உலகம்

"இணைந்து வாழாமல் இணையாக வாழ்கிறார்கள்: அகதிகள் குறித்து இங்கிலாந்து செயலர்

Published On 2023-09-28 08:18 GMT   |   Update On 2023-09-28 08:18 GMT
  • குடியேறும் நாட்டு கலாச்சாரத்தோடு இணைய கட்டாயமில்லாதது தவறு
  • நாட்டின் பாதுகாப்பு, சமூக அமைதி ஆகியவை கேள்விக்குறியாகிறது

இங்கிலாந்து நாட்டின் உள்துறை செயலாளராக பணிபுரிபவர் சுவெல்லா பிரேவர்மேன் (Suella Braverman). அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள அமெரிக்கன் என்டர்பிரைஸ் எனப்படும் நிறுவனம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:

பன்முக கலாச்சாரம் தோல்வியடைந்து விட்டது. பன்முக கலாச்சாரம் என்பது தற்காலத்திற்கு ஒவ்வாத சித்தாந்தம். இந்த தவறான சித்தாந்தத்தால் இங்கிலாந்திற்குள் அகதிகளாக பலர் வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சித்தாந்தத்தின்படி ஒரு நாட்டிற்குள் அகதிகளாக வருபவர்களுக்கு அந்த நாட்டு மக்களோடு இணைந்து வாழ வேண்டும் எனும் கட்டாயம் இல்லாத நிலை உள்ளது. இதனால் பல சிக்கல்கள் ஏற்படுகிறது. அவர்கள் குடியேறும் நாட்டு மக்களோடு இணைந்து வாழாமல் தங்கள் கலாச்சாரத்தையே பின்பற்றி தனியாக வாழ்கிறார்கள். ஒரு சில சமயம், நாட்டின் பாதுகாப்பிற்கும், சமூக அமைதிக்கும் கேடு விளைவிக்கும் செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். ஐரோப்பாவின் அனைத்து நகரங்களின் தெருக்களிலும் பன்முக கலாச்சாரம் தோல்வியடைந்ததற்கான அடையாளங்கள் தெரிகின்றன. இங்கிலாந்தில் லெய்சஸ்டர் பகுதியில் கடந்த வருடம் நடந்த மோதல்களும் இதில் அடங்கும். ஒரு நாட்டின் கலாச்சாரத்தில் பெரும் வேகத்தில், பெரும் திரளாக வேறொரு கலாச்சாரத்தை சேர்ந்தவர்கள் உள்ளே நுழையும் போது, அந்நாட்டில் ஏற்கெனவே இருந்த கலாச்சாரம் நீர்த்து போகிறது.

இவ்வாறு சுவெல்லா தெரிவித்தார்.

ஆனால், ஐ.நா. கூட்டமைப்பின் அகதிகளுக்கான அமைப்பு, சுவெல்லாவின் கருத்துக்களுக்கு ஆட்சேபம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில், எதிர்கட்சியான லேபர் கட்சியை சேர்ந்தவர்கள் இவரது கருத்துக்களை எதிர்க்கின்றனர். ஆனால் சுவெல்லா சார்ந்திருக்கும் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்தவர்கள் இதனை ஆதரித்து "உலகில் உள்ளவர்களுக்கெல்லாம் இங்கிலாந்து அகதிகள் முகாமாக இருக்க முடியாது" என கூறி வருகின்றனர்.

Tags:    

Similar News