கோவிட் காலத்தில்கூட இல்லை... 37 ஆண்டுகளில் முதல்முறையாக மரபைமீறிய கமேனி... அமெரிக்க அச்சுறுத்தல் காரணமா?
- கோவிட்-19 காலக்கட்டத்திலும் அவர் மரபை மீறவில்லை.
- ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதி அப்துல்ரஹிம் மௌசவி இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி நேற்று நடைபெறவிருந்த ராணுவ விமானப்படைத் தளபதிகளுடனான வருடாந்திர சந்திப்பைத் தவிர்த்துள்ளார். 1989-ல் தலைமை பொறுப்பை ஏற்றதுமுதல் கமேனி ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் இந்தக்கூட்டத்தில் கலந்துகொண்டு வந்தார். கோவிட்-19 காலக்கட்டத்திலும் அவர் அந்த மரபை மீறவில்லை.
இந்நிலையில் 37 ஆண்டுகளில் இந்தாண்டு முதல்முறையாக கூட்டத்தை புறக்கணித்துள்ளார். கமேனிக்குப் பதில் ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதி அப்துல்ரஹிம் மௌசவி இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இதற்கு ஈரானிய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக எந்தக் காரணத்தையும் தெரிவிக்கவில்லை என்றாலும், இதற்கு அமெரிக்காவுடனான பதற்றம்தான் காரணம் என கூறப்படுகிறது. அமெரிக்காவுடனான போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூட்டத்தை கமேனி தவிர்த்ததாக கூறப்படுகிறது. மறுதரப்பினர் 86 வயதாகும் கமேனியின் உடல்நிலை சீராக இல்லை என்றும், அதன் காரணமாகவே அவர் கூட்டத்தைத் தவிர்த்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றன.
1979-இல் ஈரானிய விமானப்படை அதிகாரிகள் அயதுல்லா கொமேனிக்கு விசுவாசப் பிரமாணம் செய்த தினத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 8-ம் தேதி இந்த முக்கியச் சந்திப்பு நடத்தப்படுகிறது.