பாகிஸ்தானுடன் போர் பயிற்சியா?: இலங்கை கடற்படை மறுப்பு
- சீனாவின் 'யுவான் வாங்-5' உளவு கப்பல் இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
- பாகிஸ்தானின் பி.என்.எஸ். தைமூர் என்ற போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளது.
கொழும்பு :
இந்தியாவின் எதிர்ப்புக்கு மத்தியில், சீனாவின் 'யுவான் வாங்-5' உளவு கப்பலை இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்த, அந்த நாட்டு அரசு அனுமதி அளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் சீனாவில் கட்டப்பட்ட பாகிஸ்தானின் பி.என்.எஸ். தைமூர் என்ற போர்க்கப்பல் கடந்த வெள்ளிக்கிழமையன்று கொழும்பு துறைமுகத்துக்கு வந்து சேர்ந்துள்ளது. இந்த நிலையில் இலங்கை கடற்படையும், பாகிஸ்தான் கடற்படையும் கூட்டு போர்ப்பயிற்சி நடத்தப்போவதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
இதை இலங்கை கடற்படை தவறான தகவல் என கூறி திட்டவட்டமாக மறுத்துள்ளது. வங்காளதேசத்தின் சட்டகிராம் துறைமுகத்தில் பாகிஸ்தானின் போர்க்கப்பலை நிறுத்த அந்த நாட்டின் அரசு அனுமதி மறுத்ததால், பாகிஸ்தான் கடற்படையில் இணையும் வழியில் கொழும்பு துறைமுகத்தில் அதை நிறுத்த இலங்கை அனுமதித்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.