்ள முடியாதது. அதிலும் குறிப்பாக தொடர்ந்து நடைபெறும் குழந்தைகள் மற்றும் பெண்களின் உயிரிழப்புகள் அச்சுறுத்துவதாக உள்ளது.

இப்பிரச்சனையின் தொடக்கம் முதலே இந்தியா தனது நிலைப்பாட்டில் தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளது.

மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து கிடைத்திட, சச்சரவு தீவிரமடைவதை நிறுத்தியாக வேண்டும். அதற்கு பேச்சுவார்த்தையை துவங்க வேண்டும். அதன் மூலம் மட்டுமே இந்த சிக்கலுக்கு ஒரு அமைதியான தீர்வு கிடைக்கும்.

இவ்வாறு ருசிரா கூறினார்.


Tags:    

Similar News