ஒத்துழைக்கவில்லை என்றால் மீண்டும் தாக்க தயங்கமாட்டேன்.. வெனிசுலா இடைக்கால அதிபருக்கு டிரம்ப் மிரட்டல்
- வெனிசுலாவில் எண்ணெய் தொழிலைத் தொடங்குவதற்கு முட்டுக்கட்டை போட்டால், மீண்டும் ராணுவ தாக்குதலுக்கு உத்தரவிடத் தயங்கமாட்டேன்.
- அமெரிக்காவுடன் இணைந்து வளர்ச்சித் திட்டங்களில் பணியாற்றத் தயாராக இருக்கிறோம்.
வெனிசுலா மீது நேற்று திடீர் தாக்குதல் நடத்திய அமெரிக்கா, அந்நாட்டு அதிபர் நிகொலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை சிறைபிடித்து அமெரிக்கா அழைத்து வந்தது.
வெனிசுலா எண்ணெய் இருப்பை இனி அமெரிக்க நிறுவனங்களே நிர்வகிக்கும் என்றும், அமெரிக்காவுக்கு சாதகமான அரசு அமையும் வரை அங்கு அமெரிக்க ராணுவம் தங்கியிருக்கும் என்றும் டிரம்ப் அறிவித்தார்.
இதற்கிடையே வெனிசுலா உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் அந்நாட்டின் இடைக்கால அதிபராக பொறுப்பேற்றுள்ளார்.
இந்நிலையில் வாஷிங்டனில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், வெனிசுலா அரசு அமெரிக்காவிற்கு ஒத்துழைக்கவில்லை என்றால் அந்த நாடு கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.
வெனிசுலாவில் எண்ணெய் தொழிலைத் தொடங்குவதற்கும், போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்கும் அமெரிக்கா மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு அந்நாட்டு அரசு முட்டுக்கட்டை போட்டால், மீண்டும் ஒருமுறை ராணுவத் தாக்குதலுக்கு உத்தரவிடத் தயங்கமாட்டேன்.
சிறைபிடிக்கப்பட்டுள்ள நிக்கோலஸ் மதுரோ மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட்டால் கொலம்பியா மற்றும் மெக்சிகோ நாடுகள் மீதும் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் கியூபாவின் கம்யூனிச ஆட்சி தானாகவே வீழும் நிலையில் தான் உள்ளது என்றும் டிரம்ப் தெரிவித்தார்.
இதற்கிடையே இந்த எச்சரிக்கைகளுக்குப் பதிலளித்துள்ள இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ், வெனிசுலா தனது இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் என்று கூறியுள்ளார்.
இருப்பினும், அமெரிக்காவுடன் இணைந்து வளர்ச்சித் திட்டங்களில் பணியாற்றத் தயாராக இருப்பதாகவும், இரு நாடுகளுக்கும் இடையே கண்ணியமான உறவை ஏற்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.