உலகம்

15 பாலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்தது இஸ்ரேல்

Published On 2025-11-05 17:20 IST   |   Update On 2025-11-05 17:20:00 IST
  • ஹமாஸ் அமைப்பு இதுவரை 21 உடல்களை ஒப்படைத்துள்ளது.
  • இஸ்ரேல் 285 பாலஸ்தீனர்களின் உடல்களை காசாவுக்கு அனுப்பி வைத்துள்ளது.

இஸ்ரேல்- காசா (ஹமாஸ்) இடையே கடந்த மாதம் 10ஆம் தேதி போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதன் முதற்கட்டமாக பிணைக்கைதிகள்- சிறைக்கைதிகள் பரிமாற்றம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து தற்போது வரை உயிரிழந்தவர்கள் உடல்கள் இருதரப்பிலும் இருந்து ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

ஹமாஸ் அமைப்பினர் தங்களிடம் உயிருடன் இருந்த 20 பிணைக்கைதிகளை விடுவித்தினர். அதற்குப்பதிலாக இஸ்ரேலில் சிறையில் உள்ள பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டனர்.

பின்னர், 2023 அக்டோபர் மாதம் 7ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் உள்பட பலர் உயிரிழந்தனர். அவர்களது உடல்களை ஹமாஸ் அமைப்பினர் காசா முனைக்கு எடுத்துச் சென்றனர். அந்த உடல்களை தற்போது ஹமாஸ் அமைப்பினர் ஒப்படைத்து வருகின்றனர். ஆனால், இரண்டு நாட்கள் அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை ஒன்று அல்லது இரண்டு உடல்களை ஒப்படைத்து வருகிறது.

அதன்படி உயிரிழந்த இஸ்ரேலின் ராணுவ வீரர் உடலை ஹமாஸ் நேற்று ஒப்படைத்தது. அதற்கு இணையாக 15 பாலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் ஒப்படைத்துள்ளது. கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனை இந்த உடல்களை பெற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளது.

ஹமாஸ் இதுவரை 21 உடல்களை ஒப்படைத்துள்ளது. அதற்கு பதிலாக 285 பாலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் ஒப்படைத்துள்ளது.

ஹமாஸ் அமைப்பினர் ஒரு பிணைக்கைதியின் உடல்களை ஒப்படைப்பதற்கு இணையாக இஸ்ரேல் 15 உடல்களை ஒப்படைத்து வருகிறது.

2023 அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து ஹமாஸ் கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 251 பேர் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.

ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் காசா மீது போர் பிரகடனம் செய்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது. இதில் அப்பாவி பொதுமக்கள் உள்பட 68,800 பேர் கொல்லப்பட்டனர்.

Tags:    

Similar News